Saturday, December 31, 2011

பாடல்களை தேடி பதிவிறக்கம் செய்ய மென்பொருள்


நாம் இணையத்தளங்களில் பாடல்களை தரவிறக்கம் செய்ய பல இணையத்தளங்களுக்கு சென்று அங்கு நாம் தேடும் பாடல்களை தேடியே தரவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது.

பல்வேறுபட்ட இணையத்தளங்களில் இருந்து MP3 பாடல்களை தேடவும் . மிக விரைவாக தரவிறக்கம் செய்து கொள்ளவும் உதவுகிறது . MUSIC2PC என்ற மென்பொருள் .




இந்த மென்பொருளின் உதவியுடன் நீங்கள் விரும்பும் பாடலாகவோ அல்லது பாடகர்களின் பெயரை அல்லது இசை அல்பங்களின் பெயர்கள் மூலம் பாடல்களை தேட முடியும் .





இதன் வசதிகள்

1 மிக விரைவான தேடல் வசதி (பாடலின் பெயர் , கலைஞரின் பெயர் ,இசை அல்பம் ) என தேடல் வசதி கொண்டது ;

2 . தேடல் முடிவுகளில் இருந்து அதி விரைவாகவும், சிறந்த தரத்துடனும் பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும் .

3. ஒரே நேரத்தில் பல பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும்.

4 . இந்த மென்பொருள் PORTABLE , DESKTOP வடிவில் பெற முடியும் .

இந்த மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே செல்க

தரவிறக்க முகவரி music2pc.com

இந்தியர்களுக்கான இணைய உலாவி- EPIC BROWSER

இந்தியர்களுக்கு பெரிதும் உதவும் இணைய உலாவியாகும்; இன்று அனைவராலும் பெரிதும் விரும்பப்படும்firefox இணைய
உலாவியை ஒத்ததாக அமைந்துள்ளது ; அத்துடன் மிக வேகமாகவும் இந்த இணைய உலாவி செயல்படுகின்றது;




மற்றைய இணைய உலாவிகளுக்கு தரம் குறையாத அம்சங்களை இந்த உலாவி கொண்டுள்ளது ;

இதன் சிறப்புக்கள் :

இந்திய மொழிகளில் தட்டச்சு செய்யும் வசதி (தமிழ் உண்டு ;)

இந்திய செய்திகள் ,தொலைகாட்சி நிகழ்சிகள் நேரடி தொலைகாட்சிகள் பார்க்கும் வசதி ; மற்றும் இந்திய மொழி திரைபடங்கள் பாடல்கள் என்பவற்றை இந்த உலாவி தருகிறது ;



facebook ,twitter, youtube, gmail, yahoo,இதுபோன்ற சமூக வலைத்தளங்களை அணுகும் வசதி

இணைய உலாவியின் பின்னணி இந்தியாவின் சிறப்பு படங்கள் மூலம் மாற்றலாம் அத்துடன் இந்த உலாவியில் இருந்து வால்பேப்பர் பெறலாம் ;

ஆன்லைன் விளையாட்டுக்கள் என சுமார் 1500 க்கு மேற்பட்ட டூல்ஸ் களை கொண்டுள்ளது இந்த இணைய உலாவி




தரவிறக்கம் செய்து பயன்பெற தளம் . EPIC BROWSER





THE SIXTH SENSE - 'அழகான' பேய் படம்!!!

வணக்கம் !

ஹாரர் சினிமாவில் பர்த்து வியந்து ரசித்த பக்கங்களை நண்பர் சீனு வலையிலும் வெளியிட பகிர்ந்துகொள்கிறேன்.

வித்யாசமான அதிகம் பயமுறுத்தாமல் ஒரு மிரட்சியான படம் 6-த் சென்ஸ்
இனி வாசியுங்களேன்...




வீட்டில் யாரும் இல்லாத பொழுது சற்றே தைரியம் வரவழைத்துக் கொண்டு பார்த்த படம். படத்தின் முதல் frame லோ வோல்டேஜில் எறியும் குண்டு பல்பில் இருந்து தொடங்குகிறது.

கதை:



"எனக்கு பாராட்டு கிடைச்சிருக்கு"

மால்கம் க்ரோவ் (ப்ரூஸ் வில்லீஸ்) ஒரு குழைந்தைகளுக்கான மனநல நிபுணர். அவர் மனைவி அன்னா க்ரோவ்-விடம் தனக்கு கிடைத்த பாராட்டு பத்திரத்தை கொண்டு வந்து காண்பித்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் தங்கள் படுக்கையரையில் தாங்கள் தனியாக இல்லை என்பதை உணருகின்றனர்.



யாரோ இருக்காங்க...

அங்கே ஏற்கனவே குளியலறையில் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் ஒளிந்துகொண்டிருக்கிறான். அவன் தன்னுடைய பழைய நோயாளி வின்சென்ட் என்று மால்கமிற்கு தெரிகிறது. வின்சென்ட் மால்கம்மிடம் சிறுவயது முதல் hallucinations (சந்திரமுகி மாதிரி) என்னும் நோய்க்காக சிகிச்சை மேற்கொள்கிறான். "இனிமேலும் நான் பயப்பட விரும்பவில்லை" என்றும் மால்கமால் தான் தான் வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாகவும் கூறி மால்கமை வயிற்றில் சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். குண்டு மால்கம்மின் வாயிற்றை துளைத்து முதுகு பக்கம் வெளியேறிவிடுகிறது. மால்கம் அடி வயிற்றை பிடித்த படி படுக்கையில் சரிகிறார்.


சில மாதங்கள் கழித்து, மால்கம் தன்னுடைய அடுத்த க்ளையின்டான கோல் சீர் (Cole Sear) என்னும் சிறுவனுடன் நேரத்தை கழிக்கிறார். கோலிற்கும் வின்சென்ட்டை போன்றே பிரச்சினை. கோல் முதலில் மால்கம்மை ஏற்க மறுக்கிறான். காரணம் மால்கம்மால் தன்னை காப்பாற்ற முடியாது என்று நினைக்கிறான். வின்சென்ட்டை காப்பற்ற முடியாமல் போனதால் சற்றே நம்பிக்கை இழந்திருந்தாலும் அந்த சிறுவனை காப்பாற்ற முயல்கிறார் மால்கம்.

ஒருமுறை சமையலறையில் கோலின் அம்மா அவனுக்கு வேறு ஒரு 'டை'யை கொடுக்க அடுத்த அறைக்கு சென்று சில வினாடிகளில் திரும்ப வந்து பார்த்தால் ஒரு கணம் உறைந்து போகிறாள். அந்த சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு Kitchen Cabinet கதவுகளும் திறந்திருக்கிறது. அவனுக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் கதவுகளும்.



பள்ளியில் பெண்சிலை உருட்டி விளையாடும் Cole

வகுப்பில் ஆசிரியர் அந்த பள்ளி 100 வருடங்களுக்கு முன் என்னவாக இருந்தது என்று கேட்க "மனிதர்களை கொல்லும் கொலைக்களன்" என்கிறான் கோல். ஆசிரியரோ இந்த இடம் நீதியை நிலைநாட்டும் கட்டிடம் என்கிறார். கோல், "அவர்கள் தானே மனிதர்களை கொல்கிறார்கள்" என்கிறான். மேலும், அந்த ஆசிரியர் (மட்டுமல்ல, யார்) முறைத்து பார்க்கும் விதமும் கோலிற்கு பிடிக்கவில்லை. இருவருக்கும் சண்டை வருகிறது. எல்லோரும் அவனை freak என்று சொல்வதும் பிடிக்கவில்லை. கோல் அந்த ஆசிரியரை "Stuttering Stephen" (திக்குவாய் ஸ்டீபன்) என்று திரும்ப திரும்ப சொல்ல, கோபத்தில் பல ஆண்டுகளாக மறந்து போயிருந்த அந்த திக்குவாய் பிரச்சினை மறுபடியும் அவருக்கு வந்துவிடுகிறது.



பலூனை எடுக்க மாடிக்கு செல்லும் Cole

ஒரு முறை நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு செல்ல அங்கே மாடியில் ஒரு டஞ்சன் (dungeon) அறையை பார்க்கிறான் கோல். அதன் அருகில் செல்லும் போது உள்ளிருந்து ஒரு மனிதன் முதலில் மெதுவாக கேட்கும் பின் கத்தும் குரல் கேட்கிறது. அந்த குரல் உள்ளே மூச்சு முட்டுவதாகவும், தன்னை வெளியே வர உதவுமாறும், தான் தன் எஜமானனின் குதிரையை திருடவில்லை என்று சொல்வதாகவும் கேட்கிறது. அவன் பயந்து நிற்க அவனுடைய நண்பர்கள் இருவர் இவனை அதன் உள்ளே அடைத்து வைக்கின்றனர். பயந்து போய் கத்தி கத்தி மூர்ச்சையாகிறான் கோல். அவன் அம்மா வந்து அவனை வெளியே எடுக்கிறாள்.


இதை போன்ற சம்பவங்களால் கோல் ஏதோ அமானுஷ்ய விஷயத்திற்கு உள்ளாகிறான் என்பது நமக்கு தெரியவருகிறது. மால்கம் கோலிடம் தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் இடைவெளி அதிகமாகிவிட்டதாகவும் அவள் இப்பொழுதெல்லாம் தன்னிடம் பேசுவதே இல்லை என்கிறான். அதே சமயம் அடிக்கடி வீட்டில் அவன் திருமணம் நடந்த வீடியோ கேசட் அடிக்கடி பார்க்கிறாள் அன்னா. அதனால் கோலை இன்னொருத்தரிடம் விட்டுவிட்டு தான் விலகிவிடுவதாகவும் கூற, கோல் அழுகிறான். "உன்னால் மட்டும் தான் என்னை காப்பாற்ற முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்கிறான். அப்புறம் சமாதானம் ஆகி அவனை காப்பாற்றும் வழியை கண்டுபிடிக்கும் மால்கம் அவனிடம் திரும்ப வர, கோல் மால்கம்மிடம் கோபமாக+நக்கலாக பேசும் இடம் அருமை.



"I see dead people..."

"...And then one day this person Malcolm meets a wonderful boy who reminds him of that one. Reminds him a lot of that one. Malcolm decides to try to help this new boy. He thinks maybe if he can help this boy, it would be like helping that one too..." - Malcolm to Cole.

(இந்த பகுதி தான் படத்தின் முக்கியமான கட்டம்). இப்போது மால்கம் மேல் இவனுக்கு கொஞ்சம் போல நம்பிக்கை வருகிறது. அதனால் அவனிடம் மட்டும் சத்தியம் வாங்கி கொண்டு உண்மையை சொல்கிறான். அவன் சொல்வது "I see dead people...Some of them scare me". "கனவிலா?" என்று கேட்க. இல்லை, நிஜத்தில் என்கிறான் கோல். "நிஜத்தில் என்றால் சவபெட்டி/சுடுகாட்டிலா?" என்கிறான். இல்லை, "எப்பொழுதும்/எங்கேயும்" என்கிறான், கண்களில் வழியும் கண்ணீருடன். கோலிற்கு வந்திருப்பது வின்சென்ட்டிற்கு வந்த அதே hallucinations பிரச்சினை தான் என்று நினைக்கிறார் மால்கம். அதாவது மாயை என்று.



"நான் தூங்கும் வரை இங்கேயே இருக்க முடியுமா?"

பின் தான் உணருகிறார் வின்சென்ட்டிற்கு வந்த hallucinations பிரச்சினை இல்லை. இவனுக்கு வந்திருப்பது தான் வின்சென்ட்டிற்கு வந்தது. அதாவது கோல் உண்மையிளேயே ஆவிகளை/பேய்களை பார்க்கிறான். மாயை இல்லை என்று உணருகிறார்.

அவன் பார்ப்பது சில பேய்களை. ஒன்று, கணவனால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டு கைகளில் வெட்டுக்காயங்களுடன் கத்தும் ஒரு பெண் பேய்.இரண்டு, தன்னை விட சற்றே வயது அதிகம் உள்ள ஒரு சிறுவன் "வா. என் தந்தை எங்கே துப்பாக்கியை வைத்திருக்கிறார் என்று காட்டுகிறேன், வா" என்று சொல்லி திரும்ப, அவன் பின்னந்தலை துப்பாக்கி குண்டால் பிளக்கப்பட்டு ரத்தம் வழிந்துகொண்டிருக்கிறது. அவன் மெல்ல கோலின் அறைக்கு சென்று மறைகிறான். மூன்றாவது, மேலே சொல்லப்பட்ட டஞ்சனில் அடைக்கப்பட்ட மனிதனின் குரல். நான்காவது, கைரா (Kyra) என்னும் அவன் வயதை ஒத்த பெண். அவனுடைய டென்ட்டிற்குள் வந்து தன் மேலேயே வாந்தி எடுத்துக்கொண்டு "I'm feeling much better now" என்று சொல்லும் பேய். (பேய்களை பார்க்கும் போதெல்லாம் வீட்டில் அவனே செய்துகொண்ட ஒரு டென்ட்டில் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வான். அதற்குள் கடவுள் சிலைகள் சில இருக்கும். உள்ளே உட்கார்ந்து கொண்டு சாமி கும்பிடுவான்). அடுத்து, அவன் படிக்கும் பள்ளியில் தூக்கில் தொங்கவிடப்படும் கணவன், மனைவி மற்றும் அவர்களின் மகன்.



