Wednesday, August 24, 2011

மைலாப்பூரை சுற்றி வந்தேன் !...



கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளுக்கு பிறகு சிலநாட்களுக்கு முன்பு மயிலை கற்பகாம்பாள் மெஸ்ஸில் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. மயிலைவாசி நண்பர் மாமி மெஸ்ஸுக்கு தான் அழைத்துச் செல்வதாக என்னையும், என் நண்பரையும் அழைத்துச் சென்றார். இரவு ஒன்பது மணிக்கு மேல் சென்றதால் மாமி மெஸ் மூடப்பட்டிருந்தது. வேறு வழியின்றி கற்பகாம்பாளுக்கு போனோம்.

மயிலாப்பூர் மாமி மெஸ் தான் ஒரிஜினல். இதே பெயரில் ஏராளமான டூப்ளிகேட் மெஸ்கள் சுற்றுவட்டாரங்களில் இயங்குவதாக கேள்விப்படுகிறோம். மயிலாப்பூர் வடக்கு மாடவீதியில் இருந்து வலதுபக்கமாக திரும்பினால் கிழக்கு மாடவீதியில் பாரதிய வித்யா பவன் வரும். அதையொட்டி வலதுபுறமாக செல்லும் சந்தில் சென்றால் ஐந்தாவது அல்லது ஆறாவது வீடு மாமி மெஸ். விநாயகா கேட்டரிங் என்று போர்டு மாட்டியிருக்கும். மெஸ் என்றதுமே கற்பகாம்பாள் மாதிரி நாற்காலி, டேபிள் எல்லாம் போடப்பட்டு வசதியாக இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். லிட்டரலாக சொல்லப்போனால் மாமி மெஸ் ஒரு கையேந்தி பவன். சாப்பாடு கிடைக்காது. டிஃபன் மட்டும் தான். ஞாயிறு விடுமுறை.

ம்ஹூம். கற்பகாம்பாள் இப்போது ஆஹா ஓஹோவென்று புகழும்படியான சுவையில் இருப்பதாக தெரியவில்லை. பொடி தோசை பயங்கர காரமாக இருந்தது. சரக்கடித்தால் மட்டுமே அதை சந்தோஷமாக சாப்பிடமுடியும். நெய் ரோஸ்ட் திகட்டியது. அடை அவியல் சாப்பிட்ட நண்பர் மட்டும் திருப்தியாக இருந்தார். அடுத்து அவரும் ஒரு பொடிதோசை சாப்பிட்டு நொந்துப்போனார். கடைசியாக சாப்பிட்ட டிகிரி ஃபில்டர் காபி சொர்க்கம். எனக்கு காபி கொஞ்சம் கசப்பாகவே இருக்கவேண்டும். ரொம்ப சூடாக சாப்பிடமாட்டேன். நன்கு ஆற்றி மிதமான சூட்டில் சாந்து மாதிரி கொழகொழவென்று இருக்கும் காப்பியை காலையில் குடிக்க எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம். பெட் காஃபி இல்லாவிட்டால் நான் எழுந்திருக்கவே மாட்டேன்.

அடுத்து ஓரிரு நாள் கழித்து மாமி மெஸ்ஸுக்கும் போனோம். சாலையோரத்தில் டூவீலர்களையும், கார்களையும் நிறுத்திவிட்டு மாமாக்களும், மாமிகளும் பேட்ச் பேட்சாக கையில் தட்டேந்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அக்கம் பக்கம் முழுக்க அக்ரஹாரத்து ஸ்டைல் வீடுகளும், அபார்ட்மெண்ட்களும். சாப்பிடுபவர்கள் யாரும் இலைகளையும், தட்டுக்களையும் ஆங்காங்கே போட்டுவிடுவதில்லை.

