Sunday, February 10, 2013

நீயும் நானும்....!?


காலை வணக்கங்கள் சகோக்களே சகாக்களே...!

நேற்றைய இரவில் நீயா நானா ? நிகழ்ச்சியை நீங்கள் பார்த்தீர்களா... உங்களில் சிலர் பார்த்திருக்களாம்,.

நிகழ்ச்சியை பார்க்கும் போது நிச்சயமாக என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறேன் [!] என்ற பயம் வந்து என்னைத் தொற்றிக்கொண்டது...

இளைய சமுதாயம் என்ன தெரிந்துகொள்கிறது என்பதை விட எல்லாம் தெரிந்துகொண்டது மாதிரியான ஒரு மாய தோற்றத்தை உருவாக்கிக்கொண்டு திரிவதை காணும்போது

அட! நாம் படிக்காமல் போனோமோ அதிகம் என்று பலவிஷயங்களிலிருந்து எனக்குள் மேலெழும் சமூகக் கோபங்களை உள்ளுக்குள் புதைத்துக்கொண்டதை நினைக்கிறேன். வருத்தமே மேலோங்குகின்றது. இதைத்தானா இந்த கல்வி போதிக்கிறது...

எவ்வளவு நாட்கள் வேதனைப்பட்டிருக்கின்றேன், உயர்கல்வியைத்தாண்டிடமுடியாமல் குழந்தைத்தொழிலாளியாக ஆரம்பித்து இன்றைய நிலையை அடையப் பெற்றவரைக்குமான என் ஆற்றாமைகள் பெரிது.

ஆனால்
படித்தவர்களின் இந்த சமுதாயம் தனக்கு தெரிந்துகொண்டதை வைத்துக் கொண்டு, மீடியா வெளிச்சத்தில் விழும் நிகழ்வுகளை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டு, ஏதேனும் இரண்டு சம்பவங்களை இணைத்து முடிச்சுப்போட்டு இரண்டுக்குமான கொந்தளிப்புகளை வித்யாசப்படுத்தி எல்லோரையும் எளிதாக கேலிக்குரியவராகச் சித்தரிப்பதோடு நிறுத்திக்கொள்கின்றது.

கைக்குட்டை அளவுக்கும் அரசியலைப் புரிந்துகொள்ளாமல் வெறும் மேம்போக்கான வாதங்களை மட்டுமே பேசுகின்றது. பொதுப்புத்தி சிந்தனையை வலுவாக தனக்குள் பதியமிட்டுக்கொள்கின்றது... சகக்கூட்டத்தில் நான்குபேஎர் ஒருவரைக் கெட்டவராக அடையாளப்படுத்தினால் என்ன ஏதென்றே தெரியாமல் தானும் ஏற்றுக்கொள்கின்றது.

இவர்களுக்கு தமிழ் பேசப்பிடிக்கவில்லை, வாசிக்கப்பிடிக்கவில்லை, எழுத்தாளர்களைத் தெரியாது, மீனவர்களின் வாழ்நிலை புரியவில்லை.
தேயிலைத் தொழிலாளர் அல்லல்கள் என்ன ஏதென்றே தெரியாமல் காபிசீனோவை சிப் செய்கிறார்கள். எத்தனைப் புத்தகங்கள்.. எவ்வளவு விஷயங்கள் எத்தனைச் சம்பவங்கள்... எழுதப்படுகின்றன...

பாலகுமாரனின் எழுத்தைப்படித்துவிட்டு ஒரு இயக்குனர் இப்படி கவலைப்பட்டிருக்கின்றார். “உங்கள் எழுத்தைப்படித்த பின் எனக்கு ஒஉ பெரும் கவலை வந்துவிட்டது பாலா. இந்த இளைய தலைமுறையினரிடம் இந்த எழுத்துக்கள் போய் சேர வேண்டுமே என்கின்ற கவலை. வந்து என்னை தூங்கவிடாமல் செய்கிறதென்று”.

நிறைய வாசிக்க வேண்டி இருக்கின்றது. நீங்கள் நிறைய படிக்க வேண்டி இருக்கின்றது.. சில வருடங்களுக்கு முன்னால் “வந்தார்கள் வென்றார்கள் ” புத்தகத்தினை வாங்கிப்படிப்பதற்காக... காசு சேர்க்க இரவுப்பணி செய்து சேமித்திருக்கிறேன். கி.மு கி.பி புத்தகத்தை வாங்கித்தர என் அண்ணனிடம் எத்தனை நாட்கள் ஏங்கி இருக்கின்றேன். எரியும் பனிக்காடு படிக்கும் போது உதிரம் சூடாகி இருக்கின்றது..