கைரா (Kyra) - கோல்-ன் டென்ட்டினுள்

அவன் சொல்வதில் இருந்து சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார் மால்கம்.அவன் பார்ப்பது இறந்து போனவர்களை. அந்த பேய்களில் சிலவற்றிற்க்கு தாங்கள் இறந்து போனது தெரிவதில்லை. தங்களுக்கு என்ன பார்க்கவேண்டும் என்று நினைக்கிறதோ அதை மட்டுமே பார்க்கிறது. ஒவ்வொரு பேயும் தனித்தனியாக தான் அவனை பார்க்க வருகிறது. அவை எல்லாவற்றிற்கும் பொதுவான விஷயம் - எல்லாமே இவனிடம் ஏதோ கேட்கின்றன. ஒரு வேளை அவை அனைத்தும் கோலிடம் உதவி கேட்கின்றன என்று உணர்கிறார் மால்கம். அதனால் அவனை தைரியம் வரவழைத்துக் கொண்டு அவைகள் பேசுவதற்கு காது கொடுத்து கேட்க சொல்கிறார் மால்கம். இது ஒரு விதத்தில் இறந்து போனவர்களுக்கு உதவ அவனுக்கு கிடைத்திருக்கும் கிப்ஃட் என்கிறார் மால்கம்.

முதலில் பயந்தாலும் அவன் அந்த கைராவிடம் பேசுகிறான். அவள் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு இறந்தவள். அவளிடம் கோல் பேச கைராவில் வீட்டிற்கு அவளுடைய funeral reception-க்கு மால்கம்முடன் செல்கிறான் கோல். அங்கே கைரா கோலிடம் ஒரு பெட்டியை கொடுக்கிறாள். அந்த பெட்டியில் இருப்பது விடியோ கேஸட். அதை கோல் கைராவின் தந்தையிடம் கொடுக்க அவர் போட்டு பார்க்கிறார். அந்த கேஸட்டில் கைராவின் அம்மா தினமும் அவளுக்கு உணவுடன் சேர்த்து தரையை துடைக்கும் திரவத்தை கொடுப்பதை பார்க்கிறார்கள் (Slow poisoning). அதனால் அடுத்து பாதிப்பிற்கு ஆளாகியிருக்கும் கைராவின் தங்கை காப்பாற்றப்படுகிறாள். மால்கம், தன் மனைவிக்கும் தனக்கும் இடைவெளி அதிகமாகிவிட்டதாக சொல்ல, கோல் மால்கம்மிடம், (இப்போது) தன் அனுபவத்தால், இரவில் அவள் தூங்கும் போது அவன் மனைவியுடன் பேசுமாறு சொல்கிறான்.

இப்பொழுது பயம் சற்று விலகிய கோல் தன் அம்மாவிடம் இதை பற்றி சொல்ல முடிவெடுக்கிறான், தான் இறந்துபோனவர்களை பார்ப்பதாகவும் சொல்கிறான். அப்பொது தான் அங்கே ஒரு விபத்து நிகழ, பத்து கார்களுக்கு பின்னால் இருக்கும் காரில் இருக்கும் கோலும் அவன் அம்மாவும் இருக்கிறார்கள். யாருக்கும் அடிபட்டிருக்காது என்று அவன் அம்மா சொல்ல, "ஒரு பெண் இறந்துவிட்டாள்" என்று கோல் சொல்கிறான். எப்படி தெரியும் என்று அவள் கேட்க அந்த இறந்து போன பெண் தன் கார் கதவின் அருகில் இருப்பதாக சொல்கிறான். அவன் அம்மாவின் கண்களுக்கு தெரிவதில்லை. அவனுக்கு தெரிகிறது. அந்த இறந்து போன பெண் அங்கிருந்து நகர்கிறாள், தலையின் இரத்தம் வழிந்துகொண்டு.



சற்று முன் இறந்த பெண்

கோல் அவளை நம்பவைக்க அவன் அம்மாவின் சிறுவயதில் நடந்த சம்பவத்தை சொல்கிறான். தன் நடன அரங்கேற்றத்திற்கு சிறு சண்டை காரணமாக வராதது பற்றி அவன் அம்மாவிற்கு அவள் அம்மாவின் (பாட்டியின்) மேல் கோபம். ஆனால், அந்த நடன நிகழ்ச்சிக்கு பாட்டி வந்திருந்ததாகவும் அவள் பார்க்காதவாறு மறைந்து அமர்ந்திருந்ததாகவும் சொல்கிறாள். மேலும் அவள் பாட்டியை புதைக்கும் போது ஒரு கேள்வி கேட்டதாகவும் அந்த கேள்விக்கு பதில் "தினமும்" ("Everyday") என்று பாட்டி சொன்னதாக சொல்கிறான். அந்த கேள்வி என்ன என்று கோல் கேட்க அவன் அம்மா "நான் அவளை பெருமைப்படுத்தினேனா?" ("Do I make her proud?") என்கிறாள். சமையலறையில் அந்த கதவுகளை திறந்ததும் அந்த பாட்டி தான் என்று சொல்கிறான்.

படத்தில் இருக்கும் ஒரு சுவாரஸ்ய ட்விஸ்ட் அப்படியே தொடர கீழ்கண்ட பத்தியை தயவு செய்து படிக்க வேண்டாம். படம் பார்த்து தெரிந்து கொள்க (கண்டிப்பாக படிக்க வேண்டுமென்றால் உங்கள் கீ-போர்ட்டில் Ctrl+A அல்லது மௌஸில் select/block செய்து படிக்கவும்)...


வீட்டிற்கு வரும் மால்கம் வீட்டில் தன் திருமண வீடியோ கேசட் ஓடிக்கொண்டிருக்க மனைவி தூங்குவதை பார்க்கிறான். தூங்கும் போது அவள் கையில் இருக்கும் திருமண மோதிரம் கீழே விழுகிறது. அப்போது தான் கவணிக்கிறான் தன் கையிலும் மோதிரம் இல்லாதிருப்பதை. மெல்ல மெல்ல நினைத்து பார்க்கிறான். சட்டென்று தன் முதுகை தடவி பார்க்க அவன் முதுகில் இரத்த கறை. ஆம். மால்கம் வின்சென்ட்டால் சுடப்பட்டபோதே இறந்து விடுகிறான். தான் இப்பொழுது வெறும் ஆவி மட்டுமே என்று உணருகிறான்.

இப்பொழுது மேலே முதலில் இருந்து சிகப்பு வண்ணத்தில் இருக்கும் வரிகளை மறுபடியும் ஒரு சேர படித்து பாருங்கள், புரியும். எங்கேயும் மால்கம் கோலை தவிற வேறு யாரிடமும் பேசுவதில்லை. யாரும் மால்கம்மை கவனிப்பதும் இல்லை.

புரிகிறதா? கோலிற்கு மால்கம் ஒரு ஆவி என்பது ஏற்கனவே தெரிகிறது. மற்ற பேய்களை போல மால்கம் கோரமாக இல்லாததால் கோலிற்கு அவ்வளவாக மால்கம் மேல் பயம் இல்லை (என்று நான் நினைக்கிறேன்). பின் பக்கம் மட்டுமே அவனுக்கு இரத்த கறை. அதை படம் நெடுக காட்டப்படுவதும் இல்லை. மேலும் கோலின் வீட்டில் அவன் அம்மாவிற்கு எதிரில் மால்கம் அமர்ந்திருப்பது, கைராவின் வீட்டிற்கு அவனுடன் மால்கம் செல்வது, அன்னா தனியாக தன் திருமண நாளை ரெஸ்டாரன்ட்டில் கொண்டாடுவது (அங்கே மால்கம் வந்து பேசினாலும் அவள் பதில் பேசமாட்டாள். நமக்கு ஏதோ மனக்கசப்பு என்றே தோன்றும். ஒரு கணம் அவள் அவனை பார்ப்பதாய் நமக்கு தோன்றும். ஆனால் பின்னனியில் ஒரு சிறுவன் கத்துவது போல இருக்க அதை பார்ப்பாள் அன்னா), "I see dead people" என்று சொல்லும்போதும் "எங்கேயும்/எப்போதும்" என்னும்போது அங்கே மால்கம் பேயாக இருப்பது என்று மீண்டும் ஒரு முறை கவனித்து பாருங்கள். இதை போன்று எங்கும் இருவர் மட்டும் தனியாகவே இருப்பர்.

"I see dead people" என்னும் போது காமரா மெள்ள கோல் முகத்தை நோக்கி நகரும். இந்த ஒரு காட்சி படத்தில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் க்ளூ. ஆனால் ஒருத்தரும் கண்டுபிடிக்கவில்லையாம்...

அவன் பேயாக இருப்பதால் தான் அவனால் தன் வீட்டில் வைன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் செல்ல முடியவில்லை. இப்பொழுது அவனுக்கு புரிந்துவிடுகிறது. தானும் இறந்துவிட்ட ஒரு பேய் என்று. ஆனால், எதற்காக மால்கம் கோலிடம் செல்ல வேண்டும்? காரணம், அவனுக்கு வின்சென்ட்டிற்கு உதவி செய்யமுடியாததற்கும் அவனை புரிந்து கொள்ள முடியாதற்கும் பதில் தேடி. அதாவது இவனுக்கும் மற்ற பேய்களை போல கோலிடம் உதவி தேவை. எல்லா பேய்களும் அவனிடம் உதவிக்கு தானே வருகிறது. இப்பொழுது அவனுக்கு விடை கிடைத்து விட்டது. கோல் பரிந்துரைத்தபடி தூக்கத்தில் அவன் மனைவியிடம் பேச அவள் பதில் அளிக்கிறான். பின் இனிமேல் அவளை தொந்தரவு செய்ய போவதில்லை, அவள் வாழ்க்கையை அவள் வாழட்டும் (அன்னாவிற்கு இப்போது புது தோழமை இருக்கிறது) என்று அவளை விட்டு விலகுகிறான்.


படத்தினை பற்றி...

படம் செம ஹிட். இயக்கம் மனோஜ் நைட் ஷயாமளன், புதுச்சேரிக்காரர். அவர் இயக்கிய படங்களில் வெற்றி பெற்ற மற்ற படங்கள். Signs, The Village இவற்றை தவிற மற்றவை ஓடவில்லை. ஆனால், டெக்னிகல் விஷயங்களுக்காக பரவலான பாராட்டுக்களை பெற்றிருக்கிறது அவர் படங்கள். இந்த படம் 6 ஆஸ்கர் அவார்டுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. படத்தில் டாக்டர் ஹில் என்னும் சிறு கதாபாத்திரத்தில் வருகிறார். ஏகப்பட்ட அவார்டுகளை அள்ளிய படம்.



Cole Sear (Haley Joel Osment)

படத்தில் கோல் சீர்-ஆக நடித்திருக்கும் அந்த சிறுவன்...அபாரம். பெயர் Haley Joel Osment. இந்த படம் பார்த்து தான் ஸ்பீல்பெர்க் தன் படமான A.I. Artificial Intelligenceபடத்தில் நடிக்க வைத்தார். The Sixth Sense-க்கு முன் நான் பார்த்தது A.I. Artificial Intelligence படத்தை தான். அதிலேயே அந்த பையனை மிகவும் பிடித்து போனது. (இந்த படத்தையும் கண்டிப்பா மிஸ் பன்னாதீங்க. இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியுமா என்று அதிர வைத்திருக்கிறார் ஸ்பீல்பெர்க்). அட்டகாசமான நடிப்பு. பட இடங்களில் கண்ணீரை வரவழைத்துவிடுவான். அதுவும் சில இடங்களில் அவன் படும் பாதிப்பை நமக்கும் உணர செய்துவிடுவான். நமக்கே அந்த பையனை காப்பாற்ற வேண்டும் என்று தோன்றும். படம் பாருங்கள். உங்களுக்கு இந்த பையனை மிகவும் பிடித்து போய்விடும். இந்த பையன் தான் Forrest Gump படத்தில் ஜூனியர் Forrest Gump-ஆக நடித்தவன்.

இந்த பையனை மனோஜ் தேர்ந்தெடுத்ததே சுவாரஸ்யமானது. Audition நடந்த போது இவன் மட்டுமே கழுத்தில் 'டை' கட்டிக்கொண்டு வந்தான். அவனுடைய பகுதியை படித்துவிட்டானா என்று கேட்க அவன் சொன்ன பதில் "நேற்று இரவு மூன்று முறை படித்தேன்". மீண்டும் "மூன்று முறை உன் பகுதியை படித்தாயா?" என்று கேட்க அவன் அதற்கு சொன்ன பதில் "இல்லை. நான் மூன்று முறை (என் பகுதியை அல்ல) திரைக்கதையை படித்தேன்" என்று. இந்த காரணங்களுக்காக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

படம் பேய்களை பற்றின படம் என்றாலும் அவ்வளவாக கோரமாக இல்லாமல் இருப்பது (என்னை போன்றவர்களுக்கு) ஆறுதல். வரும் 5-6 பேய்களும் படத்தில் சில நிமிடங்களே வந்து போகின்றன. ஆனால் படம் நெடுக அந்த பயத்தினை காட்சியமைப்பின் மூலமும் இசையின் மூலமும் உணர வைக்கிறார் இயக்குநர்.

