Wednesday, March 30, 2011

எண்ணெய் தீர்ந்துபோன அந்தத் தெருவிளக்கு...

இருள் எத்திக்கும் வியாபித்திருந்தது. போகிற பாதைகூட சரியாகத் தெரியவில்லை. வானில் ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் "மினுக்மினுக்'கென்று கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. நிலவுகூட இன்னும் எழவில்லை.

சாலையின் திருப்பத்தில் பஞ்சாயத்து விளக்கொன்று மங்கலான ஒளியைப் பரப்பிய வாறு நின்று கொண்டிருந் தது. மங்கலான அந்த மண்ணெண்ணெய் விளக் கின் ஒளி, புகை படிந்து போன கண்ணாடிக் கூட்டை ஊடுருவி சற்று தூரத்திற்காவது பரவிக் கிடந்த இருளை விரட்டிக் கொண்டிருந்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அங்கு மங்கலான, சற்று சிவப்பான அந்த வெளிச்சத்துக்கும் இருளுக்கும் இடையே ஒருவிதமான போட்டியே நடைபெற்றுக் கொண்டிருந் தது. அந்த அளவிற்குச் சக்தியற்று சோம்பிப் போய் "மினுக் மினுக்'கென்று கண்ணாடிக் கூட்டினுள் எரிந்து கொண்டிருந்தது விளக்கு. எந்த நேரத்திலும் இருள் அந்த ஒளியை வென்று தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தி வியாபிக்கச் செய்துவிடுமோ என்று, ஒவ்வொரு நிமிடமும் சந்தேகம் கொள்ளச் செய்து கொண்டிருந்தது நிலவிய சூழ்நிலை.

விளக்கு கம்பத்தின்மேல் ஏணியொன்று சாய்வாக வைக்கப்பட்டிருந்தது. மூங்கிலால் செய்யப்பட்டிருந்த அந்த ஏணி செய்யப்பட்டு எத்தனை வருடங்கள் ஆனதோ என்று கூறிக் கொள்ளும் வகையில் பழமையானதாக இருந்தது அது.

விளக்கு கம்பத்திற்குச் சற்று தூரத்தில் இருக்கிறது சங்கரன் பிள்ளையின் தேநீர்க் கடை. சங்கரன் பிள்ளை மிகவும் நல்லவர் என்று எல்லாருமே கூறுவார்கள். எந்த நேரமும் வழுக்கை விழுந்த தலையில் வெயில்பட்டு ஒளிரும் வண்ணம் நின்று கொண்டு, வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே கறை படிந்த முப்பத்திரண்டு பற்களும் வெளியே தெரியும்படி தேநீர்க் கடைக்கு வருபவர்களிடம் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார் சங்கரன் பிள்ளை.

தெரு விளக்கின் மங்கலான வெளிச்சத்தினாலோ என்னவோ, சங்கரன் பிள்ளையின் தேநீர்க் கடைகூட சற்று தெளிவில்லாம லேயே தெரிந்தது. கடையின்முன் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் குத்துக்காலிட்டு தான் மட்டும் தனியே உட்கார்ந்திருக்கிறான் ஒருவன். குளிரினாலோ என்னவோ, அடிக்கொருதரம் உடலை மூடியிருக்கிற பழமையான அந்தப் போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொள்கிறான். அவன் இன்னும் உறங்கவில்லை என்பது மட்டும் நிச்சயம். இருளின் அமைதியைக் கிழித்துக்கொண்டு அவனுடைய முனகல் சத்தம் காற்றில் கரைந்து, விரவி வியாபித்துக் கொண்டிருந்தது. இந்த நடுநிசி நேரத்திலும் கண்மூடாமல் விழித்துக்கொண்டிருக்கும் அந்த மனிதன் யாராக இருக்க முடியும்?

கிழக்கேயிருந்து தேங்காயை ஏற்றிக்கொண்டு போகும் லாரி "உய்'யென்று சத்தம் எழுப்பியவாறு சாலையில் போய்க் கொண்டிருக்கிறது. அநேகமாக அது சங்கனாச்சேரி சந்தைக்குப் போகலாம். சாலையின் முனையில் லாரி திரும்பும்போது, பின்பக்க விளக்கிலிருந்து வெளிவரும் ஒளி தேநீர்க் கடையின் உள்ளே விழ, தலையைத் தூக்கிப் பார்த்துக்கொள்கிறான் அந்த ஆள்.

அது வேறு யாருமல்ல, கொச்சு குட்டிதான். அந்த ஊரில் எல்லாராலும் விரும்பப்படுகிறவனும், யாருக்கும் கேடு நினைக்காதவனுமான கொச்சு குட்டி. கொச்சு குட்டியை நினைக்கும் ஒவ்வொரு தருணமும், நிச்சயம் அந்தத் தெரு விளக்கும் நம்முடைய மனதில் தோற்றம் தரத்தான் செய்யும். அந்த அளவிற்கு அந்தத் தெரு விளக்கு கொச்சு குட்டியின் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இரண்டறக் கலந்திருந்தது. தெரு விளக்கு எரியவில்லையென்றால், யாருடைய மனதிலும் முதன்முதலில் ஞாபகத்திற்கு வருவது கொச்சு குட்டியின் முகமாகத்தானிருக்கும். அந்த அளவிற்கு அந்தத் தெருவிளக்கு அவனுடைய வாழ்க்கையில் உறவு கொண்டிருந்தது. இந்த உறவு இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல. கிட்டத்தட்ட இருபத்து நான்கு வருடப் பிணைப்பு கொண்ட ஒரு சமாச்சாரம் இது.

இந்தக் கால இடைவெளியில்தான் அந்த ஊரில் எத்தனை எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருக்கின்றன. என்னென்ன புதுமைகளும் மாற்றங்களும் உண்டாகியிருக்கின்றன. சாக்கடை தேங்கிக் கிடந்த இடங்களெல்லாம் இன்று எந்த அளவிற்கு மாறிப்போய் புதுமையான கோலத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. காளை வண்டி போகவே முடியாதிருந்த அந்தத் தூசு படிந்த சாலைகளில், இன்று லாரிகளும் பஸ்களும் "விர்விர்'ரென்று ஓசை எழுப்பிக்கொண்டு விரைந்து கொண்டிருக் கின்றன. செய்திப் பத்திரிகை என்றால் என்னவென்றே அறியாத கிராம மக்கள் இன்று உலகக் கதை முழுவதையும் பேசி விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். படிப்பகமும் இளைஞர் நற்பணி மன்றங்களும் தெருவுக்குத் தெரு எழும்பியிருக்கின்றன. தேநீர்க் கடையோ சாராயக் கடையோ இல்லாதிருந்த ஊரில் இன்று எத்தனை சாராயக் கடை! தேநீர்க் கடை! தபால் அலுவலகமும், நர்சரி பள்ளிக்கூடமும், கூட்டுறவு சங்கமும், கட்சி அலுவலகங் களும்கூட இன்று அந்த ஊரில் உருவாகி விட்டிருக்கின்றன. அப்பப்பா... இந்த இடைவெளியில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் சம்பவித்துவிட்டிருக்கின்றன. ஆனால், எல்லாமே மாறிவிட்டிருந்தாலும் ஒன்றே ஒன்று மட்டும் மாறாமல் இன்றும் இருக்கிறதென்றால் அது அந்தத் தெருவிளக்குதான்.

சாலை திரும்பும் இடத்தில் ஒரு மூலையில், கேட்பாரற்று தன்னந்தனியே கரையான் அரித்துப்போன ஒரு மரத் தூணின் உச்சியில் இருக்கிறது அந்தத் தெருவிளக்கு. கடந்த காலத்தில் நடந்த எத்தனை எத்தனைச் சம்பவங்களைக் கண்ட சாட்சியாய் நின்று கொண்டிருக்கிறது அது!

மாலை வந்துவிட்டால் போதும். வெளிச்சம் தர ஆரம்பித்து விடும் விளக்கு. ஆதவன் தன்னுடைய முகத்தை மலையின்பின் மறைத்துக்கொண்டு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக் கின்ற நேரத்தில், கொச்சு குட்டி என்ற அந்த மனிதன் மெல்ல மெல்ல அசைந்தவாறு சாலையில் நடந்து வந்து கொண்டிருப்பான். பழமையான அந்த ஏணியில் ஏறி தினமும் விளக்கேற்றும் ஆத்மா அதுதான்.

இந்த நிகழ்ச்சி இன்று நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்றல்ல. எத்தனையோ வருடங்களாக ஒரு தொடர்கதை போன்று தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற ஒன்று இது.

தேநீர்க் கடைத் திண்ணையை விட்டு மெல்ல எழுந்தான் கொச்சு குட்டி. மெதுவாக நடந்து சென்ற அவன் கால்கள் விளக்கு மரத்தினடியை அடைந்ததும் நின்றன. அவன் காலடிச் சத்தம் கேட்டு, விளக்கு மரத்தினடியில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்த சொறி நாயொன்று மிரண்டுபோய் இருளினூடே ஓடி மறைந்து போனது.

விளக்கு மரத்தினடியில் ஊன்றப்பட்டிருந்த குத்துக்காலில் சிறிது நேரம் அப்படியே அமர்ந்துவிட்டான் கொச்சு குட்டி. அவனுடைய மனம் அப்போது எத்தனையோ வருடங்களாக நடைபெற்று வருகின்ற ஒவ்வொரு சம்பவங்களையும் வரிசைக் கிரமத்தில் அசை போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. மங்கலாக ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறிது நேரம் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அப்பப்பா! அவற்றில்தான் எத்தனை கசப்பான அனுபவங்கள்! அவை மீண்டும் மீண்டும் வலம் வந்து கொண்டிருந்தன மனத் திரையில்.

இது நடந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது கொச்சு குட்டி சிறிய பையனாக இருந்தான். வயது வேண்டுமென்றால் பதினான்கு அல்லது பதினாறு இருக்கும். கிழிந்துபோன சட்டையும் அரைக்கால் ட்ரவுசரும் போட்டுக்கொண்டு நாடோடிக் குழந்தைகளின் கூட்டத்தில் அவனும் ஒருவனாகச் சேர்ந்து ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருப்பான். பனைமரம் போன்ற கரிய உடம்பும், எண்ணெய் தேய்த்தே பல நாட்கள் ஆகிவிட்டன போலும் என்று அறிவிக்கும் தலைமுடியும், வட்ட முகமும் கொண்ட அவன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பான்.

அப்பப்பா... அந்தக் காலகட்டம்தான் எத்தனை இனிமையான ஒன்றாக இருந்தது! வேதனையும் கண்ணீரும் அவலம் நிறைந்த வாழ்க்கையும் அப்போதெல்லாம் அவனுக்கு என்னவென்று கூடத் தெரியாது.

அப்படி வாழ்க்கை நடந்து கொண்டிருந்தபோதுதான் அது சம்பவித்தது. அன்றே அவனுடைய வாழ்க்கைப் பயணம் வேறு திசை நோக்கித் திரும்ப ஆரம்பித்துவிட்டது. ஆற்று நீர் போகும் போக்கில் அல்ல, எதிர் திசையில்...

அவனுடைய தந்தையும் தன்னுடைய இளமைக்காலம் முதலாகவே விளக்கு வைப்பவனாகத்தானிருந்தான். முதுமையில்கூட தன்னுடைய தளர்ந்துபோன கால்களால் நடந்து சென்று பழமையான ஏணியில் ஏறி நடுங்கும் விரல்களுடன் அவன் விளக்கு வைத்ததுகூட, தன்னுடைய ஒரே மகனான கொச்சுக் குட்டியின் வயிறு வளர்க்கதான்... அன்று இரவு... இப்போதும் அந்த நினைவு கொச்சு குட்டியின் மனதின் அடித்தளத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது. காற்றும் மழையும் போட்டி போட்டுக்கொண்டு நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்த அந்த அமைதியான இரவில், அவனுக்கென்றே வாழ்ந்த அந்த ஒரு ஜீவனும் இந்த உலகை விட்டுப் போய்விட்டது நிரந்தரமாக.