தமிழைப் பேச கில்டியாக இருப்பதாகச் சொல்லும் போது எனக்கு எழுந்த கோபம் இழுத்துப்போட்டு நாலு சாத்து சாத்தவேண்டும் என்பதாகவே இருந்தது. நாகரீகம் பொருட்டு அப்பா டேட் என்று மாறியிருக்கின்றதே பரவாயில்லை. யாரை வேண்டுமானாலும் அப்படி அழைத்து விடுவோமா?

இடஒதுக்கீடு என்ற ஒன்றுமட்டும் இல்லை என்றால் நாம் இந்த இடத்தில் உட்கார்ந்திருக்கமுடியாதே என்பதை சிந்திக்கத் துணியவில்லை..
என்பாட்டன் முப்பாட்டனின் சொத்து வேண்டும், அவர்கள் செய்த ஏய்ப்புக்களின் பாவச்சம்பளமான இன்றைய இடஒதுக்கீட்டில் தான் கீழ்வகுப்பினராய்ப்பார்ப்பவன் முன்னேறி வருவதையும்,அது தன்னை பாதிப்பதையும் பொறுக்க முடியவில்லை. எப்படியப்பா உங்களால் முடிகிறது... இந்த சிந்தனையை நெஞ்சுக்குள் ஊறவைத்து திரிய... இதற்கு ஏன் உங்களுக்கு கல்லூரிப்படிப்பு... நாளை உனக்கு மேல் அதிகாரி கீழ்வகுப்பினர் என்ற அடையாளத்தோடு இருந்தால்.. என்ன செய்வாயோ?

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை... என்று சொல்லிவைத்தாற்போல் கூவுகிறார்கள். அதைச் சொல்லும் அத்தனை பேரும் பெண்கள். பொதுப்புத்தி சிந்தனை இப்படி அமைந்தது வேடிக்கை.

இவர்கள் யாருக்கும் சம்பவங்கள் பாதிக்கப்படவில்லை... அதன் தாக்கம் வீரியமானதாக இல்லை.. அடிப்படைகள் தெரியவில்லை...ஆண்கள் என்பதை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டு வக்கிர துதிபாடவும் தயார். ஏன் எந்த பெண்ணாவது விபச்சாரம் தவறானது என்று பேச முன்வரவில்லை... அது அவர்களுடைய பிரச்சனை எனக்கு நான் பாதுகாப்பாக இருக்கவேண்டும்... ஏன்?

விஷயங்களின் அடிப்படை அவர்களைப்போய் சேருவதில்லை ஆனால் அவர்களைச் சொல்லிக்குற்றமில்லை என்றும் விடமுடியாது. இன்றைய தேதியில் வெளியான பாடல்களைத் தேடி தரவிறக்கம் செய்யும் இணையப் பயன்பாடு இப்வர்கள் உலகில் சாத்தியம் ஆகும் போது சமூகத்திற்கான இவர்கள் குரலை முன்வைப்பதில் என்ன சிக்கல்...

எதிர் வரிசையில் அமர்ந்திருந்தகளப் பணியாளர்களில் ஒருவர் தெளிவாகச் சொன்னார். “நாங்கள் எழுதிக்கொண்டிருப்பதெல்லாம் யாருக்குப் போய் சேறுகிறதென்றே தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறோ”ம் என்று.

நான் பள்ளி மாணவனாக இருந்தபோதுகூட இன்றைய கல்லூரி மாணாக்கர்களைவிடவும் இன்னும் மெருகாக இருந்தோம் என்றே நினைக்கிறேன். எல்லாரையும் குற்றமிடவில்லை... இதோ இதே முகநூலில் சமூக வக்கிரம், அநீதி கண்டு பொங்கி குரல்கொடுக்கும் பெண்களையும், ஆண்களையும் [இளம்வயதினர்] எனக்குத் தெரியும்.. ஆனால் அவர்கள் எண்ணிக்கை அளவில் மிகச்சிலர்.

முன்னேறிய பெரு நகரங்களில் இருந்து வந்த பெரும்பாலானவர்களின் பார்வை எத்தனை மட்டரகமானதாக இருக்கின்றது..
ஆக கல்லூரிகள் ஒரு பொருளாதார அடியாட்களையும் கூலிகளையும் தான் உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றது..