ப்ரூஸ் வில்லீஸ் இடது கை பழக்கம் உள்ளவர். ஆனால், இடது கையால் எழுதுவது போல் படம் எடுத்தால் பார்ப்பவர்களுக்கு கையில் மோதிரம் இல்லாதது தெரிந்து விடும் என்பதால் வலது கையால் எழுத பழகிக்கொண்டார். மேலும் படத்தின் ஒரு காட்சியில் புத்தகத்தில் ஒரு பகுதியை பேனாவால் வட்டமிடும் இடத்தை வலதுகையால் கடிகாரச்சுற்றில் வரைவார். வழக்கமாக வலது கை பழக்கம் உள்ளவர்கள் anti-clockwise-ல் தான் வட்டமிடுவர்.

இந்த படத்தினை 2000 ஆண்டு சுமார் 8 கோடி பேர் வாடகை எடுத்துள்ளனர். இது ஒரு சாதனை.

படத்தில் சிகப்பு நிறம் வெகு வெகு சொற்பமாக அளவிலேயே இடம் பெற்றிருக்கிறது. சர்ச் கதவின் நிறம், பலூனின் நிறம், கார்பெட்டின் நிறம், ஒளிந்து கொள்ளும் டென்ட்டின் நிறம், வைன் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கதவின் தாழ்பாளின் நிறம் என்று பல இடங்களில் சிகப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவையாவும் மெய்யுலகமும் 'பேய் உலகமும்' ஒன்றுக்கொன்று உரசிக் கொள்ளும் இடங்கள். எப்பொழுதெல்லாம் பேய்கள்/ஆவிகள் கோலை பார்க்கின்றனவோ அங்கெல்லாம் சிகப்பு நிறம் இருக்கும் (சிகப்பு கலர் ஸ்வெட்டர்/சிகப்பு நிற டென்ட்).


கதவின் தாழ்ப்பாள்...



"You sleep now, Anna. Everything will be different in the morning."

ஒரு நல்ல 'அழகான' திரில்லர்/ஹாரர் படம் பார்ப்பவர்கள் மிஸ் பன்னக்கூடாத படம் இது. டைரக்டருக்கு ஒரு ஸ்பெஷல் 'Like'.

Wednesday, December 28, 2011

விஜய்- நண்பன்? அடி உதை மிதி கிஸ்ஸ்ஸ்ஸ்...! [நான் இல்லப்பா ]

எதிர்பார்த்தது போலவே நண்பன் படம் அதன் பாடல்கள் வெளியீட்டின் பின் பரபரப்பாக பேசப்படுகிறது.

பொதுவாக நான் ஹிந்திப்படங்களை பெரியளவில் பார்த்ததில்லை. “த்ரீ இடியட்ஸ்” நன்றாக இருக்கின்றது என பலரும் இணையத்தில் எழுதியதால் கடந்த வருடம் பல விமர்சனங்களையும் பின் டிவிடியிலும் பார்த்தேன். ஆனாலும் “ஓடவிட்டு ஓடவிட்டே” பார்த்தேன். நல்ல படமாக இருந்தாலும் மொழிதெரியாமல் பொறுமையாக பார்க்கும் நிதானம் என்னிடம் இல்லை. (அப்படத்தில் சப்-டைட்டிலும் இருக்கவில்லை).

பின்னர் விஜய் அந்தப்படத்தில் நடிக்கப்போகின்றார் என்றதும் விஜயாவது மல்டி ஹீரோ சப்ஜக்ட்ல நடிக்கிறதாவது?? அதற்கேற்றால் போல் அவரும் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் தான் அப்படத்தில் நடிக்கவில்லை என்றே கூறினார்.

பிறகு என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. 3- இடியட்ஸ் நண்பன் ஆனது இன்னும் 15 நாட்களில் படமே வெளியாகப்போகின்றது. ஐந்து ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள் மற்றும் ஏராளம் முன்னணித் துணை நடிகர்கள்.

த்ரீ இடியட்ஸ் படத்தின் முழுமையான கதை என் மனதில் ஞாபகம் இல்லை. அதனால் மீண்டும் பார்க்க தீர்மானித்தேன். ஒரு செக்கன் கூட ஓடவிடாமல் பொறுமையாக நிதானமாக பார்த்தேன். நிறையவே சிரித்தேன். [கூடவே அழுதேன் என்றால் நம்பவா போகிறீர்கள்? ஹஹ]

ஒரு மொழி தெரியாத படத்தைப் பார்க்கும் போது “வடிவேல், சந்தானம்” காமெடிகளை பார்த்து சிரிப்பதை விட அதிகமாக சிரித்தேனே! அப்படியானால் அப்படத்தின் ரீமேக்கை தமிழில் பார்க்கும் போது விழுந்து, புரண்டெல்லாம் சிரிக்கலாம் போலிருக்கே!

ஹிந்திப்படத்தை அப்படியே தமிழில் எடுத்திருக்கிறார்கள் என்பது தான் படக்குழுவினர் எடுத்து கொழுத்திவிட ஸ்ரீகாந்த் – ஜீவா உள்ளாடையோடு மட்டும் நடிப்பார்கள் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சங்கர் அந்த மாயத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். படத்தின் கதையை சிதைக்காமல் இருப்பதற்கு காட்சிகளை அப்படியே படமாக்க வேண்டியது கட்டாயம்.

இப்பொழுது என் கேள்வியெல்லாம் என்னவென்றால்…?

த்ரீ இடியட்ஸ் க்ளைமாக்ஸில் கரீனா, மாதவன், சர்மான் ஜோசி மூவருமே அமீர்கானை கண்டபடி அடிப்பார்கள். மாதவன் ஒருபடி மேலே போய் மிதிப்பார். படம் பார்ப்பவர்களுக்கு அந்த காட்சியின் முக்கியத்துவம் விளங்கும். தமிழிலும் அப்படியே வரவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. (அப்படித்தான் வரும் என எதிர்பார்க்கிறேன்)

விஜய் ரசிகர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறார்கள். ஒவ்வொரு தமிழ்சினிமா நடிகர்களிற்கு ரசிகர்களும் இருக்கிறார்கள் – வெறியர்களும் இருக்கிறார்கள். தியேட்டர்களில் வெறியர்களுடன் ரசிகர்களும் இணைந்து கொள்வார்கள். இந்த நேரத்தில் ஹீரோவை தாக்கும் சீனை வைப்பதற்கே இயக்குனர்கள் யோசிப்பார்கள். (வில்லன்கள் விதி விலக்கு. ஏன்னா ரசிகர்கள் கொந்தளிக்கும் போது ஹீரோ திருப்பி அடிப்பாரே).

ஒரு மாஸ் ஹீரோவான விஜய்க்கு இந்த சீனை எப்படி படமாக்கப்போகிறார்கள்? ஏற்கனவே மங்காத்தாவில் அஜித்தை வைபவ் அடிக்கும் ஒரு சின்ன சீனுக்கே தியேட்டர் முழுவதும் ஒரே “பி..பி..பி…” தானாம். அஜித் ரசிகர்களிடம் இருந்து தப்புவதற்கு வைபவ் பயந்துகொண்டே இருந்தாராம். ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் இந்த நிலைமை ஏற்படுமா?

இன்னொரு செமையான சீன்.. கரீனாவும் அமீர்கானும் அடிக்கும் லிப்ட் டூ லிப் கிஸ்..
தமிழ்ப்படங்கள் தொடை காட்டும், இடை காட்டும் ஆபாச படங்களாக வந்துகொண்டேயிருக்கின்றது என சில கலாசார காவலர்கள் குற்றம் சுமத்தினாலும் எந்தப்படத்திலாவது இங்கிலீஸ் முத்தக்காட்சி இருக்கின்றதா? இடைக்காலப்படங்களில் புகுந்து விளையாடிய கமல் கூட அதை இப்போது கை விட்டுவிட்டார்.

விஜய் KUSHI படத்தில் ஜோதிகாவுக்கு முத்தமிட்டார். “அந்த சீனுக்கு அது தேவைப்பட்டது. செஞ்சேன்” என விஜய் சொன்னார். (சமாளிச்சிட்டாராம்) நண்பனில் இலியானாவுக்கு முத்தமிடுவாரா? [மஹா ஜனங்களே இந்த பதிவு என்னுடையதல்ல ]

ரீமேக் படம் ஒன்றைப் பார்க்கும் போது ஏற்கனவே அதன் ஒரிஜினல் படம் பார்த்திருந்தால் “சப்”பென்று போய்விடும். இது தான் எனக்கு வில்லு பார்க்கும் போது ஏற்பட்டது. வேலாயுதம் திரைக்கதையில் கொஞ்சம் வித்தியாசம் என்பதால் ரசிக்க முடிந்தது. த்ரீ இடியட்ஸின் ஒவ்வொரு சீனையும் ரசிச்சு ரசிச்சு பார்த்தேன். ஆனாலும் நண்பன் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தான் மேலிடுகிறது.

நல்ல படங்கள் – பாடல்கள் எல்லோருக்கும் தான் பிடிக்கும். அந்த வகையில் நண்பன் பாடல்களும் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. பார்ப்போம்...! என்னதான் நடக்குமுன்னு ஹிஹிஹி -

Tuesday, December 13, 2011

கற்கை நன்றே....! கற்கை நன்றே..


Saranya Velmurugan :
கல்லூரியில் படிக்க உதவித்தொகை எங்கு கிடைக்கும்?

தினசரி வாழ்க்கையில் இயற்பியல் எப்படி பயன்படுத்தப்படுகிறது,

இயற்பியலை மாணவர்களுக்கு புரியும் வகையில் எப்படிக் கற்றுத்தரலாம்
என்பதிலிருந்து, பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவர்களுக்கு
தனியார் தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் கல்வி உதவித்தொகை குறித்த
தகவல்களை வழங்கி வருகிறார் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி இயற்பியல்
துறை தலைவர் டி.உத்ரா.

இந்த யோசனை எப்படி வந்தது என்று பேராசிரியை உத்ராவிடம் கேட்டபோது,
என் மகளுக்கு கதை சொல்ல ஆரம்பித்தபோது, என் பெற்றோர் எனக்குச்
சொன்ன கதை, புத்தகத்தில் நான் படித்த கதைகள் இவற்றை தவிர அவளுக்கு
புதிதாக பல விஷயங்கள் கற்றுக்கொடுக்கத் தீர்மானித்தேன். அதன்
அடிப்படையில் தினசரி வாழ்க்கையில் அறிவியலை நாம் எந்தெந்த வகையில்
பயன்படுத்துகிறோம் என்பதை அவளுக்கு சின்னச் சின்னக் கதைகள் மூலம்
சொல்ல ஆரம்பித்தேன். விளையாட்டாக கேட்க ஆரம்பித்த அவள், பிறகு
ஒவ்வொரு விஷயத்திலும் உள்ள அறிவியலை அவளாக கேட்டுத் தெரிந்து
கொள்ள ஆரம்பித்தாள். அதற்குப் பிறகு என் மகள் தெரிந்துகொண்ட
அறிவியலை மற்ற குழந்தைகளும் தெரிந்துகொள்வதற்காக கை கழுவுதல்
ஆரம்பித்து, சமையல் செய்தல் உள்பட எல்லாவற்றிலும் இயற்பியல் விதிகள்
எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை இதழ்களில் எழுத ஆரம்பித்தேன்.

இதுதவிர பள்ளி ஆரம்பித்து கல்லூரி வரை படிக்கவரும் பொருளாதாரத்தில்
பின்தங்கிய மாணவர்கள், பல மாணவர்கள் தங்கள் கல்வியை பின் தொடர
முடியாத நிலை இருக்கிறது. இம்மாதிரியான மாணவர்களுக்கு பல்வேறு
தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், சமூகத் தொண்டு நிறுவனங்கள்
கல்வி உதவித்தொகைகள், பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள்,
சீருடைகள், வழங்கி வருகின்றன. இம்மாதிரியான விஷயங்களை அனைத்து
மாணவர்களும் தெரிந்துகொண்டால், இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும்
முதுநிலைப் பட்டப் படிப்பு உதவித்தொகையை வைத்துக்கொண்டே படித்து
முடித்துவிடலாம் என்று கூறும் உத்ரா, இதுவரை 96 அறிவியல் கட்டுரைகள்
எழுதியுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச அறிவியல்
மாநாட்டில், நிறமாலைமானியியல் குறித்த ஆய்வறிக்கையை
சமர்ப்பித்திருக்கிறார்.