கொச்சு குட்டி கதறினான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து நின்றான்.

அவனுக்கு இந்த உலகில் சொந்தமென்று கூற யார் இருக்கிறார்கள்? பையில் காலணாகூட இல்லாத துர்ப்பாக்கிய நிலை அவனுக்கு.

வாழ்க்கை என்ற கடும் பாறையில் அந்த பாலகன் ஏறத் தொடங்கினான். உலகம் என்றாலே என்னவென்று அறிந்திராத அந்தச் சிறு வயதில்...

இப்படித்தான் அந்தப் புதிதாக விளக்கு வைப்பவன் வாழ்க்கை அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்தான். அவனை விளக்கு ஏற்றுபவனாக ஆக்கியதுகூட இந்தச் சமுதாயத்தின் சில நிர்ப்பந்தங்கள்தானே!

வாழ்க்கையின் தூசு படிந்த நீண்ட பாதையில் அந்தச் சிறுவன் தளர்ந்துபோன கால்களால் நடக்கத் தொடங்கினான்.

ஒவ்வொரு இடத்திலும் அவனுக்குக் கிடைத்த அடி கொஞ்ச நஞ்சமல்ல. ஒவ்வொன்றுமே அவனுக்குப் புதிய அனுபவமாகவே இருந்தது. இப்படித்தான் உலகமென்ற நீரோட்டத்துடன் அவனும் இரண்டறக் கலக்க ஆரம்பித்தது.

பாதையில் நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் வாகை மரத்தின் இலைகள் சுமார் பத்து முறை உதிர்ந்து, தளிர்த்து, பூத்து, பின் உதிர்ந்திருக்கின்றன. எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன. கடந்து போன காலகட்டம் மனிதனிடத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தாமல் இல்லை.

குழந்தைப் பருவம் இளமைக்கு வழிவிட்டது. துடிப்பும் உற்சாகமும் கொண்ட வாலிபப் பருவம் நடனமாடி மெல்ல நெருங்கி வந்தது.

அப்போதே புதிய வாழ்க்கையும் ஆரம்பமாகிவிட்டது. சிறு வயதில் விளக்கு ஏற்ற ஆரம்பித்த கொச்சு குட்டி இதோ இளைஞனாக மாறியிருக்கிறான். அந்தக் கரங்களில் இன்று நல்ல பலமிருக்கிறது. அந்த மனதில் நிறைய தைரியமிருக்கிறது. அந்த உடம்பில் தெம்பும், உற்சாகமும் இருக்கின்றன. கொச்சு குட்டி இன்று ஒரு வாலிபன். வாலிபப் பருவத்திற்கே உரிய கம்பீரம் அவனுடைய முகத்திலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவனுக்கும் சில லட்சியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பசுமை தோன்றும் கரையை நோக்கிப் பயணம் செய்யும் பயணிதான் கொச்சு குட்டி. வாழ்க்கையில் கஷ்டமும் அவலமும் நிறைய இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் லட்சியமும் இல்லாமலா போகும்? அந்த லட்சியங்கள்... எதிர்பார்ப்புகள்தான் வாழ்க்கைக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன.

சின்னம்மாவுடன் அவனுக்குப் பழக்கம் ஏற்பட்டது எத்தனையோ வருடங்களுக்கு முன்னால்.

ஆதவன் தன்னுடைய பொன் கிரணங்களைச் சுருக்கிக் கொண்டு மலையின்பின் சென்று துயில் கொள்ளச் செல்லும் நேரத்தில், பழமையான அந்த விளக்கை ஏற்றி வைக்கும் கொச்சு குட்டியைப் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சுற்றி நின்றவாறு பார்த்துக் கொண்டிருப்பார்கள். அரைப் பாவாடையும் ப்ளவுஸும் அணிந்து, தலைமுடியை முடிந்து தூக்கிக் கட்டிய சின்னம்மா பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் விளக்கு மரத்தினடியில் அமர்ந்தவாறு மாலை வேளைகளில் விளையாடிக் கொண்டிருப்பாள். ஊர்க் கதை பேசிச் சிரிப்பாள். அவர்களில் ஒருவனாக இருந்து வந்தான் கொச்சு குட்டி என்ற அந்தப் பையனும்.

அப்போதுதான் அவர்கள் இருவருக்குமிடையில் பழக்கம் முளைவிட ஆரம்பித்து, காலச்சக்கரம் பல முறை சுற்றிவிட்டது. அந்த பழக்கம் மற்றொரு திக்கை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அந்த அன்பு மாலையில் மணமும் வண்ணமும் நிறைந்த மலர்கள் மட்டுமே இருந்து அணி செய்தன. வேறுபாடு என்பதற்கே அங்கு இடமில்லை. அந்த பந்தத்திற்கு எதிராக ஒரு குரலும் இல்லை- ஏன் ஒரு குழந்தையின் குரல்கூட.

விளக்கு வைப்பவனுக்குச் சமுதாயத்தில் அப்படியொன்றும் பெரிய ஸ்தானமில்லைதான். அவனுக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை, சுற்றமோ, பதவியோ, சொத்தோ ஒன்றுமில்லை. ஆனால், தான் மட்டும் தனியன் என்றிருந்த அவன்மீதும் அன்பு செலுத்த இன்று ஒரு புதிய ஜீவன் இருக்கிறது... யார் தடுத்தாலும் தகர்க்க முடியாத பிணைப்பு அது. சின்னம்மா வேறு யாருமல்ல. தெரு கூட்டும் ஏலிச் சேட்டத்தியின் மகள்தான். அவள் பிறந்ததும் வளர்ந்ததும்கூட சமுதாயத்தின் தாழ்வான ஒரு சுற்றுச் சூழலில்தான். அந்த உறவுக்கு எதிராக வாய் திறக்க யாரால்தான் முடியும்? இப்படித்தான் எவ்வித இடையூறுமின்றி அந்த அன்பு வளர்ந்தது.

ஆனால், நல்லவரான தேநீர்க் கடை சங்கரன் பிள்ளை மட்டும் அவ்வப்போது வழுக்கை விழுந்த தன்னுடைய தலையைத் தடவியவாறு ஏதாவது கூறுவார்.

""பரவாயில்லை. நல்ல காரியம்தான்... பாவப்பட்ட அந்த பெண்ணுக்கு நீ பொருத்தம்தான். கடவுள் புண்ணியத்துல நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்.''

""....''

கிறிஸ்துமஸ் கழிந்தவுடன், திருமணம் நடத்த வேண்டும் என்பது திட்டம். அவனுடைய எதிர்பார்ப்பு வானை முட்டிக்கொண்டி ருந்தது. வாசனை நிரம்பிய மலர்களும் பூக்கள் நிறைந்த பூந்தோட்டமும் அவனுடைய இதயத்தின் அடித்தளத்தில் அரும்பிவிட்டிருந்தன. வானத்தில் பூ நிலாவும் மனது நிறைய இனிய கனவுகளும்... இத்தனைக் காலமும் மனதில் போற்றி வந்த எதிர்பார்ப்புகள் மொய்த்துக் கனிந்து காற்றில் மணம் பரப்பும்போது, ஆனந்தம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?

அவனுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சில நாட்கள் அவை. அப்போதெல்லாம் விளக்கு வைக்கும்போது அவனுடைய சிரிப்பில் ஒரு கவர்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருக்கும். சில சமயங்களில் ஏதாவது பாட்டை முணுமுணுத்துக்கொண்டே விளக்கு ஏற்றுவான் அவனையும் அறியாமல்.

விளக்கு மரத்தில் சாய்ந்தவாறு கடந்துபோன நாட்களில் ஆழ்ந்து கொச்சு குட்டி நீண்ட ஒரு பெருமூச்சு விட்டான். நடந்ததை யெல்லாம் மறக்க வேண்டும் என்றுதான் அவன் நினைக்கிறான். ஆனால் நினைவுகள்... அவை எப்படி சாகும்? அழிவே இல்லாத நினைவுகள்...

அதன்பிறகு அங்கு நடந்ததெல்லாம்... எதிர்பார்ப்புகள் அடித்தளமின்றி சரிந்து வீழ்ந்தன. வெறுப்பு தரும் நினைவலைகள் மனத் திரையில் வந்து மோதியபோது வானை நோக்கி வெறித்துப் பார்த்தான் கொச்சு குட்டி. அங்கே, கல்லறையில் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தி மாதிரி நான்கைந்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.

கிறிஸ்துமஸுக்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நாடு முழுவதும் பரவிக் கொண்டிருந்த அந்தக் கொடுமையான நோய்தான் எத்தனை ஆயிரம் உயிர்களை எடுத்துச் சென்றுவிட்டது.

குப்பைகளைப் பெருக்கும் ஏலிச் சேட்டத்தியும் அதில் பலியாகி விட்டாள். சின்னம்மாவையும் அது விட்டு வைக்கவில்லை. கொஞ்சமும் எதிர்பார்க்காமலேயே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

கொச்சு குட்டி ஓடிச் சென்று மருந்து வாங்கி வந்தான். டாக்டரை அழைத்துக்கொண்டு வந்தான். ஆனால், பயன்...? நோய்தான் முற்றிக் கொண்டே வந்தது. இரவும் பகலும் கண் விழித்து அவளைக் கவனித்தான் கொச்சு குட்டி. அவனுடைய இதயத்தில் வேதனையின் குவியல்கள். அன்றொரு நாள் எங்கும் நிசப்தம் நிலவிக் கொண்டி ருந்த வேளையில், சக்தியற்ற தன்னுடைய விழிகளைத் திறந்து கண்ணீருக்கு மத்தியில் கொச்சு குட்டியின் கரங்களை எடுத்து தன்னுடைய முகத்துடன் சேர்த்துவைத்து அணைத்துக் கொண்டாள் சின்னம்மா. அவளுடைய கண்ணீர் வழிந்து கொண்டிருந்த கன்னங்களில் தன்னுடைய கரம் பட்டபோது, அழுகையை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான் கொச்சு குட்டி. அவனுடைய விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து அவளுடைய மார்புப் பகுதியை நனைத்துக் கொண்டிருந்தது.

""நீங்க இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செஞ்சிக்கணும், மறக்காம...''

இதைக் கூறுவதற்குள் அவள் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. விழிகளில் நீர் பெருகியது. ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வைத்ததைப்போல் அவளிடமிருந்து நீண்ட ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. அன்று இரவிலேயே நடக்க வேண்டியது நடந்துவிட்டது. ஒரு வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

வாழ்க்கை அதற்குப் பிறகு எப்படி எல்லாமோ போனது. வாழ்க்கைப் பாதையில் ஒளி வீசிக் கொண்டிருந்த விளக்கு அணைந்து விட்டது. பாய்மரமற்ற கப்பலாய் கொச்சு குட்டியின் வாழ்க்கை போகிற போக்கில் போய்க்கொண்டிருந்தது. எப்போது பாறையில் மோதி அது தகரும் என்று அவனுக்கே தெரியாது.

நாட்கள் ஓடிக்கொண்டேயிருந்தன. ஆனால், ஒவ்வொரு மாலையிலும் ஒளி தர மட்டும் அந்தத் தெருவிளக்கு தவறியதே இல்லை.

