Friday, December 20, 2013

ஆட்டோகிராஃப்_2013 @Achi Poorani_(7)

இந்த முகநூல் வட்டாரத்தில் நீண்டநாட்களாக இவரைத் தெரியும்...

இவரது பதிவுகளைப் பார்த்ததும் நாலாங் கிளாஸ் படிக்குற பொண்ணு போட்டோவை ப்ரொஃபைல்ல வைத்துக்கொண்டு என்ன வில்லத்தனமா பேசுறாங்க இவங்க சங்காத்தமே வேணாம்ன்னு unfriend செய்துவுட்டு போய்ட்டேன்.

பின், தெருவிளக்கு-ன்னு ஒரு முகநூல் குழு தொடங்கப்பட்டது.

அன்றைய நாட்கள் மிகுந்த உற்சாகமிகு மனிதர்களையும், நட்பினர்களையும் , மனிதநேயம் மிக்கவர்களையும் எனக்கு அறிமுகப்படுத்திய களம் அது...

அப்துல் வாஹப், பிரபின் ராஜ், ரூபியா அர்ஸா, ராஜ் குமார், இரத்திகா மோகன் ,குமார் ரங்கராஜன், சுதாகர் பாண்டியன் ,மோகனப் ப்ரியா, தமிழ் அருவி, பிரபாகரன் க்ருஷ்ணா , ஷேர்கான் ஹமீது , விமல் ராஜ், வேலுச்சாமி , இப்படி பலர்பலர் ஐக்கியமான இடத்தில் ....

இவரையும்பார்க்க முடிந்தது. பின்னாளில் தான் மீண்டும் நட்பில் இணைந்தேன். ஆச்சி கஜா @ Achi poorani .

ஆச்சியை அம்மான்னு தான் கூப்பிட்டுப்பேன். அவங்க மலேஷியால இருக்கும் போது சுமார் அதுபது, எழுபது வயதுக்காரராக எண்ணி... ஹாஹா

ஆச்சியின் வரலாறு அதிரிபுதிரியானது. நீங்க பெண் , உங்களால் முடியாதுன்னு யாரும் சொன்னா அவ்ளோதான். டின் கட்டி தூக்கிடுவாங்க..

ரொம்ப தைரியம், தன்னம்பிக்கை,போல்ட்னஸ் இதெல்லாமே ஆச்சியின் தற்காப்பு ஆயுதங்கள். கிட்டப்போனா நக்கீரன் மாதிரி கீர் கீர்ர்ர்ர்தான்.

ஆனா இதையெல்லாம் தாண்டிய ஒரு மெல்லிய உணர்வுகளை படம்பிடித்துக்காட்டும் அன்பு அவர்களிடம் இருக்கும்.

அதுதான் அவங்களோடு என்னை, எங்களை நெருக்கமாக்கிச் சேர்த்தது.

எதாவது நிகழ்வுகளில் சந்திக்கும் போது என்னை "என் பையன்"-என்றுதான் அறிமுகப் படுத்துவார். மறுதலிக்கும் ஜனங்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை நாங்கள்.

இந்தத் தூய்மையான அன்பை சின்னச் சின்ன வார்த்தைக் கோர்ப்புகளால் சொல்லிவிட முடியாதுதான்.

ஆச்சி வீட்டுக்கு நேரம் கிடைத்தால் அப்பாயிண்மெண்டோடு ஆஜராவோம்.

நான்கு மணி நேரம் முன்னே டீ போடத் தயாராகி விடுவார். வந்து பத்தாவது நிமிடத்தில் தேனீர் கோப்பையைச் சுவைத்துவிட்டு பக்கத்து ஹோட்டலில் வாங்கியது தானேன்னு கிண்டல் அடிப்போம்.

முதல் முறை போனபோது... தோசை தேங்காய் சட்னி சாப்பிட்டுவுட்டு முதல் வேலையாக LIC பாலிசியை புதுப்பித்துக் கொண்டேன். ஹாஹா.... வாழ்க்கை அழகானது...

ஆச்சியோட குட்டிப் பொண்ணு அக்‌ஷிதா... அதாகப்பட்டது அக்‌ஷி -தான் அச்சியாகி ...ஆச்சியாக நிலைத்துவிட்டது.