கலை அறிவியல் கல்லூரி , பொறியியல் கல்லூரி, முதுநிலைப் பட்டப் படிப்பு
மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகைகள்
குறித்து உத்ரா தொகுத்துத் தந்த தகவல்கள் இதோ:

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன்

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் என்ற அமைப்பு பட்டப் படிப்பு மற்றும்
டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மூன்று
ஆண்டுகாலம் படிப்புக்குத் தேவையான கல்வி உபகரணங்கள்
வாங்குவதற்கான உதவித்தொகை அளிக்கிறது. இந்த உதவித்தொகை பெற
விரும்பும் மாணவர்கள் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம்
மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும். சாதி, பாலினம்
போன்ற எந்த விதிவிலக்கும் இந்த உதவித்தொகைக்கு கிடையாது.

விவரங்களுக்கு:சுட்டி

ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட்

படிக்கும் ஆர்வமும் அதேநேரம் பொருளாதாரத்தில் பின்தங்கிய
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது ஜெய்கோபால்
கரோடியா விவேகானந்தா டிரஸ்ட். இந்த தனியார் நிறுவனம் சமுதாயத்தில்
பின்தங்கிய மாணவர்களும் சிறந்த கல்வியை பெறவேண்டும் என்ற உயர்ந்த
நோக்கில் இந்த உதவித்தொகையை அளித்து வருகிறது. இளநிலை பட்டப்
படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு, தொழிற்கல்வி
பயின்றுகொண்டிருக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற
விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், Jaigopal Garodia Scholarships

Centre, Jaigopal Garodia Vivekananda Vidyalaya Trust, U – 6, Seventh Street, Anna Nagar,
Chennai. தொலைபேசி எண் : 26206261 என்ற முகவரியில் தொடர்பு
கொள்ளலாம்.

கௌரவ் ஃபவுண்டேஷன்

சென்னையில் இயங்கி வரும் கௌரவ் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம்,
இந்திய மாணவர்களுக்கு ஆய்வு மற்றும் உயர்கல்வி மேற்கொள்வதற்கு
உதவித்தொகை அளித்து வருகிறது. இந்த உதவித்தொகைக்கு
விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்தியராக இருக்க வேண்டும். ஆண்டு
வருமானம் 4 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். 10 வயது முதல்
50 வயது வரை உள்ள படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் உதவித்தொகை
பெற விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே
உதவித்தொகைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இளநிலை
பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு, எம்.பி.பி.எஸ். பி.இ., பி.டெக்.
படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள், சி.ஏ., சி.எஸ்., இன்டீரியர் டெக்கரேஷன்,
ஃபேஷன்/டிசைன் சம்பந்தமான படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களும் இந்த
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: சுட்டி

எஸ்.கே.டி.பி. தொண்டு நிறுவனம்

சென்னை தி.நகரில் உள்ள எஸ்.கே.டி.பி. எனும் சமூக தொண்டு நிறுவனம்
படிக்க வசதியில்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி
உதவித்தொகை அளித்து வருகிறது. இளநிலை பட்டப் படிப்பு மற்றும்
முதுநிலை பட்டப் படிப்புகளை உதவித்தொகையுடன் படிக்க விரும்பும்
மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். சென்னை
மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் இந்த
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனம் இந்த ஆண்டில்
சென்னையைச் சேர்ந்த 64 மாணவர்களுக்கும் மற்றும் பிற பகுதியைச் சேர்ந்த
50 மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையை வழங்கியுள்ளது.

விவரங்களுக்கு : சுட்டி

ஸ்ரீ வித்யாசாகர் எஜுக்கேஷனல் டிரஸ்ட்

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வித்யாசாகர் எஜுக்கேஷனல் டிரஸ்ட்
அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி
உதவித்தொகையை ஆண்டுதோறும் அளித்து வருகிறது. உதவித்தொகை பெற
விரும்பும் மாணவர்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்
மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது

பிளஸ் டூ வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு
இளநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
அதேபோல எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல்
தற்போது ஐ.டி.ஐ. கல்வி நிலையத்தில் முதல் ஆண்டு
படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெற
விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு : B-1, Narumukai apartment, Brindavan Nagar Extension, Adambakkam,
Chennai – 88 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

சோபியா நிறுவனம்

சென்னையில் உள்ள சோபியா என்ற தனியார் நிறுவனம், கல்லூரி செல்லும்
மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது.
பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி பயில விரும்பும் மாணவர்களும்
இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் முதல் ஆண்டு
பயிலும்போதே இந்த உதவித்தொகைப்பெற விண்ணப்பிக்க வேண்டும்.
இரண்டாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டு
படித்துக்கொண்டிருக்கும்போது, கல்வி உதவித்தொகை கேட்டு புதிதாக
விண்ணப்பிக்க முடியாது.

விவரங்களுக்கு : சுட்டி

சாகு ஜெயின் டிரஸ்ட்

சாகு ஜெயின் டிரஸ்ட் என்ற அமைப்பு தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி
மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு மற்றும்
முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் கல்வி
உபகரணங்கள் வாங்குவதற்காக மாதம்தோறும் ரூ.150லிருந்து ரூ.1000 வரை
உதவித்தொகை அளித்து வருகிறது. பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்ற
அதிகபட்ச மதிப்பெண்களைப் பொருத்து இந்த உதவித்தொகை
பெறுவதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.


விவரங்களுக்கு :சுட்டி

ஃபவுண்டேஷன் ஃபார் அகாதெமிக் எக்ஸலன்ஸ் அண்ட் ஆக்சஸ் நிறுவனம்

புதுதில்லியில் உள்ள பவுண்டேஷன் ஃபார் அகாதெமிக் எக்ஸலன்ஸ் அண்ட்
ஆக்சஸ் நிறுவனம் கலை, வணிகம், அறிவியல், மருத்துவம், பொறியியல்,
தொழில்நுட்பம் மற்றும் தொழிற்படிப்பு, இளநிலைப் பட்டப் படிப்பு
மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை
அளித்து வருகிறது. பயணச்செலவாக ஆண்டுக்கு ரூ.1,000, கல்லூரியில்
தங்கியிருந்து படிக்க ஆண்டுக்கு ரூ.9,000, ஆடைகள் வாங்க ஆண்டுக்கு
ரூ.1000, புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.2,000
உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள்
அடிப்படையிலேயே இந்த உதவித்தொகைக்கு மாணவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.

விவரங்களுக்கு: சுட்டி

சத்தியகாமா சாரிடபிள் டிரஸ்ட்

பெங்களூருவில் உள்ள சத்தியகாமா சாரிடபிள் டிரஸ்ட் என்ற சமூகத்
தொண்டு நிறுவனம் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள்
பெற்று மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கு கல்விக் கட்டணம் கட்ட முடியாமல்
தவிக்கும் ஏழை எளிய மாணவிகள் மற்றும் பிளஸ் டூ வகுப்பு முடித்துவிட்டு
பட்டப் படிப்பு மேற்கொள்ளவிருக்கும் பிராமண சமுதாய மாணவிகளுக்கு
கல்வி உதவித்தொகை அளிக்கிறது. பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு
தேர்வுகளில் பெற்ற அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த
உதவித்தொகை பெற மாணவிகள் இந்த உதவித்தொகைக்கு தேர்வு
செய்யப்படுவார்கள்.

விவரங்களுக்கு : சுட்டி

டி.வி.எஸ். சோல்ட்ரி டிரஸ்ட் நிறுவனம்

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த டி.வி.எஸ். சோல்ட்ரி டிரஸ்ட்
நிறுவனம் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிராமண
சமுதாயத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு
கல்வி உதவித்தொகை வழங்குகிறது. பிளஸ் டூ முடித்துவிட்டு உயர்கல்வி
மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற
விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு:சுட்டி

ஸ்ரீபிரகாத் பாரதீய சமாஜ்

மும்பையைச் சேர்ந்த ஸ்ரீபிரகாத் பாரதீய சமாஜ் என்ற அமைப்பு
ஆண்டுதோறும், பிளஸ் டூ முடித்துவிட்டு முழுநேர இளநிலைப் பட்டப் படிப்பு
அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு
உதவித்தொகை வழங்குகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம்,
ஹோமியோபதி, என்ஜினீயரிங், பார்மஸி, கம்ப்யூட்டர் சயின்ஸ்,
வேளாண்மை, கால்நடை அறிவியல், நர்ஸிங் உள்ளிட்ட பல்வேறு
படிப்புகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்க விரும்பும்
மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
வெளிநாட்டைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் குறைந்தபட்சம் பிளஸ் டூ
வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்களும், இந்திய மாணவர்களாக இருப்பின் 60
சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி மற்றும்
நர்சிங் படிப்பில் சேரும் மாணவிகள் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால்,
இந்த இலவச கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு :

 shri brihad Bharatiya samaj, 178 NK Mehta International House, behind LIC Yogakshema,
Babubhai chinai Marg, Backbay Reclamation, Mumbai – 400020.

இன்போசிஸ் அறக்கட்டளை

இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனம், இன்போசிஸ் அறக்கட்டளையின்
மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களுக்கு
ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பில்
80 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகம் பெற்ற மாணவர்கள் தங்கள்
மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்கல்வி உதவித்தொகை பெற
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் எழுத்துத் தேர்வு மூலம்
கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.

விவரங்களுக்கு : சுட்டி

தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ அமைப்பு

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ
அமைப்பு சமுதாயத்தில் பொருளாதார அளவில் பின்தங்கிய பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கு பள்ளி சீருடை மற்றும் கல்விக் கட்டணம் உள்ளிட்ட
பல்வேறு உதவிகளை செய்து வருகிறது தமிழ்நாடு பெண்கள் தன்னார்வ
அமைப்பு.

விவரங்களுக்கு: womens voluntary service of tamilnadu, old no.19, New no.6, Near
presidency school, mayor VR Ramanathan Road, chetpet, chennai. Phone: 044 – 28361434 ,
28361825.

பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட்

சென்னையைச் சேர்ந்த பிரைட் பியூச்சர் ஃபார் பிளைண்ட் என்ற சமூகத்
தொண்டு நிறுவனம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பார்வைத்திறன்
அற்ற மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு ஆண்டு
தோறும் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. இந்த உதவித்தொகை
பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ
வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்பவராக
இருக்கவேண்டும் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில்
இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும்
மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்விக் கட்டணம், புத்தகச் செலவு மற்றும் சீருடைகளுக்காக இந்த
உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

விவரங்களுக்கு : சுட்டி

கற்கை நன்றே....!

Wednesday, December 7, 2011

கிளியோபட்ரா...