மங்கலான கண்களும் எண்ணெய் தேய்க்காத தலை முடியும் ரோமம் வளர்ந்த முகமும் கொண்ட கொச்சு குட்டியை இன்று அடையாளம் கண்டுபிடிப்பதே கஷ்டம். வளர்ந்த நீளமான மீசையும், மெலிந்து போன உடம்பும்... அவனைக் கண்டாலே யாரும் மூக்கில் விரல் வைத்து வியந்துதான் போவார்கள்.

எண்ணச் சிறையிலிருந்து விடுபட்டான் கொச்சு குட்டி. என்றாலும், விளக்கு மரத்தின்மேல் கை வைத்து நின்றபோது கடந்துபோன அந்த நாட்களை அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

எத்தனை வருடங்களாக அவனுடைய தாத்தாவும் தந்தையும் இந்தத் தெருவிளக்கை ஏற்றி வந்திருக்கிறார்கள். இன்று அதற்குரியவன் கொச்சு குட்டி. அந்தக் குடும்பத்துக்கும் அந்தத் தெருவிளக்குக்கும் இடையில் அப்படியொரு பிரிக்க முடியாத பந்தம்! இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தலைமுறை தலைமுறையாய்... தாத்தாவுக்குப்பின் தந்தை, தந்தைக்குப்பின் மகன்.

ஆனால், இன்றோடு தெருவிளக்கின் பணி பூர்த்தியாகிறது. நாளை முதல்... நாளை முதல்... இது தேவையற்ற ஒன்றாகப்போகிறது.

நாளை காலை மின்சார அமைச்சர் வந்து பொத்தானை அழுத்தப் போகிறாராம். அதற்குப் பிறகு ஊர் முழுக்க ஒரே மின்சார விளக்குகளின் பளபளப்புதான்... அந்தத் தெருவிளக்கு இனிமேல் அந்த மின்சார விளக்கைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஒருவேளை இதை யாரேனும் கல்லெறிந்து உடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. புகை படிந்த இந்தக் கண்ணாடி உடைவதை நினைத்துப் பார்த்தபோது, கொச்சு குட்டியின் கண்களில் கண்ணீர் அரும்பியது. எத்தனை வருடங்களாக அந்தக் கிராமத்தை அது இருளிலிருந்து காப்பாற்றி வெளிச்சம் கொடுத்து வந்திருக்கிறது. கொடும் காற்றிலும் கடுமையான இருட்டிலும் மங்கலான அந்த ஒளி அணையாது எரிந்து கொண்டிருக்கும். எத்தனை ஆயிரம் பேருக்கு அது வழிகாட்டி இருக்கிறது. எத்தனை ஆபத்துகளை நடக்க விடாமல் தடுத்திருக்கிறது.

கள்ளு குடித்துவிட்டு வருகிறவர்கள் சில வேளைகளில் எச்சிலை அதன்மேல் துப்பியதுண்டு. வாய் திறந்து கெட்ட சொல் கூறியதுண்டு. மரத் தூணில் இடித்ததுண்டு. எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டது அது. அதற்கு வெறுப்பு இல்லை; பகை இல்லை. ஆனால், நாளை முதல் இந்தத் தெரு விளக்கால் கிராமத்துக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. தளர்ந்து போன அந்த தலைமுறைக்கே சாட்சியாக நின்று கொண்டிருந்தது அந்த விளக்கு. அந்த விளக்கு தேவையில்லை யென்றால் கொச்சு குட்டியும்தான். அவன்கூட நாளை முதல் தேவையற்ற ஒரு பொருள்தான்.

கன்னத்தில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்றுகூட தோன்றவில்லை கொச்சு குட்டிக்கு. அந்தத் தெரு விளக்கை அன்புடன் இறுக அணைத்துக்கொண்ட கொச்சு குட்டி அதற்கு முத்தம் கொடுத்தான். அவனுடைய கண்ணீர் பட்டு அது ஈரமானது. தெரு விளக்கினால் அழ முடியாது. இல்லா விட்டால்... இருளினூடே நடந்து போனான் கொச்சுகுட்டி- எவ்வித லட்சியமுமின்றி.

தெரு முழுவதும் ஒரே இருட்டு. எண்ணெய் தீர்ந்துபோன அந்தத் தெருவிளக்கு தன்னுடைய இறுதி அத்தியாயத்தை முடித்துக் கொண்டது, நிரந்தரமாக.
அங்கதம் - மரபுகளை, பழக்க வழக்கங்களை கிண்டல் செய்தல்
அஞ்சனம் - கண்ணில் தீட்டிக் கொள்ளும் மை
ஆதனம் - சொத்து
ஆரம் - மாலை
ஆலிங்கனம் - தழுவுதல்
இடாப்பு - பதிவேடு
இரண்டகம் - நம்பிக்கைத் துரோகம்
ஈடாட்டம் - உறுதி குலைதல்
ஈனம் - இழிவு, கேவலம்
உத்தரீயம் - மேலாடை
உற்பாதம் - தீய விளைவு
ஊடு - பொய்க்கோபம் கொள்ளுதல்
ஊசு - பதம் கெட்டுப்போதல்
எத்தனம் - முயற்சி
எதேஷ்டம் - தேவைக்கு அதிகம்
ஏகாலி - சலவைத் தொழிலாளி
ஏனம் - பாத்திரம்
ஐது - அடர்த்திக்குறைவு
ஐமிச்சம் - சந்தேகம்
ஒக்கிடு - பழுது பார்த்தால்
ஒழுகலாறு - பழக்க வழக்கம்
ஓந்தி - ஓணான்
ஓம்பு - பேணுதல்
ஔஷதம் - மருந்து

Tuesday, March 29, 2011

என்னை திட்டி தீர்க்கவும்...அன்பை கொட்டி தீர்க்கவும்...

துளிர்கின்ற பூ மீது படரும் பனி போர்வையில்
ஒரு கடிதத்தை எழுதி நின்றிருந்தேன்
என் விளிமொழியாளின் வதனம் ஈர்க்க..

நான் காணும் நேரமெல்லாம் நீர் குளத்தே
நிற்கும் நாரைபோல் நிலம் காணும் நங்கையை
இவள்...

கண்ணோரம் சிறு மையிட்டே
என்னை வசியம் செய்யும்
பேசா மடந்தையாய் இவள்... 

கடிதங்களை தினம் சுமந்தே...
அஞ்சலனாய் மாறிப்போன நான்
எங்கள் இருவரையும் வேடிக்கை பார்த்தே..
வயதாகிப்போன ...ஏதோ ஒரு மரக்குருவி...

இத்தனை நாளுக்குள் ஒரு முறை
அவள் என்னை நேர் பார்வையால்
கண்டிருந்தாலேயானால்..
நான் என் காதலை தவறியும் சொல்லியிருப்பேன்...

அவள் என்னையும்  காணமல் வேறெங்கும்
காணாமல் நிலம் கண்டு நின்றமையால்
புரிந்து கொண்ட அவள் காதலை...
பருகிக்கொண்டே...தினம் இளைப்பாறி நின்றேன் ...

பனிக்காலமும் வந்து..
பின்னே வேனிலும் வந்திருந்த போதும்..
என் காதல் மட்டும் சொல்லவே இல்லை...

உண்மையுமாய் ...இன்றுவரை
அவள் குழந்தைக்கு கூட தெரிந்திருக்காது ..
அவன் பெயர் என்னுடையது என்று...
சொல்லாத காதலில் மிச்சமாய் ...

ஒருவேளை சொல்லாமல் போனதனாலோ..!
என்னை திட்டி தீர்க்கவும்...அன்பை கொட்டி தீர்க்கவும்...
என் பெயரையே.அவள் பிள்ளைக்கும் சூட்டினாலென்று...  

Monday, March 28, 2011

வர்ணம் இழந்த வரைபடமாய்
வாழ்க்கை...
எச்சிலை உண்டு ஏப்பமிடும்
எக்காளம்....

வருங்கால அடிமைகுரலா!...
தாய் மொழி தமிழென்பதை
மறந்து

தலைபோன தலை விதிகொண்ட
மழலைகளின் மறுதலிப்பு...
மங்கலாகும் மொழியறிவு

இலக்கணம் என்றால்என்ன ?
கேள்விகளில் வந்ததுண்டு பள்ளியில்...
இந்த கேள்வியாவது மிஞ்சுமா
வரும்  விடிவெள்ளியில்   

தத்தெடுத்த மொழியே
தமிழ் மொழியாய் 
தரணியெங்கும் எம் புதிய தலைமுறை...

பெற்றவளை மறந்து
மற்றவளின் மடியில்
மமதை காணும் மாமனிதராய்
என் தமிழ் மக்கள்...

இனி பாரதிக்கு இங்கே எதற்கு சிலை...?
முண்டாசுக்குள் அவன் கண்ணையும்
மறைத்திருந்தால் தேவலாமோ !

குடை இருந்தும் நனைந்து கொண்டே...



அன்றோர் மாலைநேரம்
குடைக்கும் மழைக்கும் நடக்கும்
 இசைசண்டையை ...ரசித்தபடியே
 நான் நடந்து போகிறேன்
 எனதினிய கிராமத்து வீட்டிற்கு..

விறகு வெட்டி சேகரிக்கும்
பெண்களும்..
ஆட்டுதொட்டி  ஆண்களும்...  
ஆங்காங்கே அடைமழைக்கு புறம்பாய்
வாழையிலும், பனையிலுமாய்...
நனைந்து  கொண்டே குடையாய்  பிடித்திருக்க ..

நகரத்தினன் மிதப்பாய்
ஏளனமாய் சிரித்து கைகளில் குடையோடு
நான்மட்டும் தொடர்ந்து நடக்க..
வெற்றிலை கறைபடிந்த ஏதோ ஒரு குரல்
கனக்கிறது...மழையின் இறைச்சலைவிட அதிகமாய்...

எய்யா...யாரவுக போறவுக செத்த நிண்டு போவியளா..!
இடியும் கிடியுமா கிடக்கு...தளப்புல்லைகே அவாதுள்ள ..
செத்த...குட்ட மரம்சாயிப்புல ஒதுங்கி பெறவு போவுறது..
என்கிறது...

வித்தியாசப்படுகிறது...எந்த அந்நியாமான...வார்த்தைகள் மட்டும்
ஆனால் பார்வையில் இல்லை ...பாசத்திலும் கூட..
இங்கே கறைகள் (வெற்றிலை)  அவர்கள் குரலில் மட்டும்
மனதில் இல்லவே  இல்லை

மழை வெறித்து வெள்ளந்தியாய் சிரிக்கிறது வானம்  
நான் குடை இருந்தும் நனைந்து கொண்டே...
-------------கார்த்திக்  ராஜா    

Friday, March 25, 2011

ஜன்னல் சமாதி...

என் ஜன்னல் வெளியே
பார்க்கும்போது மட்டும்..
சதுரமும் இல்லாமல்
செவ்வகமும் இல்லாத -ஓர்
வானம் ...
கருப்பின் நிழலாய்...
என் மீது வெறுப்பை உமிழும்
வண்ணமாய் தெரியும்..
தூரத்தில் என் வலது புறம்
நடந்து கொண்டு நீ
அருகே உன் இடது புறம்
உடைந்து கொண்டே நான்...
தடுமாறி கொண்டிருக்கும் என் விழிகள்
உடந்துருகும் பனி போல கரைந்திட..
என்  மௌனத்தோடு  மூச்சையும் 
நிறுத்தி போகும் மழையானவள் நீ... 
எனக்கான என் உயிரை
எடுத்து செல்லும் முன்
இந்த ஜன்னலுக்குல்லேயே என்னை
சமாதிசெய்துவிடு...
சிறகில்லா...கவிஞன்... .
----------கார்த்திக் ராஜா

Thursday, March 24, 2011

எல்லா விழிகளும் சுமந்திருக்கும் 
ஏதோ ஒரு பிரிவின் கண்ணீரை...  