ஆச்சி ஒரு இண்டர்நேஷனல் லைசன்ஸ் ஹோல்டர். எல்லா கார்களைப் பற்றிய விபரமும் அத்துபடி... கார்களைப் பற்றிப் பேசத்தொடங்கினால் அவர் கண்களில் உற்சாகம் அப்பிக்கொள்ளும்...

பேருக்குத்தான் அம்மாவும் பையனும் ஒருவரை ஒருவர் கலாய்த்து காலி செய்வதில் தடையே கிடையாது..

facebook-ல ஆச்சி போல ஒருத்தர் கிடையாது... அவரை சரியாப் புரிந்து கொண்டவங்க லிஸ்ட் வெகு சொற்பம்.

குதர்கமாகப் பேசி மனதைக் காயப்படுத்தி மன்னிப்புக் கேட்டு அன்பில் இணைந்தவர் லிஸ்ட் ரொம்ப பெருசு...

நேர்மையான அன்போடு இருந்தா அதே அன்பைத் திருப்பித்தரும் சுவறில் எறிந்த பந்து அவர்.

எசகுபிசகு பண்ணா பேட்டை எடுத்து தலையில் போடவும் தயங்க மாட்டார்.

பலர் ரகசியங்களின் பெட்டிச்சாவி... சத்தம் மூச்.

எனக்கு நட்பு ரொம்ப புடிச்சவிசயம்... உறவுகளைத் தாண்டியும் ...

ஆனா உறவாகக் கிடைத்த நல்ல நட்பு ஆச்சியோடிருந்தது...

என்றும் இருக்கும்...

Achi Poorani

#ஆட்டோகிராஃப்_2013_(7)







ஆட்டோகிராஃப்_2013@Karthi Keyan_(9)

மதுரை!
நேசத்தையும் பாசத்தையும் மனசு நிறைய பூசிக்கொண்டு தெற்குச் சீமையிலிருந்து அறிமுகமான நண்பன்.

குணத்திலும் நட்பிலும் கண்ணாடி மாதிரி... நாம் எதைக் காண்பித்தோமோ அதையே பிரதிபலிக்கும் கேரக்டர்.

ரெண்டு மூனு வருஷம் முன்னாடியே இவனைய் தெரியும் ... அதிகம் பேச்சுவார்த்தை இருக்காதுசந்திக்கும் இடத்தில் தித்திப்பாய் பேசிக்கொள்ளும் முகநூல் நண்பன்.

ஆனால் காலம் அத்தனையையும் மாற்றிப் போட்டுவிட்டது...
இன்றைக்கு மதுரைன்னு சொன்னாலே மனசில் முதலில் வந்து நிற்பது கார்த்திதான். கார்த்திகேயன்.
ஆமா! நானும் கார்த்தி , அவனும் கார்த்தி... ஒரு ரகசியம் சொல்லட்டுமா KARTHICK -ன்னு இந்த ஃபேஸ்புக்கில் ஒரு Group -ப்பே இருக்கு சுமார் ஐநூறு பேருக்குமேல் உறுப்பினரா இருக்கோம் யார் நிர்வாகின்னே தெரியாது

ரொம்ப காலமா போன் , முகநூல் தொடர்பிலே இருந்த நண்பன். நிறைய பேசுவோம். பயங்கரமான கலகல பேர்வழி...

ஈவுஇரக்கமே இல்லாமல் கலாய்த்து காலி பண்ணுவான். மதுரை அமேரிக்கன் கல்லூரி மாணவன் கேட்கவா வேணும்...

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பின் நேரில் சந்தித்துக்கொண்டோம்.மதுரையில் ஒரு நண்பர் திருமண்த்தில் கலந்துவிட்டு அப்படியே கார்த்தியோடு மதுரை வீதி உலாதான்.

அந்த ஒருநாள் இயந்திர உலகத்தின் சாவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு நட்பின் கூட்டணியோடு (கார்த்தி,கிரி,நானும்) அரட்டைக் கச்சேரிதான்.

"தோர் 3D" படத்திற்குப் போய் கண்ணாடி போட்டு நானும் கிரியும் தூங்கிட்டோம். "ஹாஹா கொடுத்த காசுக்குப் படம்பார்த்துக் கொண்டிருந்தான். "

வீட்டில் மூணாவது பையன். ஆக ரொம்ப செல்லம்... மதுரை வீதிகளில் கருப்பு பல்சரில்
எதிர்படுவான். கவனித்துக் கொள்ளுங்கள்.