என் அலுவலக நண்பன் ஒருவன் இருந்தான் சாமுவேல் என்று. அவனுக்கு எப்போதும் வேலை என்னை தூண்டிவிட்டு ஏதாவது புரட்சி சிந்தனைகளைப்பற்றி பேசவைத்து கேட்டுக்கொண்டிருப்பது.. நன்கு படித்திருக்கிறான். ஐஐடியை தூக்கிப்போட்டுவிட்டு மனதிற்கு பிடித்ததைச் செய்ய வேண்டுமென்று நினைத்து எதையாவது படித்துக்கொண்டிருப்பவன்.பேசும் போதே சிலகருத்துக்களில் அவன் உணர்ச்சிவசப்படுவான்.

அதில் அதீதமாக அரசியலைப்பற்றியதாக இருக்கும்.. ஆந்திராவில் 200க்கும் அதிகமான கிராமங்களை நக்சலைட்டுகள் ஆட்சிசெய்கிறார்கள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை... பா.ராகவனின் மாவோயிஸ்ட் புத்தகத்தை அவனிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன்,. படித்து முடித்தவன் நக்சலைட்டில் சேரப்போகிறேன் என்றான். நான் அவனை வேடிக்கை செய்யவில்லை ஏனென்றால் நானே அப்படி நினைத்தேன் அந்த புத்தகத்தைப் படித்து முடித்ததும்.

பக்கத்து மாநிலத்தில் நடப்பவைகளை பற்றியே மேலோட்டமாகக் கூட தெரியாத நாம் டெல்லி சம்பவத்திற்கு கொந்தளிக்கிறோம். அஸ்ஸாம் பிரச்சனையை சீந்துவதில்லை... விஸ்வரூபத்திற்கு எதிராயும் உடன்பட்டும் குரல் எழுப்புகின்றோம்... ஏன் சினிமா பற்றி பேச வேண்டும் என்றால்... அக்குவேறாக ஆணி வேறாக இந்த இசையமைப்பாளர் இந்த பாடல்பாடியவர் இவர் என்றெல்லாம் நா கூசாமல் பேச முடிகின்றவர்களுக்கு... கூடங்குளம் தெரியவில்லை...

வெட்கமாக இருக்கின்றது.. என் சகோதரனின் முகச்சாயம் கிழிபடுகின்றதை நினைத்து ஆற்றாமை பெருக்கெடுக்கின்றது.. இது நாள் வரையில் அவனுக்கு நான் கொடுத்த பெருமதிபுகள் உடைந்து சாம்பலாகின்றது. கோபம் மேலேறி நிற்கின்றது.

சங்காத்யமே வேண்டாம் போ என்று வெகுண்டு நகர்கிறவர்கள் அதிகரிக்கின்றார்கள். மக்கள் போராளிகள் கேலிக்குரியவர்களாகிவிடுகிறார்கள். இதிலும் போலிகள் வேறு .. நெல்லை விட உயரமான களைகள் போல ஆக்கிரமிப்புடன்.,
அதற்கு நகர்தலே கூட உத்தமம் தான் போல...

மக்கள் போராட்டம் எல்லாம் அரசியல் கூட்டம் நடக்கும் மேடையில் நிரம்பி இருப்பவர்களை விடக்குறைவானவையாக இருக்கின்றது..

அன்றைய நாட்கள் போல இங்கே தலைவர் ஒருவர் [!] இல்லை என்பது புரிகிறது... மாவோ, லெனின் ஸ்டாலின்...கர்மவீரராகட்டும்., ஆனால் ஏன் தலைவரை எல்லோரும் தேடுகின்றார்கள். உருவாகாமல்.. என்ற கேள்வி மூச்சடைக்கின்றது...! அது அரசியலாகட்டும். ஏன் நமக்கு வேண்டாம் என விலகிப்போகிறார்கள். படித்தவன் தன்னைப்பற்றித்தான் யோசிக்கப்போகின்றானா? கடைசி வரை.. [பெரும்பாலான]

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போய்விடுவார்களா?

ஊருக்கு உழைக்க இனி எவரும் இல்லாமல் போகும் நிலையும் தான் வந்தே தீருமா?

கூலிகளைத்தான் இந்த கல்விநிலையங்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றதா?

திறமைக்கு இங்கே வழியில்லை என்று உழைப்புக்கு வழிதேடி வளைகுடா நோக்கி நாங்களும் பறக்கத்தான் வேண்டுமா?