எல்லா இதயங்களும் சுமந்திருக்கும் 
ஏதோவொரு பிரிவின் வழிகளை...

எல்லாருக்கும் இல்லாவிடினும் 
என்னை எடுத்துகாட்டை கொள்...

வலிகளை கண்களிலும் 
கண்ணீரை இதயத்திலும் ..
மறைத்து வைத்து..
      -கார்த்திக் ராஜா ..
                                              மதுவிற்கு அடிமையான தந்தை..
                                        மரம் சுமந்தே முடமாகிப்போன தாய்....

விடியும் முன்பே காணாமல் போன..
உறவு-களுக்கு மத்தியில் 
விடிதலுக்கு ஏங்கி...
                                   
                                    விழிகளை சுமந்திருக்கும் பதின்ம வயதின்  
                                                     விதவை பெண்ணானவள்  
                                                 இன்னும் குடிகொண்டிருக்கிறாள்  
                      
                                 என்  இந்தியாவின்  எங்கோ  ஒரு மூலையில்....
                                                                                                 -கார்த்திக் ராஜா
  
 

Wednesday, March 23, 2011

டாப் 10 புத்தகங்கள் – 2011



இந்த ஆண்டில் வெளியான புத்தகங்களில் எந்தக் கடையிலுமே எப்போதுமே கிடைக்காத அளவுக்கு விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் சிறந்த 10 புத்தகங்களின் தரவரிசைப் பட்டியல்.

10
மனம் is a மனம்
ஆசிரியர் : சுவாமி சுனாமியானந்தா
மனம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். மனதை அடக்கி ஆள்வது என்பது லாரிக்கு பின் நின்று கூட்டத்தில் முட்டி மோதி ஓட்டைக்குடத்தில் தண்ணீர் பிடிப்பதற்குச் சமம். மனிதர்களின் மனம் என்பது கார்ப்பரேஷன்காரன் தோண்டிப்போட்ட குழி போன்றது! பெரிய மனிதர்களின் மனம் என்பது குப்பை வண்டிக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் ஒற்றைக் குப்பைத்தொட்டி போன்றது! – இது போன்ற சுவாமிஜியின் ஆழ்ந்த அனுபவ உரைகள் புத்தகம் முழுவதும் உப்பிக் கிடக்கிறது. ‘சத்சங்க அகாதெமி’ விருதுக்காக இந்தப் புத்தகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(இது ஓர் உள்ளீடு வெளியீடு, கீழ்ப்பாக்கம். பக்கம் : 238ல் ஆரம்பித்து 11ல் முடிகிறது. விலை : 17$.)

9
30 நாட்களில் தூய தமிழ் பேசுவது சுலபம்!
ஆசிரியர் : இங்கிலீஷ்காரன்
‘ஆக்சுவலி திஸ் புக் டெஸ்கிரைப் அபௌட் ஹௌ டூ ஸ்பீக் இன் ப்யூர் டமில். திஸ் புக் இஸ் டீப்லி டெஸ்கிரைப் ஆல் டமில் வேர்ட்ஸ் வித் மீனிங் அன்ட் புரௌனன்ஷேசன்’ – இப்படி அட்டை டூ அட்டை தமிழ் கற்றுக் கொடுப்பதாக ஆங்கிலத்திலேயே ஜல்லியடித்திருக்கிறார்கள். அட்டையில் தலைப்பைத் தவிர வேறேங்கும் தமிழ் தேடினாலும் கிடையாது.
(வெளியீடு : ராமதாஸ் பதிப்பகம், சென்னை. பக்கம்: 420. விலை : ஏதாவது பாத்துப் போட்டுக் கொடுங்க.)

8
சாம்பார் வைப்பது எப்படி? -
ஆசிரியர் : முருங்கைப்ரியா
சாம்பார் வைப்பது எப்படி என ர்ர்ரொம்ம்ப்ப விரிவாக விளக்கும் நூல். சாம்பாருக்கு தேவையான பருப்பை, மிளகாய் வற்றலை, காய்கறிகளை எப்படி பயிர்செய்ய வேண்டும் என ஆ’ரம்ப’த்திலிருந்தே ஆரம்பித்து, அணு அணுவாக விளக்குகிறது. சாம்பார் வைக்கும் சட்டியின் விட்டம், உயரம், கரண்டியின் நீளம் எல்லாம் எவ்வளவு இருக்க வேண்டுமென தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது இதில்! இந்த நூலைப்படித்துப் பொறுமையாக உங்கள் ஆயுசு முடிவதற்குள் ஒரு முறையாவது சாம்பார் வைத்து விடலாம். ஆனால் கடைசியில் சாம்பாருக்கு உப்பு போட மறந்துவிட்டார்கள்.
(வெளியீடு : பருப்பு பதிப்பகம், காரைக்குடி. பக்கம் : 222 விலை : ரூ.100)

7
பிரேக்கூ கவிதைகள்
ஆசிரியர் : ஜுஜுபி
ஒரு புதிய வகை கவிதை எழுதும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். பிரேக்கே இல்லாமல் இஷ்டத்துக்கு வார்த்தைகளை வாரித் தெளிப்பதுதான் ‘பிரேக்கூ’ என்கிறார் கவிஞர்.
‘துப்பாக்கியின் கொட்டாவியில்
சுளுக்கெடுக்கும் பட்டாம்பூச்சியின்
சட்டைப் பொத்தானுக்கு’
என ஆரம்பிக்கும் ஒரு கவிதை பிரேக்கே இல்லாமல் 22 பக்கங்கள் கழித்து ‘வாலில்லா வாசலில்
வந்து நிற்கும் டவுன்பஸ்!’ என்று முடிவதாக நம்பப்படுகிறது!
(வெளியீடு : எடக் மடக் பதிப்பகம், சென்னை. பக்கம் : 534, விலை : ரூ.94.15)
6
உடம்பை வளர்க்க உபயோகமான வழிகள்
ஆசிரியர் : தொப்பையப்பன்
இது மனிதர்களின் உடல்நலம் சம்பந்தப்பட்ட புத்தகமல்ல. நீங்கள் யானை வளர்த்தால் அதனை எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது என விளக்கும் நூல். யானைக்கு எப்படி பல் தேய்ப்பது, யானையின் தொப்பையை எப்படிக் குறைப்பது என புகைப்படங்களுடன் அருமையாக விளக்கப்பட்டுள்ளது.
(வெளியீடு : யாரென்று போடவில்லை. பக்கம் : 120, யானை விலை.)

5
வாஸ்து உங்கள் தோஸ்து!
ஆசிரியர் : வாஸ்தவா
வாஸ்து சாஸ்திரப்படி இந்தப் புத்தகத்திற்கு அட்டை கிடையாது. வீட்டின் ஈசான மூலையில் படுத்துத்தூங்கினால் ‘பீஸான’ மூளையும் இயங்க ஆரம்பிக்கும், வடதென்மேல்கிழக்குத் திசையில் பச்சை நிற கிழிந்த பாயின்மேல் 35டிகிரி சாய்வாக டீ.வி.யை தலைகீழாக வைத்துப் பார்த்தால் செல்வம் பெருகும் என்பது போன்ற பல பயனுள்ள வாஸ்துக் குறிப்புகள் புத்தகம் முழுவதும் வாஸ்துப்படி தலைகீழாக அச்சிடப்பட்டுள்ளது. நம் வீட்டுக்குள் ஆமை புகுந்தால் ஆமையின் வீட்டுக்குள் நாம் புகுந்துவிட வேண்டும் என பல அரிய யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
(வெளியீடு : செங்கல் பதிப்பகம், கலவையூர். பக்கம் : 84 1/2 பக்கம் விலை : ஒரு லோடு மணலின் விலை.)

4
குருதிக் கோட்டுக் குருவிகள்!
ஆசிரியர் : ரௌத்ரப்பித்தன்
இந்நூல் பின் நவீனத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 222 கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது 25 பக்கங்கள். எந்தக் கட்டுரையிலும் தான் சொல்லவருவது எந்த ஒரு வாசகனுக்கும் புரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டிருக்கிறார் ஆசிரியர். ‘நான் சொல்ல வருவது புரிதலையும் தாண்டிய புனிதம். நான் எழுதிய சில விஷயங்கள் எனக்கே புரியவில்லை’ என்ற ஆசிரியரின் முன்னுரையைப் படிக்கும்போது மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.
(வெளியீடு : பிச்சைப்பாத்திரம், தர்மபுரி. பக்கம் : எண்ண முடியவில்லை. விலை : ரூ.800)

3
108 வகைக் கோலங்கள்
ஆசிரியர் : புள்ளிராணி
விதமிதமான புள்ளிக் கோலங்களை போடக் கற்றுக் கொடுப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கமே. நூலாசிரியர் காதல் வயப்பட்டிருப்பதால் ‘புள்ளி வைச்சுக் கோலம் போட மறந்து’ விட்டார். அதனால் கோலப் புத்தகம் அலங்கோலப்புத்தகமாகிவிட்டது.
(வெளியீடு, பக்கம், விலை : ரொம்ப முக்கியம்!)

2
எலக்கன பிலையின்ரி எலுதுவது எப்டி?
ஆசிரியர் : தமிழ்க்கோடாரி
‘இலக்கணப் பிழையின்றி எழுதுவது எப்படி?’ என வந்திருக்க வேண்டிய புத்தகம், பக்கத்திற்குப் பக்கம் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இப்படி வந்திருக்கிறது. நூலாசிரியருக்கு தமிழில் பெரிய ‘ழ’ என்னுமொரு எழுத்து இருப்பதே தெரியாது போல! ‘ஆ’ என்பதை ‘அ¡’ எனவும், ‘ஈ’ என்பதை ‘இ¡’ எனவும், மேலும் ‘உ¡’, ‘எ¡’, ‘ஒ¡’ என பல புதிய எழுத்துக்களை கண்டுபிடித்து தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றியிருக்கிறது இந்நூல்.
(வெளியீடு : நியூ பதிப்பகம், செம்மொழியூர். பக்கம் : 120 (எழுத்துப் பிழையின்றி ஒரே ஒரு வெற்றுப்பக்கம்.) விலை : ரூ. 33)

1
காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு!
ஆசிரியர் : சதக் செல்லப்பா
இது ஒரு நாவல் (என்று நம்பப்படுகிறது.) கதையின் முதல்பக்கத்தில் திடீரென காணாமல் போய்விடும் அப்புசாமியைத் தேடிப்போகும் சுப்புசாமி காணாமல் போய்விடுகிறான். சுப்புசாமியைத் தேடிப்போகும் ராமசாமியும் காணாமல் போய்விட, ராமசாமியைத் தேடிப் போகும் கோயிந்தசாமியும் காணாமல் போய்விட, கோயிந்தசாமியைத் தேடிப்போகும் அப்புசாமியும் (சுப்புசாமி தேடிப்போகும் ஆள்தான்) காணாமல் போய்விடுகிறான் என கடைசிப் பக்கத்தில் கூறுகின்றார் ஆசிரியர். ‘மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து கதையைத் தொடர்ந்து படிக்கவும்’ என ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தகத்தை படித்தே முடிக்கவே முடியாமல் வாசகர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.
(வெளியீடு : காற்புள்ளி பதிப்பகம், நாவலூர். பக்கம் : 171. விலை : போடவில்லை.)

சேற்றில் மட்டுமே சிந்தியதால்..