கொஞ்சம் கேட்டால் நெஞ்சம் கொடுப்பான். இதை வேறு மாதிரி கூட சொல்லலாம்...

"உயிர் கொடுப்பான் தோழன்... "

கார்த்திக்கும் என் நட்பில் மிக முக்கியமானவர்க்கும் ஒத்துப்போகாதசூழல்.!

யாரைச் சாந்தம் செய்யன்னு வந்தபோது... விடு மச்சி நீ .....என் தப்பில்லைன்னு நம்புறேல்ல அதுபோதும்ன்னு விலகி நடந்தான். "அங்கே நிற்கிறே மச்சான் நீ... "

மனிதர்களைக் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்வதுதான் உண்மையான அன்பு...

கார்த்திய அந்த கலகலப்போடு ஏத்துகிட்டா... அவன் இன்னொரு தேவராஜ். (தளபதி மம்மூட்டி கேரக்டர்)

நாங்க பலநேரம் தேவராஜ்ன்னுதான் ஒருத்தரை ஒருத்தர் கூப்பிட்டுக்குவோம்

உன் நண்பன் யார்ன்னு சொல்லு உன்னைப் பற்றிச் சொல்கிறேன்னு யாரும் கேட்டா... தயக்கமே இல்லாமல் கார்த்தியை(யும் ) கை காட்டுவேன்.

நண்பேண்டா...

Karthi Keyan

@ஆட்டோகிராஃப்_2013_(9)










     



Thursday, December 19, 2013

ஆட்டோகிராஃப்_2013 @தமிழ் அருவி_(8)

இந்த ஆட்டோகிராஃப் எழுதத்தொடங்கியது முதல் எத்தனை புத்துணர்வான தருணங்களைக் கடந்திருக்கிறேன். பழைய நிகழ்வுகளைக் மீளெழுப்பி அதன் ஆதாரங்களின் ஸ்ருதியினோடு பயணிக்கும் சுகானுபவம் ரம்யம்.

நினைவுநாடாக்களின் சுழற்சியொலியில் இன்றைக்கு எழுதவிருக்கும் நபரை அதிகம் தெரிந்து வைத்திருக்க மாட்டீர்கள் உங்களில் பலரும்...

தெருவிளக்கு என்றொறு முகநூல் குழு!
குழுவுக்கு வெளியேயான நட்புவட்டமெல்லாம் மாமா , மச்சான் சகல-என்ற அளவில் தோளில் கைபோட்டு பயணிக்கும் போது ”தெருவிளக்கு” வேறொரு மாதிரியான உலகம்.

நிறைய அன்பானவர்கள். நட்புமிக்கவர்கள் , தமிழ்பால் காதல் கொண்டவர்கள். வரம்பு மீறிய பேச்சுக்களுக்கு இடம் தராதவர்கள்., நட்பின் அடிப்படையில் பிணைந்திருந்தவர்கள். பிறர் அந்தரங்கங்களில் மூக்கை நுழைக்காதவர்கள். யார் இவரென்ற ஆராய்ச்சிகளுக்கு இடமில்லாது நீங்கள் யாராக இருந்தாலும் அவ்வாறே உங்களை ஏற்றுக்கொள்பவர்கள், நல்ல காரியங்கள் செய்ய கரம் கோர்த்திருந்தவர்கள். இப்படி பலரும் புளங்கிய இடம்தான் ”விளக்கு” .

பெரிய பெரிய விவாதங்கள்! ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பு என்ற சமரசம் உலாவுமிடத்தில் அறிமுகமானவர் இவர்.

எந்த ஊர்? என்ன பெயர்? எதுவும் தெரியாது!

:தமிழ் அருவி!:
அவ்வளவுதான்.

அறிமுகமாகியபோது பெரிய ஒட்டுதல் இருந்ததில்லை...
யார் வம்பிற்கும் போகாத சாந்த சொரூபி.
சிலபல மாதங்களுக்குப்பின் தான், அறிமுகப்படலமே...