Hollywood Queen







ஆங்கிலத் திரைப்பட ரசிகர்களின் இதய சாம்ராஜ்யத்தில் கிளியோபட்ராவாக வீற்றிருந்த அழகு தேவதை எலிஸபெத் ரெய்லர். கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை காலமானார். அமெரிக்க, பிரிட்டிஷ் தம்பதியரான பிரான்சிஸ்லென் ரெய்லருக்கும் சாராவுக்கும் 1932 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பிறந்தார் எலிஸபெத் டெய்லர். 12 ஆவது வயதில் ""நஷனல் வெல்வெட்'' என்ற திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தில் சிறப்பாக நடித்ததைப் பாராட்டி பல பத்திரிகைகள் விமர்சனம் எழுதின. எலிஸபெத் ரெய்லரின் புகழ் ஹொலிவூட் திரை உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 50 திரைப்படங்கள், இரண்டு ஒஸ்கார் விருதுகள், 100 சத்திர சிகிச்சைகள், எட்டுத் திருமணங்கள், போதை மருந்துப் பாவனை என்று பரபரப்பாக விமர்சிக்கப்பட்டவர் எலிஸபெத் டெய்லர். கிளியோபட்ரா, பட்டர் பீல்ட் 8 கூல் அப்ரைட் ஒவ் வேர்ஜினியா வூல்ப், றன்றீ கன்ட்ரி லாஸ்ட் சமர் ஆகிய திரைப்படங்கள் எலிஸபெத் ரெய்லரின் நடிப்புக்கு சான்றாக விளங்குகின்றன. 1963 ஆம் ஆண்டு வெளிவந்த பிரமாண்டமான திரைப்படமான "கிளியோபட்ரா' எலிஸபெத் ரெய்லருக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. எகிப்திய எழிலரசியான கிளியோபட்ரா இப்படித்தான் இருந்திருப்பார் என்பதை உணர்த்தும் விதமாக அவரது நடிப்பு இருந்தது. நடிகர்களுக்கு இணையாக எலிஸபெத் ரெய்லர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளை அலங்கரித்தன. ஆங்கிலத் திரை உலகின் மிகப் பெரிய விருதான ஒஸ்காருக்கு நான்கு முறை எலிஸபெத் ரெய்லரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. பட்டர்பீல்ட் 8 கூல் அப்ரைட் ஒவ்வேர்ஜினியா வூல்ப் ஆகிய திøரப்படங்களில் நடித்தமைக்காக இரண்டு முறை ஒஸ்கார் விருது பெற்றார். 1950 ஆம் ஆண்டு 18 ஆவது வயதில் நிக்கி ஹில்டனைத் திருமணம் செய்தார். 1952 ஆம் ஆண்டு பைல்கல்வைல்டில் 1957 இல் மைக்கல் டால்ட் என்பவரை திருமணம் செய்தார். இத்திருமணம் ஒரு வருடம் நீடிக்கவில்லை. விவாகரத்துச் செய்தார். 1959 ஆம் ஆண்டு எடிபிஷலாவை திருமணம் செய்தார். 1964 ஆம் ஆண்டு றிச்கட்மன்டனைத் திருமணம் செய்தார். ரிச்கட் பட்டனைத் திருமணம் செய்தார். ரிச்கட் பட்டனுடன் 10 வருடம் வாழ்ந்தார். 1974 ஆம் ஆண்டு அவரை விவாக ரத்துச் செய்தார். ரிச்சர்ட் பட்டனை மறக்க முடியாத எலிஸபெத் டெய்லர் 1976 ஆம் ஆண்டு அவரை மீண்டும் திருமணம் செய்தார். ஒரு வருடத்தில் வாழ்வு கசந்ததால் விவாகரத்துப் பெற்றார். 1976 ஆம் ஆண்டு நடிகர் ஜோன் வார்னரைத் திருமணம் செய்தார். 1991 ஆம் ஆண்டு 59 ஆவது வயதில் லாரி போர் டென்ஸ்தியைத் திருமணம் செய்தார். 1996 ஆம் ஆண்டு அவரை விவாகரத்துச் செய்தார். எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்காக அதிக அக்கறை காட்டினார். அதன் காரணமாக இதற்காக விசேட ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. திரை உலகில் இருந்து ஒதுங்கிய பின்னர் மனிதாபிமானப் பணிகளில் முழு மூச்சுடன் செயற்பட்டார். 1963 ஆம் ஆண்டு ஜூன்ஹேர் ஷேஸ்ட் மனிதாபிமான விருது அவரைத் தேடி வந்தது. தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரை ஆகியவற்றுக்கு அடிமையானதால் அவற்றிலிருந்து விடுபடுவதற்காக விசேட சிகிச்சை வழங்கப்பட்டது. ஏழு பேரை எட்டு முறை திருமணம் செய்த எலிஸபெத் டெய்லருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் 10 பேரக் குழந்தைகளும் நான்கு கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர். 1960 ஆம் ஆண்டு பிரமாண்டமான தயாரிப்பாக வெளிவந்த கிளியோபட்ராவில் எகிப்து பேரழகியாக ரசிகர்களின் உள்ளங்களில் புகுந்து எலிஸபெத் டெய்லர் அப்படத்தில் மார்க் அன்ரனியாக நடித்த ரிச்சர்ட் பட்டனிடம் மனதைப் பறிகொடுத்து அவரைத் திருமணம் செய்தார். ஹொலிவூட்டில் எந்த ஒரு நடிகையும் பெற்றிராத ஒரு மில்லியன் டொலரை சம்பளமாக பெற்றார். எலிஸபெத் ரெய்லருக்கு வழங்கப்பட்ட தொகையை அறிந்த ஹொலிவுட் நடிகர்களே அதிர்ச்சியடைந்தனர். 1963 ஆம் ஆண்டு கிளியோபட்ரா படம் வெளியான பின்னர் திரையில் இணைந்த ஜோடி நிஜமாகவே இல்லறத்தில் இணைந்தது. திரைப்படங்களில் மட்டுமல்லாது நாடகங்களிலும் நடித்து ரசிகர்களைத் தன்பால் ஈர்த்தார். 2004 ஆம் ஆண்டு இதயக் கோளாறு காரணமாக அவதிப்பட்டார். கணுக்கால், கால் பகுதியில் ஏற்பட்ட பலவீனத்தினால் ஐந்து முறை தவறி விழுந்து இடுப்பு உடைந்தது. மூளைக் கட்டி அறுவை சிகிச்சை தோல் புற்று நோய் ஆகியவற்றில் இருந்து மீண்டார். பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்சனுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது மைக்கல் ஜாக்சனுக்காகக் குரல் கொடுத்தார். உடல் நலம் இல்லாத போதிலும் சமூக சேவைகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். எலிஸபெத் ரெய்லர் மறைந்தாலும் கிளியோபட்ரா என்ற அழகு தேவதை ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்பார். ரம்ணி சூரன்,ஏ,ரவிவர்மா மெட்ரோநியூஸ் 01/04/11

போராளி....


இராணுவ ஆட்சி நடைபெறும் மியன்மாரில் ஜனநாயகம் தளைத்தோங்க வேண்டும் என்பதற்காக மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஆங் சாங் சூகி வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட. மியன்மார் என்று அழைக்கப்படும் பர்மாவின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராட்டக் குழுத் தலைவரான ஜெனரல் ஆங் சான், கின் கி தம்பதியருக்கு 1945 ஆம் ஆண்டு பிறந்தவர்.

யாங் கூனில் பிறந்த ஆங் சாங் சூகி தனது வாழ்நாளில் அதிக காலத்தை இந்தியாவிலும் இங்கிலாந்திலும் கழித்தார். டில்லியின் தனது படிப்பை மேற்கொண்ட ஆங் சாங் சூகி, இலண்டன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகியற்றில் பட்டம் பெற்றார். மிக்கேல் ஆரிஸ் என்ற பிரிட்டிஷ்காரரை மணமுடித்தார்.

ஆங் சாங் சூகியின் தகப்பன் ஜெனரல் ஆங் சான் 1947 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 1988 ஆம் ஆண்டு மியன்மார் திரும்பினார். அப்போது இராணுவ ஆட்சிக்கு நாட்டு மக்கள் காட்டிய எதிர்ப்பைக் கண்டு மக்களின் விடுதலைக்காக தேசிய ஜனநாயக லீக் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். 1962 ஆம் ஆண்டு முதல் மியன்மாரில் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று போராடிய ஆங் சாங் சூகிக்கு மியான்மார் அரசு கொடுத்த பரிசு வீட்டுக் காவல்.

ஆங் சாங் சூகியின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்ட மியன்மார் அரசு 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரை வீட்டுக் காவலில் வைத்தது. ஆங் சாங் சூகியை விடுதலை செய்யுமாறு உலக நாடுகள் அனைத்தும் ஏகோபித்த குரலில் கோரிக்கை விடுத்தன. அவை எவையும் மியன்மார் அரசின் போக்கை மாற்றவில்லை. சிறையில் இருந்தபடி தனது போராட்டத்தை நடத்தினார் ஆங் சாங் சூகி, அவரது நியாயமான போராட்டத்தை அங்கீகரித்த நோபல் பரிசுக் குழு 1991 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கிக் கௌரவித்தது.

தாயைப் பார்ப்பதற்காக நாடு திரும்பிய ஆங் சாங் சூகி தாய் நாட்டை விடுவிப்பதற்காகப் போராட்டத்தில் இறங்கியதால் கணவனையும் பிள்ளைகளையும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. புற்றுநோயாளியான ஆரிஸ் தன் மனைவி ஆங் சாங் சூகியைக் கவனிப்பதற்காக மியன்மாருக்குச் செல்ல விரும்பினார். மியன்மார் அரசு அவருக்கு விஸா வழங்க மறுத்து விட்டது. கணவனைப் பார்க்க ஆங் சாங் சூகி விரும்பிய போது இங்கிலாந்துக்குச் சென்றால் நாடு திரும்பக் கூடாது என்று மியன்மார் அரசு நிபந்தனை விதித்தது. விடுதலையா, கணவனா என்ற கேள்வி எழுந்தபோது தனக்கு நாட்டு மக்களின் நலனே முதன்மையானது என்று முடிவெடுத்தார். 1999 ஆம் ஆண்டு சூகியின் கணவர் பிரிட்டனில் மரணமானார்.

1990 ஆம் ஆண்டு மியான்மாரில் தேர்தல் நடைபெற்றது. ஆங் சாங் சூகியின் கட்சி வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த இராணுவ அரசு ஆட்சியை ஒப்படைக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு ஆங்சாங் சூகியின் வீட்டுக் காவல் முடிவடையும் வேளையில் அவரது வீட்டில் அமெரிக்கரான ஜோன் எட்வேட், என்பவர் சட்டவிரோதமாகத் தங்கி இருந்ததாகவும் அதற்கு ஆங் சாங் சூகி ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறி குற்றம் சாட்டி 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை அவரது வீட்டுக்காவலை நீடித்தது.

நவம்பர் 7 ஆம் திகதி மியான்மாரில் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஆங் சூங் சூகி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. அவரது கட்சியை முடக்குவதற்குரிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஆங் சாங் சூகி அறிவித்தார். இதனால் அவரது கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஆங் சாங் சூகியின் கட்சியில் இருந்து பிரிந்தவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றனர்.


மியன்மாரில் நடைபெற்ற தேர்தலில் இராணுவ ஆட்சியாளர்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்த நிலையில் ஆங் சாங் சூகி வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். வீட்டுக் காவலில் இருந்த போது அவருக்கு இரண்டு பெண் உதவியாளர்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டனர். தொலைபேசி இணைய வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆங் சாங் சூகியின் வீட்டின் முன்னால் திரண்ட மக்கள் கூட்டம் அவருக்கு இருக்கும் செல்வாக்கை வெளிப்படுத்தியது. வீட்டுக் காவலில் இருந்து விடுதலையான ஆங் சாங் சூகி என்ன செய்யப் போகிறார் என்பதே உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. மியான்மாரில் இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தன்னை சிறையிட்டவர்களின் மீது கோபப்படவில்லை என்றும் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

மியான்மாரின் அரசியலில் சிக்கலான நேரத்தில் ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இராணுவ அரசு அங்கு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. உலக நாடுகள் இராணுவ அரசைக் கண்டித்ததே தவிர உறுதியாக எதிர்ப்புக் காட்டவில்லை. ஆங் சாங் சூகியின் செல்வாக்கைக் குறைக்க வேண்டுமென்றால் இராணுவச் சாயம் பூசப்பட்ட அரசைக் களைய வேண்டும். மியன்மார் அரசு இராணுவ அரசு அல்ல. ஜனநாயக அரசு என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதிரடி அரசியலில் ஆங் சாங் சூகி ஈடுபட மாட்டார். அமைதி வழி சென்றுதான் நினைத்ததைச் சாதிக்கும் ஆளுமை ஆங் சாங் சூகியிடம் உள்ளது.

ரமணி

சூரன்.ஏ.ரவிவர்மா

மெட்ரோநியூஸ் 19/11/10

Tuesday, December 6, 2011

தேடல்களின்... தீர்வு எனக்கானதாய்... ஓர் வெற்றிடம்




நாள் எது பொழுதெதுவென
புரியாத
ஒரு வேற்றுகிரக
விடியலில்..

மார்கழிக்குழாம்
பாடி; மாலை வெயில்
இதமாய் பளிர்க்கும்
அந்திமத்தில்...

மிகப்பெரியச் சண்டையின்
முற்றில்
மௌனிக்கும்
வினாடியின் கடைசி
சொட்டில்...

பின்னிரவுகளில்
தூங்காமல்
எழுதும்
இறப்பின் கவிதையின்
இறுதிப்புள்ளியில்....

மகிழ்ச்சிகள் முறிந்து
திடீரென எதிர்கொண்ட
சாலை விபத்தின்
பரிதவிப்பில்...

பொம்மைக்கு அழும்
எதிர்வீட்டுக்
குழந்தையின்
மிட்டாய் கிடைத்த
புன்முறுவலில்...

நட்பிடம்
மறைத்த உண்மையை
வெளிச்சொல்ல முடிவெடுக்கும்
எண்ணத்தின் கடைசி வார்த்தையில்..

உண்மைகளை நிறுபிக்கும்
வரை போராட்டமாய்
செல்லும் பாதையின்
முட்டுக்கட்டைகளில்

காசு பணமில்லாமல்
போனாலும்
பார்த்ததும் சுகம் கேட்கும்
சம்சாரிநண்பனின்
உபசரிப்பில்..

தேடும் பொருளை கண்டெடுக்கும்
போதான மகிழ்ச்சியின் முதல்
உணர்வில்..

மூங்கில் கழியில்
நுழைந்த காற்றாய்..
எப்போதும் நான் என்னைத்
தேடிக்கொண்டே இருக்கிறேன்...!

வெற்றிடம் நிரப்பி...!

-கவிதைக்காரன்..

Monday, December 5, 2011

என் தாத்தன்... இரும்பொறை.....




அய்யனாரு பேரன் போல
ஆறடி உசர மீசைக்காரரு...

பொழுது புலரும் முன்னே
முண்டாசுகட்டிகிட்டு
வயலுக்குள் கால் வைச்சாருன்னா

புலர்ந்தது அடையுமுன்னே
காடெல்லாம் உழுதிருக்கும்
இவரோட ஏர்கலப்பை..!