வெறும் பேச்சில் இன்னும் நாட்களை நகர்த்தத்தான் போகின்றோமா?

பணம் தான் நாளைய விடியலைக்கூட நிர்ணயிக்குமா?

கிராமங்கள் என்றால் என்னவென்றே தெரியாத சமூகம் அரிசியைதின்னும் போது எப்படிச் செரிக்கின்றது?

பணம்கொடுத்து
எல்லாவற்றையும் அனுபவிக்க இது என்ன நாடா?
இல்லை விலைமாது வீடா?

லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்று சூழுரைத்துவிட்டு ட்ராபிக்கில் விதிமீறுவதும் குற்றம்தானே?

தனிமனித ஒழுக்கத்தை எப்போது பேணப்போகிறோம்... ?

மதுவை நம் அத்யாவசிய உடமைக்குள் அங்கீகரித்தே விட்டோமா?

பகுத்தறிவைப் பழித்துவிட்டு சாமியாரிடம் பல்லிளித்தல் சாபம் தானே?

சமூக விழிப்புணர்வுதான் வேண்டாமா! உங்களின் தொடர்புகளைப்பயன்படுத்தி

நியாயங்களை, அநீதிகளை நாலுபேருக்காவது எடுத்துச் சொல்லுங்களேன்... உங்களின் பொழுது போக்குக்கிடையில்...
தயவு செய்து...


கொலைவாளுக்குக்கூட வந்திடாது போல இம்மக்களோடே வாழ எனக்கு பயமாக இருக்கின்றது...!

-கவிதைக்காரன்.

[நீயா? நானா ?

உரலி : http://www.dailymotion.com/video/xxexn8_neeya-naana-part1-10-02-13_shortfilms#.URgiLx04tQM

Monday, February 4, 2013

அப்பாவும் தென்னைமரங்களும்.....







வருசாவருசம் கண்ணோரத்தில லேசா ஈரத்தையும்,தலைகோதி தடவிக்கொடுக்குற அப்பாவோட கைதடமும் நெனப்புல வந்து கலங்க வைக்குற நாள் அது...


அப்பஞ்செத்ததும் புள்ளைக மடையில்லாத குளம் மாதிரிதான்...அணைக்கவும் ஆளில்ல அள்ளிக்கவும் ஊரில்ல..


பிள்ளையைப்பெத்தா கண்ணீரும் தென்னையை வைச்சால் இளநீரும்ன்னு சொல்லுவாங்களே.. எங்கப்பனுக்கு நான் முதல் ரகம்.. அவரோட வண்டிமாட்டு சாட்ட எம்முதுகில் கோடுபோடாத நாளே இல்லை..


என்னதான் அடிச்சாலும் இராத்திரியில சின்னவன் சாப்பிட்டுபடுத்தானான்னு கேட்டுட்டு இல்லைன்னு பதில் வந்தா எழுப்பிச் சாப்பிட வைச்சுட்டு பிள்ளைய இப்படி போட்டு அடிச்சுட்டேனேன்னு தேங்கா எண்ணைய தடவி விட்டுப் பொலம்பும் பாசக்காரபாமரன்.


விவசாயந்தான் எங்க அப்பாருக்கு தொழில், அடையாளம் வேலை சொத்து எல்லாமே... தென்னை ஏறுறதுல இருந்து வாழைக்கி வொரம் வைக்குற வரைக்கும் மனுஷரு மம்பட்டியோட திரியாத நாளே இல்ல...


எங்கூட்டு தோப்பில் இருக்கும் அத்தனை மரத்தோடயும் அவுகளுக்கு ரொம்ப பரிச்சயமுண்டு... சின்ன வயசுல நான்லாம் தென்னைக்கு தண்ணீ பாய்க்கிற தொட்டிக்குள்ள தான் பொழுதுக்கும் கெடப்பேன்.

குதிச்சு கிடந்து தண்ணில கைய போட்டு தப்பி, கையில கோரி அண்ணம்மாருவ மேல வீசி... அந்த ஆட்டம் போடுவோம்... லேய்...ன்னு ஒரு அதட்டல்ல மொத்தமேரையும் அடக்கிட்டு போய்டுவாரு...


அருணாக்கொடியில போத்தீஸ் மஞ்சப்பைய கிழிச்சு கோவணமா கட்டி விட்டு அவரோட மாட்டுவண்டிலதான் ரெம்பநாளு காலையில தோப்புக்கு போவேன்.


