Wednesday, June 20, 2012

வழக்கு எண் 18/9

நன்றி வினவு :18/9





வழக்கு-எண்-18-9-விமர்சனம்

ஆழமில்லாத பாராட்டும் நிராகரிப்பும்!

க்தி வாய்ந்த ஒரு கலை தன்னை நாடி வரும் மனிதர்களை, அறிமுகமான வாழ்க்கையினூடாக பழக்கப்பட்ட உணர்ச்சிகளில் ஆழ்த்தி பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அறிந்திராத முரண்பாடுகளில் சிக்க வைத்து புத்தம் புதிய உணர்வுகளில் கரை ஒதுக்கி, சமூக உணர்வின் அறத்தை மேம்பட்ட நிலையில் பருக வைத்து ஆற்றுப்படுத்தும். அதனால் அந்தக் கலையின் பாதிப்பிலிருந்து  வாழ்வை உள்ளது உள்ளபடி கொஞ்சம் உறுதியோடு எதிர் கொள்ளும் புத்துயிர்ப்பான உற்சாகத்தை பெறுகிறோம். அந்தக் கலையின் செல்வாக்கிலிருந்து புதிய ஆளுமையின் குருத்துக்கள் உரத்துடன் நம்மிடம் முளை விடத் தொடங்கும். அது சமூக வாழ்வின் புதிய எல்லைகளை எண்ணிறந்த முறையில் திறந்து விடுகிறது. களைப்பூட்டும் வாழ்வின் நெடும் பயணம் இத்தகைய கலை உணர்ச்சியால் சாகசமும், இனிமையும், தோழமையும், போராட்ட உணர்வும் கொண்ட பயணமாகிறது.

அப்படி ஒரு கலை உணர்ச்சியை கொஞ்சம் வலியுடன் உணர்த்துகிறது வழக்கு எண் திரைப்படம். சமீபத்திய ஆண்டுகளில் கலையழகும், பொருளாழமும் கொண்ட இப்படியொரு தமிழப் படத்தை பார்த்திருக்கவில்லை. ஆனாலும் என்ன? “OK.OK” போன்ற குப்பைகளுக்குக் கூட தகுதியற்ற கசடுகள் ஓடும் காலத்தில் வழக்கு எண் எனும் வைரக்கல்லின் ஒளி சிறைபட்டிருப்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.

வழக்கு எண் திரைப்படம் பிடிக்கவில்லை என்போரை விடுங்கள், பிடித்திருப்பதாக  பாராட்டுபவர்களும் கூட மேலாட்டமான ஒரு மனித நேயம் என்பதாக மட்டும் முடித்துக் கொள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகக் கேட்பதாக இருந்தால் அப்படி பிடித்திருக்கிறது என்பவர்களும் வழக்கு எண் திரைப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க விரும்புவார்களா?

***

வேலு அனாதையாக்கப்பட்ட ஒரு ஏழை. ஜோதி தந்தையை இழந்த சேரி மகள். ஆர்த்தி பள்ளிக்குச் செல்லும் நடுத்தர வர்க்க மாணவி. தினேஷ் ஆடம்பரத்தில் திளைக்கும் மேட்டுக்குடி மாணவன். நால்வரும் வயதில் விடலைப் பருவத்தினர் என்றாலும் வர்க்கத்தில் வேறுபட்டவர்கள். முதலிருவரும் வாழ்வதற்காக வேலை செய்கிறார்கள். பின்னிருவரும் வாழ்விருப்பதால் படிக்கிறார்கள். கூடவே களிக்கவும் செய்கிறார்கள். மாநகரத்தில் ஏழைகளும், பணக்காரர்களும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டியிருக்கிறது. அந்தச் சார்பு பணத்தாலும், உழைப்பாலும் பறிமாறிக் கொள்ளப்பட்டாலும் அவர்கள் ஒரே பண்புகளைக் கொண்டவர்களாக இருக்க முடியுமா?

முடியும் என்று பலவீனமாக சொல்பவர்களும், முடியாது என்று வேகமாக மறுப்பவர்களும் கொண்டிருக்கும் விசாரணையற்ற பொதுப்புத்தியை வாழ்க்கை எனும் உலைக்களத்தில் உருக்கி உண்மையை உணர்ச்சியுடன் உள்ளத்தில் ஏற்ற முனைகிறார் இயக்குநர். எனினும் இந்த படம் பொதுவில் உள்ளே நுழைவதற்கு சிரமப்படும். இது படத்தின் பிரச்சினையா, பார்ப்பவரின் பிரச்சினையா?

இது ஏழைகளின் படமென்றாலும் ஏழைகளுக்கு பிடிக்க வேண்டியதில்லை!

வழக்கு-எண்-18-9-விமர்சனம்கர வாழ்க்கையின் வழமையாகிப் போன ஆம்புலன்ஸின் அலறலோடுதான் படத்தின் டைட்டில் காட்சி துவங்குகிறது. வாடிக்கையாகிப் போன வாழ்க்கைத் தருணங்களில் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாக இயங்கும் மக்களின் ஓரிரு கணங்களையாவது இந்த துரித வண்டியின் அலறல் இடைமறிக்காமலில்லை. படத்தின் துவக்கத்திலேயே வாழ்வின் முடிவுக்கு முன்னுரையாக விளக்கும் ஆம்புலன்சின் வருகை கதையின் மர்மங்களுக்கு பீடிகை போடுகிறது.

உயரப் பார்வையிலிருந்து விரைந்தோடும் ஆம்புலன்சுக்கு அடுத்தபடியாக மருத்தவமனையின் நெருப்புக் காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் பகுதியின் மங்கலான தாழ்வாரத்தில் ஒரு தாயின் சக்தியற்ற வெடிப்பு அழுகையை நடுப்பார்வை காட்சியினூடாகக் கேட்கிறோம். சற்று தொலைவில் ஆர்த்தி பெற்றோருடன் பதட்டத்தோடும் விம்மலோடும் நிற்கிறாள். சூழ்நிலைகளின் உணர்ச்சிகளை ஈவிரக்கமின்றி ஒதுக்கிவிட்டு தொழில் நுட்ப கேள்விகளை தொடுக்கும் போலீசார். காவல் ஆய்வாளர் குமாரசாமியின் வருகைக்குப் பிறகு கதையின் ஓட்டம் காவல் நிலையத்திற்கு சென்று விடுகிறது.

