Saturday, December 14, 2013

ஆட்டோகிராஃப் 2013 @Prakash Sona (3)_

அது ஒரு முகநூல்குழு... சிற்சில விவாதங்களில் அறிமுகமானோம்.

பொருள் பொதிந்த பேச்சு... யாரிவன் என்று கவனிக்கத்தக்க கண்ணியம்.

பெரும் இடைவெளிக்குப்பின் அரட்டையில் பேசிக்கொடோம். அழைப்பு எண்களை பரிமாறிக்கொண்டோம்.

ஒருநாள் திரு.ஷேர்கான் ஹமீது அவர்களோடு சென்னையில் எங்கள் நண்பர்கள் எல்லாருமாய்ச் சந்திப்பதாக திட்டமிட்டுக் கொண்டோம்.

சென்னையில் வசிக்கும் நண்பர்களையும் அழைக்கலாம் என்றதும் முதலில் சுழற்றியது பிரகாஷின் எண்ணைத்தான்.
நட்புவட்டத்தில் என்னோடு மட்டும் அறிமுகமாகி இருந்தவன். (பேச்சளவில்) சந்திப்புக்கு நான் வரும்முன்னே... வந்து கலந்து எல்லோரோடும் ஐக்கியமாகிவிட... வழக்கம் போல நான் லேட்.

அதன் பின் அதிரிபுதிரியான அந்த கலாய்ப்பும்,சந்திப்பும்
எங்களை பிணைத்துவிட... இதோ இன்னும் தொடர்கிறது...

எங்க ஊர்க்காரன் .  (திலி)
பெரும் தமிழ்ச்செருக்கு பிடித்தவன். இலக்கியம் இலக்கணம் எல்லாம் பேசுவோம். முன்பெல்லாம் எந்த புத்தகத்தைப் படித்து முடித்ததும் அதைப்பற்றிய நீண்டதொரு உரையாடல் இருவருக்குமிருக்கும்...

ஒரே தடத்தில் சிந்திப்பவர்களாதலால் இவன் வாதங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும்.

இன்றைக்குவரைக்கும் பெரும் மதிப்புடைய நட்பினுக்கு உரியவன்...

வேறென்ன சொல்ல பிரகதீஷ்வரன்... பெரியகோவில் போல என் நண்பன் பிரகாஷின் உள்ளமும் பெரிது...

இவன் சோகப்பட்டு ஒரே ஒருநாள் மட்டும் உடனிருந்து பார்த்திருந்திருக்கிறேன்.
இனியெப்போதும் அதுபோலொருதருணம் வாய்க்காது நண்பா...

என்றென்றும் நட்புடன்..

பிரகாஷ் சோனா

#ஆட்டோகிராஃப்_2013








ஆதி மற்றும் பிரகதிஷ்வரன் @பிரகாஷ் 


அத்திப்பழம் சிவப்பா? தன்  அத்தமக சிவப்பா? -ஆராய்ச்சியின் போது எடுக்கப்பட்ட படம்.




சின்னதா ஒரு ஹைக்கூ...


Friday, December 13, 2013

ஆட்டோகிராஃப்_2013@ Giridaran Giri (2)

அலுவல் வேலைகள் தவிர்த்து விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தேன். சதீஷ் "வா உனக்கு ஒரு நண்பனை அறிமுகப்படுத்துகிறேன் " என்று சொல்லி அமைந்தகரை Amba Skywalk அழைத்துப்போய் இருந்தான் அங்கேதான் கிரிதரனோடு முதல் சந்திப்பு... 

அதற்கும் முன் தொலைப்பேசி உரையாடல்களில் பேசியிருக்கிறோம். நாங்கள் ஒரு பதினெட்டு பேர் இருப்போம். மிக நெருங்கியவட்டத்தில் ஒரு பதினோரு பேர். கான்ஃப்ரன்ஸ் கால் போட்டு அரட்டை அடிக்கத்தொடங்கினால் ஊரே தூங்கும் ஜாமத்தில் தான் போனைக் கட்செய்வோம். 

இதோ இவனோடும் மூன்று வருடம் கடந்து போய்விட்டது. கிரி. அந்த புன்னகை ஒன்று போது முழுசுயவிவரத்திற்கும் ஒற்றை விளக்கம் கொடுக்க. எதிரி என்றாலும் இவன் காட்டும் பொறுமையும், அன்பும் யாரிடமும் பார்த்ததேயில்லை.. 