யந்திரம் பிடித்த விரல்களில் எல்லாம்
இன்று சிறகுகள் முளைத்து
சந்திரனில் பறக்கும் தட்டுகளாய் !
 ஆனால்
 இரவுகள் விடிந்தும், விழிகள் திறந்தும்
இன்னும் கலையாத கனவுகளாய்
மழையை எதிர்ப்பார்த்து ஒரு புதிய மனிதன்
ந்திரம் உதிர்த்த இதழ்கள் எல்லாம்
இன்று தந்திர நரிகளாய்
வற்றிப்போன கண்ணீரிலும் ,
ஒட்டிப்போன வயிற்றிலும்
இன்னும் எஞ்சி இருப்பது நம்பிக்கை மட்டுமே
கெஞ்சிக் கேட்டால் பிச்சை என்கிறான் ,
அஞ்சிக் கேட்டால் கோழை என்கிறான்
இவைகளில் இன்னும் மிச்சம் இருக்கும் சுதந்திரம்
எங்கள் கிழிந்த ஆடைகளில் மட்டுமே !
ற்றிக் கட்டிய கோவணம்,
சூரியனை மிரட்டும் இருட்டுத் தேகம் ,
வற்றிப்போன நதியாய் இவனின் இரத்தம்,
வற்றாத கடலாய் இவனின் உழைப்பு என
அனைத்தையும் குழைத்து ஏர் பிடித்து
பூமி கிளரிய பழைய மனிதன் இன்று
பாடப் புத்தகங்களில் மட்டுமே காட்சித் தருகிறான்.
வியர்வைகளை சேற்றில் மட்டுமே
 சிந்தியதால்தான் என்னவோ
இன்னும் அழுக்காகவே இருக்கிறது
என் நாட்டு விவசாயிகளின் வாழ்க்கை !

ஆயிரம் கவிதைகள் கிறுக்கியும்....

கவிதைகள் தீர்ந்து போன
காலிப்பக்கங்களில்
எல்லாம்
ஆயிரம் முறை
எழுதப்பட்டது
உன் பெயர்தான்...!
ஒருவேளை என்னவள்
இவையெல்லாம் காண நேர்ந்தால்
இயற்கைக்கும் எனக்கும் இடையில்
நீ கவிதை சொல் என்றிருந்தால்
என் நிலைமை என்னவாகி இருக்கும் ...
கணுக்கள் நதிசுமந்த நங்கை உனக்கும்
கடைகொண்டாலும் படை வெல்லும்
சேரனுக்கும் தொடர்பிருக்குமா
என்றேவா? சொல்லியிருப்பேன் ..

உன்னை நதியாக்கி பார்ப்பதால்தானோ!
சலசலத்து என்னில் காதல் செய்தும்
கடலோடு சங்கமிதிருந்தாய் ...

உன்னை முகிலாக்கி பார்த்தால் தானோ !
இரவில் வந்து நிலவோடு காதல் செய்தும்
மழையாகி மண்ணில் வீழ்ந்தாய்...

எத்துனை தான் சொல் நான் காதலில்
நனைந்த பின்னே கவிதையில்
கை களுவிக்கொல்கிறேன்

பேதை நீமட்டும் இல்லையென்றால்
காட்டாறு போலே நான் கரை
இல்லாமலல்லவே போயிருப்பேன்..

உன்னோடான பொழுதுகளில் இயற்கை
எனக்கு விருந்தாய்
நீ விலகி நிற்கும் பொழுதுகளில்
அதுவே எனக்கு மருந்தாய்...

----கார்த்திக் ராஜா

Friday, March 18, 2011

ஒருமுறையாவது வாழ்ந்திட வேண்டும்!!

ஒரு முறையாவது
வாழ்ந்திட வேண்டும்!

மலர்களோடு மட்டும்
பேசி மனங்கவர்ந்து
படபடவென்று சிறகசைக்கும்
வண்ணத்துப் பூச்சியாய்!

வெண்பஞ்சுக் கூட்டமாய்
ஊர்வலம் சென்று
சடசடவென்று பொழிந்திடும்
மேகக் கூட்டமாய்!

எல்லோரையும் தழுவி
எவ்விடத்தும் தவழ்ந்து
சிலுசிலுவென்று வீசும்
தென்றல் காற்றாய்!

சுனையாய்த் தோன்றி
சுவையாய் மாறி
சலசலவென்று ஓடிடும்
ஓடை நீராய்!

காரிருள் நீக்கி
விடியலாய்ப் புலர்ந்து
தகதகவென்று மின்னும்
காலைக் கதிராய்!

செயற்கை கலைந்து,
இயற்கை எழில் பருகி,
கற்பனையிலாகினும்
ஒருமுறையாவது
வாழ்ந்திட வேண்டும்!!

இறுதியாக எழுதப்படுகிறது இக்கடிதம்

இதற்குமுன் எழுதப்பட்ட
எண்ணிலாக் கடிதங்களின்
கதி பற்றியறியும் ஆவலில்
இறுதியாக எழுதப்படுகிறது இக்கடிதம்.

முகவரியைத் தெளிவாகவே
முன்பக்கம் எழுதிவிட்டபடியால்
முன்குறிப்பிட்ட கடிதங்கள் எதுவும்
வந்துசேரவில்லையென்று சொல்லிநழுவ
வாய்ப்பேதுமில்லையுனக்கு.

அனுப்புநர் யாரென்றறியாக்காரணத்தால்
அநாமதேயமென்றெண்ணிப் பிரிக்கப் பயந்ததாய்
பொய்யுரைக்கவும் வழியில்லை.
பின்புறம் என்பெயரை
பெரிதாய் எழுதிவிட்டேன்.

உள்ளிருக்கும் வாசகங்கள்
உனக்கானவை அல்லவென்று
அத்தனை எளிதாய்ப் புறந்தள்ளி
பாசாங்கு செய்யவியலாது.

அகம் கொண்ட உன்மத்தத்தை
கணநேரமேனும்
முகம் காட்டி முறுவல் பூக்கும்.

அவை உன்னை அடைந்த பொழுதுகளிலெல்லாம்
உன் மார்போடணைத்து மனதுக்குள்
மண்டியிட்டு மன்றாடி நின்றிருப்பாய்!

அதன்பின் அவற்றின் கதியென்னவென்பதை
அனுமானிக்க என்னால் இயலவில்லை.
அவை யாவும் தன் அந்திமக்காலத்தில்
உன்னை வந்தடையவில்லை,

வாழ்விப்பாயென்ற நம்பிக்கையுடனே
பயணித்து வந்திருந்தன பல மைல் தூரம்!
அவற்றை என்னதான் செய்தாய்?

இதரக் கடிதங்களின் கதி பற்றியறிய
எழுதப்பட்ட இக்கடிதத்தையும்
என்ன செய்வாயென யோசிக்கிறேன்.

முந்தையக் கடிதங்களோடு இதுவும்
உன் அலமாரியின்
ரகசிய இழுப்பறையில் பூட்டப்பட்டோ…
பரணிலிருக்கும் தகரப்பெட்டிக்குள்
பழந்துணிகளுக்கு மத்தியில் பதுக்கப்பட்டோ…
இருப்பதற்கான சாத்தியக்கூறுகள்
குறைவானநிலையில் இப்படி அனுமானிக்கிறேன்.

முந்தையக் கடிதங்களைப் போலவே
இதுவும் எரிக்கப்படலாம்
அல்லது புதைக்கப்படலாம்,
எவருமற்ற வனாந்திரத்தின் நடுவே
ஏராளமுறை வாசிக்கப்பட்டு,
பின் ஒரு இறுக்கமான மனநிலையோடு
எண்ணற்றத் துகள்களாய்
ஒவ்வொரு அட்சரமும் உருத்தெரியாமல் கிழிக்கப்பட்டு,
கைகள் நடுங்க, காற்றிலே தூவப்படலாம்.

அவ்வாறு நிகழும் ஒவ்வொருமுறையும்
ஆழ்ந்த மெளனத்துடன் அஞ்சலி செலுத்தியோ,
அக்கடிதங்களின் அற்பாயுளுக்காக
சில துளிகள் கண்ணீர் விட்டோ
உன்னை நீ ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்.

இப்படியான அவற்றின் இறுதிக்கதி பற்றி
தீர்மானமாய் அறியவரும்வேளையில்
போர்முனை அனுப்பப்பட்ட
வீரர்களைப் போலவே என் கடிதங்களும்
பிணைக்கைதியாகப் பிடிபடாமல்
வீரமரணம் ஏற்றதை எண்ணி நானும் இன்புறலாம்....

நீ எங்கே இருக்கிறாய்?

சுதந்திர தேவியே
சொல்!
நீ எங்கே இருக்கிறாய்?

நாடி நரம்புகளில்
நெருப்பு நர்த்தனம் ஆடி எம்
முன்னோர்களுக்கு
வெறியூட்டியவளே நீ
எங்கே இருக்கிறாய்? சொல்!

இரத்த நதிகளைக் கடந்து
உன்னைச் சந்தித்தோம்!

தேசத்தையே
இரத்தக் கடலுக்குள் ஒரு தீவாகச்
செய்துவிட்டாய் நீ!

தவப்புயல்களுக்கு
அப்பால் உன்னைத் தரிசித்ததற்குப் பயன்
எரிமலை வரங்களா?

தேசபக்தர்களுக்கு
மகளாகப் பிறந்து
அரசியல் நரிகளுக்கு
அடிமையானவளே?

ஆகஸ்டு 15
பவுர்ணமிகளை ஒரு சிலர்க்கே, நீ
பட்டாப் போட்டுக் கொடுத்த
நாளா?

தியாக வேள்வியில்
உருக்கி வார்த்தெடுத்த
மூவண்ணக் கொடி
பாசாங்குக் காரர்களின்
மோசடிக் கரங்களால்
பாரத வானில் பறக்கிறது!

அவலத்தில்...
அவிழ்ந்து பறக்கும்
கூந்தலைப் போல்
கம்பத்தின் உச்சியில்
உன்கொடி கலைகிறது!

பகலெல்லாம்,
பாராளுமன்றத்தில்
குப்பை கூட்டுகிறாய்!
இரவுகளில் நீயே
கள்ளச் சந்தைகளில்
கைமாறுகிறாய்!

திலகனும், சிதம்பரனும்
சுபாஸ் சந்திரனும்
செய்த முழக்கங்கள்
கலந்து விட்ட காற்றை
வடிகட்டிச் சுவாசிக்கிறாய்

பகத்சிங், குமரன்
இரத்தக் கறைகளை
ஓட்டுச் சீட்டுகளால்
துடைத்தது மட்டுமா...?
சந்தர்ப்ப வாதிகளின்
பச்சோந்தி பிம்பங்களைத்
தீட்டியும் வைத்தாய்!

உனது
தேசிய மயிலின்
தோகைக் காசுகள்
மார்வாடிகளின்
கல்லாப் பெட்டிகளில்
இதுவரை!

இனிமேல்,
மூலதனத் தீனிபோட்டு
அந்நிய நாடுகளும்
அதன் சிறகு முறிக்கும்.

சுதந்திர தேவி!
உனது பெயரில்
மதவெறி நடத்தும்
மரணத் திருவிழாக்கள்...

பலி பீடங்களில்
தேசபக்தியின் தலை திருகி எடுக்கப்படும்.

சாதிக் கலவரங்களில்
எரியும் மானுடம்!
சாம்பல்
உனது பிரசாதமாய்ச்
சகலர்க்கும் விநியோகம்!

வார்த்தைகளைத் திறந்து
மகாவீரரை, புத்தரை,
காந்தியை, காமராசரை
பெரியாரைக் காட்ட
ஊழல் புத்திரர்களுக்கு
ஒரு குறைச்சலும் இல்லை!