அதிகாரமும், ஆணவமும், கேட்பார் கேள்வியின்றி குடி கொண்டிருக்கும் காவல் நிலையமும், காவல் ஆய்வாளரின் அறையும் மொத்தப் படத்தின் கதை சொல்லிக் களனாக, மேடையாக மாறுகிறது. அழைத்து வரப்படும் வேலு கறை படிந்த பற்களுடன், இனம் புரியாத தயக்கத்துடன், இருந்தே ஆக வேண்டிய பயத்துடனும் தனது கதையை ஆரம்பிக்கிறான். அனுசரணையான கேள்விகள் மூலம் குமாரசாமி முழுக் கதையையும் வெளிக் கொண்டு வருகிறார். நாற்காலியில் அமர்ந்திருக்கும் நாமும், அவரும், நின்று கொண்டிருக்கும் வேலுவின் பலவீனமான குரலிலிருந்து வரும் வரலாற்றினை கேட்கிறோம். நிற்க வைத்துக் கேட்கப்படும் கதை உட்கார்ந்திருப்பவர்களின் மனதை தைக்க வேண்டுமென்றால் நாமும் நிற்பவனோடு பயணிக்க வேண்டும்.

ஆம்புலன்சு, மருத்துவமனை, காவல் நிலையம் என்று நகரத்து வாழ்வின் இரகசியங்களை வெளிப்படையாக பறைசாற்றும் வேகமான காட்சிகளுக்குப் பிறகு, முடிவுகளின் புதிர்களை அவிழ்க்கும் வண்ணம் ஆரம்பத்திற்கு செல்கிறோம். வேலு அனாதையான கதை ஆரம்பிக்கிறது. இந்தக் கதை முடிவில் அவனது நிலை மாறிவிடவில்லை என்றாலும் அவனைப் போன்றதொரு உறவின் கை அவனோடு நட்பு பாராட்டுகிறது. முடிவும், ஆரம்பமும் மாறி மாறி நம்மை கதைக்குள் இழுத்துச் செல்கின்றன.

வழக்கு எண் ஒரு ஏழையின் கதை என்பதை விட பரம ஏழையின் கதை என்று சொல்வது பொருத்தமானது. பாதையோரம் வேலை செய்து, உண்டு, உறங்கி வாழும் தெருவோர மனிதர்கள் பொது வாழ்வின் நியதிகள் எதுவும் இல்லாமல் வாழ்பவர்கள். மூடுண்ட காரிலும், ஏ.சி அறையிலும் உலகை சிறை வைத்திருப்பவர்களுக்கு சாலையோர மனிதர்கள் என்ற ஜீவன்களுக்காக செலவில்லாமல் கொஞ்சம் கருணை காண்பிப்பார்களே ஒழிய அந்த உலகினுக்குள் நுழைந்து பார்க்கும் தைரியமோ தேவையோ அற்றவர்கள்.

இருப்பினும் இயக்குநரும், வேலுவும் அன்னிய வாழ்விலிருக்கும் விதேசி மனிதர்களை இழுத்து வந்து அந்த கையேந்தி பவனுக்குள் சாப்பிட அழைத்துச்  செல்கிறார்கள். அப்போது மூக்கை சுளிக்கிறோமா, முகத்தை, கண்களை, காதுகளை, நாக்கை கொடுக்கிறோமா என்பதிலிருந்து இந்தப் படத்தோடு நம்முடைய உறவு என்ன என்பது தீர்மானிக்கப்படுகிறது.

தரும்புரி, வட இந்திய முறுக்குக் கம்பெனி, இறுதியில் சென்னையின் கையேந்தி பவன் என்று அலைக்கழிக்கப்படும் வேலு கிராமப்புறங்களிலிருந்து விரட்டப்படும் மக்களின் ஒரு வகை மாதிரி. இடைவெளிக்கு முந்தைய பகுதியில் வேலுவின் கதையே அழுத்தமாகக் காட்டப்படுகிறது. விவேகமற்ற வேகத்தையும், கேலிக்குரிய திருப்பங்களையும், பொருளற்ற நகைப்புக்களையும், பெண்ணுடலை நுகர வைக்கும் குத்தாட்டத்தையும் கொண்ட ‘விறுவிறுப்பான’ படங்களில் சிக்குண்டிருக்கும் இரசிகர்கள் எவரையும் வேலுவின் கதை ஈர்ப்பது சிரமம்.

வழக்கு-எண்-18-9-விமர்சனம்வேலுவைப் போன்றே வாழ்வில் தத்தளிக்கும் வேலுக்களும் இந்தப் படத்தை இரசிப்பது கடினம்தான். ஏழைகளுக்கே இந்தப் படம் பெரிய அளவுக்கு பிடிக்காது என்ற உண்மையை ஆரம்பத்திலேயே சொல்லி விடுவோம். ஏழைகள் எவரும் தங்களது கதைகளை ஒரு சினிமாவில் காட்டப்படும் முக்கியத்துவம் கொண்டது என்று கருதுவதில்லை. நகரத்து பெப்சி-கோக் வாழ்வை உறிஞ்சிக் கொண்டே கிராமத்தில் இழந்த பதநீர் வாழ்வு குறித்து ஆட்டோகிராஃப் நினைவுகளாக பெருமையுடன் பீற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு ஊர் நினைவுகள் இனிக்குமென்றால் ஒரு ஏழைக்கு கசக்கவே செய்யும். அவனைப் பொறுத்த வரை ஊர் என்பது வாழ முடியாத, அன்னிய பிரதேசங்களுக்கு துரத்தியடிக்கும் ஒரு வெறுப்பான இருண்ட உலகம்.