அப்போ டீம்ல எல்லோரும் மச்சான்ன்னு கூப்பிட்டுகொண்ட போது கிரியை மட்டும் ஒட்டுமொத்தமாய் மாமா என்றழைத்தோம். அதுவே  நிரந்தர உறவுஆகிவிட்டது.அண்ணன் திருமணத்திற்கு ஊருக்கு வந்தவனை ஏரியா சிறுவர் முதற்கொண்டு. உரிமையாக மாமா என்றழைக்க நெகிழ்து போனான். 

கிரி வீட்டிற்குப் போய் அங்கேயும் மாமன் தான். அவங்க அம்மா வித்யாசமா பார்த்து ரசிச்சாங்க..ஹஹ(கிரி அம்மா தோசை வார்த்தாங்கன்னா கணக்கு வழக்கில்லாமல் உள்ளே இறங்கும் அப்படி ஒரு கைப் பக்குவம்) 

நட்பில் இணைந்தபிறகு மதுரை,கொடைக்கானல், பாண்டிச்சேரி,திருச்செந்தூர்,சங்கரன்கோவில்,திருநெல்வேலி, மாமல்லபுரம் சென்னைன்னு ஒன்றாக சுத்தியிருக்கோம். 

நெருக்கடியான தருணங்களில் இரண்டு பேரும் மெரினா கடற்கரை படகில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருப்போம். ஒரு பரிசுத்தமான நட்பு அந்த கடற்கரையின் எல்லா இரைச்சல்களையும் விழுங்கிவிட்டு அமைதியைக் கொடுக்கும். 

கொண்டாட்டங்கள் மிகுந்த இவனின் முகத்தைத் தான் உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்குப் பின்னால் காயங்களை மறைத்துக்கொண்டுகாற்றுக் குதிரையாய் திரியும் இன்னொரு கிரியை எனக்குத் தெரியும். 

உயிர் கொடுக்கும் நண்பன் கிடைப்பது கொஞ்சம் கஷ்ட்டம்தான். உயிர் கொடுக்கத்தகுதியான நண்பன் கிடைப்பது மிக மிக அரிது . கிரி அப்படியானவன் எனக்கு... 
இதோ. அவன் நட்பினையும் சுமந்து நான்காம் ஆண்டுக்கு பயணமாகிறேன்.

Giridaran Giri
ஈடு இணையற்ற மார்பிங் வேடத்தில் கிரிதரன் 


கிரிதரன் 


யானை கிரிதரன் அவர்களுடன் ஆசீர்வாதம்
பெற்றுக்கொண்ட போது எடுத்த படம் 
உலக நாயகனுடன் உள்ளூர் நா யகன்
(மேர்ஜ் செய்யப்படவில்லை என உறுதி அளிக்கிறோம்)
 கடுமையான போட்டோஷாப்
வேலைகளுக்குப்  பின் கிரி .

ஆட்டோகிராஃப் 2013 @Pravin raja (1)


பார்க்கவும் பழகவும் பரம சாது. ரொம்ப அன்பானவன் . ஊரு கன்னியாகுமரி . இதோடு மூன்று வருடம் கடந்து நான்காவது வருடமும் வரப்போகிறது.. 

நல்ல நண்பன். ஏதாச்சும் தப்புப்பண்ணிட்டு சின்னப்புள்ளை மாதிரி முன்னாடி வந்து நிப்பான். தாறுமாறா திட்டுவேன.
நீ திட்டு சகல உன்னைவிட்டா யாருக்கந்த உரிமை இருக்குன்னு சிரிச்சுகிட்டே சொல்வான். 

குணத்திலே தங்கம். நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில் பொண்ணு எடுப்போம்ன்னு பேசிக்கொண்டது இன்று வரைக்கும் சகல-ன்னுதான் கூப்பிட்டுப்போம். 

சமீபகாலனா ஆள் அடிக்கடி காணாமல் போய்டுறான். லவ்வுல சிக்கிட்டான் போல...
இவன்கிட்ட உள்ள கெட்டப்பழக்கம் சுமார் நூறு , நூத்திபுப்பத்தஞ்சு லவ்வு பண்ணிட்டு ஃபெயிலியராகிட்டேன்னு பாட்டுப் பாடியே கொல்வான். 

எதையும் தாங்கும் இதயமா மாறி இவன் நட்பை கையிலெடுத்து கடந்து கொண்டிருக்கிறோம்.

வீட்டில் பொண்ணு பார்க்குறாங்க (2013 டிசம்பர்-ல் எழுதுகிறேன்) சீக்கிரமே டும்... டும்.. டும்... இருக்கும்.! வாழ்த்துக்கள் சகல...