புதுசாதோப்பிலே.. தென்னைமரம் கன்னு நடும் போது.. என்னைய இல்லன்னா எப்பவாச்சும் அண்ணன கூப்பிட்டு கை தொட்டு வைக்கச் சொல்லுவாரு.


தென்னை மரங்களைப்பத்தி அவுகளுக்கு அத்தனை விசயமும் அத்துபடி.. இடிவிழுந்து எரிஞ்சு போன ஒரு தென்ன தண்டை எடுத்து ஆந்தைக்க்கு பொந்து செய்ஞ்சு மாமரத்தில கட்டி வைச்சு அழிஞ்சு போற விளிம்பில் இருந்த பறவைக்கும் வீடு கட்டிக் கொடுத்தவரு..

இன்னைக்கும் அந்த தோப்பொல வெள்ளை முகமூடி மாதிரி ஆந்தை நாலைஞ்சு திரியுது..


தெரட்டுமாதிரி வரப்புக்கட்டி மழை தண்ணிய அடக்கி வைப்பாரு.. புழு மீன் செதிலல்லாம் புடிச்சி ஊரக்கடம் போட்டு வைப்பாரு..


தென்னை மரம் மட்டும் இல்ல நெல்லுல இருந்து புல்லு வரைக்கும் கீரையில இருந்து கீத்து கொட்டகை போடுறவரைக்கும் அவருக்கு தெரியாத சமாச்சாரம் கொறவு... நாந்தூங்கலைன்னா ஆந்தையப்பத்தி சொல்லிக்கிட்டு இருப்பாரு சில நாளு...


மண்ணென்ன வெளக்கு வெளிச்சத்துல ஒரு மண்ணும் புரியாட்டியும் வரக்காப்பிய குடிச்சுப்புட்டு அவரு நெஞ்சுமேல படுத்து கேட்டுட்டு கெடந்திருக்கேன்...


எங்க அப்பாதான் தபால்கார மீசைக்கு அடுத்து கடுதாசி படிக்கத் தெரிஞ்ச ஆளு... அப்பவே அய்யர்மாருவ வீட்டுக்கு போயி கணக்கு பாடமெல்லாம் படிச்சுருக்காரு.. இப்போதான் பள்ளியூடமெல்லாம் வந்திருக்கு.. அப்ப அப்படிதான்...


ஆலமர சமுதாயக்கூடத்தில அறிவொளி இயக்கம் நடக்கும் போது... இவருதான் ஆள் இல்லாத நேரத்தில வாத்தியாரு..


நெரம்ப படிப்பாரு.. தாம்படிச்ச பொஸ்தகத்தில இருந்து கத்துக்கிட்ட விசயங்களை வெத்தலைக்கு காம்பு கீறுனமாதிரி நெல்லீசா சொல்லிக் கொடுக்குறத கேக்க எங்க மாட்டுகொட்டகைக்கு பக்கத்துல இருக்கும் முள்ளுமரங்கீழ பெருங்கூட்டம் கூடும்..


புள்ள வளர்க்க செல்லப்பாவுக்குச் சொல்லியாக்கொடுக்கனும்ன்னு ஊரே மெச்சும். நாங்களும் நல்லவிதமாத்தான் வளந்தோம்.. ஆனாலும் எங்க கிளவி நாம்பொறந்ததும் மண்டையபார்த்து எலே! செல்லப்பா இளயது ரெட்டச்சுழில வூட்டுல அடங்காதுன்னு சொல்லி இருக்கா... அவ வெத்தலக்கற வாய் முகூர்த்தம் அப்படித்தான் அமைஞ்சுடுச்சி.,..


பண்ணாத சேட்ட கெடயாது... சின்னவயசுல பையமாருங்ககூட கட்டி உருண்டது.. ஏழாப்புல ரத்தக்கறை மண்டையில தெரிக்குறதுல கொண்டுபோய் விட்டுச்சு... வீட்டுல தெரிஞ்சுறக்கூடாதுன்னுட்டு எங்கண்ணன் களிமண்ண எடுத்து தடவி விட்டுப்புட்டான். வலி விண்ணுவிண்ணுன்னு தெறிக்க... வீட்டுல சொல்லிப்புட்டேன்... வெளக்கமாறு ஒன்னு புதுசா வாங்க வேண்டியதாப் போச்சி...