அதனால்தான் ஒரு ஏழை, ஒரு பணக்காரப் பெண்ணை காதலிப்பது போன்ற படங்களையே உலகமெங்கும் காட்டுகிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து காமரூனின் டைட்டானிக் வரையும் இந்த ஃபார்முலாவே வெற்றிகரமான கதை மாதிரி. நகரத்து நெரிசலில் உதிரிப் பாட்டாளியாக பிதுங்கி வாழும் அந்த விரட்டப்பட்ட ஏழைகளுக்கு ஒரு சிம்புவோ, தனுஷோ சேரியிலிருந்து நிறைய சேட்டைகளுடன் பணக்கார உலகத்திற்கு மாறும் கதைகளையே அவர்கள் விசில் பறக்க இரசிப்பார்கள்.

சொத்துடைமை வாழ்வால் ஏற்றத் தாழ்வாக பிரிந்திருக்கும் இந்த உலகை ஒரு இயற்கையான அமைப்பு போல மாற்ற முடியாது என்று கருதும் ஏழைகளின் ஆழ்மனத்திலிருக்கும் வாழ்க்கை குறித்த ஆசை இத்தகைய அபத்தமான ‘கனவு’ படங்கள் மூலம் தன்னைத் தணித்துக் கொள்கிறது.

கூடவே மனித சாரத்தை உறிஞ்சிக் கொள்ளும் அவல வாழ்விற்கு மசாலா நிறைந்த குத்தாட்டப் படங்களே பொருத்தமான போதையாக சிந்தனையில் இறங்குகின்றன. ஏழைக்களுக்கென்று குறைந்த பட்ச வாழ்க்கையை கிடைக்கச் செய்யாமல் இந்த போதை ரசனையை மாற்ற முடியுமா? சீசன் காலங்களில் தொடர்ந்து இரவு பகலென்று உழைப்பதற்கு பான்பராக்கும், மதுவும் கை கொடுக்கும் போது அவர்களிடம் சென்று போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊட்ட நாம்  விரும்பினாலும் அதை நிறைவேற்றுவது சாத்தியமா?

எனினும் ‘மேன் மக்களின்’ இன்ப துன்பங்களையே கதையாக, செய்தியாக, நாட்டு நடப்பாக உணர்த்தப்படும் சூழ்நிலைக்கு இவர்களும் விதிவிலக்கல்ல. கஞ்சிக்கு வழியில்லை என்ற போதும் சீதையை மீட்க இராமன் கொண்ட துன்பங்களையும், திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றிய பாண்டவர்களும்தான் நெடுங்காலம் நமது மக்களின் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த அடிமைத்தன வரலாறு இன்றும் மாறிவிடவில்லை.

ஆனால் சற்று வசதிகள் நிறைந்த மேம்பட்ட வாழ்க்கையை வாழும் நடுத்தர வர்க்கம் கூட வேலுவின் கதையை இரசித்து விடுமா என்ன? வழக்கு எண் திரைப்படம் பொதுவில் ஏழைகளை நல்லவர்களென்றும், பணக்காரர்களை கெட்டவர்களாகவே சித்தரிப்பதாகவும், இது பொதுப்புத்தியை கைப்பற்ற நினைக்கும் மலிவான உத்தியென நடுத்தர வர்க்க ‘அறிவாளிகள்’ பலர் அலுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் இயக்குநரோ, படமோ அப்படி ஒரு ‘மலிவான’ உத்தியைக் கையாளவில்லை. இருந்திருந்தால் அது அனல் பறக்கப் பேசும் விஜயகாந்த் படங்களாக சரிந்திருக்கும். மாறாக இரு வர்க்கங்களும் வாழ்க்கை குறித்த மதிப்பீடுகள், அறங்கள், சமூக உறவுகளை எப்படி உருவாக்கிக் கொள்கின்றது, பேணுகின்றது, அவற்றின் சமூக விளைவுகள் என்ன என்பதைத்தான் படம் இதயத்திற்கு நெருக்கமான குரலில் மறக்க முடியாத ஒரு பாடலைப் போல இசைக்கின்றது.

அந்தக் கவிதையை இரசிக்க முடியவில்லை என்ற பிரச்சினை நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினையோடு தொடர்புடையது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் வர்க்கம்தான் ஒரு மனிதனுடைய வாழ்வையும், பண்பையும் தீர்மானிக்கிறது என்பதை, தன்னுடைய வாழ்க்கை தன்னுடைய அறிவால் மட்டும் உதித்த ஒன்று என்று பாமரத்தனம் கலந்த மேட்டிமைத்தனத்துடன் நம்பும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் இதை ஏற்க மாட்டார்கள். அல்லது தங்களது வாழ்க்கையை சமூகப் பேரியக்கத்தோடு ஒப்பிட்டு பார்த்து ஒரு மெல்லிய சுயவிமரிசனத்தைக் கூட அவர்களால் செய்ய முடியாது.

இதை படத்தோடும், குறிப்பான பாத்திரச் சித்தரிப்புகள் வரும் கதையோட்டத்தோடும் பரிசீலிப்போம்.

Saturday, June 2, 2012

மரணமே வா!


மரணமே வா...!!!

---கவிதைக்காரன்---

என் மரணம் கண்ணீர்
வடிக்கும்
சம்பிரதாயமாக இருக்க வேண்டாம்
கவிதைகளால் உங்கள்
வருத்தச் செய்தியும் வேண்டாம்
பிரிந்தாயே நண்பா
என பிதற்றலும் வேண்டாம்

தேனடைகள் எரிக்காமல் 
தேனில்லை...
உவர்நீரால் புதைக்கப்பட்ட
இச்சமுத்திரத்தில் ஒரு
ஓரத்தில் என்னையும்

சராசரிக்கும் கீழானவனாக
கொன்றொழித்து விடாதீர்
மின்னல்கள்
திறந்து போகாது

என் மரணமும் மீந்து போகாது 
ஏதோ ஒரு விடியலில்
நான் இருக்கப்போவதில்லை

ஆனால் யாதும் செய்யாமல்
மரிக்கப்போவதுமில்லை
பிறக்கும் போதே
என் மரணமும்
குறிக்கப்பட்டு விட்டதை
ஏற்றுக்கொள்ளாத
மூடனில்லை நான்


வேங்கை மரத்தின் கீழ்
வெய்யில விழலாம்
வேர்கள் விழலாமா..
ஒடுக்கப்பட்ட இனம் என
மரத்துப்போனவர்களே

ஒடுங்கிக்கொள்ளுங்கள்
நாங்கள் ஒதுங்கிக்கொள்வாரில்லை
மீண்டும் கேட்டுக்கொல்கிறேன்
என்னையும் சராசரியாக்கி விடாதீர்கள்....!!!