Pravin Raja

#ஆட்டோகிராஃப்_2013

வயதுக்கு வந்த
போது  எடுத்த படம் 
Zambia  ( kariba ) -வில் பயணத்தின் போது 


பரத நாட்டிய வகுப்பில்



பிரவின் 
ரொம்ப தேடாதீங்க  இதில் பிரவின் இல்லை... இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாதுதான்.



Sunday, December 8, 2013

ரௌத்திரம்

சப்தமிடாத ஓர் ஊமை மௌனம்... உள்ளிருந்து எண்ணங்களை உருட்டும்..

போதிமரம் தேடிச்செல்லும் ஞானவாக்குகள் குப்பைத்தொட்டியெங்கும் இரைந்து கிடக்கும்

வேற்றுகிரகம் போலே சுற்றியிருக்கும் தொடர்பில்லாத மனிதனை தற்செயலாயேனும் கவனிக்கத் தோன்றும்

அடுத்தது என்னவென்ற கேள்விகள் தாகத்தைக் கொடுக்ககாலிக்
குடுவைகள் எக்காளமாய்ச் சிரிக்கும்.

கவனமாயிறுவென்னும் கருணைப்பட்டோர் வாக்குகள் போலானதோர் பசி தீர்க்கும் மந்திரம் வேறில்லை...

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

இச்செகத்தில் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

பாரதி மெல்ல மெல்ல உள்ளிருந்து ரௌத்திரம் விதைக்கிறான்.. கூச்சலிட்டமனம் அமைதிப்பட்ட குளமாகுது!

அதன் கள்ள மவுனத்துக்கடியில் ஏதுகுடியிருக்குதென்று யாரறிவார்.

-கவிதைக்காரன்.

Thursday, November 21, 2013

குலம்வளர்க்கச் சேராயோ...


பூத உடல் நோகும் கண்ணா...
நாதன் காண ஏங்குவதில்...

காதல் வந்து தேங்கும் நெஞ்சம்
காத்திருந்தும் காலமென்ன... 
ஆதலினால் வந்துவிடு ஆவிபற்றிக் கொண்டுவிடு

ஊதல் வந்து வீசுதுகாண்
உயிரின் சப்தம் மாயுதல் கேள்..

ஏனுனக்குப் புரியவில்லை
இதுவரைக்கும் பதிலுமில்லை...

கோமறுத்த கன்றினைப் போல் கோதை உள்ளம் கனன்றதே பார்....

பார்த்திபன் தோள் கொண்டவனே பாவைதேடி வாராயோ...

ஊழிநிறங் கொண்டவனே
உனது மாரில்ச் சாயேனோ

ஆதிஷேசன் மீது ஆடும்
ஆநிறைக் கோனே...

என் நாதமென்னும் துகில் விரித்தேன் தாவி ஓடிவா...

உன் கூர்விழியால் குமைந்த பெண்ணை கூதல் வந்து வீசும் முன்னே
குலம்வளர்க்கச் சேராயோ...

- கவிதைக்காரன்

Sunday, November 17, 2013

விடிதலுக்கேங்கினேன்... நீ வரத் தாங்கினேன்...



ஏன் மணிவண்ணா..
என்மீதிரக்கமில்லையா..
பால் மருவும் வெண்கண்ணா
விட்டு தொலைவு போகிறாயெதற்கு...

தீப்பற்றிய மெழுகாய் என் உளம்
உருகி உனைத்தேடித் தேயுது பாராயோ!

அரையணி தானவிழ
உடல் ஒளி தான் சிறிய
வளைகள் வழுக்கி விழுந்தனவே..
வந்தெனை நீயும் அணைத்திடுக...

மார் உயர்ந்தெழுந்து வாய் விம்மிடும் மங்கை
மனத் துயர் பார்க்கும் விழிகளை ஏங்கி ஏங்கி உயிர்த்தேயுதே...

தோங்கு மரமதில் வாங்கும் பூங்குயில் ராகம்
உன்பெயரெழுதி எனை மேயுதே...

பொழுது சாய்ந்து இருள் கம்மி கரைகிறது...
உளமோ உனை எண்ணி மருளுதே...

தூரமாய் உன் நிஜம்
வருவதாய் நோக்கினேன்...
ஆநிரைக் காண்கிறேன்
மாமணி கேட்கிறேன்
கோகலே நாகுகள் உகளுமன்றோ...
என் சொல்லி உய்குவேன் அவனையின்றி...