அப்போல்லாம் அவரை அருவியாரே!ன்னுதான் கூப்பிடுவேன்.
அவரோட எழுத்துப்பிழைகளை சரமாரியாக கலாய்த்துத்தள்ளுவேன்,
அவரோட நட்புவட்டம் ரொம்பச் சின்னது! ஆனாலும் ஆழமானது! அந்த சின்னவட்டத்தில் நானும் உள்ள நுழைந்துவிட்டது அவர் வாங்கி வந்த சாபமா வரமான்னு அவரைத்தான் கேட்கனும்,

அக்காவை- அக்க்ஸ் என்றும் தம்பியை- தம்ஸ் என்றும் அழைத்துக்கொள்ளும் “நவநாகரீக” (ஞே!) முறையை
அறிமுகப்படுத்தி வைத்தது நாங்க தான்!
நாளடைவில் அக்காவாகிப்போன அருவியார்.

குணத்தில் ரொம்பவே சாந்தம். அமைதின்னு
முன்னாடி சொன்னேன்ல....
அதெல்லாம் அப்படியே தண்ணி ஊற்றி அழிச்சுடுங்க...

ஆள் பக்கா சூரி, கோபம் வந்தா ருத்ரதாண்டவம் தான் (ஹாஹா சும்மா).
தமிழ்ல அவருக்கு ரொம்ப புடிச்ச வார்த்தை “யோவ்”.
ரொம்ப பழகினவங்க எல்லாரும் அவருக்கு (ஆண்) யோவ் தான்...

இவரைப்பற்றிய மேலதிக தகவல்கள் விக்கிபீடியாவில் தேடினாலும் கிடைக்காது. பேச்சுவழக்கு இலங்கை மாதிரி இருப்பதால் அநேகமாக இலங்கையைச் சேர்ந்த அயல்தேசத்துக்காரரா இருக்கலாம்
(அடிச்சு கேட்டாலும் நான் சொல்லமாட்டேன்  )

இப்படி என் கையை கட்டிப்போட்டுட்டு ஆட்டோகிராஃப் எழுதுன்னா என்னத்த எழுத? வேறு வழியில்லை..

ஆனால்
அருவி போலொரு அன்பான... நட்புக்கும் திறமைக்கும் மரியாதை கொடுக்கத்தெரிந்த ஒருவரைப் பார்த்ததே இல்லை.
அவரையே பார்த்ததில்லை என்பது கொசுறு தகவல்.
(ஸ்கைப்-தவித்து  ).

தனக்குத் தெரியாத விஷயத்தை
தெரிந்தது போல் காட்டிக்க மாட்டாங்க!
தெரியாதுன்னும் காட்டிக்க மாட்டாங்க ஹாஹா.
அப்படியே ஓரமா உட்கார்ந்து
வேடிக்கை மட்டும் பார்ப்பாங்க..

ஃபேஸ்புக் ஓனர் மார்க் லைக்  போடுபவருக்கு,
ஒரு லைக்குக்கு இவ்வளவுசம்பளம்ன்னு அறிவித்தால்
ஒரே நாளில் விண்டோவ்ஸ் ஓனரை முந்திடுவாங்க
அப்படி ஒரு லைக் சிகாமணி!

தமிழ் அருவி என்றொரு முகநூல் கணக்கிற்கு
அப்பாலான உலகில் அவர் ஒரு பெருமதிப்புடைய பெண்மணி! அது பிறருக்குத் தெரியாமல், வெளிக்காட்டிக்காமல் தன் குழந்தைத்தனங்களோடு இவ்வுலகின் நேசங்களை இணையத்தில்
சின்ன வட்டத்துக்குள் வடிவமைத்து ரசிக்கும் அவரை... அவராகவே ஏற்றுக்கொள்ளும் பிற நட்பினர் சிலரும் இங்குண்டு

அவர்களோடு நானும் ...
தம்பியாக...

(சென்னை வரும் போது ரெண்டுபேரைச் சந்திக்கனும்ன்னு சொல்லியிருக்கார். ரெண்டில் ஒருத்தர் நீங்களும்ன்னு சொல்லியிருக்கார்... பார்ப்போம் காலம் என்ன பதில் எழுதி வைத்திருக்குன்னு...)