என் ஆசான் "கிறிஸ்டோபர் ஞானதுரை"

நாம் யாரிடம் கற்கிறோமோ அவர் டான் ஆசிரியர் கற்றுக்கொடுப்பவரெல்லாம் அல்ல..!

இந்த வார்த்தை காலை நேரம் கண்ணில் பட்டது....ஆம்! வாழ்க்கைப்பயணத்தில் நாம் கற்றுக்கொள்வது எத்தனை எத்தனையோ ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றை என புதிது புதிதாய் கற்றுக் கொண்டே தான் இருக்கிறோம்.  

சாக்லேட் வாங்கிக்கொண்ட குழந்தை தன் மழலைக்குரலில் “தேங்க்ஸ் அங்கிள்” என்றதும் மறந்து போன தமிழனின் நன்றியை நினைவுகூர்கிறேன், இப்படி மறந்தவற்றையும் நாம் தினம் தினம் கற்றுக்கொண்டே இருக்கிறோம்...! 

கசடற கற்கிறோமோ இல்லையோ அதற்குத்தக நிற்பது மிகக்குறைந்து போய்விடுகிறது. கற்பதையும் ஆசிரியரையும் கண்ட வாசகம் எனக்கு என் பள்ளிக்காலத்தை நினைவுக்குகொண்டு வந்து செல்கிறது,

வசதிவாய்ப்புகளற்ற சராசரிக் குடும்பத்தின் கடைசிப்புதல்வனாய்ப் போனதால் கவனிப்பாரென அதிகமில்லத சூழ்நிலையில் கல்வி ஒன்றை மட்டும் தடையில்லாமல் பெற முடிந்தது, 

வீட்டுவேலைக்குச் செல்லும் அம்மா தந்தை இல்லாத குடும்பம் அன்னையவளின் ஒற்றை வருமானத்தின் விடியல்களால் கடந்து கொண்டிருக்க அந்த நாட்களில் எந்த ஒரு வருத்தமும் என்னைச்சாய்த்துப்போடாமல் வளர்த்து வந்தார். 

ஆறாம் நிலை முதல் முதலாக உயர்நிலைப்பள்ளிக்குள் காலடி எடுத்து வைக்கிறேன்., திருநெல்வேலியின் மையத்தில் கம்பீரமாய் வானுயர்ந்து நிற்கும் கதீட்ரல் பேராலய உச்சியின் கீழ் வேம்பு மர நிழலில் அமைந்த பள்ளியில்... தொடங்கியது என் அனுபவப்பாடங்களின் நாட்கள்.


சாதாரணமாகவே வகுப்பில் முன்னிருக்கை மாணவன் படிப்பு ஒன்றும் பெரிய இடைவெளியய் இருக்கவில்லை... அதனால் ஏற்கனவே படித்த “அடைக்கலாபுரம் தொடக்கப்பள்ளியின் பள்ளி மாணவர் தலைவன்”-ஆக இருந்ததும் அங்கு பணி புரிந்த ஆசிரியையின் கணவர் கதீட்ரலில் உடற்கல்வி ஆசிரியராக இருந்ததாலும் அதிக எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் கதீட்ரலின் வகுப்பறை பெஞ்சுகளை நிரப்பி இருந்தேன் !

ஆறாம் நிலைக்கு ஆசிரியராக தேவராஜ் ஆசிரியர்... முன்னர் படித்த பள்ளியின் சான்றிதழ் அடிப்படையில் என்னை துணை வகுப்பு மாணவர் தலைவனாகவும் , என் புதிய நண்பன் வரதராஜன் என்பவனை வகுப்புத்தலைவனாகவும் தேர்வு செய்தார்...!

வரும் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் தலைவனை அடையாளங்கண்டு கொள்லப்பட இருக்க நாட்கள் மெல்ல நாவல் மரத்துக்கடியில் இருக்கும் கேண்டீன் நட்புக்களாக பல்கிப்பெருகியது புதிய நட்பு வட்டத்தோடு.,..

சிலவாரங்களில் ஆசிரியர் மாற்றத்தின் பின் வந்து சேர்ந்தார் எனக்கு தமிழ் ஆசிரியராக உயர்திரு.கிறிஸ்டோபர் ஞானதுரை .

என் வாழ்க்கைச்சுழலில் பல மாற்றங்கலையும் எனக்குள்ளிருந்த திறமைகளையும் எனக்கே அடையாளம் காட்டிய மோதிரக்கரங்கள் இவருடையது என அப்போது தெரிந்திருக்கவில்லை..

பாடங்க்ளும் செய்யுள்களுமாக நாட்கள் நகர பள்ளி விழா ஒன்றினை முன்னிட்டு மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் வைக்க ஏற்படானது.

தமிழைய்யா வேகமாய் வந்தார். 

வகுப்பறையே எழுந்து வணக்கம் அய்யா என கோரஸாக இசைக்க, என்னையும் வரதராசனையும் இன்னுமொருவனையும் எழுப்பி விட்டு செய்யுள் ஒன்றினைச் சொல்லசொன்னார். 

சாதாரணமாகவே கணீர் குரல் எனக்கு என்னையும் மிஞ்சிய வெண்கலக்குரல் வரதனுக்கு ... மற்றவன் செய்யுள் படிக்காததால் திக்கித் திணற எங்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு போய் ஒரு மூன்று தலைப்பைக்கொடுத்து 
இந்த தலைப்பில் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றார். 

அது தான் எனக்கான முதல் விதை...

நான் தேர்ந்தெடுத்தது ...“காந்தியும் தீண்டாமைச்சாயங்களும்”... எடுத்த தலைப்பின் தேடல்களுக்காக எல்லோரும் சத்திய சோதனையைத் தூக்கிக்கொண்டு ஓட நானோ யாரும் யூகிக்காத வண்னம் வேறு திசையில் சென்று கொண்டிருந்தேன்! 