தோழி மேனியின் வெம்மையும் எனை இகழுமடி...
தோது ஏது இனி மாயன் வரவில்லை.
மாது நான் என்ன செய்கவோ
இருள் மிகச் சூழ்ந்தது
பனிப்புகை ஓங்குது..

அன்னைத் தோழியர்
அவரவர் துயிலில் தான் விழுந்து அயர்ந்து தூங்கவே...

அந்தகாரத்தின் ஆட்சி எனைக்கொய்ய
உன்னைக்காணாது
அயர்ந்த விழியது இன்னும் உயிர்பெற்று ஏங்குதே...

விடிதலுக்கேங்கினேன்
நீ வரத் தாங்கினேன்...
உன் செவி என் குரல் மடுக்கவில்லை...
ஏனென்று எனக்கொன்றும் புரியவில்லை...

ஒண்சுடரோனவன்
அவனைக் காணவில்லை
பெண்ணிவள் படுந்துயர் அவனுஞ் சகிக்கவில்லை...

யோ.... என்ன ஓர் இரவு ஏழு ஊழியாய்
எரிதழல் போலென்னை கொல்குதே..

மன்னவ நீவரின் யாதும் தீராது பாவி
என் நெஞ்சு இனி என்ன சொல்லித்தான் தீரும் போ...




- கவிதைக்காரன்

Friday, October 25, 2013

எண்ணங்களை எழுதுகிறேன்


பொழுதுகள் மிகச்சீக்கிரமாய் விடிதலை.. எதிர்கொள்கின்றன..
அல்லது நகரத்தின். வேகத்தில் நம்மை திணித்துச் சமன்படுத்திக் கொள்ள நாம் வேகமாகச் சுழல்கின்றோம் எனவும் கொள்ளலாமோ...


ஊரிலிருக்கும் போது... அரிதாக சில நேரம் பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பேன்... சீக்கிரம் எழுந்துவிட்டால்... இன்னுமா தூக்கமென்று போர்வையோடு தண்ணீரை ஊற்றிப் போகும் அக்காளைச் சபித்தது போல் அவை என்னைச் சபிப்பதில்லை... செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது ஒரு கலை...
அது ஒரு தியானம் போன்றது அந்த நிமிடங்களில் அவைகளோடு அளவளாவிக் கிடைக்கும் மகிழ்வை எழுத்தில் கொண்டுவருவது சவால் தான்.
இதுவெல்லாம் சிலகாலம் முன்புதான்... அதற்கும் முன்பற்றி சிந்தித்தால்...
நினைவு நதி ஈரமாய்ச் சிலிர்க்கத்தொடங்குகிறது...
அதிகாலைக்கும். நமக்குமான உறவுநம் வயதையொத்ததல்லவா... அதுவும் பால்யங்களை விட பதின்மங்கள் கற்றுத்தரும் பாடங்கள் அதிகாலையில் தான் அர்ச்சனைகளோடு தொடங்கும்..


பள்ளிக்கூட வயதில்.. நான்கரை மணிக்கு விடியும் எனக்கு உறக்கத்தை கொன்றுவிட்டு, எழுந்து முகவாய் கழுவிவிட்டு சைக்கிளை மிதித்துபரபரப்பாய் பாளையங்கோட்டையிலிருந்து பெருமாள் புரம் வரைக்கும் போய்

வண்ணதாசனோ,வண்ணநிலவனோ சரியாய் நினைவில்லை... அந்த எழுத்தாளர் வீட்டருகே. உள்ள ஜேசு. அண்ணன் வீட்டில் தயாராகின சமோசாக்களை பெட்டியில் அடுக்கிக்கொண்டு... வேய்ந்தான் குளாத்திலிருந்து வேலைக்கு ஆயத்தமாகும்..

சில நாள் பாதித்தூக்கத்தில் சைக்கிள் மிதித்து பாளையங்கோட்டை மத்தியச்சிறை முன்னே இருக்கும் பேரூந்துநிறுத்தத்தில் பத்துநிமிடம் படுத்து எழுந்தோடுவேன்...

அப்போதெல்லாம் புதிய பேரூந்துநிலையம் கட்டி முடித்திருக்கவில்லை...
அங்கிருந்து அதே பரபரப்போடு பாளையங்கோட்டை வீதிகளின் தேநீர்விடுதிகள் ஒவ்வொன்றிலும் சரக்குக் கொடுத்துவிட்டுமார்கெட், கே.டி.சி. நகர், வி.மு சத்திரம் , பாளை டவர், வண்ணாரப்பேட்டை வந்து பெட்டிகாலியாகவும் வன்ணாரப்பேட்டை வாங்கு ஊதவும் சரியாய் எட்டு மணியாகிவிடும்...