பேச்சுலர்கள் கூட்டம் கூட்டமாக ஜோதி தியேட்டருக்கு ஒரு காலந்த்தில் வந்தது மாதிரி வத்துக்கொண்டே இருக்கிறார்கள். மெஸ் நடப்பதற்கான அறிகுறி இல்லாமல் சாலை சுத்தமாக இருக்கிறது. இங்கே சாப்பிடுபவர்களை காட்டிலும், பார்சல் வாங்கி வீட்டில் சாப்பிடுபவர்கள் தான் அதிகமாம். மெஸ்காரர்கள் ஒரு நொடி கூட ஓய்வின்றி பார்சலித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

மாமிக்கள் நிறைய பேர் வந்து சாப்பிடுவதால் தான் இதற்கு ‘மாமி மெஸ்' என்று பெயர் வந்ததா என்று அங்கிருந்த ஒருவரிடம் கேட்டேன். மெஸ்ஸின் உள்ளே படமாகிவிட்ட ஒரு மாமியை காட்டினார். அவர் நடத்திய மெஸ்ஸாம் அது. தீர்க்க சுமங்கலியாக பழுத்த வயதில் சமீபத்தில் தான் சிவனடி போய் சேர்ந்தாராம். ஆனாலும் அந்த மாமியின் கைமணம் இன்னமும் சமையலில் அப்படியே இருப்பதாக சொல்கிறார்கள்.

தோசை, இட்லி, போண்டா, சாம்பார், சட்னி, வடக்கறி இத்யாதி.. இத்யாதியெல்லாம் வரிசையாக வைக்கப்பட்டிருக்கிறது. தோசை, இட்லி சமாச்சாரங்களை மட்டும் அவர்களே தட்டில் போடுகிறார்கள். சட்னி, சாம்பார் நமக்கு வேண்டிய அளவுக்கு நாமே ஊற்றிக் கொள்ளலாம். இங்கே சாப்பிட வருபவர்கள் பெரும்பாலும் சாம்பாராக தானிருக்கிறார்கள்.

நானும் கூடவந்த நண்பரும் ஆளுக்கொரு பொடிதோசை சாப்பிட்டோம். ஆஹா.. என்ன சுவை! என்ன சுவை! பொடின்னா மாமி மெஸ் பொடிதான்! கற்பகாம்பாளிலும் சாப்பிட்டோமே பொடிதோசை என்ற பெயரில் ஏதோ ஒரு வஸ்துவை. அடுத்து நண்பர் இரண்டும், நான் ஒன்றுமாக கல்தோசை சாப்பிட்டோம். இங்கே தோசை என்றாலே அது கல்தோசை தான். வேறு எதுவும் சாப்பிடும் ஸ்பெஷல் மூடில் இல்லை. பில்லுக்கு எவ்வளவு ஆகியிருக்கும் என்று மனதுக்குள் ஒரு கணக்கீடு போட்டு இரண்டு நூறு ரூபாய் தாள்களை நீட்டினேன்.

கற்பகாம்பாள் ரேட்டை மனதில் கொண்டு நூற்றி இருபது ரூபாய் வரை பழுத்திருக்கும் என்று கணக்கு போட்டு வைத்திருந்தேன். ஒரு நூறு ரூபாய் நோட்டையும், மூன்று இருபது ரூபாய் நோட்டுக்களையும், ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் பில் போடுபவர் திருப்பித் தந்தார். மொத்தமாகவே முப்பத்தி ஐந்து ரூபாய் தான் ஆனது. சரவணபவன் தரத்தில், அதைவிட சுவையில் சரக்கு இருந்தாலும் ரேட்டு என்னவோ கையேந்திபவன் ரேட்டு தான். தோசை ஐந்து ரூபாய். பொடி தோசை பத்து ரூபாய். இட்லி, போண்டா வகையறாக்கள் ரேட்டு தெரியவில்லை. அடுத்த முறை செல்லும்போது விசாரிக்க வேண்டும்.

மாலை வேளைகளில் ரெப்ரெஷ் ஆக செம மெஸ் இந்த மாமி மெஸ். மாமி மெஸ் சமையலை ருசிப்பதற்காகவே அய்யராக கன்வெர்ட் ஆகி பலபேர் மயிலாப்பூர்வாசியாகி விட்டிருக்கிறார்கள்.