தமிழ் அருவி

#ஆட்டோகிராஃப்_2013_(8)


             


  

                                                               




Tuesday, December 17, 2013

ஆட்டோகிராஃப்_2013 @Ivan Saranraj_(6)

நிச்சயமாகச் சொல்வதென்றால் கிரிதரனுக்கு முன்னதாக நேரில் பார்த்த முகநூல் நண்பன் யாரென்றூ கேட்டால் இவனைத்தான் சொல்லனும் 

சென்னைக்கு வந்திருந்தபோது அவனும் ஏதோ தேர்வுக்காக வந்திருந்தான்.

நான் சதீஷ் ரமேஷ் சரண் நால்வரும் தான் முதலில் சந்தித்துக் கொண்ட நன்பர்கள். 

கோவையில் அப்போது பணியில் இருந்தான் சரண். 
எங்க கூட்டத்திலேயே ரொம்ப நல்லவன் யார்ன்னு கேட்டா சரணைச் சொல்லலாம். 

அவ்ளோ கலாய்த்தாலும் சின்ன புன்னகையில் கடந்து போய்டுவான். அக்மார்க் நல்ல பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அப்படி ஏதும் இருந்தா அது எங்களோடு சேர்ந்ததாகத்தான் இருக்கும்.

சரணும் நானும் சென்னை கோவைன்னு பைக்கில் ஊர்சுத்தியிருக்கோம். அதெல்லாமே கொண்டாட்டமான தருணங்கள். 

பசங்களூக்கு ஒரு பாதுகாப்பு வளையம் இருக்கும். அது என்னன்னா 

மாமா,மச்சான்னு கூப்பிட்டுக்குவாங்க ஆனா! இந்த மாப்பிள்ளைன்னு கூப்பிடுவதற்கு கொஞ்சம் சங்கோஜப்படுவாங்க...

எங்க ஜில்லாவுலயே அதை உடைச்சது சரண்தான்.  

"மாப்ள டேய்" -இப்படித்தான் ரொம்ப மரியாதையா கூப்பிடுவான். ரொம்ப மரியாதை தெரிஞ்ச புள்ளையாண்டான். 

முன்னாடில்லாம் அடிக்கடி முட்டிக்குவோம். பத்தாவது நிமிசம் ஒட்டிக்குவோம். 

எங்க friendship எல்லோரிடத்திலும் அதி உன்னதமான நம்பிக்கையும் ஒட்டுதலும் இருக்கும். ஆனா அது அவரவர் வரைக்கும் தான். 

இதை விளக்கமா சொல்லனும்ன்னா போனவாரம் சரண் சென்னை வந்திருந்தப்போ ரூம் புக் பண்ணும் போது நான் தான் அட்ரஸ் ஃபில் பண்ணினேன். அப்போதான் அவன் ஐடி-யில் "பாலக்காடுன்னு" போட்டிருந்தது.

அதுவரைக்கும் அவன் சொந்த ஊர் எதுன்னே தெரியாது... 

சரண் பத்தி ஒரு வார்த்தையில் சொல்லனும்ன்னா ....!

தமிழ், மலையாள, தெலுங்கு கன்னடப் பெண்கள் எல்லாம் தயங்காமல் ராக்கி கட்டக் கூடிய ஒரு அக்மார்க் ஆஞ்சநேயர்.  

எங்களோட என்சைக்கிளோஃபிடியா சரண்தான். எல்லா வீடியோ புகைப்பட ஆதாரங்களும் இவன் டேட்டாபேஸ்ல இருக்கும் 

பேதங்கள் ஏதுமின்றி 
பேரிரைச்சலோடு ஆரவாரம் செய்யும் ஆயிரம் வாரணங்களாய் ஆண்டுகள்
கடந்து நட்போடிருப்போம் ... வா நண்பா... 

Ivan Saranraj

@ஆட்டோகிராஃப்_2013_(6)

கொடைக்கானல் சுற்றுலாவின் போது ...

காதல் தோல்வியில் ரயிலுக்கு முன் பாயும் முன்பு எடுத்த படம்.