கதவடைத்து
வீட்டுக்குள் இலஞ்சத்தைப் பாலூட்டி
வளர்ப்பார்கள்...
அர்ஷத் மேத்தாக்களே
ஆயாக்கள்!

வெளியே
இலஞ்சத்தைத் தேடிக்
கைது செய்யப்
பிடி ஆணை உத்தரவுகள்!

பொய்ம்மை
அறிக்கைகளுக்குப் பொம்மைகளின் கையெழுத்து!

சுதந்திர தேவி!
'வெள்ளையனே வெளியேறு'
என்றோம்
வெளியேறி விட்டான்
'கொள்ளையனே வெளியேறு'
யாரைப் பார்த்து
யார் சொல்வது?

போலி ஜன நாயகத்
தேர்தல்களால்
களங்கப்பட்டவளே!

நீ
எங்கே இருக்கிறாய்?
எப்போது புனிதப்படுவாய்?....

வெட்கம் விலகாமல்!!!....

மாலை மங்கி
இருள் சூழத் தொடங்கியிருந்தது!!
.
சாலையோர மலர்களை
ரசித்த வண்ணம்
பேச்சைத் தொடர்ந்தாள்!
எதையெதையோ பற்றி
தொடர்ச்சியே இன்றி!

மழைக்கு அதீத காதல்
நிலமடந்தை மீதா?
எங்கள் மீதா?
.
பொழியத் தொடங்கினான்
மூச்சு விடவும் தாமதிக்காமல்...

என்னோடு அவளும் துழாவினாள்
முழுதாய் நனைந்தும்
ஒதுங்க இடமொன்று
.
தஞ்சம் புகுந்தோம்
ஓர் மரத்தின் கீழ்!

அவள் மூச்சுக்காற்று
ஊடலாய்
என் காது மடலோடு!
.
ஆயிரம் ஆயிரம்
மின்னல் கீற்றுகள்,
என் மனதோடு!!

சற்று தைரியமாய்
சேர்த்து அணைத்தேன்
உயிரோடு மெய்யையும்
இதழோடு இதழையும்!!
.
சட்டென்று உணர்ந்தவளாய்
என்னை விலக்கி விட்டோடினாள்.
சிறிதளவும்
வெட்கம் விலகாமல்!!!
என்றோ விடியும் என்றே  என்றும்
துவங்கும் எம் மக்களின் நாட்கள்...
கைதூக்கி நிறுத்துபவன் தான் கேட்டான்..!
எண்களின் கழுத்தை நேரிப்பவனாய்
மாறிப்போன கூட்டம் ஏன் ?
நாடாளுமன்றம் எம் மக்களை
நாத்தியற்றவனாக்கும் பேர் கையில்
போய் சேருதல் ஆகுமோ..!
விலைவாசி ஏறினால் கூட உழைத்து
பிழைதிருந்தோம்...
 இன்றோ !
கொலைவாசியான கூட்டம் நாடாள்வதால்
கண்ணீரில் வலை விரித்து மீனுக்காய்
காத்திருக்கிறது எம் மக்கள் கூட்டம்...

தமிழன் வீழ்ந்தால் இத்தாலி மூளிக்கு..
இளிப்பை தவிர ஏது வாய்க்கும்...
அது சரி...கட்டுமரமாவேன் என்பானே...
கரையான் புற்றாய் வீற்றிருக்க..
என் மக்கள்  கழுமரம் ஏறுதலை  தடுப்பவனும் யாரங்கே...?  

ஆட்காட்டி விரலை கொண்ண்டு நம் தலை எழுத்தை 
மாற்றமுடியும்...அதர்மம் தலை தூக்கும் பாரில் 
இனி நம் அழுதல்கள் தீரட்டும்  
ஓட்டுச்சாவடியில்
நம் ''அலுத்தல்கள்'' மாறட்டும் 
"ஆதவனை"  "கை" மறைத்தாலும் "கை"-யினை
ஆதவன் சுட்டாலும்...கண்கட்டி விதைக்கு கலங்கிடாது... 
இலவச எலும்பு துண்டுகளுக்கு வாலாட்டாது.. 

கண்ணை திறந்து கரம் கோர்ப்போம் 
நம் தாழ்ந்திருந்த சிரம்...நேர் பாப்போம்...
                  ---கார்த்திக் ராஜா..

Thursday, March 17, 2011

விளைந்த வயல் குறித்த
வேதனையைச் சுமந்தபடி
உலையில் கொதிக்கிறது
அரிசி.
விட்டுக்கொடுத்து
பறிக்கப்பட்டது போக
மிச்சமிருக்கும் நிலத்திலும்
முளைத்து வரமுடியவில்லை
முன்புபோல்
நிலதைப் பாதுகாக்கும் பொறுப்பு
வயக்காட்டு பொம்மைகளிடமே
ஒப்படைக்கப்பட்டது எப்போதும்
வரப்புகளும் வாய்க்கால்களும் கிணறுகளும்
பறிக்கப்படும்போது
வேடிக்கை பார்த்தபடி
வெறுமனே நிற்பதைத்தவிர
வேறென்ன செய்யும் பொம்மைகள்?
பக்கத்து வயல்களுக்குப்
பாயும் வேளையில்
கரை மீறிக் கசியும் நீரில்
முளைவிட முடிந்தது
கொஞ்சமாவது....
எவரும் அறியாமல் துளையிட்டு
நிலத்திற்குள் ஊடுருவிய
பெருச்சாளிகளின் நாசங்கள்...
பாதுகாவலர்கள் பொம்மைகளே
என்பதறிந்த
அயலூர்க் குருவிகளின்
அச்சமற்ற அபகரித்தல்கள்...
எதிலும் அகப்படாம...
பானை வந்து சேர்வதற்குள்
பட்டபாடுகளை நினைத்தபடி
உலையில் கொதிக்கிறது
அரிசி.
பானையிலும்
பத்திரமாய் இருக்க முடியவில்லை
தீய்த்துவிடும் தீவிரத்தில்
தணல்கள்
கொதித்தால் போதாது
பொங்க வேண்டும்
பொங்கி வழியாமல்
அணையாது
அடுசுடும் நெருப்பு.

இரத்தம் வெவ்வேறு நிறம்

அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன
நாம் எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன? என்று
விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!

அங்கே
குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன
நாம் பட்டாசு வெடித்துப்
பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?
என்று
பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!


அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
இருட்டுக்காடுகளுக்கு
வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!
இதில் வியப்பேதும் இல்லை
அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்
இதோ
தேவவேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன!
இதோ
இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!
இதோ
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்
கொண்டிருக்கிறார்கள்!
இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக் கொண்டிருக்கிறார்கள்!
அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கின்றது!
இன்று
அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் இரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது!
தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!!
                -கவிக்கோ அப்துல் ரகுமான்
கண்ணின் மணி போல எனை
கருவறையில் காத்தவளே
பூமிக்கு நான் வந்தவுடன்
புலம்புவது ஏனம்மா?
பெண்ணென்ற கலக்கமா,
பெற்றவளே உன்நெஞ்சில்!
கள்ளமில்லா என் தாயே -உன்
உள்ளம் நினைப்பதென்ன...
நெல்லின் மணி கொண்டு
நெஞ்சை நிறுத்தவா...
கள்ளிப் பால் வார்த்து
கல்லறை படைக்கவா...
வேண்டாம் தாயே
விபரீத எண்ணம்
அள்ளி அணைக்க
மனமில்லையென்றால்
அரசுத் தொட்டிலில்
போட்டுவிடு..!

வாக்காளன்....(தேர்தல் ஸ்பெஷல்)

வாக்காளன்....(தேர்தல் ஸ்பெஷல்)  - Others


கம்புஊணி நடந்த
பாட்டியும்
காரில் பறந்தாள்...

கேட்பாரற்று கிடந்த
தாத்தாவுக்கு கூட
பணிவிடைக்கு பலபேர்..

சில்லறையை
மட்டுமே பார்த்த
சித்தப்பாவின்
கையில் பணக்கெட்டு...

சிடுமூஞ்சி
சித்தியின்
முகத்தில்
எல்லையில்லா சிரிப்பு...

அமைதியான
அம்மா
பரபரப்பாய்...

பரபரப்பான
அப்பா
அமைதியாய்...

நடப்பது புரியாமல்
குழம்பிப்போய்
நடந்து போன நானும்..,

கொடுத்ததை
வாங்கிக்கொண்டவாறே
அவர்கள்
சொன்னபடி
3 வது பொத்தானை
அழுத்திவிட்டு
வீடு திரும்பினேன்..

ஐம்பது ரூபாய்க்கு
ஆசைப்பட்டு
அடுத்து வரும்
ஐந்து வருடம்
அழும் நிலையை
எண்ணாமல்
"சிரித்துக்கொண்டே"

Wednesday, March 16, 2011

உழவுத் தொழில்....



புராதனத் தொழில் - இன்று
புறக்கணிக்கப்பட்ட தொழில்....

காய்ந்து வெடித்த
வயல் வெளிகளும் - அதனால்
அழுது அழுது
ஓய்ந்து துடித்த
கயல் விழிகளுமாய்
முப்போகம் விளைந்த பூமி - இனி
எப்போது விளையும் என்ற
ஏக்கப் பெருமூச்சுமாய்
உழவர்களின் வாழ்க்கை!

வேளாண்மை செய்பவனை
மேலாண்மை செய்பவன்
மிதிக்கிறான்,
மேலாண்மை செய்பவனை
வேளாண்மை செய்பவன்
துதிக்கிறான்.

பழக்கப்பட்டவரிடம்
சோகத்தைச் சொல்லி அழுவதை
வழக்கமாகக் கொண்டவர் நாம்!

பாவம் உழவன்
மண்ணோடு பாதி நாள்
மாடுகளோடு மீதி நாள்
சோகத்தை யாரிடமாவது
சொல்லி அழலாமென்றால்
உறவென்று யாரும்
ஒட்டுவதில்லை.

உழுது முடித்த சனம்
அழுது முடிக்கும் முன்னே
பொழுது முடிந்துவிடும்
நாளை என்ற நம்பிக்கையில்
நாளைத் தள்ளும் நாடகமே
நடைமுறை!

வேரோடு வேராக
வளரும் பயிருக்குள்
ஒன்றி விடும் உழவர்கள்.....

வயிறு ஒட்டி
சோகம் அப்பி
தேகம் மெலிந்த
இவர்கள் தான் - இந்த
தேசத்தின் வேர்களாம்?

நீர்வீழ்ச்சியை இரசிக்கலாம்
வேருக்கு வீழ்ச்சியென்றால்
எப்படியடா ரசிப்பது?

கார் இல்லையென்றால்
கால்கள் இருக்கின்றன;
விமானம் இல்லையென்றால்
அவமானம் இல்லை.

தானியம் இல்லையென்றால்
சூனியம் தானடா!

இருந்தாலும் இங்கே
கழனிகள் எல்லாம்
மதிப்பிழந்தாச்சு;
கணினிகள் மட்டும்
மதிப்புப் பெற்றாச்சு....

குறுக்கு வலிக்க
உழைத்தக் கூட்டம்
குடிசையை விட்டு உயரவில்லை;
குறுக்கு வழியில்
பிழைத்தக் கூட்டம்
கோடிகள் சேர்க்க அயரவில்லை.

பெற்ற சம்பளம் போதவில்லை
என்பதோடு மட்டுமே
நின்றுப்போனது
கற்றறிந்தோர் போராட்டம்.

விவசாயக் கூலிகளின்
வேதனைப் பற்றியும்
விவசாயிகள் வேதனை பற்றியும்
அவரவர் அன்றி
வேறு எவரும்
கவலை கொள்ளார்.