திரும்ப வீட்டுக்கு வந்து அடித்துபிடித்து பள்ளிக்கூடத்திற்கு ஓடிப்போய். .. லேட்டானதிற்கு பி.டி-யிடம் பிரம்படிவாங்கி ... பாடம் படித்து கொஞ்சம் பால்ராஜின் உதவியால் வாத்தியாருக்குத் தெரியாமல் பெஞ்சுக்கிடையில் குட்டித்தூக்கம் போட்டு மதியம் பலவீட்டுவிருந்துண்டு பள்ளிக்கூடம் விட்டதும் காலையில் கொடுத்த சரக்கிற்கு மாலை பணம் வசூலித்த பெருமாள் புரத்து ஜேசுதாஸ் அண்ணன் வீட்டுக்குப் போய். கணக்குக் கொடுத்தால் இருபத்து ஐந்துரூபாய் கொடுப்பார்... அது அந்த ஒருநாளின் உழைப்பின் சம்பாத்தியம்...

அத்தனை பர பரப்புக்கிடையில் உழன்று கிடைத்த ஊதியத்தை சட்டைப் பையில் சுமந்து அம்மாவிடம் கொடுக்கும் போது கிடைக்கும் ஒரு பெருங்கத்தையான சந்தோசத்தை..

இதோ இன்னும் இரண்டொரு நாளில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு ஏ.டி.எம் இயந்திரத்தின் வாசலில் வரிசையில் நின்று தேய்த்து எடுக்கும் ஊதியப்பணத்தில் நிச்சயமாய் பெறமுடிவதில்லை... பெரும் இடைவெளி ஏதேனும் விழுந்திருக்கலாம்... காலம் புரட்டிவிளையாடும் போது பந்துகள் தான் என்ன செய்யும்... நினைவு நதி குளிர் உதிர்க்கின்றது...

*******


நேரம் போனதே தெரியவில்லை...

சமீபமாய் பால்ராஜைச் சந்தித்தேன் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் மனைவியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான். ஆண்டிநாடார் பாத்திரக்கடை முன்னே முண்டிக்கொண்டிருந்த கூட்டத்தில் அடையாளம்கண்டு கொண்டோம்.

புதுமாப்பிள்ளைக் களை கழுத்தில் மின்னியது... நலம் விசாரித்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாய் கலந்துவிட்டான்.

ஜேசுதாஸ் அண்ணனைப் பார்க்கத் தோன்றியது. போயிருந்தேன், எம்.எச் ஜுவல்லரிஸில் கொடுத்த கைப்பையைச் சுமந்தபடி நிலம் விற்றுக் கொண்டிருக்கிறார். ரெட்டியார்பட்டிக்கு கிழக்கே ரெண்டரை செண்ட் வாங்கிப்போடு இப்போ குறைஞ்சவிலைதான். கிரையம் நானே முன்னயிருந்து முடிச்சுத்தாரேன்னு அவர்பாட்டுக்கு பேசினார்.... எனக்கு இருபத்தைந்து ரூபாயை இடதுகையால் அவர் கொடுக்கும் லாவகம் கற்பனையில் ஓடிக்கொண்டிருந்தது...

******

பக்கத்துவீட்டு மொட்டைமாடியில் யாரோ தொட்டியில் ரோஜா வளர்த்திரிக்கிறார்கள்... அது மென்மையாய் என்னை நோக்கிப் புன்னகைக்கின்றது...

தண்ணீர் ஊற்றுவானேனென்று மனம் பரபரக்கின்றது...

பெரிய சைக்கிள் மிதித்தது தினத்தந்தியை வீசிப் போகும் சிறுவனை எங்கோ பார்த்தது போல் இருக்கின்றது.. அது நானாக இருப்பது வாய்ப்பில்லை...


கருப்புவண்ணத்தில் நிக்கல் நிறமிட்ட கடிகாரம் தனக்கான பணியை ஒலியெழுப்பி கூவுகிறது.வண்ணாரப்பேட்டை வீதிகளின் பரபரப்புஎன்னைத் தொற்றிக்கொள்கிறது....

வாருங்களேன் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு அதிகாலை சென்னையின் மிச்சங்களை நுகர்வோம்...

- கவிதைக்காரன்.