(அந்த ரயில் விபத்துக்குள்ளாகி பயன்படுத்த
முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டது
லேசான சிராய்ப்புகளோடு
சரண் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்)




                                                          பேதங்கள் ஏதுமின்றி 
                   பேரிரைச்சலோடு ஆரவாரம் செய்யும் ஆயிரம் வாரணங்களாய் 
சரண்ராஜ்

Monday, December 16, 2013

ஆட்டோகிராஃப்_2013 @DrJeya Bharathi_(5)‬

"நான் : பாஸ் நான் கொஞ்சம் கூச்ச சுபாவம். பெண்கள்கிட்டே எனக்கு பேசவே வராது...
பிரபாகாரன் : அட என்ன சின்னப்புள்ளத்தனமா... போய் கேளுங்க புலவ்ஸ்.:

இப்படித்தான் ஒரு விபரம் தெரிந்து கொள்ள அவரிடம் பேசவே தயங்கி நின்றேன்.
பொதுவாகவே நாமதான் கூச்ச சுபாவமாச்சே
ஒரு விபரம் கேட்பதற்காக அலைப்பேசியிருந்தார் அந்த தோழி.
அது பற்றிய தெளிவிற்காக நேரில் வரமுடியுமா என்றார்.

நேரிலா ...ஆனா நான் திருநெல்வேலியில்லா இருக்கிறேன்னு தயங்க...
அட நான் மட்டும் என்னவாம்! நானும் திருநெல்வேலிலதான் இருக்கேன்.
போஸ்ட் ஆபீஸ்க்கு வாங்கப்பா... கிர்ர்ர்ர்...( இணைப்பு துண்டிக்கப்பட்டது)

ஆனாலும் நான் போஸ்ட் ஆபீஸ் போகவேயில்லை... ஹஹ..
பின் மாலையில் என் கடைக்கு அழைத்திருக்க அங்கே தான் அவரை முதன்முதலில் சந்தித்திருந்தேன்.

சின்ன பயம். நண்பன் வேறு கூட இருந்ததால் வந்தவரிடம் விபரங்களை கொடுத்துவிட்டு
"ஆங்... நன்றி ... பார்க்கலாம்ன்னு ஓடிட்டேன்.ஹஹ..
என்னடா இவன்னு நினைத்த்திருப்பார்... என் அலுவல் ரயில்வே கேட் அருகே அமைந்திருந்தது அப்போது
ரயில்வே ட்ராக் போட்டதால் ரயில் கடக்கும் வரை காத்திருந்தார். அந்த இடைவெளியில்தான்
பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

அவர்தான் . Dr.ஜெயபாரதி. 2012-ம் ஆண்டு தொடக்கமாக இருந்திருக்கும்... அது...
அப்படித்தானே டாக்டர். எனக்கு அப்படித்தான் நினைவு...

சில நாட்கள் கழித்து மீண்டும் சந்தித்தபோது வெறும் கையில் அனுப்பக்கூடாது என்று
மூன்று ஆப்பிள்பழம் வாங்கிக்கொடுத்திருந்தேன்.

மூணு ஆப்பிளை வாங்கிகொடுத்துவிட்டு மூவாயிரம் முறை சொல்லிக்காட்டிட்டான் யா...ன்னு சொன்னாலும் சொல்லியிருப்பாங்க... ஹஹா
ஒரே மாவட்டத்துக்காரர். (தி லி)
கூப்பிடு தூரத்தில் எம் அலுவலகமும். அவர் படிக்கும் மருத்துவமனையும்...

அப்போதிலிருந்து இதோ இன்றைக்கு வரைக்கும் டாக்டர்... டாக்டர்தான்.

முன்னாடியே facebook-ல் அறிமுகமிருந்தும்... நேர் சந்திப்பில் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது... ஹஹ அது ஏன்னே தெரியவில்லை இப்போதுவரைக்கும்...

டாக்டர்கிட்ட பொய் சொல்லக்கூடாதுன்னுவாங்க... நான் இவங்ககிட்ட சொல்லவே மாட்டேன். மீறி சொன்னாலும் மாட்டிக்குவேன். ஒவ்வொரு வார்த்தையையும் கூர்மையா கவனிப்பாங்க தப்பிக்கவே முடியாது...ஆகவே கூடியமட்டும்... மௌனவிரதம் இருந்துடலாம்..ஹஹ..