கலப்பைகள்கூடக்
கவலை கொள்ளும் - இவர்
களைப்பறியா உழைப்பு கண்டு!

கள்ளிச் செடியும்
கலவரம் கொள்ளும் - அந்தக்
காய்ந்த நிலப்பரப்பைக்
காண நேர்ந்தால்
அதிலும்
நம்பிக்கை விதைத்து
கனிகள் விளைவித்து
உயிர் வாழ்வை
உறுதி செய்தோரின்
உயிர் வாழ்க்கை
உத்திரவாதமின்றி
ஊசலாட்டத்தில்.....

கலப்பை மாறி "டிராக்டர்" ஆச்சு
கமலை மாறி "மோட்டார்" ஆச்சு
விதைகள் மாறி "வீரியம்" ஆச்சு
விவசாயிகள் வாழ்க்கை மட்டும்
வீழ்ந்திடல் ஆச்சு

விளைபொருள் கூட
கூர்த் தீட்டிய
கொலைக் கருவியாய்
விவசாய இறக்குமதியில் இன்று?

இத்தனை சோகமும்
பார்த்த பின்னும்
காலம் மறந்து
கண்மூடி வாழ்ந்து
மரித்த பின்
மண்மூடிப் போகவா
வாழ்க்கை?


தன்னிலை மறந்து
உன்னிலே மறைந்து
ஊர் உறங்கும் உற்சவத்தில்
தார் சரியும் சாலை ஓரத்தில்
மணலிலே மங்கையுடன்
கால்கள் நான்கும் நம்
தோள்கள் உரச நடக்க
கைகளின் விரல்கள்
இறுக்கமாய் இணைந்து
இளம் காதல் அது
உயிர் பெற்றது அன்று !!!

அதே வேளையில்
அதே பாதையில்
அன்பே உன்னை பிரிந்து
ஒற்றையாலனாய் உயிரற்ற
உடலோடு உணர்வற்ற
ஊனோடு நடக்கையிலும்
உணர்ந்தேன்
நம் உயிருள்ள காதலை !!!

-கார்த்திக்ராஜா.....

ஒரே வேரால்
உரிஞ்சப்படும் நீர்
கொஞ்சம் ரோஜாவுக்கும்
கொஞ்சம் முள்ளுக்கும்
இரண்டும் சேர்த்துதான்
அதன் முழுமை.இப்படித்தான்
வாழ்க்கையின் முழுமையும்,
முள்ளைப் போல பிரிவும்
முழுமையின் ஒரு பகுதியே!...

-கார்த்திக் ராஜா  

Tuesday, March 15, 2011

யாரிடம் சொன்னால் நம்புவார்கள்.....!!!!!

யாரிடம் சொன்னால் நம்புவார்கள்
உன்னை
பார்த்ததில் இருந்து
மாதம் ஒருமுறை
உன்னை நினைத்து
தேய்கிறது
நிலவு !
என்று சொன்னால் !
-கார்த்திக் ராஜா

உனக்கும் எனக்கும்.....!!!!!!

உன்னிடத்தில்
எனக்கும்
என்னிடத்தில்
உனக்கும்
பேசிக்கொள்ள கோடி
வார்த்தைகள் இருந்தும்
மௌனம் மட்டும்
பிடித்திருக்கிறது
உனக்கும்
எனக்கும்.....!!!!!!

விழியால் பேச இயலும் அளவுக்கு ...
மொழியால் பேச இயலவில்லை....
நினைவில் நீ வருவது..ஒரு முறை...
கனவுகளில் பலமுறை...
எப்போது நான் கனவினிலே
கழிக்கிறேன் என் பொழுதுகளை...
உருகிய மெழுகாய் உடல் இளைத்தாலும்...
உள்ளம் ஊதிய பலூனாய்....
பெருகுகிறதே...
அட இதற்கு பெயர் காதலோ....?
----------கார்த்திக் ராஜா

Monday, March 14, 2011

"அஞ்சவே அஞ்சாதே"



காதல் வரும் வேலையில்
களவி வரும் அஞ்சாதே
அவள் கோவம் கொண்டு பேசும் போது
பிரிவு உன்னை தொடும் அஞ்சாதே
காதல் வந்த பின்னாலே
பொய்களும் உன் உதடோடு வரும் அஞ்சாதே
அவள் மௌனம் மட்டும் பார்த்து விட்டு
காதல் பயம் கொண்டு அஞ்சாதே
அவள் இதயத்தில் கலந்த பின்னும்
காதல் சொல்ல என்றும் "அஞ்சவே அஞ்சாதே"

இரவின் நிலவு அது தேய்ந்தாலும்,
அவள் காதல் மட்டும் ஓயாதே...!
கனவில் காதல் சிந்தும் அவள் பார்வை
பார்க்காமல் இந்த கண்களும் மூடாதே..!
அவள் இதய முகவரி தேடி
இன்று அவள் புன்னகைள் தொலைத்த சிறுவனாய்
காதல் பேருந்தில் ஏற
அவள் இதய நிறுத்தத்தில் காத்திருக்கிறேன்...

உன் முகம் பார்க்காத நாளெல்லாம் அமாவாசை இரவாகி போனது
அவள் கண் விழிகளில் இல்லாத போதையால்
அவன் கவிதைகளில் எழுத்துப்பிழை கூடி போனது

புன்னகைத்து பேசாத மாலை பொழுதும்
அவளுடன் சண்டை போடாத இரவும் இல்லாமல் போனது

அவனுக்கு இதயத்தில் காதல் விதை போட்டதால்
இன்று அவளின் நினைவு என்னும் நிழலில் ஒரு சுகமான உறக்கம்
 kaakitha idhayam
கண்களால் காதல் சொல்லி
கைகளால் அதை உறுதிபடுத்தி
என் காதை கிள்ளும் காதலி..!
 
நான் காதல் பாடல் எழுத காத்திருக்கும்
அவள் காகித இதயம்...!

இதயத்தில் எழுதினால் வலிக்கும் என்று
இப்போது
அவள் விழிகளில் கவிதை எழுத ஆரம்பித்து   
இருக்கிறேன்...!

முற்றுப்புள்ளி-யின் அருகே...மீண்டும் சில புள்ளிகளானது..
உன் பார்வை தடயங்கள்...

கார்த்திக்...ராஜா
நிலவு அவள் ஒளி வாங்கி என் உயிர் என்னும் ஒளி ஏற்றினேன்
நிலவின் அழகை பக்கத்தில் இருந்து எப்போதும் ரசிக்கும் செல்லப்பிள்ளை
உடைகள் எனக்கு இல்லை ,
அதை என்னி நான் உறங்காமல் இருந்தது இல்லை
நிலவே ஒப்புக்கு கொண்டு பின் சொன்ன வார்த்தை
"என் அழகே அவளுக்கு நான் அவளுக்கு அருகில் இருப்பது தான்"

நட்ச்சத்திரம் காதல் செய்யும் அழகை பார்க்க

தொலைத்தேன்...



சாயங்கள் பூசாத சின்ன உதடுகளில்
எப்போதும் பெரிய புன்னகை கேட்டேன்
கண்ணீர் சிந்தா கண்களில்
எப்போதும் காதல் சிந்த கேட்டேன்
கோபம் வந்து கிள்ளி விளையாடும் கை விரல்கள்
எப்போதும் என் கன்னங்கள் கிள்ள கேட்டேன்

இன்னும் சில கேட்க ஆசை, ஆனால்

தொலைத்தேன்


தொலைந்த இதயம் எப்படி கேட்கும் 

kerala
எண்ணங்களில் காதல் நெருப்பேற்றி
கனவுகளில் எப்போதும் காலைப்பொழுது
அவள் உதடுகளின் ஒர புன்னகையால்
அவன் உறக்கம் இன்னும் கலையாத காலைப்பொழுது
எண்ணங்களில் காதல் நெருப்பேற்றியவள்
இன்று அவன் கன்னங்களை ஈரப்படுத்திய காலைப்பொழுது
"காதல் நெருப்பை அனையாமல் குளிர் காயும் கோடை நிலவு அவள் முகம்"
அதை பார்க்க
எப்போதும் எங்கும்
அவன் காலைப்பொழுது

அவன் காலைப்பொழுதில் இன்னும் பல நிகழ்வுகள் வாசிக்க

காவலன் ஆகிவிட்டேன்


பக்தன்...

காதல் கோவிலில் கடவுளாக விற்றிருக்கும் அவள் 
அவன் கடவுளை தரிசிக்காத நாலும் இல்லை 
தரிசன் இல்லையென்றால் இரவில் தூங்குவதும் இல்லை

கடவுளை கண்டதும் மனதினில் பிரார்த்தனைகள்
செய்ய மறப்பதும் இல்லை 
கடவுளின் அழகை எப்போதும் ரசிக்காமல் இருந்ததும் இல்லை 

காதல் கொண்ட காரணத்தால் 
அவன் எப்போதும் கடவுளை எண்ணி கவிதை கோலங்கள்
போடா தவறியதும் இல்லை 

பக்தனின் கவிதை கோலங்கள் ரசித்தவள் 
பிரார்த்தனைகள் கண்டு சிரித்தவள்
அவன் பொறுமையை கொண்டு பூரித்தவள் 

இதய கருவறையில் இடம் தர மறுப்பது மட்டும் 
புரியாமல் , விடை தெரியாமல் , காரணங்கள் விளங்காமல் 
காத்திருக்கிறான் பக்தன் அவன்.

சத்தியமாக சொல்...!

சுடுகின்ற காற்றை
சுவாசித்தா
என் இதயம்
இளைப்பாறிக் கொள்ளும்
உன் இதயத்தின்
சத்தத்தினால்
உன் கரு விழிகளால்
காயப்பட்ட
என் கனவுகள் உன்னை
சுமந்து கொள்ளும்
காதலாக
நீ ஏமாற்றிக் கொள்வாய்
மதங்களை சொல்லி
உன் மனசையும்

சத்தியமாக சொல்
என் நினைவுகள்
உன் நினைவுகளில்
நிச்சயமாய்
இல்லை என்று..!-கார்த்திக் ராஜா...

மரபுகளை முறித்து

எனக்குத் தெரியும் நீ யாரென்று
ஏனெனில் நீயும் நானும் ஒன்று

உன்னுடைய ஒவ்வொரு அசைவையும்
என்னால் வரையறுக்கமுடியும்
ஏனெனில் உனக்குள் நான்

நீ ஜாதி வெறிபிடித்த அப்பனின் குழந்தை
நான் ஜாதியால் ஒதுக்கப்பட்ட மனிதம்

நீ துள்ளி விளையாடிய சிங்கக்குட்டி
நான் கட்டி வைக்கப்பட்ட கன்றுக்குட்டி
ஆனாலும்

இங்கே நெருப்புக்கும் பஞ்சுக்கும் காதல்
எலிக்கும் பூனைக்கும் உறவு
மரபுகளையும் முறித்துக்கொண்டு...

அன்பென்ற சொல்லில் தானே
அண்டமெல்லாம் இயங்கும்...!

பிழைருந்தும் காதலில் தானே
மனித வாழ்க்கை தொடங்கும்...!

மனிதம் கொண்ட மனமும் தானே
இறந்த பின்னும் வாழும்...! 

இதமான காற்றில் தானே
மழை மேகம் பாடும்...!


உண்மைகள் உணர்ந்து வாழ்ந்திட வாழாய்..
பொய்மைகள் இருந்தும்..!

மனிதநேயத்தை கொன்று விட்டு...