நாங்களும் அப்படி இப்படின்னு ட்ரவுசர் பள்ளிக்கூடத்தை தாண்டி சைக்கிள்ல மேட்டூர் பள்ளிக்கூடம் போற அளவு வளர்ந்துட்டோம்.


ஒருநா...தென்னையில ஏறும் போது கொளவி கொட்டி தவறி கீழ விழுந்து அப்பாருக்கு மூட்டு விலகிடுச்சு... நம்ம புத்தூர் வைத்தியர்தான் ஆறே நாள்ல ஜல்லுன்னு எந்திரிச்சு நிக்க வைச்சாருவாரேன்னு அவருக்கு அவரே சொல்லிக்கிட்டாரு..!


அப்போத்தான் ஊருல நிலமை மாற ஆரம்பிச்சது... காளைமாடு வைச்சிருந்தவனெல்லாம் மாட்ட மேக்கே கேரளாக்காரனுக்கு வித்துட்டு ட்ராக்டரு வாங்க ஆரம்பிச்சாங்க.. எருக்குழி எல்லாம் எங்கபோச்சுன்னே தெரியாம போயிருச்சி., ஊருக்குள்ள பால் வத்திப்போச்சு... மகசூல் அதிகம் தருதுன்னு வாரி வாரி பொட்டாசியத்த கொட்டுனாங்க,,, தென்னை விவசாயிக்கு நெல்லைப்பத்தி தெரியாதுன்னு நினைக்க முடியாதுல்லா.. அப்பாரு படுத்துக்கிடந்தே பொறுமுனாரு.,.. கேக்க ஆள் இல்ல.. களை எடுக்க மெஷினு வந்திருச்சுன்னு வேடிக்க பார்க்க கூடினாக... வயித்தில நாளைக்கு அடிக்கப்போவுதுன்னு ஒரு சிறுக்கிக்கும் தெரியாமதான் போயிறுச்சி... உழுறதுக்கு மெஷினு,.. உரம் போட மிஷினு, மருந்தடிக்க மிஷினு,களையெடுக்க,களத்துல நெல்லடிக்க... விட்டா காதுகுத்த... கோயில் கொடைக்கும் மெஷினக் கொண்டாந்துருவானுங்க.. இங்க மாடு கண்ணெல்லாம் எங்கபோயி முட்டிக்கும் எத்தனபேரு பொழப்பு போகுது.. அவரோட ஒவ்வொரு சொல்லும் நெஞ்ச தைச்சிச்சி...


நான் படிச்சு பட்டம் வாங்கி அதே ஊருல அக்ரிகல்ச்சுரல் ஆபீஸரா வந்து நாசமா போன வேதிமருந்துகள மண்ணுல கொட்டி மண்ண மலடாக்குறத பத்தி இந்த மக்கள்க கிட்ட சொல்லனும்ன்னு அவர் கனவு கண்டுக்கிட்டு இருந்திருக்கார். நான் டூரிங் கொட்டயில ரஜினி படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு.. “பொதுவாக எம்மனசு தங்கம்”-த்துக்கு ஆடிக்கிட்டு இருந்தேன்.


தென்னைக்கு வண்டுகடி நோய் ஊரல்லாம் வந்துச்சி

எங்க தோப்பில வரல... யாவாரிக கூட ஆச்சரியப்பாட்டாவ... ஆந்தை இருக்கும் போதும் வண்டெல்லாம் மசுறுடான்னாரு...


ஒரே மாமரத்துல அஞ்சு கிளை பதியம் போட்டு கிளிமூக்கு, மல்கோவான்னு விளைய வைப்பாரு.. எதோ மோடிமஸ்தான் வேலையின்னு கிராதகப்பயலுவ சொல்லிட்டு போனானுவ,..


நடக்குறதுக்கு சங்கடமா இருக்கும் போதே துண்டுல புன்னைமரத்தோட கொட்டைய வைச்சுக்கிட்டே தெரட்டு ரோட்டுல வீசிக்கிட்டே போவரு,,


நானும் அண்ணனும் யாரு தூரமா வீசுறோம்ன்னு பந்தயம் விட்டுக்கிருவோம். இன்னைக்கு எங்க ஊருக்குள்ளே நாலுவழிரோடு போடுறப்போ வெட்டிப் போட்ட மரத்துக்கெல்லாம் எங்க அப்பாரு தான் சாமின்னு யாருக்குந்தெரியாது...