முத்து முத்தா வேர்த்திருக்கும்
வியர்வை சிந்தி விளைஞ்ச நிலம்
வெள்ளாமை பார்க்கும் வரை
ஓயாது இவர்காலும் ..!

பள்ளிக்கூடம் போனதில்லே
மழைக்கும் வெயிலுக்கும்

ஆனாலும் கண்ணாலே
இவரளந்து சொல்லும் -நெல்லுப்
படிக்கணக்குக்கு மறுத்துச் சொல்ல
பத்து ஊரிலும் ஆளில்லே...!

தென்னமரம் ஏறுவதில்
குரங்கெல்லாம் குப்புறவிழுந்து
தற்கொலை செஞ்சுக்கும் இவரு
ஏறும் வேகம் கண்டு...!

எருதுகளை பூட்டிக்கிட்டு
ரேக்ளாவுக்குப் போனாருன்னா
விருதுகளைச் சுமந்துகிட்டு வாசல்
வந்து நிக்கும் இவரோட வில்லுவண்டி...!

பெரும பேசினது போதும் ராசா
இரும்பொறஆண்டையார் மனச சொல்லு லேசா-ன்னு
முப்பாத்தா கிளவி முணுமுணுக்க..!

தப்பாத தாளத்தோட அடிச்சுபாடுறான் -அவதாரம்
ஊருக்குறி சொல்லும் அய்யரோட
முத தாரத்து மவன் இவன்..என் பள்ளிக்கூட கூட்டாளி

கனடா தேசத்தில் கடன் அட்டைகளைச்சுமந்து
கணிணி முன் அமர்ந்து சிலிக்கான் வேலிக்குள்
மேகக்கணிணியம் கற்பிக்கும் இயந்திர வாழ்மனிதன்
எனக்கு

இராஜராஜன் ஆண்ட தஞ்சை மண்ணில்
கொள்ளிடக்கரை தீண்டும் புனல்வாசல்
பூர்வீகம் படிப்பு உழைப்புன்னு அயல்தேசம்
தாவி வர..
சாண்ட்விச்சுக்கும் பேகனுக்கும்
அடங்கிபோன ஐ.ஆர் எட்டு அரிசி நாக்கு...

அடுத்த வருடம் போகலாமென்று ஆறேழு முறை
நினைத்தும் தாண்டிப்போன வருட இடைவெளியில்
சில தலைமுறை இடைவெளிகளோடு சில
தலைகளும் விழுந்து போனது...!

அப்படி வாழ்ந்த மனிதர் தான் என் தாத்தன்
“இரும்பொறை” ஏழு வயசு முதல் கரும்பு
புழியப்போன முரட்டு தேகம் அவருக்கு
பெயருக்கு ஏத்தது போல இருப்புக்கார உடம்புகாரர்..

சின்னவயசில் மவ வயித்துப்பயலுன்னு
தோள் மேல என்னையும் இரண்டுக்கையில்
பெரியப்பா பெண்ணையும் தூக்கிச்சுமக்கும்
பாசக்கார தாத்தன்...!

சந்தனம் பூசிக்கிட்டு ஜல்லடை கட்டிக்கிட்டு
சுடலமாடன் கோவில் கொடைக்கு
வேட்டைக்கு அவர்ப்போகும் போது -பார்த்த
பயத்திலே காய்ச்சல் பத்திக்கும் எனக்கு...

திருநீறு பூசுய்யா சாமிக்கிட்ட என அம்மா
கிட்டக்க கூட்டுப்போகும் போது
கிடுகிடுத்துப்போகும் என்னை
அடையாளம் கண்டுக்கிட்டு அந்த
நொடி சாமி போய் தாத்தா வந்து
கண்ணில் நிப்பார்...

பெத்த பெள்ளைகள்ளாம் கரையேற
காணி நிலத்தையெல்லாம் காங்ரீட்டுக்காரனுவ
ஆக்கிரமிக்க இரத்தம் சுண்டிப்போனாலும்
என்னப் பெத்தமண்ணக் கொடுக்கமாட்டேன்னு



கொலையா நின்னவரு இன்னைக்கு
சிலையா படுத்திருக்க சுத்தி நின்ன மக்கள் எல்லாம்
தத்தம் ஒப்பாரியில் அழுது நிக்க
எண்பத்தாறு வயசில கண்ணமூடி தூங்குறாரு...
களத்துமேட்டுப்பெரியவரு...:

சனிக்கிழமை சாவுன்னு சேவக்குஞ்சி கூட கட்டி
காட்டுக்குத் தூக்கிப்போக பெரியம்மா அழுது நிக்க
அத்தோடு முடிந்தது தாத்தனின் இறுதிச்சடங்கு வீடியோ...!

நான் கேட்டேன்னு அவதாரத்திட்ட சொல்லிவைச்சு
அரியலூரில் இருந்து வந்த முத்து வீடியோஸ்- பாண்டி
அண்ணன் எடுத்தனுப்பி இருக்காரு...

முத்தம் கொடுக்கும் போது குத்திய
அந்த முரட்டு மீசை மனசோடு குத்துது..இப்போ
காதுக்குள்ல ஒலிக்குது பழம்பெரும்
 நடிகர் கல்யாண்குமாரின் குரலப்போல....
 “கண்ணமூடியும் வரலஏப்பு....ன்னு..”

நெஞ்சம் மறப்பதில்லை பாட்டுன்னா அவருக்கு அம்புட்டு இஸ்டம்...!
இரும்புக்கார தாத்தா.....!


-எழுத்து & கற்பனை
*

கார்த்திக் ராஜா...

Friday, December 2, 2011

தலைகீழ் விதிகள்...!





இழுத்துப்பறித்துக்கொண்டதை
எடுத்துச்சூடிக்கொண்டு
பூக்காரி கட்டிய
மாலையில்
உதிர்ந்தன சில பூக்கள்
அவள் முதிர்கன்னி
என்பதை மறைக்க
முடியாமல்..

இருக்கிக்கட்டிப்போட்ட
கைகளுகளோடு
கட்டுமரம் ஓட்ட தார்சாலைக்
கொடுக்கும்
காங்ரீட் மனிதர்கள்
மத்தியில்..
வெற்றிக்கான ஓட்டப்பந்தயம்
எவ்வித முன்னேற்பாடுமின்றி
கால்கள் இல்லாதவனுக்கு

மழையில்
மின்சார்க்கம்பியில்
அமர நினைத்து
வெகுதூரம் தூக்கி எறியப்பட்ட
காகம் கால்களை
இழந்து நேரம் தப்பி பெய்த மழையின்
கால்வாயில் இறந்து கிடக்க
அடுத்த வினாடி
துண்டிக்க பட்ட மின்சாரம்

தெருவோரம்
மின்காரன் வீசிய கழிவுகளில்
உணவைத்தேடிப்பிடித்த
நாய்களுக்கு
பெடிக்ரீ கிடைக்காத சோகம் இல்லை
எனும் போது முறைத்துத்தான் பார்க்கிறது அல்சேஷன்களின்
அழிச்சாட்டியங்களை..

வெற்றி எல்லாம்
விழுப்புண்களில்
அல்ல ;விழுந்தாலும்
எழுந்து நின்றவனுக்கு என கவிதை எழுதும்
கார்கில் போரில்
கால்களை இழந்ததால் வீட்டுக்கு
அனுப்பப்பட்ட முன்னால்
இராணுவ வீரன்..

எங்கும் நெகட்டிவோடு
திரியும்
பாஸிட்டிவ் திங்கிங்
போட்டோக்காரன்
காமிராவுக்குள்
இதுவரை விழாத
தேசிய விருது
புகைப்படம்
கழவப்படவேண்டிய இருட்டு
அறை இன்னும்
வெளிச்சம் பார்க்காமலே
இருக்கிறது..!

வெற்றிக்கு -
இடையே கடக்கவேண்டியதை
நான் எழுதிவிட்டேன்
பார்க்கும் பார்வையில் அதை
எடுத்துக்கொள்லப்போகும்
உங்களுக்காய்
மிச்சமாய் இருவழிப்பாதை
எந்த திசை காட்டுகிறது
உங்கள் திசைமானி..!

இந்த நாள் இனிய நாளாக அமைய...

இன்னைக்கு காலை ஏன் இவ்வளவு மோசமா இருக்குன்னு நினைச்சுகிட்டே
எழுந்திச்சேன்.
அதி காலையிலே அதாங்க 8 மணிக்க்கு காஃபி டம்ளர் சத்தம் போட்டு எழுப்ப எழுந்து பார்த்தா நேற்று பார்த்த வலைப்பூவில் இன்னும் அண்ணன் முகில் சிரிச்சுகிட்டு இருக்கார். அட ஆமாம் படிச்சுகிட்டு இருக்கும் போதே தூங்கிட்டோமே...ன்னு நினைச்சு கண்னாடியத்தேடி எடுத்தா கண்ணாடில லேசா ஸ்க்ராச்சஸ்... இப்போ தான் புதிது மாத்தினேன்றதால... டக்குன்னு மண்டைக்கு கோபம் “காலையிலே ஏண்டா சத்தம் போடுறே”-ன்னு அம்மா சொல்லிடக்கூடாதேன்னு... அமைதியா கண்ணாடியைத்தொடைச்சுட்டு லேப்டாப்பில் முன்னால் காதலி பெயரை காலையிலே தட்ட
அது “வெல்க்கம் குட் மார்னிங்” சொல்லி அப்பாவின் புகைப்படத்தோட சிரிச்சது...

எஃப்.பி பக்கம் போனா நம்ம “ராஜ் குமார் இனிய காலை வணக்கம்” மெஸேஜ் போட்டிருக்கார். வழக்கம் போல அதையே காப்பி பண்ணி அவருக்கு அனுப்பிட்டு காஃபி-யைச்சுவைக்க எழுந்து போய் ஃப்ரெஸ் பண்ணிட்டு வந்து குடிச்சா சர்க்கரை அதிகமா இருந்தது... குறைய இருக்குன்னா போட்டுக்கலாம் அதிகமென்றால் அம்மாகிட்ட பேச முடியாது... சைலண்டா முழுங்கிட்டு...!

சார்ஜ் பார்க்கிறேன் 10% அலர்ட் காமிக்குது அடடா கேபிள் மாட்டி இருக்கு ஸ்விட்ச் போடாமல் விட்டுட்டேனே..ன்னு அலட்டிக்கிட்டே ஸ்விட்ச் போட்டா கரண்ட் இல்லை சரி ஆஃபீஸ் போய் ஏத்திக்கலாம்ன்னு ... குளிச்சு முடிச்சு 8:30-க்குள் அடிச்சு புடிச்சு புறப்பட்டு அம்மா சுட்ட தோஷையை எனக்குப் பிடித்த வேர்க்கடலைச் சட்னியோடு உள்லதள்ளிட்டு..

அண்ணன் வாங்கிக்கொடுத்த “ப்ளேபாய் கேப்”- தெடி தலியில் மாட்டிகிட்டு
பைக் ஸ்டார்ட் பண்ணா செல்ஃப் ஸ்டார்ட் பலிவாங்குது... சரி கிக்கர் அடிக்கலாம்ன்னு உதைச்சேன்.  கட்டவிரலுக்கு வேலை கொடுத்து கொடுத்து கிக்கர் மறந்து போய் விட்டது கிட்டதட்ட... இக்னீஷியனை உசுப்பி
பக்கத்து வீட்டு ரங்கா அண்ணா எனக்கு டைம் ஆச்சு காலேஜில் விட்றுங்கன்னு ஒட்டிக்கிச்சு... சரி அவளையும் ஏத்திகிட்டு கிளம்பினால்..

ஜாண்சன் டிம்பர்க்கு ஆப்போஸிட்டில் ட்ராஃபிக் சார்ஜெண்ட் நிக்குறார் “கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் காலை எட்டரைக்கே வந்திருக்கிறாங்களே ” ஏன்?-ன்னி யோசிச்சுக்கிட்டே வண்டியை எதிர்திசைக்கே யூ- டர்ன் போட ரங்கா கேட்டா... என்னாச்சி அண்ணா-ன்னு
இல்லம்மா பர்ஸ வீட்டில் வைச்சுட்டு வந்துட்டேன். லைஸன்ஸ் கைல இல்லை போலீஸ் நிக்குறாங்கன்னு...

#பாவம் என்னிடம் லைஸன்ஸ் இல்லைன்னு அந்த பிள்லைக்கு தெரியாது போல ஹஹ# பாதி தூரம் திரும்பினால் மார்க்கெட் கேட்ல வழி திருப்பி விட்றாங்க ... ஒன் வே-ன்னு அட அது தெரியாதா எங்களுக்கு பொறந்ததுல இருந்து இது ஒன் -வே தான்  இதே ரோட்டிலதானே தினமும் போறேன்னு மனசுக்குள் திட்டிகிட்டே வேற வழியே இல்லைன்னு மறுபடியும் ஜாண்சன் டிம்பர் கடந்து அங்கே நின்ற காக்கி- கண்ணில் மண் தூவி எஸ் ஆகி போனா..