காற்றிலே
ரத்தத்தின் வாசம்
வீசுகிறது

தொலைவில்
யாரோ
கொலையுண்டிருக்கிறார்கள்

இப்பொழுது
மெலிதாய்
கொலையுண்டவனின்
குரலும் கேட்க்கிறது

கேட்பாரற்றுக்
கரைகிறது
அவன் குரல்

நானும்
கேட்கவில்லை

உதவிக்காய்
நீண்ட
அவன் குரலை
காற்றிலே அறுத்து
தலை குனிந்து
நிற்கிறேன்

அவனின்
கடைசி மூச்சின்
ஒலி குறைந்ததும்
ரத்தம் படிந்த
என் கைகளை 


காற்றிலே கழுவிக்கொள்கிறேன்.......!!!! 

ஆம் மனிதநேயத்தை கொன்று விட்டு நானும் கொலைகாரனாய்...

---kaarthick raja

பிரிவு தரும் அனுபவங்களை உறவுகள்தருவதில்லை...

கடைசியாக நமக்குள் ஓர் பிரிவு..
வந்த போது
நீ கடைசியாக சொன்ன அந்த
ஓராயிரம் அர்த்தமுள்ள வார்த்தை

என் மனதில் பசு மரத்து ஆணியாக
பதிந்து போய்விட்டது.-ஆகையால்

நான் வழிமிது விழிவைத்து
நாம் நட்பு மீது நம்பிக்கை வைத்து

என்றோ ஓர் நாள் உன்னைச் சந்திக்கும்...
அந்த தருணத்திற்காக காத்திருக்கின்றேன் நண்பா.!
 -கார்த்திக் ராஜா
பிரிந்து விழுந்தும்
பறக்கத் துடிக்கும்
சிறகாகக் காதல்….
விழுந்த சிறகை
எடுத்து விளையாடும்
சிறுமியாக நீ….!

பாட்டி சொன்ன கதைகளில்
கேட்டு ரசித்த
பேரழகு இளவரசிகளும்
தேவலோக மங்கைகளும்
பழைய தாவணி போட்டுக்கொண்டு
பாசி மணி கோர்த்திருந்தால்
உன்னைப் போல் தானடி இருந்திருப்பார்கள்.


என் செல்லக்கிளி
நீயென்று சொல்லி
மறைத்து வைத்த மிளகாயை – உன்
சொக்க வைக்கும் உதடுகளில்
குறும்பாக நான் தேய்க்க
நீ சிரித்துக் கொண்டே சிந்தும்
கண்ணீரோடு சேர்ந்து
நம் காதலும் பெருக்கெடுக்கும்.

பிறந்தது என்னவோ
ஆட்டுக்குட்டி முட்டையிடும்
அழகிய கிராமம்.
படித்ததெல்லாம்
குயில்களும் மயில்களும்
கற்றுத் தந்த பாடம்.
அப்படியிருக்க,
“எங்கு சென்று வாங்கி வந்தாய்,
இதழ்வழிக் கல்வியில்
இளங்கலைப் பட்டம்?”

முறைத்துச் சிரித்து
பூசி மறைத்த விரிசல்களும்,
அடித்துச் செல்லும்
அலைகளையெல்லாம்
தடுத்து நிறுத்தும் கற்கள் போல
அடுக்கி வைத்த நினைவுகளும்
நாம் காதலினால் கட்டிய
அடையாள வீட்டிற்கு
அலங்காரமாக நிற்கின்றன…
மேகத்தினுள்ளே
குடியிருக்கும் மழை நீ….
மோகத்தினூடே
மறைந்திருக்கும் சிலை நீ…
இலையோடு வழிந்திருந்து
விழுகின்ற மழைத்துளி போல்
காதோடு ரகசியமாய்
கதை பேசும்
இதழிசையும் நீ…


முள்ளோடு உறவாடும்
பூவாக நீ இருந்தால்
வண்டாக நான் மாறி
விளையாட மாட்டேனா?

நாகரீகம் தவறேல்....

குளிர்ப்படுத்தப்பட்ட
குளம்பி அருந்தும் விடுதியின்
மைய மேசையருகில்
கால் மேல் கால்
போட்டுக் கொண்டு
‘ப்ரதர்’ என்று சொல்லி
என்னிடம்
பேசிக் கொண்டிருந்த பெண்
அவள் டி- சர்ட்டின்
முன்புறம் எழுதிய
வாசகத்தை மட்டுமே
வெகு நேரமாகப்
படித்துக் கொண்டிருந்ததாக,
நான் விடை பெற்றபின்
என்னைப் பற்றி
அவள் தோழியிடம்
சொல்லக் கூடும்…!.....நாகரீகம் தவறேல்....
கார்த்திக் ராஜா...

நெகிழிக் கோப்பை....(use and throw)

“குளிர்காலத்தில் இது
உடம்புக்கு நல்லதுப்பா !”
“எப்பவாச்சும் எடுத்துக்கிட்டா தப்பில்லையே !”
“அப்பப்போ சேர்த்துக்கிட்டா
இதயத்துக்கு நல்லாதாம்ல !”,
போன்ற சப்பைக்கட்டுகளுடனே
பெரும்பாலான நேரங்களில் நாம் அதை
விலை கொடுத்து வாங்குகிறோம்
கூடவே ஓரிரு நெகிழிக் கோப்பைகளையும்…
ஆரம்பத்தில் அளவு சரி பார்த்து
கோப்பைகளில் பரிமாறப்படுகிறது
சந்தோச துக்க தருணங்கள்…
புலனறியாத பொழுதுகளில்
மயக்கும் மன்மத நீர்மம்
குருதியுடன் புணர்ந்த பின்னர்
அளவுகளைத் தொலைத்து
எக்குத் தப்பாய் நிறைத்து
வழியவிடுகிறோம் கோப்பைகளை…
நிலவை நாலாய் மடித்து
அதனோரத்தில் நட்சத்திரங்கள் தெளித்த
சிவப்புப் பூ ஒன்றை ஒட்டிப் பரிசளிக்கிறோம்
அவர்களின் கூந்தல்முடி கலைந்ததற்கு
காற்றுடன் கத்திச் சண்டை போடுகிறோம்
நாய்களின் பூனைகளின்
பெயர் வைத்தழைத்து சிரித்துக் கொள்கிறோம்
ஒரு நொடி பிரிந்தாலும் உயிர்விடுவேனென்று
பரஸ்பரம் பிதற்றிக் கொண்டு அலைகிறோம்…
சலித்துத் தீர்ந்த நொடியில்
மறுப்பேதுமின்றி அமைதியாக எழுந்து
தெளிந்த சிந்தையுடன் கைகுலுக்கி
ஒருவரையொருவர் திரும்பிப் பாராமல்
வேறு வேறு திசையில் நடக்கிறோம்…
போகிற வழியில் இருவரும்
சர்வ சாதாரணமாக
கசக்கி எரிகிறோம்
அந்த நெகிழிக் கோப்பைகளை,
நட்பென்ற பெயரில்
நாம் பழகித் திரியும்
சில காதல்களைப் போல…!
----கார்த்திக் ராஜா...

வராதது கவிதை மட்டுமல்ல...

சீராக மறுக்கப்பட்ட சிறுபுற்கள்
வட்டப் பாதையில் நட்ட...
அலங்காரச் செடிகளில்
ஒழுங்கற்று வளர்ந்த பூவினங்கள்
அதன் மத்தியில்...
சிற்ப வேலைப்பாடுகளில்
சிறை கொண்டிருந்த பீடத்தில்
வெற்றுக் காகிதமும் வெறுங்கையுமாக
வீற்றிருக்கிறேன்…
வராதது கவிதை மட்டுமல்ல நீயும் தான்... 
--கார்த்திக் ராஜா 

கண் மூடித் -தூங்கப் போகிறேன்...!

உனக்காக
காத்திருந்து...
காத்திருந்து...
கண் மூடித் -தூங்கப் போகிறேன்
கல்லறையில்
நீ வராததால்...! 

நீ வந்தவுடன் என்னை எழுப்ப தேவை இல்லை...!

என் கண்கள் திறந்தே தான் இருக்கும்..  அப்போதும்...

-கார்த்திக் ராஜா...

உன்னைத் தவிர வேறு எதையெதையோ...!


வீட்டின் முன்பகுதில் நட்டிருந்த மூங்கில்கள்
பூவிட்டிருந்த ஒரு அதிகாலைப் பொழுதில்
கிரணங்கள் தீட்டிய சித்திரம் போல நீ வந்திருந்தாய்
என்னைத் தவிர மற்ற அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்த
உன்னைப் பிரதியெடுக்க பிரயத்தனப்பட்டன…
என் வீட்டின் நிலைக் கண்ணாடிகள் அனைத்தும்
ஆனால் கையலம்பும் குழாய்க்கு மேலே தொங்கும்
பழைய கண்ணாடிக்கு மட்டுமே அன்று யோகம் போல
உனக்கு அந்தக் கண்ணாடியை
நினைவிருக்குமா எனத் தெரியவில்லை
பச்சை நிறத்தில் சட்டம் கட்டியிருக்கும்
ஓரங்களில் லேசாக உப்புப் படிந்திருக்கும்
நேற்று முன்தினம் அந்தக் கண்ணாடி
அதை மாட்டி வைத்திருந்த
ஆணியில் இருந்து கழன்று
கீழே விழுந்து தெறித்தது !
இத்தனை நாட்களாக
உன் முகத்தை
நினைவுகொள்ள முயன்று
தோற்றதால் இருக்கலாம்…
சிதறிக் கிடந்த சில்லுகள் ஒவ்வொன்றையும்
உற்றுப் பார்க்கிறேன் – அவை
உன்னைத் தவிர வேறு எதையெதையோ
பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன…!
-கார்த்திக் ராஜா

திரும்ப கிடைக்குமா?


திரும்ப கிடைக்குமா?

யாரையும் அறியா கோவைக்கு உனக்காக நானும்
யாரையும் அறியா சென்னைக்கு எனக்காக நீயும் 
வந்திறங்கிய நாட்கள்....
பௌர்ணமி இரவில், கடற்கரை மணலில் 
கால் நனைத்த பொழுதுகள்...

திக்கு தெரியாமல், வழிகளும் அறியாமல்
ஒன்றாய் பைக்கில் சுற்றிய சாலைகள்...

மழைகாலம் என தெரிந்தும், கடற்கரை சென்று
ஒதுங்க இடம் இல்லாமல் நனைந்த மழை....

நான் அழைத்து போகும் திரைப்படம் எல்லாம்
அறுவையான படம் என்று கூறி உனக்கு வரும் கோபங்கள்...

நீ கோபப்படுவாய் என தெரிந்தும் உன் கோபத்தை ரசிக்கவே
நான் புக் செய்யும் அறுவை படங்கள்...

உனக்காக நானும் எனக்காக நீயும் புத்தாடை 
எடுபதற்காகவே வரும் பண்டிகைகள்...

அடுத்தவர் தூக்கம் கெடும் என்பதிற்காக
SMS - ல்லேயே நீளும் இரவுகள்...

நீ வீட்டில் இருந்து கிளம்பிவிட்டாய் என தெரிந்தும்
எந்த உடையில் நீ வருவாய் என காத்திருக்கும் நொடிகள்...

உடன் இருக்க வேண்டும் என்பதிற்காக 
பாண்டிச்சேரிகும், திண்டிவனத்திற்கும் சென்று
பேருந்திலேயே பொழுதை கழிக்கும் பயணங்கள்...

மனைவியாய் மாறிய காதலியே!
என் அலுவலகத்தின் வேலை பளுவிற்கும்,
உன் வீடு வேலையின் சுமைகளுக்கும்,
நம் குழந்தையின் பராமரிப்பிற்கும்,

இடையில், திரும்ப கிடைக்குமா?