ஆம்! வழக்கமாய் தலைவர்கள் பிறந்த ஊர் நாள், அம்மை தந்தை பெயரென்று ஒப்புவிக்கும் உப்புக்குசப்பாணி விளையாட்டு எனக்கு உகந்தது என தோன்றவில்லை.... நேராக நான் சென்றது காந்தி மியூஸியத்திற்கு வரலாற்று நிகழ்வுகளில் அவரைத்தேடிப்படித்தேன், 

இரண்டு நாள் கழித்து வகுப்பில் வாசிக்கச்சொன்னார் நாங்கள் எழுதியதை முதல் வரதன் காந்தியின் வாழ்க்கைச்சரிதத்தை சரல் மணல் போல சீராக சொல்லி முடிக்க 

அடுத்து எழாவது வகுப்பு மாணவன் ஒருவன் ஆம் அது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான போட்டி இப்படி பலரது கட்டம் முடியவும் என் வாய்ப்பு வந்தது... 

எழுதி வைத்த மாதிரியை புத்தகத்திலே வைத்து விட்டு எழும்ப அது வரைக்கும் பேப்பரைப்பார்த்து வாசித்தவர்கள் கண்கள் என்னையே குறுகுறுவென்று பார்க்க என் பேச்சை ஆரம்பித்தேன். அது தான் என் முதல் கன்னிப்பேச்சு. 

அவையோர் வணக்கத்திலே அதிரிபுதிரியாக எதுகை மோனைகளைசொறுகி எடுத்த தலைப்பையும் அதனை எடுத்ததன் காரணத்தையுமடுக்கி தீண்டாமை நிகழ்வுகளை வருசை படுத்தி போராடியவர்கள் பட்டியலைச்சொல்லி அதில் மகாத்மாவின் பங்கை மேம்படுத்திச்சொல்லி நாளைய சமுதாயம் படைக்கப்போகும் நாம் என்ன செய்யப்போகிறோமென்ற கேள்வியோடு என் பேச்சை முடிக்க ஆசிரியரே கைதட்டி விட்டார்... மாணவர்களும் சேர்ந்து.... 

அருகே அழைத்து ஆச்சர்யத்தில் இருந்த ஆசிரியர் யார் எழுதிக்கொடுத்தா அப்பா எழுதிக்கொடுத்தங்களா என்க

அப்பா இல்லீன்க ஐயா, அம்மா மட்டும் தான் அம்மா வீட்டு வேலை செய்யுறாங்க.. நானாதான் எழுதினேன் என்ற போது அவஸ்தையாய் அவர் என் மீது கொடுத்த பரிதாபப்பார்வையைக்கூட புரிந்து கொளாத வயதினனாய் புன்ன்கைத்து நின்றேன்.

போட்டி நாள் வந்தது சந்தேகமே இல்லாமல் முதல் பரிசு.. எனக்காக காத்திருந்தது என் பெயரும் பொறிக்கப்பட்ட பரிசை ... என் வாழ்நாளின் எனக்கான முதல் பரிசை கையிலெடுத்துச்சென்றேன்,

அடுத்தடுத்து கல்விக்காலங்கள் கடந்து செல்ல தாமிரபரணி கலை இலக்கியச்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவுப்போட்டியில் கலந்து கொள்ள பள்ளிகள் தேர்வாக தலைமையாசிரியரின் கையிலிருந்த பட்டியலில் எங்கள் பள்ளி சார்பாக கலந்து கொள்ள மூன்று பேருடைய பெயர்கள் தேர்வாகி இருக்க ... 

தமிழைய்யா அவர்கள் என்மீதான நம்பிக்கையில் என்னை அனுப்பி வைக்கச்சம்மதித்தார். 

போட்டியிலெல்லோரும் பல மேடை கண்ட ஜாம்பவான்களாக இருக்க நானோ சின்னஞ்சிறுவனாய் தனித்து நிற்க...!


என்னை போட்டியாளன் என்றேகருதாமல் எடுபிடி வேலை செய்யப்பணித்து வந்தார்கள் மற்ற பள்ளி பேச்சாளர்கள். பொறுமைக்கடலினிலும் பெரிதல்லவா !
கடுகின் காரத்தை கருத்திலும் களத்திலும் காட்டிக்கொள்ளலாமென அமைதியாகிக்கிடக்க   போட்டி ஆரம்பமானது ... 

என் அதிஸ்டமோ அல்லது பலரது தூரதிஸ்டமாவெனத்தெரியவில்லை முதலாவதாகவே என் பெயரையும் பள்ளியையும் சொல்லி அழைக்க தனியாளாக வந்திருந்த நான் மேடையேறுகிறேன். என் முதல் மேடை அது.

எதையும் மனதில் எண்ணவில்லை போட்டித்தலைப்பு கலையும் இலக்கியமும் வாழ்ந்த நெல்லை... என் பார்வையில் வசனங்களாக நடுவர்களின் வரவேற்புக்கு பஞ்சமில்லாமல் பலத்த கைத்தட்டுக்கள் அவ்வப்போது என்னை இடைவெளிவிட வைக்க பல மேடை கண்ட பேச்சாளன் போல முழங்கிக்கொண்டிருந்தேன். 

எனக்கான நேரம் முடிவடைந்தது மூன்று நிமிடங்கள் ஆனாலும் நடுவர்கள் இன்னும் சொல்ல வேண்டியதிருந்தால் சொல் நாங்கள் கேட்கிறோம் என கண்காட்ட நேரம் நீட்டிக்கப்பட்டது என் தரப்பைச் சொல்லி முடிக்க நான்கரை நிமிடங்கள் ஆனது கரகோஷம் மாத்திரம் அரை வினாடிக்கு அந்த விழா அறையையே மிரளச்செய்தது...

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்டத்தாய் அங்கே கேட்க வரவில்லை... 

தந்தை மகற்காற்றும் உதவிக்கு யாரும் கூட இல்லை... அடுத்தடுத்து பேச்சாளர்களின் முழக்கங்களால் மேடை குலுங்க போட்டிகள் முடிவடைந்து
வெற்றி அறிவிப்புக்காக காத்திருப்பு மூன்று பிரிவுகளில் நான் கலந்து கொண்ட பிரிவிற்கான முதல் பரிசு எங்கள் பள்ளி மாணவனான கார்த்திக் ராஜாவுக்கு என அறிவித்தார்கள் .