அடுத்து வாட்டர் டேங்க் கிட்ட மறிக்குறாங்க வண்டிய... அடப்பதறுகளா
இவ்ளோ போலிஸ் எங்கடா போனீங்க இத்தன நாளான்னு.. மழைக்கு பறந்து வந்த ஈசல் போல பொல பொலன்னு சிட்டில பொழக்குறீங்களே ஏன்- இன்னைக்கு என்கிட்ட தெண்டம் வாங்காம விடமாட்டீங்களான்னு மறுபடியும் தைரியமா மனசுக்குள்ல மட்டும் திட்டிகிட்டு குறுக்க பாஞ்சி போனா... சமாதானபுரத்தில் கடுமையான ட்ராஃபிக்...

தூத்துக்குடி வண்டி பாதில மரித்து நின்று ஆள் இறக்குறான்... மேட்டுத்திடல்
பஸ் வர்ரதும் போறதும் கூட சாலையை மறிச்சு நிக்க ஒன்றும் புரியாமல் நடுவில் சிக்கிய ஆம்புலன்ஸ் புண்ணியத்தில பின்னாடியே வண்டிய விரட்டி தப்பிச்சு சேவியர்ஸ் காலேஜ் வந்தா....
மணி 9=ஆக 3 நிமிடம் அடங்கோ... இன்னைக்கு 9 மணிக்க்கு ஒருவரை சந்திக்க வருவதாகச்சொல்லி இருந்தேனே.. ந்னு மறுபடியும் கிக்கரை உதைச்சால் கிக்கர் பலி வாங்குது ... வண்டி ஸ்டார்ட் ஆகலை..

பெட்ரோல் இருந்தாதானே ஸ்டார்ட் ஆகும் . நேற்று இரவே போகும் போது போட்டிருக்கலாம், ச்சே-ன்னு இருந்தது... காலையில போட்ரலாம்ன்னு விட்டது எவ்ளோ பெரிய தப்பா போச்சு .. இனி பல்க்குக்கு அந்தபக்கம் 3 கீ.மீ
இல்ல இந்தபக்கம் 2 கீ .மீ போகனுமே..ன்னு நினைத்ததும் தலை சுற்றல்.
பெட்ரோல் விலைய சொன்னால் மயங்கியே விழுந்துடுவேன்.

சரி சந்திக்கவேண்டிய நபர் முக்கியமென்பதால் ஆட்டோ பிடித்துப்போய் அவரை சந்திப்பதாகச்சொன்ன இடத்தில் காத்திருந்தால் ஆளைக்காணோம் சரி போனில் பிடிக்கலாம்ன்னு கூப்பிட்டா... காலையிலே பக்திப்பாடல் ... ஒழிக்க சிரிச்சுகிட்டே நாளைக்கு பார்ப்போம்ன்னு சொல்ல நான் எரிஞ்சுகிட்டே அடச்சே முதல்லயே போன் செய்து கன்ஃபார்ம் பண்ணிருக்கலாமேன்னு நொந்துகிட்டு கிளம்பினேன்

          ஆட்டோ ஏறி பல்க் போனா பெட்ரோலுக்கு பாட்டில் கேட்கிறார்... பட்டிலுக்கு எங்க போக வேற வழி இல்லாம ஒரு லிட்டர் அக்வாஃபினா- வாங்கி குடிச்சு ஆட்டோக்காரருக்கும் கொடுத்து அந்தக்கேனில் பெட்ரோலோடு மீண்டும் ஆட்டோ ஸ்டார்ட்..


பெட்ரோல் போட்டுட்டு ஆட்டொ ஸ்பேர் கொடுக்க பர்ஸ் ஆறுமாத கர்ப்பத்திலிருந்து மூனுமாத கர்ப்பம் ஆகி இருந்தது.. அடுத்தி ஏ. ஆர் லைன் பிடித்து வேலைக்கு கிளம்பினா கன்யாகுமரி எக்ஸ்ப்ரஸ் கடந்து போகும் நேரம் லெவல்கிராஸிங்கில் காக்க வைக்க...

கடுப்பின் உச்சியில் வெயிலில் நான்.. அதையும் தாண்டி ஆஃபிஸ் போய் வேலையெல்லாம் ஆரம்பிக்கலாம் என்றால் பவர் இல்லை... பத்து முதல் பணி ரெண்டு அடுத்து நாலு முதல் ஆறு... அடுத்து ஏழு முதல் ஏழரை- ந்னு இரண்டரை மணி நேரம் பவர் கிடையாது.

லேப்-டாப்பிலும் சார்ஜ் இல்லை வெட்டியா வெறிச்சு உக்கார .. மொபைலில் பாட்டைப்போட்டு வேளைய ஆரம்பித்து மாலை வரை கடந்து வீட்டுக்கு பிடித்தால் ஸ்டார்ட் பண்ணி அஞ்சே நிமிஷத்தில் மறித்து நிப்பாட்டும் சார்ஜண்ட் என்ன ஹெல்மெட் போடலையான்னு,,,,

என்னா சார் திடீர்ன்னு கேட்டா கமிஸ்னர் மாறிட்டாங்கப்பா..! அடுத்தவாரமெல்லாம் கண்டிப்பா போட்ருக்கனும் .. இந்த வார்ன் ரிப்போர்ட்டில் கையெழுத்துப்போட்டு கொடுத்துடு கிளம்பு... என அவர் ஃப்லோவில் தன் தேவையையும் மெல்லாமலும் முழுங்காமலும் சொல்லிட்டார்.

நேற்றுதான் ட்வீட்டில் கமிஸ்னர் கருணா சாகர்- பற்றியும் ஹெல்மெட் பற்றியும் ட்வீட் போட்டேன் இன்னைக்கு எனக்கே ஆப்பா..
வேற வழி சிக்கினது விடாக்கொண்டன்கிட்ட.. லைஸன்ஸ் எங்கன்னு அவர் நோண்டாத வரைக்கும் நல்லதுன்னு. பர்ஸோட மூணுமாத கர்பத்தை அபார்ஸன் பண்ணிட்டு வீட்டுக்கு வந்து மீண்டும். வீட்டுக்குள் வர்ரதுக்குள்

ஆறு மிஸ்டுகால்...  புது ஃப்ரெண்டுங்க நம்புங்க அவன் கிட்ட பேசிட்டு இரவுசாப்பாட்டுக்கு உட்காரும் போது ஏன் இத்தனை டென்ஸன் வாழ்க்கையில என்று நான் நினைச்சுக்கிட்டு இருக்கும் போது அம்மா காலையில் இருந்த அதே புத்துன்ணர்வு சுறுசுறுப்போடு ...உணவு பரிமாறுகிறார்..

எங்கிருந்து வருகிறது இவருக்கு இத்தனை எனர்ஜி.. ஸ்டாமினா.. இத்தனைக்கும் இவர் ரிலாக்ஸா உட்கார்ந்து டீ.வீ சீரியல் பெண்மணிகூட கிடையாது பொழுது போக்க.. காலை நாலு மணிக்கு எழுந்து காலைல் பம்பரத்தைக்கட்டிக்கொள்பவர் இரவு தூங்க மணி பணிரெண்டைத்தாண்டும் ஆனால் எப்படி முடிகிறது... இத்தனை புத்துணர்வு..

கேட்டுவிடலாமா ? என நினைக்கும் போது தண்ணீர் டம்ளர் முதல் கை துடைக்கும் டவல் வரை அத்தனையும் கச்சிதமாக டேபிளில் அதற்கான இடத்தை நிரப்பிக்கொள்கிறது.

 “அந்தந்த வேலையை அப்பப்போ சரியா செய்யனும்” - என முகத்தில் அறைந்து யாரோ சொன்னது போல இருந்தது. 

கவிதைக்காரனின்... காலைப்பொழுதின் ஊடல் கூட்டலாய்...



 தூக்கம் விட்டெழுந்து
காகிதப்பூவாய்
நீ உடுத்தி இருந்த
மேக ஆடையில்
சில வானவில்லை
மட்டும் கலைந்து...

வெளிச்சம் விரும்பாத
இரவுபட்சியாய்
கண்கள் கூசும் ஒளியில்
உன் தாமிர தேகம்
நனைந்து..

சட்டென்றொரு
யாரும் பாராமல் சிறு
சோம்பலை முறித்து
நிதானிக்கிறாய்..

உன் ஜன்னலில் வளரும்
க்ரோட்டன்ஸுக்கு
நீரூற்றும் சமயத்தில்
உன்னோடு சேர்ந்து
அதுவும் மொட்டு விட
எத்தனிக்கும்...

எதிர்வீட்டு மரத்தில்
சாளரத்தில் காலை
கீதம் சேர்க்க ஓயாமல்
கீரிச்சிடும் " டேய்ல் ஸ்பேரோ"..
என நீ செல்லமாய்
அழைக்கும் இரட்டைவால் குருவியை

பார்த்த சந்தோசத்தில்
மொட்டும் அகலப் பூத்திருக்கும்
உன் முகத்தில்
கண்களாய்..

சிற்றிடை நெளித்து
ஈரடி நடந்து..
தண்ணீர்க்கோப்பைக்கு
வெளியே
மீனாய்..

கைகளால்
அள்ளி எடுத்த
நீர்த்துளிகள் முகமெல்லாம்
சிதறடிக்கிறாய்..

பட்டெனத்தெரிக்கும்
நீர்த்துளிகளால்
நேற்றைய இரவின்
முத்தங்கள் படர்ந்த
கன்னத்தின்
இதழ் தீண்டலை
சமன் செய்கிறாய்...

இன்றைக்கோர்
சில்மிஷத்தின்
ஒத்திகைக்கு
களைப்பின்
ஒப்பனை
கலைக்கிறாய்..

ஓவியம் உந்தன்
ஒவ்வொரு அசைவையும்
ரசிக்கிறேன்..
கண்கள் திறக்காமல்
கட்டிலில் கிடந்தே..! -நான் *

நீ என்னென்னெ
செய்வாயென
நான் தினமும் காணும்
கனவாய் இவை தானே
என்னுள் தனக்கான
இடங்களை நிரப்பிக்கொள்கின்றன..!

கனவும் நிஜமும்
ஒன்றாகி ஒன்றிப்போனதும்
காலை -யோடு
இன்னோர் எச்சில் முத்தம்
பெற ஏங்க வைக்கிறாய்,,,!

வந்ததும் கேட்பாய்
“பாவி ” இதையெல்லாமாவா
கவிதைல எழுதுவீங்க என்று
கன்னத்தோடு செல்லக்கடி
கொடுப்பாய்..

கற்பனை கலைக்கும்
விதமாய்
அதோ நீ வரும்
சப்தம் கேட்கிறது
நான் மெல்ல தூங்குவது
போல் நடிக்கப்போகிறேன்...!






-கவிதைக்காரன் *GTM*

ஆதலினால் காதல் செய்ய அட்வைஸ் கேக்காதே...!







மச்சி.. பாலாஜி பேசறேண்டா. எப்படி இருக்க?

அடேய்… சொல்லுடா..

உனக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ். ஒரு ஃபிகர் எனக்கும் மடங்கிடுச்சு மச்சி.

நிஜமாவாடா? பார்த்து மடக்கி மடக்கி கூன் விழ வச்சிடாத.

போதும்டா உன் நக்கலு. இப்ப எனக்கு ஒரு ஹெல்ப்பு வேணும்.

அப்படி வா மேட்டருக்கு. என்ன உன் ஆளுக்கு நான் ஏதாவது தரணுமா?

கரெக்ட். ஆனா ஐடியா மட்டும் நீ தா. கொடுக்கிற வேலையை நான் பார்த்துக்கிறேன்.

உஷாருடா நீ. ஆளு எப்படி இருக்கும்? சுமாரா இருக்குமா?

அதெல்லாம் எதுக்கு? பர்த்டே கிஃப்ட் தரணும். அதுக்கு மட்டும் ஐடியா சொல்லு

இல்லடா. எப்படி இருப்பான்னு தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி சொல்லுவேன்

ம்ம். பொய்யெல்லாம் சொல்லல. இந்த ஊரிலே அவதான் அழகுன்னு சொல்லலாம்.

அட. அப்ப ஒண்ணு பண்ணு. ஒரு குளோப் வாங்கி பேக் பண்ணி “உனக்கான பரிசை உலகெங்கும் தேடினேன். கிடைக்கவில்லை. அதனால் உலகையே பரிசாக தருகிறேன்னு எழுதிக் கொடு.

இதெல்லாம் உன் பிளாகிலே நான் எப்பவோ படிச்சிட்டேன். நல்லாதானிருக்கு. வேற எதுவும் சொல்லு.

எனக்கு ஃபீல் வரணும்டா. அவள பத்தி சொல்லு

ஜீன்ஸ் போட்ட ஜாஸ்மிண்டா அவ. பழமையும், புதுமையும் கலந்த பதுமை.

கொஞ்சம் ஓவராத்தான் போற..ம்ம். ஒரு மொபைல் வாங்கி இளையராஜா பாட்டு இருக்கிற மெமரி கார்டோடு கொடு. நீ சொல்ற மாதிரி ஒரு ஃப்யூஷனா இருக்கும்.