ஏதோ கொடுக்கல் வாங்கல் வெவகாரத்துல தோப்பு கேஸாகிடுச்சி... ண்ணுரெண்டுமாசத்துக்கெல்லாம் வீட்டுல என்னஎன்னவோ நடந்துச்சி,.. எனக்கு அரிசிப்பெட்டியில கெடைக்கும் அஞ்சுப்பத்து படியளந்ததால... வீட்டுநடப்பு மேல பெருஷா அக்கற இல்ல... அண்ணந்தான் ரொம்ப மாறிட்டான்.


பள்ளிக்கூடம் போவாம செங்க சூளைக்கு ட்ராக்ரட் ஓட்டப் போனான். கோனார் கடையில எனக்கு பொரோட்டாவுக்கு நான் காசு கொடுத்துக்குறேன் சாப்புட்டு பள்ளியூடம் போய் நல்லா படிலேன்னு சொல்றதனால... அவன கொஞ்சம் புடிக்க ஆரம்பிச்சிருச்சி..


பத்தாவது ராங்க் வாங்குறதுக்கே பம்ம வேண்டி இருந்துச்சி... விட்டாப்போதும்ன்னு ஓடிவந்துட்டேன், பட்டணத்துல வேலைக்கு நாராயணபெருமாளண்ணே கூப்பிட்டாகன்னு போகப்போறேன்னு ஒத்தக்காலுல நின்னேன்.


அவரோட :எம்மவன் வெவசாய ஆபீஸர்:” கனவு தறி அறுந்து தயிர்பானை கீழ விழுந்தது போல தெறிச்சிறுச்சுன்னு அப்போ எனக்கு தெரியாது..


பொழைக்க வந்த இடம் என்னைய பொரட்டி போட்டுச்சு... சூதனமான ஊருலயே சுருட்டி விட்ருவாங்க. பட்டணம்ன்னா சும்மாவா... எக்கி நின்னா ஏறி அடிச்சாங்க... எகிறி விழாம தாங்கிக்கிட்டு தம்புடிச்சி,.. மெல்ல மெல்ல சம்பாரிச்சேன். அப்பா போட்ட வெத தானே இந்த ஒடம்பு.,.. ரத்ததுல எங்கனையாவது அவரோட கொணம் ஒட்டிக்கிடக்காமலா போயிறும்...


எந்தசாமி வினையோ கெடைச்ச பொஸ்தகத்தை எல்லாம் தேடித் தேடிப்படிச்சேன்.. காரல் மார்க்ஸ் மூலதனத்தை தொடும் போது எனக்கு பதினேழு வயசு...


இப்போ எத்தனைன்னு கேட்டீங்கன்னாக்க,... ஒரு நாப்பது வருஷத்த கூட்டிக்கோங்கன்னு சொல்லுவேன்..


மாவோ,லெனினெல்லாம் என் பிடறிமுடிய புடிச்சு எங்க அப்பாவப் போல மெரட்டுனாங்க., இருக்குற வேலையில இருந்துகிட்டே இன்னும் படிக்கனும்ன்னு ஒரு ஏக்கம். கடைக்கு வர்ர கஸ்டமருங்கல்ல ஒருத்தர் ஏதோ பத்திரிக்கையில எழுதுறவராம்.. யாருன்னு சொல்லிக்காம என்னப்பத்தி சும்மா விசாரிச்சுட்டு மறுநாளே படிக்க புக்குக்கும் படிப்புக்கும் காசுகொடுத்து வேலை செய்ஞ்சுட்டே படின்னாரு...


அவரோட எழுத்தை கணையாழின்னு ஒரு புக்குல கடைசி பக்கத்துல வருமாம். இப்போ அவரு யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா எனக்கு ரொம்ப வருஷமா தெரியாம போச்சி.


காலைல சாப்பிடாட்டியும் காச மிச்சம் வைச்சு படிச்சேன், ஆனா இந்த இங்க்லீஷுதான் தூக்கிப்போட்டு மிறிச்சிச்சி... அப்படியே மெல்ல மெல்ல தக்கி தடுமாறி பி.ஏ முடிச்சுட்டு திரும்பிப்பார்க்கும் போது எங்கண்ணன் மவன் என்னைச் சித்தப்பான்னு கூப்பிட்டுட்டு இருந்தான்.