சகஜநிலைக்குத் திரும்பி நான் தான் அந்த கார்த்திக் ராஜா என உணர சில வினாடிகள் பிடித்தது வெற்றிக்களிப்பில் எல்லோருடைய புன்னகைப்பார்வையோடும் நான் வீடு வந்து சேர்ந்தேன்.அங்கே என்னை பாராட்டித்தழுவி.. அள்ளியணைத்து உச்சி முகர யாரும் இல்லை.

மறுநாள் காலை ... 

விரைவாகவே பள்ளிக்குச் செல்ல தலைமையாசிரியரின் அறையில் மிக உற்சாக வரவேற்பு பள்ளிக்கு பெருமை சேர்த்தேனென்று... என் அத்தனை நன்றிகளும் தமிழைய்யா கிறிஸ்டோபர் ஞானதுரை அவர்கள் இருந்த திட்சையில் கரம் கூப்பியது..!

பள்ளி மாணவர்கள் ஒரே இடத்தில் குழுமுவது காலை நேர பிரார்த்தனைக்கூடம். அங்கே பிரார்த்தனை முடிந்ததும் மாணவர்கள் மத்தியில் என் செயலைப்பாராட்டி தலைமையாசிரியரின் கையால் பரிசு வழங்கப்பட்டது..

அனைவரும் அப்படியே அமர்க; என தலைமையாசிரியர் சொல்லிவிட்டு இப்போது நம் முன்னேபேசிக்காட்டுவான் கார்த்திக் என சொல்லிவிட்டுச் சென்று அமர்ந்தி கொண்டார். 

க்ளௌட் நைன் என்பார்களே அப்படியோர் சந்தர்ப்பம் என் பள்ளியின் மேடையில் என் உரை. மூச்சுவிடாமல் இரண்டு நிமிடங்கள் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது வானம் பொத்துக்கொண்டு மழை உற்றெடுக்க தடைபட்ட பேச்சு... 

தலைமையாசிரியரின் செய்கையால் மீண்டும் தொடர்ந்தது... நீ பேசு ராஜா.. என என்னை கண்லாட்டிவிட்டு மாணவர்களை தாழ்வாரங்களைச்சூழ்ந்து அமரச்செய்தார் கிட்டத்தட்ட 1400 மாணவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் என் பேச்சைக்கேட்டுக்கொண்டிருக்க நான் பேசி முடிக்க அடுத்த வினாடிகள் வானதிர கைத்தட்டல் ஓசைகள் ...

ஆக மொத்தம் பள்ளிக்கே நான் செல்லப்பிள்ளை ஆகிவிட்டேன். என்னை அறியாத ஆசான்கள் இல்லை...வாயில் காவலர் முதல் அடையாளம் சொல்லும் நபராகிப்போனேன், எதோ காரணத்தினால் பள்ளிக்கு வந்த அம்மாவுக்கு என்னை புகழ்ந்து சொல்லும் வாட்ச்மேன் வார்த்தை கூட அந்நியமாய்த்தெரிந்து என்னை உணர ஆரம்பித்திருந்தார். 

அப்போதெல்லாம் தலைக்கணம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதது எத்தனை வசதி... ஆம்...! நான் நிற்கவில்லை நிற்க விடவில்லை என் தமிழைய்யா ஓடு ஓடு என ஓடவிட்டுக்கொண்டிருந்தார்.

பள்ளி வாழ்க்கையில் மூன்று ஆண்டுகடந்திருந்தது.

மூன்று முறை மாவட்ட ஆட்சித்தலைவர் கையால் பரிசு 
[மா.ஆட்சித்தலைவர் கி.தனவேல் ] 

மேயர் கையால் இரண்டு முறை 
[உமாமகேஸ்வரி தி.மு.க]   

மாவட்ட அளவில் வெற்றிகள் , தேசிய நூலக வார விழாவில் கல்லூரி முதல் உயர் கல்வி வரை 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேச்சுப்போட்டியில் 
நானே எதிர்ப்பார்க்காமல் முதல் பரிசு வென்று இலவச நூலக மெம்பர்ஷிப் கார்டு பெற்றது பல பள்ளிகளில் சிறப்புரை என படிப்புடன் தனித்திறன் போட்டிகளிலும் வேகமாக ஓடிக்கொண்டே இருந்தேன்.,

எங்கு சென்றாலும் வெற்றி... வசப்பட்டுக்கொண்டிருந்தது, பள்ளி பற்றிய நாளிதழில் வெளியான கட்டுரையில் என் பெயர் இடம்பெற்று செய்தித்தாளில் படம் வெளி வந்தது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து நான் இன்பத்தை பகிர்ந்து கொண்டிருந்தது... என் முதலாளியிடம் ஆம். 

பள்ளி விடுமுறைக்காலங்களில் தேனீர் அங்காடியில் பணி புரிந்தேன்.,
சிகரெட் விற்பனைக்கடை நடத்தினேன். என் நண்பர்கள் எனக்கு முன்னால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் போது நான் வேலைக்குச்சென்று கொண்டிருந்தேன், 

நாட்கள் நகர்ந்தன... படிப்பில் கொஞ்சம் பின் தங்க ஆரம்பித்த தருணம் அது. குடும்பச்சூழல் என் விதியோடு விளையாட அனாதை இல்ல விடுதியில் படிக்க வைக்கச்செய்யப்பட்டேன். 

அங்கே எனக்குள் இருந்த ஒரு கவிஞனும் கருவிலிருந்து வெளி வந்தான் “கிறிஸ்துஜோதி உயர்நிலைப்பள்ளி ” அது. நாகர்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

மூன்று மாதங்கள் அந்த பள்ளியில் படித்தேன். ஆம்! எனக்கு கதீட்ரலையும் அங்குள்ள ஆசிரியர்களையும் இழந்துவிட மனமில்லை. அந்த மூன்று மாத இடைவெளிக்குள் அந்த பள்ளியின் ஆண்டு விழா நடைபெற... ஒன்பது சான்றிதழ்கள் நான்கு முதல் பரிசுகள், இரண்டு மூன்றாவது பரிசுகள் என கதை... கவிதை... கட்டுரை... பேச்சு... தனிநடிப்பு... என பல்கலைப் பிரிவுகளிலும் வெற்றிகளைக்குவித்து வந்தேன். 

கவிதைப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கவிதை எழுதிக்கொடுத்தேன் முதல் மூன்று மட்டுமல்ல போட்டியில் கலந்து கொண்ட அத்தனைக்கவிதையும் என்னுடையதாக இருந்தது. 

மீண்டும் கதீட்ரலில் நுழைந்த போது வந்துவிட்டான் என் மகன் என என்னை வாரி அணைத்துக்கொண்டது என்பள்ளியின் வளாகங்கள். ஆனால் ஏழ்மைக்கதவுகள் திறக்கவில்லையே.. ஒரு நிபந்தனையோடு ப்ள்ளியில் சேர்ந்தேன் அது காலை பள்ளிக்கு பின் தங்கி வருவது என ஆம்! 
அதையும் அனுமதித்தார்கள்... 


[ஈச்ச மரங்கள் நடுவில் என் வகுப்பறை]

பின் தங்கி வர என்ன காரணம் இருக்க முடியும் உங்கள் யூகம் இங்கு வேலை செய்யப்போவதில்லை... காலை மூன்று மணிக்கு எழுந்து என்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆறூ கிலோமீட்டர் தொலைவு கடந்து காலை தேனீர்க்கடைதிண்பண்டங்களான சமோசாவை பெட்டியில் கட்டி அனைத்து கடைகளுக்கும் போட்டுவிட்டு ஒன்பது மணிக்குள்வீடு வந்து மீண்டும் பள்ளிக்கு புறப்பட்டுச்செலவதால் அந்த நிபந்தனை... வேண்டுகோள்.

மீண்டும் மாலை படிப்பை முடித்து காலை கொடுத்த சமோசாவுக்கு வசூலுக்குசென்று பணம் வசூலித்து வீடு திரும்ப மாலை ஏழு மணி அதன் பின் படிப்பு, இத்தனைக்கும் கூலி ஒரு நாளைக்கு 25/- ரூபாய்.... நாட்கள் இப்படியே கடக்க வேலைக்குச் செய்ததை சொந்தமாய்ச் செய்ய ஆரம்பிக்க உழைப்பின் அர்த்தம் கற்று படித்தேன். எல்லா நேரத்திலும் தந்தை இல்லா என்னை தன் மகன் போல கண்ணும் கருத்துமாய்ப்பார்த்துக்கொண்டவர் தமிழையா கிறிஸ்டோபர் ஞானதுரை அவர்கள். 

இன்னும்வெளியில் சொல்லக்கூடாதென்று அவர் செய்த பல உதவிகளால் தான் நான் வளர்ந்தேன்., நல்ல மனிதன் எனக்கு ஆசானாக வந்ததும் நல்ல பள்ளி என்னை அரவணைத்துக்கொண்டதும் நான் ஏழ்மையிலும் எழுந்து நிற்க மட்டும் கற்றுக்கொண்டதற்கு காரணம். 

என்கிருக்கிறார் எனத் தெரியவில்லை அந்த இடக்கை தெரியாமல் கொடுக்கும் வள்ளல். ஆனால் அவர் போல ஒருவர் இல்லாவிட்டால் நான் எந்த மூலைக்குள் முடங்கி இருப்பேனென்று எனக்கே தெரியாது ..

அந்த கண்களுக்கு நான் கற்பக விதையாய் தெரிந்திருக்கிறேன், கற்பிப்பவறேல்லாம் ஆசானல்ல நாம் யாரிடம் கற்றுக்கொள்கிறோமோ அவரே ஆசான், 

அவர் எனக்கு ஆசானுக்கும் மேல்; அய்யா என்றாவது இப்பதிவு உங்கள் கண்ணில் பட்டால் ஏன் கண்ணீரில் நன்றி சொல்லி இருப்பின் ஏற்றுக்கொள்ளுங்கள்...

-உங்கள் மாணவன் -

கார்த்திக் ராஜா [கவிதைக்காரன்]

அவர் பற்றி இணையத்தில் தேடும் போது என் போலன ஒரு மாணவரின் வார்த்தை இது :
anantharaman  wrote 2 years ago0 
this is my school where i have studied ni this school i have good teachers like rubavathy ,chistoper gnanadurai ,tv jeyaraj and iam gifted to study in this school.

என் பள்ளி : http://wikimapia.org/242079/Cathedral-Hr-Sec-School-Palayamkottai

Friday, June 1, 2012

காலை விடிகிறது.... உறங்காத கவிதைகளாய்..


அதிகாலையிலே மனசு அலைபாயுது அது சரி நேற்று இரவு தூங்கி இருந்தால் தானே... காலைக்கும் இரவுக்குமன வித்யாசம் தெரியும் .... மணி நான்கை மெல்ல நெருங்கலாமா வேண்டாமா என எண்ணித் தவித்துக்கிடக்க உருண்டு புரண்டு படுத்தும் உறக்கம் மட்டும் கண்களோடு சரசம் கொள்ள வரவேயில்லை... 

நேரம் கடப்பதாய் தோன்றவில்லை... சட்டையை மாட்டிக்கொண்டு சாலையில் ஒரு வாக்கிங் செல்லலாமென புறப்பட்டேன். 

மனதில் பல எண்ணங்கள் அசைப்போட்டுக் கொண்டிருக்கின்றன அன்னிச்சையாய்.... 

கால்கள் செல்லும் பாதைக்கும் கண்கள் பார்க்கும் வீதிக்கும் சம்பந்தமில்லாத காக்கை குருவிகளின் சப்தம் மட்டும் வரும் கோவையின் மின்னொளி வெளிச்சம் நனைக்கும் விமானநிலையச் சாலையில் நகர்கின்றேன்.

நாட்கள் என்னோடு பின்னால் நகர்கின்றன... இதே போல் தொலைவாய் நடந்த தனித்த இரவுகளை கவனமாய் நினைத்துப்பார்க்கிறேன்...
அப்போதிருந்ததைவிட இப்போது சுமைகளை அதிகமாய்ச் சுமந்து கொண்டிருக்கிறேன்.

நினைவைக்கலைக்கும் விதத்தில் எதிர்பட்ட மிதிவண்டி நடமாடும் தேனீர் விற்பன்னரின் குரலுக்குச் செவி சாய்த்து... கால்கள் நிற்க...
சூடாய் ஒரு தேனீரை விடியலுக்கு தயாராகும் காலையின் குளிரில் அருந்தி இன்னும் முன்னோக்கி நடக்கிறேன். 

விமானநிலையத்தின் வெளிச்சவிளக்குகள் மேகம் தொடும் தூரம் வரைக்கும் சென்று ஊரைச்சுற்றிக்கொண்டிருக்கின்றது நின்ற இடத்தில் நின்றபடியே...
அந்த வெளிச்சச்சுழல்களில்.... காணாமல் போய்க்கொண்டிருக்கிறது இருள்.. 
கூடவே நானும்.... 

கைப்பேசியை கைக்குக்கொடுத்து பாடல் வரிசையில் கண்கள் மேய... “வெள்லைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும் பூமி அமைத்திக்காக விடியவே ” -பாடல் மனதைக்கரைத்தது... 

மழலை ஒன்று உறங்குகிறது அன்னையின் கதகதப்பில்.... என்ற வார்த்தையின் போது கொஞ்சம் கண்ணீர் கண்களில் முட்டி நிற்க.. கைகள் துடைக்க துணியவியலாததால்.... தானாய் தரையில் விழுந்து உடைகிறது கன்னம் புரண்ட நீர்த்துளி... 

இசையின் ஞானியின் அடுத்தப்பாடலை தேடும் போது நினைவுக்கு வந்தது.., அட இன்று அவரது பிறந்த நாளாயிற்றே என்ற எண்ணம். கண்டிப்பாய் அவருக்காய் ஒரு பதிவை வாழ்த்துச்சொல்லி எழுத வேண்டுமென மனம் நினைத்துக்கொள்ள விமான நிலைய வாயிலை அடைந்தே விட்டேன். 

நடைப்பயணம் அங்கே இளைப்பாறிவிட்டு மீண்டும் பின்னோக்கித் திரும்பியது சாலையோரம் பேப்பர்க்காரர்கள் கைகள் துரிதமாய் அன்றைய நாளிதழின் கோர்ப்புக்களை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்க... விடிதலுக்குத் தயாராகிக்கொண்டிருந்த ஆதவன்... மெல்ல கரங்களை உயர்த்தி சோம்பல் முறிக்கிறான்...

இன்றைய நாளின் கலையில் எதையுமே நான் செய்யவில்லை என்றாலும் ஒரு பதிவு எழுதும் அளவுக்கு என்ன பெரியதாய்ச்செய்துவிட்டேன். 
கேள்வி கேட்டபோது நினைவுக்கு வந்தது. 

யாருக்கும் என்ன காரணமென்று சொல்லவேயில்லை... 
எனக்கு மட்டும் இருக்கும் வருத்தத்தின் விழிம்புகளில் நின்றபொழுதில் என்னையும் அறியாமல்...
இன்று நான் அழுதிருக்கிறேன். 


-கவிதைக்காரன்.




இசைஞானி இளையராஜா ...!

ராசய்யா... இவரை உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்காது... இதையே நான் இளைய ராஜா என்று சொல்லி இருந்தால் சட்டென புரிந்துகொள்வீர்கள்
ஆம்! அந்த ராசைய்யாதான் பின்னாளில் இந்தியாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா ஆனார்.


அன்னக்கிளி என்ற தமிழ் திரைப்படம் மூலம் திரைத்துரையில் காலடி எடுத்து வைத்தார். அது 1976 ... அதன் பின் நான்கே வருடங்கள் இவரைத் தவிர்த்த எண்பதுகளின் காலம் இல்லையென்றே சொல்லலாம்... வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி எங்கும் இவர் விரல் தீண்டிய தென்றல் வீசாமல் இருந்ததில்லை... 


அற்புதங்களை இசையில் பின்னிப்பிணைத்து இசைப்பேரருவியில் நனைத்து பின் தலைதுவட்ட நெருங்கி வரும் அன்னையின் கரங்கள் போல இசையால் இசைரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்த பண்ணையபுரத்துக்காரர்.. 


இசைஞானி என கலைஞரால் பெயரிடப்பட்ட அன்னைக்கு அன்புசெய் மனம் கொண்ட அற்புத மனிதர். இசைஞானி இளையராஜா...
இதுவரைக்கும் நான்கு முறை தேசிய விருது கலைத்துறையின் படைப்பிற்கான சாரா விருது... பத்மபூஷன் விருதுகளை தமிழ்நாட்டுக்கு அள்ளிக்கொண்டு வந்தவர்...


இதையெல்லாம் விட அதிகம் இளைஞர்களின் , உறக்கத்தை கெடுத்தவர், கொடுத்தவர்,..... ஆம் வரமும் சாபமும் கொடுக்கும் இசைக்கரங்கள் இவருடையது... 


சிறுபொன்மணி இசைக்கும்....!
அன்னக்கிளி உன்னைத்தேடுது...!
மச்சானைப்பார்த்தீங்களா...!
ஜனனி ஜகம் நீ....!


இன்னும் இன்னும் இதமாய் இனிக்கும் கானங்கள்.. 




உங்கள் இசைக்கு யார் வாரிசு என்று கேட்டால் சட்டெனச்சொல்வார் “நீங்கள்” -தானென்று... ஆம்... அவர் பார்வையில் இசை எல்லோருக்கும் பொதுவானது அதற்கு யாரும் வாரிசாக முடியாது என்றவர். ரசிகனைத்தவிர...


எனை உறங்கச்செய்யும் “கல்யாண மாலை” இசைத்தவருக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...! 


 


உண்மையில் அவரதுபிறந்த நாள் நாளைதான்.... ஜூன்- 3
ஆனால் அன்று கலைஞரின் பிறந்த நாள் என்பதால் கொண்டாடுவதில்லை... 
எது எப்படியோ எங்கள் இசையுலக கலைஞன் ரசிகனை வாரிசென்னும் 
ஞானிக்கு மீண்டும் “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!”




அன்பன் -.
.கவிதைக்காரன்!!!