சூப்பர் ஐடியா. ஆனா அவ ரகுமான் ஃபேன். சோ, வேற சொல்லு மச்சி.

சினிமா பார்ப்பாளா?

ம்ம். நிறைய

அப்போ சத்யம் FUEL CARD வாங்கி 2000 ரூபாய்க்கு ஃபில் பண்ணிக் கொடு. எப்போ சினிமா போனாலும் உன் ஞாபகம் வரும். உன்னையே கூட்டிட்டு போவா. நீ கொடுக்கிற காசுல பாதி நீ படம் பார்த்து கழிச்சிடலாம்.

நீ வேற மச்சி. அவ கல்யாண சிடியை கூட அவ திருட்டு சிடியா வாங்கித்தான் பார்ப்பா.

அடேய். என்ன பொண்ணுடா அவ?

அப்படி சொல்லாத மச்சி. நீ ஒரு தடவ பார்த்த… வேணாம்ப்பா. நீ ஐடியா மட்டும் கொடு.

என்னடா ஓவரா புகழுற. அவ்ளோ அழகா இருந்தா பேசாம ஒரு கிஸ் கொடுத்திடேன்.

இன்னும் அந்தளவுக்கு போகல மச்சி. எனக்கும் ஆசைதான். இருந்தாலும் அவ வாயால லவ்வ கன்ஃபார்ம் பண்ணிடட்டுமே.

அடங்கொன்னியா. இன்னும் அதுவே சொல்லலையா? அதுக்குள்ள மடங்கிடுச்சுன்னு சொல்லிட்ட இல்ல!

ஆயிடும்டா. நீ ஐடியா கொடு.

பெஸ்ட். ஒரு பிளாட்டினம் வித் டைமண்ட் மோதிரம் வாங்கு. அவ உன்னை லவ் பண்ணா அவளே போட்டு விட சொல்லுவா

வாவ். இதுக்குத்தாண்டா நீ வேணும். ஆனால் பிளாட்டிணம் மோதிரம் வாங்குற அளவுக்கு காசில்லை. வெள்ளி ஓக்கேவா?

அப்போ ஃபிகரும் இந்தளவுக்கு இருக்காது. ஓக்கேவா?

என்ன மச்சி? இதே ஃபீலோட வேற ஐடியா சொல்லேன். கொஞ்சம் சீப்பா

வாழைப்பழம் வாங்கி கொடு. சீப்பா இருக்கும்.

பிகு பண்ணாதடா. அவளுக்கு இந்த மாதிரி ஜாலியா பேசினா பிடிக்கும். கிரேசி மோகன் ஜோக்ஸ் எல்லாம் விழுந்து விழுந்து ரசிப்பா. அந்த மாதிரி ஏதாவது.

என்ன சொல்ற? அவளுக்கு மொக்க ஜோக்ன்னா பிடிக்குமா?

ஆமாம்டா. ஒரு நாள் யோகா பண்ணி உடம்ப குறைக்க வேண்டியதுதானேன்னு எங்கிட்ட சொன்னா. நான் உடனே குறைச்சிட்டேன். உடம்ப இல்லை, யோகா பண்றதன்னு சொன்னேன். 2 நாள் லீவ் போட்டு சிரிச்சா.

அடேய். உண்மையாவா? அப்ப அவளுக்கு கிஃப்ட் கொடுக்கிறது ஈசி. வாழ்க்கையிலே அவளுக்கு ரொம்ப பிடிக்க போற கிஃப்ட் இதுவாத்தான் இருக்கும்.

நிஜமாவாடா மச்சி? சொல்லுடா. என்ன கொடுக்கலாம்?

அவ பர்த்டே அன்னைக்கு கரெக்ட்டா 12 மணிக்கு நான் சொல்றத எஸ்.எம்.எஸ் அனுப்பு. உன்னை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டா.

என்ன அனுப்பணும்?

+91-999 4 220 250 - இதாண்டா என் நம்பர் இதைக்கொடு போதும்

ங்… உன்னைப் போய் ஐடியா கேட்டேன் பாரு. என்ன சொல்லணும்.

பொ…. நா… நீயெல்லாம் உருப்படவே மாட்டடா. வயிறெரிஞ்சு சொல்றேன். உனக்கு நல்ல சாவே வராதுடா..
நன்றி-கார்க்கி...டூ கார்த்தி...

Thursday, December 1, 2011

தமிழ்... அறிவோம்..

தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம்மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.

மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.


தமிழியல்

தமிழ்

மலையாளத் தமிழியல்

ஆங்கிலத் தமிழியல்

சிங்களத் தமிழியல்

சமசுகிருத தமிழியல்

கன்னடத் தமிழியல்

தெலுங்குத் தமிழியல்

துளு தமிழியல்

வங்காளத் தமிழியல்

மராத்திய தமிழியல்

இந்தித் தமிழியல்

பர்மியத் தமிழியல்

சீனத் தமிழியல்

அரபுத் தமிழியல்

மலாய் தமிழியல்

தாய் தமிழியல்

உருசியத் தமிழியல்

சப்பானியத் தமிழியல்

கொரியத் தமிழியல்

செர்மானியத் தமிழியல்

பிரெஞ்சுத் தமிழியல்

டச்சுத் தமிழியல்

போத்துக்கீசத் தமிழியல்

சுவீடிசு தமிழியல்

பாளித் தமிழியல்

பிராகிருதத் தமிழியல்

பிராமித் தமிழியல்

பாரசீகத் தமிழியல்

உருதுத் தமிழியல்

எபிரேயத் தமிழியல்



தமிழ்

செந்தமிழ்

கொடுந்தமிழ்

முத்தமிழ்

தனித்தமிழ்

நற்றமிழ்

துறை வாரியாகத் தமிழ்

தமிழிசை

நாடகத் தமிழ்

இயற்றமிழ்/இயல்தமிழ்

ஆட்சித் தமிழ்

சட்டத் தமிழ்

அறிவியல் தமிழ்

மீனவர் தமிழ்

மருத்துவத் தமிழ்

செம்மொழித் தமிழ்

வட்டார வழக்குகள்

அரிசனப் பேச்சுத் தமிழ்

கொங்குத் தமிழ்

யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்

மட்டக்களப்பு பேச்சுத் தமிழ்

மலேசியத் தமிழ்

பிராமணத் தமிழ்

முஸ்லிம்கள் தமிழ்

திருநெல்வேலித் தமிழ்

தஞ்சாவூர்த் தமிழ்

மதுரைத் தமிழ்

நாஞ்சில் தமிழ்

செட்டிநாட்டுத் தமிழ்

குமரிமாவட்டத் தமிழ்

கரிசல் தமிழ்

சென்னைத் தமிழ்

மணிப்பிரவாளம்

மலையாளம்

தமிங்கிலம்

ஜுனூன் தமிழ்




  • தமிழில் பெயர்க்கப்பட்டு 1723இல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டவிவிலியத்தின்முதல் நூலாகியதொடக்க நூலின் முதல் அதிகாரம்.
  • தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர்பகுதிகளில் "இங்க" என்றும், யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும்திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்றும் வழங்கும் சொற்கள் "இங்கே" என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது "இங்கணே" அல்லது "இங்கனே" என்பதன் மாற்றமும் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்பது "இங்கட்டு" என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். "கண்" என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: "Place, site; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)". கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் "அக்கட்டாலே போய் உட்கார்" என்று சொல்வதைக் கேட்கலாம். "இங்கன்" அல்லது "ஈங்கன்" என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப்பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இது ஒரே சொல்லே பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்கியதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும்.

    செவ்வியல் நூல்கள் என வரையறுக்கப்பட்டவை அனைத்தும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவை. தனித்தன்மை கொண்டவை. 41 செவ்வியல் நூல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
    தொல்காப்பியம்
    எட்டுத்தொகை

    நற்றிணை

    குறுந்தொகை

    ஐங்குறுநூறு

    பதிற்றுப்பத்து

    பரிபாடல்

    கலித்தொகை

    அகநானூறு

    புறநானூறு
    பத்துப்பாட்டு

    திருமுருகாற்றுப்படை

    பொருநராற்றுப்படை

    சிறுபாணாற்றுப்படை

    பெரும்பாணாற்றுப்படை

    முல்லைப்பாட்டு

    மதுரைக்காஞ்சி

    நெடுநல்வாடை

    குறிஞ்சிப்பாட்டு

    பட்டினப்பாலை

    மலைபடுகடாம்
    பதினெண்கீழ்க்கணக்கு

    நாலடியார்

    நான்மணிக்கடிகை

    இன்னா நாற்பது

    இனியவை நாற்பது

    கார் நாற்பது

    களவழி நாற்பது

    ஐந்திணை ஐம்பது

    ஐந்திணை எழுபது

    திணைமொழி ஐம்பது

    திணைமாலை நூற்றைம்பது

    பழமொழி

    சிறுபஞ்சமூலம்

    திருக்குறள்

    திரிகடுகம்

    ஆசாரக்கோவை

    முதுமொழிக்காஞ்சி

    ஏலாதி

    கைந்நிலை
    சிலப்பதிகாரம்
    மணிமேகலை
    முத்தொள்ளாயிரம்
    இறையனார் களவியல்

    மே 2010 தர அளவீடுகள் ஒப்பீடு - இந்திய மொழிகள்

    மொழிWikipediansOff count> 200 CharMean bytesLength 0.5KLength 2KSizeWordimage
    தமிழ்39823 k22 k332083%28%200 MB8.6 M15 k
    இந்தி45058 k35 k147642%11%213 MB13.3 M14 k
    வங்காளி(மே 2010)31921 k16 k153660%16%94 MB4.7 M9.4 k
    மராத்தி23129 k11 k85226%7%73 MB3.3 M6.1 k
    தெலுங்கு35845 k17 k112023%9%130 MB6.3 M10 k
    மலையாளம்45813 k12 k269984%34%97 MB3.8 M10 k
    கன்னடம்1768.6 k7.3 k449756%21%98 MB4.6 M7.8 k
    குசராத்தி7915 k14 k126734%5%50 MB2.9 M1.4 k
    பஞ்சாபி251.7 k0.479 k107120%11%6.7 MB0.335 M0.645 k
    சமசுக்கிருதம்394.0 k0.379 k2015%1%6.9 MB0.165 M0.125 k


    பல தர அளவீடுகளில் தமிழ் முதலிலோ, அல்லது இந்திக்கு அடுத்ததாகவோ உள்ளது. கன்னட விக்கியின் மொத்த பை'ட் அளவு 98 மெகா பை'ட் உள்லதை நோக்குங்கள். மலையாள விக்கி முன்னேறி இருந்தாலும் அத்தனை முன்னேற வில்லை. குசராத்தியும் நல்ல விரைவில் இப்பொழுது முன்னேறி வருகின்றது. சராசரி பை'ட் அளவும், 0.5கி அளவு உள்ள கட்டுரைகளின் விகிதமும், 2 கி.பைட் கட்டுரைகளின் விகிதமும் முக்கியம். தமிழின் முன்னேற்றம் நன்றாக உள்லது ஆனால் இதுவே சனவரியின் நிலை

  • சனவரி 2010 தர அளவீடுகள் ஒப்பீடு - இந்திய மொழிகள்

    மொழிWikipediansOff count> 200 CharMean bytesLength 0.5KLength 2KSizeWordimage
    தமிழ்33021 k21 k257482%25%148 MB6.2 M13 k
    இந்தி39353 k34 k127543%10%181 MB11.0 M11 k
    வங்காளி28521 k15 k140757%15%86 MB4.2 M8.7 k
    மராத்தி20327 k11 k80027%7%67 MB2.9 M5.0 k
    தெலுங்கு33644 k16 k91522%8%107 MB5.0 M8.8 k
    மலையாளம்41612 k12 k274084%35%93 MB3.5 M9.4 k
    கன்னடம்1587.8 k6.7 k280655%17%59 MB2.7 M5.2 k
    குசராத்தி7013 k11 k109920%5%37 MB2.1 M1.4 k
    பஞ்சாபி231.5 k0.338 k75916%8%4.1 MB0.230 M0.390 k
    சமசுக்கிருதம்363.9 k0.362 k1975%1%6.8 MB0.163 M0.080 k


    தமிழில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இந்திக்கு அடுத்தபடியாக தமிழ் உள்ளது. நேப்பாள மொழி, மணிப்புரி ஆகிய இரண்டையும் விட்டுவிட்டுப் பார்த்தால். இவ்விக்கிகளில் முறையே 15 பேரும் 20 பேரும் மட்டுமே இயங்கி உருவாக்குதால், தானியங்கி வழி செய்கிறார்களா எனத் தெரியவில்லை. கீழே இவற்றின் தரவுகளையும் தந்துள்ளேன்.


    எல்லாத் தரவுகளும் விக்கிமீடியாவின் தளத்துல் இருந்து எடுத்தவை. எடுத்துக்காட்டாக தமிழுக்குண்டான தரவுகளை இங்கிருந்து] பெறலாம்.