அப்பா மரம் ஏறுறத விட்டிட்டு இருந்தாரு... ஏறனும்ன்னாலும் சொந்த மரத்தில மிதிச்ச மனுஷன் இனி எங்குட்டு போய் அடுத்தவன் மரத்துல கை வைப்பாரு... ஆடு கோழி எல்லாம் நின்ன இடம் புழுதி மண்டிக்கெடந்துச்சி.. இனி நான் இருக்கேம்புன்னு இன்னும் நல்ல வேலைய தேடிக்கிளம்புனேன்.


அமைஞ்சது வேலை பால்காட்ல... மாசம் ரெண்டாயிரம் ரூபா சம்பளம்,.. சிங்க அடையாளம் போட்ட பெரிய நோட்டெல்லாம் சம்பளமா வாங்குறது மொத தடவை.. வேலைபாக்குற யெடத்துகே தங்க வீடு கொடுத்தாவ.. அப்பா வரமாட்டேன் என்னைய பெத்த இந்த மண்ணுகாத்தை விட்டுட்டு எங்கிட்டுலே நான் இந்த ஜீவனை தூக்கிட்டு திரிவேன் நீ போய்ட்டு வா ராசான்னாவ...


கொஞ்ச வருஷம் போனதும் கல்யாணம் பண்ணிவைச்சாவ சொந்ததுலையே ஏழாங்கிளாஸ் வரைக்கும் படிச்ச பொண்ணாம்ன்னு.,. அப்பாவுக்கு கால் இப்போ சொகம் ஆகிட்டு.. மனசு தான் அந்த தென்னமரக் காத்துக்கு நடுவுல சிக்கிக் கிழிபட்டுட்டே கெடந்தது,,, ஒரு நாள் கீத்து வேரோட மரத்தையும் புடிங்கிட்டு விழுந்திருச்சி...


நல்லாத்தான் இருந்தாவ... என்ன பண்ணுச்சுன்னே தெரியல காலையில நீச்சதண்ணி தான்னு கேட்டுட்டு நெஞ்சைப்புடிச்சவுக தான்.. எந்திரிக்கவே இல்ல... இப்படித்தான் எங்கவூரு கெளவி ஒப்பாரிக்கு நடுவே சொல்லிட்டே கிடந்தா...


அடிச்சு புடிச்சு ஓடிவந்து பார்க்குறதுக்குள்ள.. மூச்சி போய் மணிக்கணக்காயிருச்சி... இடுகாட்டுக்குள்ள எங்க இடிதாங்கி நீட்டி படுத்துக்கிட்டாரு,.


சொக்காரன் சொகக்காரன்லாம் கூடிட்டாவ வீட்டு முன்னால... தாரை தப்பட்டை கொட்டி அடிக்கானுவ... மனசுக்குள்ள ஆடனுன்னு ஏந்தான் தோணுச்சோ...


வெட்டியான் கொத்திவிட்ட பானை ஓட்டையில வழிஞ்ச தண்ணிய அப்பா தென்னைக்கு பாய்ச்சுற மாதியே அவர் மேல திருப்பிவிட்டேன். அண்ணன் தான் கொள்ளிவைச்சான்.


எனக்கு ஊரே மயானப்பட்டமாதிரி தோணுச்சி... எரிச்ச அஸ்திய அள்ளிட்டு வந்து தனியா மொட்டமாடில உக்காந்து மலங்க மலங்க அழுதேன். அண்ணம்மவன் தான் சித்தப்பா நீங்களே இப்படி கலங்குனா எங்களை யாரு ஆறுதப்படுத்துவாவன்னான்.


காரியம் முடிஞ்சு பதினாறாம் நாள்ல சொந்த ஊருல இருக்கும் குடிசைக்கு பின்னாடி குழிதோண்டி தென்னம்பிள்ளை ஒன்னை நட்டு வைச்சேன்...


இப்போ அது பெருசாகிருச்சி தெரியுமா? அந்த மரத்தைப்போய் கட்டிப்புடிச்சு நின்னுகிட்டிருக்கும் போது அப்பா நெஞ்சுமேல படுத்துக்கெடந்த மாதிரி தோணுது.


இந்த இங்க்லீசு மாசம் பதினைஞ்சாம் தேதி அந்த தென்னம்பிள்ளைக்கு இருபது வயசு... பதினாறுநாள் ! எவண்டே சொன்னது எங்கப்பாரு செத்துட்டாவன்னு...!


இயற்கையா வெவசாயம் செய்ய கொஞ்சம் நிலம் வாங்க இந்தவாட்டி ஊருக்கு போணும்டே மக்கா!



எண்ணமும் எழுத்தும்

~கவிதைக்காரன்~