* - * - * - * - * - * - *

சென்னையில் சத்யம் சினிமாஸுக்கு சிங்கிளாக கூட போவதென்பது பர்ஸை பழுக்க வைக்கும் வேலை. மேற்கூரையே இல்லாத டூவீலர் பார்க்கிங்குக்கு முதன்முதலாக பத்து ரூபாய் வாங்கி புண்ணியம் கட்டிக்கொண்டவர்கள் அவர்கள். குடும்பத்தோடு தியேட்டருக்கு படம் பார்க்க ஒரு நடுத்தரக் குடும்பம் சென்றால் ஒரு மாத சம்பளத்தை டிக்கெட் + ஸ்னாக்ஸ்க்காக தண்டம் அழுதுவிட்டு வரவேண்டும். நானும், நண்பர் ஒருவரும் அங்கே படம் பார்க்கச் சென்றால் ஸ்னாக்ஸ் வெளியில் வாங்கி சாப்பிட்டு விடுவது வாடிக்கை.

சமீபத்தில் ஒரு ’யூ சர்ட்டிபிகேட்’ ஆங்கிலப்படம் பார்க்கப் போயிருந்தோம். சத்யமுக்கு எதிரிலிருந்த ஒரு பேல்பூரி கடையில் பேல்பூரி வாங்கி சாப்பிட்டோம். கடைக்காரர் சேடு கிடையாது. இருந்தாலும் ஒரு மசலா எஃபெக்ட்டுக்காக சேடு மாதிரி மாறுவேடம் போட்டிருந்தார். மசாலாவை கொஞ்சம் தூக்கலாக போடும்படி என்னுடன் வந்த நண்பர் கடைக்காரரை தீவிரவாத அணுகுமுறையோடு வற்புறுத்தினார். தூக்கலான மசலாவோடு வந்த பேல்பூரி தீக்கங்கு மாதிரி இருந்தது. கடைக்காரர் ஊற்றியது மசலாவா? சில்லி சாஸ்ஸா என்று தெரியவில்லை. வாயில் வைத்ததுமே நாக்கு மட்டுமன்றி, உடலின் சகலபாகங்களும் எரிந்தது. எவ்வளவு நீர் குடித்தும் எரிச்சல் அடங்கவில்லை.

“என்னங்க இவ்ளோ காரம்?” என்று கடைக்காரரிடம் கேட்டதுக்கு, “அதுக்கு தான் பக்கத்துலே ஜிலேபியும் விற்கிறோம். ரெண்டு ஜிலேபி வாங்கி வாயிலே போட்டுக்கோங்க. எல்லாம் சரியாயிடும்” என்றார் கூலாக. வியாபாரத் தந்திரம்!

* - * - * - * - * - * - *

இன்னமும் கோலி சோடாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் கோலி சோடாவை பார்ப்பது இப்போது அரிதாகி விட்டது. பன்னீர் சோடாவை விட சாதா சோடா தான் எனக்கு பிடிக்கும். சோடாவை உடைத்து லெமன், சால்ட் சேர்த்து அடிக்கும் லெமன் சால்ட் சோடா தரும் கிக்குக்கு இணையேயில்லை. லெமன் கொஞ்சம் புளித்திருந்தால் ஒத்தமரக் கள் சுவை. இதே கோலி பாட்டிலில் அடைத்து இருமல் மருந்து ஸ்மெல்லில் வரும் 'கலரு' இப்போது சுத்தமாக கிடைப்பதில்லை. ஆனால் கோலி சோடா இன்னமும் பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் கூல்பார் ஒன்றில் கிடைக்கிறது. காட்டாக கேஸ் அடைக்கப்பட்ட அதே சுவைக்கு இன்றும் உத்தரவாதம் உண்டு. சென்னையில் வேறெங்காவது கோலி சோடா கிடைக்கிறதா? சைதாப்பேட்டையில் கிடைப்பதாக முன்பு கிருபாஷங்கர் ஒருமுறை சொன்னதாக நினைவு.

No comments: