நிரம்பட்டுமே
நீர்த் திவலைகளால்
எம்சம்சாரியின்
கழநிகள்..!
இலவச அரிசிக்கு
இடமில்லாமல்
போகும் போது..!
அவன் கண்ணீரின்
கவலைகள்
கொய்யப்படுமா!?
சக மனிதன்
ஜெகத்தை அழிக்கும்
முன் பசியால்
மரித்துக்கொண்டிருப்பதை
உணராத கண்களுக்கு
கண்ணீரின் வலி
தெரிந்திருக்குமென்பது..
வாடிக்கையான வேடிக்கை!
உழவன் மகன் உழவனாய்
இல்லாத பட்சத்தில்
விளை நிலங்களை முள்வேலிக்குள்
முடமாக்கி மலடாக்கிக்
கொண்டிருக்கும் தரகர்கள்...
விலைமாதுவாகிக்கொண்டிருக்கும்
மண்ணை மீட்பதிலாகட்டும்...
வீழ்ந்து கொண்டிருக்கும்
விவசாயம் காப்பதிலாகட்டும்
தேய்ந்து கொண்டிருக்கும்
இந்தியாவின் முதுகெலும்பை
தூக்கி நிறுத்துவதிலாகட்டும்
அத்தனைக்கும் நம் ஒற்றை விதையில்
பதில் உண்டு..!
விதைகளை
மரம் செய்வோம்...!
பறவைகள்
வாழ்வாதாரம் காப்போம்...!
-கவிதைக்காரன்..!
இரவின் மௌனத்திற்குப் பின்
பறவைகளின் கனவுக்குப் பின்
பூமியிறங்கும் பனிகூட்டங்களோடு..|
ஸ்நேகபுன்னகை புரிந்து ...
அன்றைய நாளின் பலனறியாமல்..வளர்ந்தெடுத்திருந்த மரம்..
அமைதிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும்
இடையில் உள்ள இடைவெளியில்..
மரம் இசைக்கும் மௌனமான சங்கீதம்
பறவைகளின் சத்தத்தில் அமிழ்ந்துவிடுகிறது
பெருங்காற்றில் அசையும்போது
விலகும் தாளம், சுருதி பேதத்தை
அதிகாலையில் மீட்டெடுக்கும் மரம்
வாகனங்களின் சத்தத்தில் மீண்டும் தவறவிடுகிறது
முன்பனியில்
அல்லது பின்னோர் மழைநாளில்
உயிர்த்தெழுகிறது
குழந்தைக்கான உத்வேகத்துடன்
கூடி நின்றுபேசுவாருக்கு மேல் நின்று வேடிக்கை பார்க்கும்..மரம்
இத்தனையின் போதும்
எப்போதும் ஓய்வதில்லை
மரத்தினூடாக நிகழ்ந்துகொண்டேயிருக்கும்
அதன் பேரமைதிக் கச்சேரி
கச்சேரிகள் இல்லாமல் நிழல் தேடி அலையும் அணிலுக்கு
தெரிந்திருக்கப்போவதில்லை..
வரப்போகும் நாட்களில் மரமிருந்த அடையாளம் பறித்து
தின்ன முடியாமல் போகுமென்பதை..
ஊஞ்சலிலே விடுமுறை களித்த
அந்த மகிழம்ப்பூ சூடிய சிறுமி அறிந்திருக்கப்
போவதில்லை..! மறுவிடுமுறைக்கு வரும் போது..
கான்க்ரீட் மேல்தளத்தின் கொக்கிகளோடுதான்
இருக்கும் என் ஊஞ்சல்..என..அங்கே சிவப்புவால் குருவிகள்
தாவிகுதிப்பதை ரசிக்கவும் முடியாதே!
அப்பாவுக்கு அப்பா! விதை போட்ட மரம் ..
விண்ணைமுட்ட வளர்ந்து நிற்க..
வெட்டிதள்ள.. வேலையாள் கையிலெடுக்கிறான்
புதியதான மரவெட்டிக் கருவியை..
கருவிகள் செய்யும் முன்னே!..
கொஞ்சம்..! கண்ணீர் துளிகளை பாருங்கள்..
அது மரத்தில் படிந்த மழைநீரின்..வடிநீர்..அல்ல..
::::கார்த்திக் ராஜா:::::