ரொம்ப அன்பானவங்க..
அதைவிட அக்கறையானவங்க.. நீளமான அறிவுரைகள் நிறைய கேட்டிருக்கேன். கொஞ்சம் திருந்தவும் செய்திருக்கேன்னா பார்த்துக்கோங்களேன்.

அவர் திருமணத்தில் நானும் கிரியும், நானும் பிரகாசும் போய் கலந்துவிட்டுவந்தோம்... சொன்னமாதிரியே பிரியாணி போட்டு கொடுத்தவாக்கை காப்பாத்திட்டாங்க..

2012-ஜனவரியில் என் பிறந்தநாளைக்கு " என் படத்தை ஓவியமாக வரைந்து கொடுத்தார். இன்னும் அப்படியே பத்திரமா வைத்‌திருக்கிறேன். சொல்ல மறந்துட்டேனே... பிரமாதமான ஓவியர்.

2014-ஜனவரியில் கூட எனக்குப் பிறந்தநாள் வருது டாக்டர்... ஹாஹா சும்மா ஒரு நினைவுறுத்தல்...

அவரது ஒவ்வொரு பிறந்தநாளுக்கு நான் கவிதை எழுதி போஸ்ட் பண்ணிடுவேன்.

போன முறை மறந்துட்டேன். போன் போட்டு திட்டுனாங்க... ஹஹ அடிச்சுபுடிச்சு வந்து எழுதியிருந்தேன்.

எங்க அப்பா மாதிரி ஒரு அக்கறையான கண்டிப்போடு என்னை வழிநடத்துற...
எங்க ராஜி... (ஜெயராஜி என்ற ஜெயபாரதி ) டாக்டரின் அன்பினைச்சுமந்து...
இதோ 2014...ம் ஆண்டை நோக்கி...

DrJeya Bharathi

‪#‎ஆட்டோகிராஃப்_2013_5‬
copy of Ravivarma..Fruit lady -JB 




எனக்குப்பிடித்த ஓவியம் -JB 

முதல் ஓவியம்  -JB  



ஓவியங்களின் ஓனர் ... 

Saturday, December 14, 2013

ஆட்டோகிராஃப்_ 2013 @Subasree Mohan (4)

அது ஒரு பின் மாலைப்பொழுது...
உன் நம்பர் கொடுடா கண்ணா என்ற குறுஞ்செய்தியைப் பார்த்ததும்...  
தயக்கமே இல்லாமல் கொடுத்துவிட்டேன்.  அடுத்த அரை வினாடியில் அழைத்திருந்தார். 

எடுத்துப்பேசிய குரலில் தான் எத்தனை வாஞ்சை...
அன்றைக்கு முன்மாலையில் எழுதியிருந்த ஒரு கவிதை பற்றிய
என்னுடைய கருத்தில் முரண்பட்டு அதை தெளிவுபடுத்தவும்... பின்னே அன்பும் அக்கறையுமான  விசாரிப்புகளையும் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு... இதெல்லாம் நடந்து 

சில மாதங்கள் கழித்து சென்னை வந்திருக்கிறேன் என்றும்... நீயும் வா கார்த்திக் என்றும் அழைப்பு விட்டிருந்தார். என்னால் அவரைச் சந்திக்க முடியாததின் காரணமாக சென்னையிலிருந்த அண்ணனை அவரைச் சந்தித்துவரச்செய்தேன். 

அதன் பின் நாட்களின் அந்த சந்திப்பை தவறவிட்டதன் வருத்தங்களை பூர்த்தி சேயும் விதமாக இதுவரைக்கும் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் அவரோடு நாங்களெல்லாம் நேரம் செலவிடாமல் இருந்ததில்லை... 

அன்புத்தம்பிகளாய் எங்களை அரவணைத்து அன்புசெய்யும் அந்த நல்லுள்ளம் சுபஸ்ரீ அக்கா.. (சிபி மாம்ஸை... இங்கே பிரித்தெழுதத தேவையில்லை என்றே நினைக்கிறேன்}.

 சில நாட்கள் முன் உடல்நலமின்மையால் அவதியுற்ற பொது அவர்களுக்கு ஒரு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அந்த கடிதத்தின் பதில் ஒற்றை வார்த்தையில் முடிந்துவிட்டதுதான் அதனுள் எத்தனை அன்பை புதைத்து வைத்திருப்பார் என்பது எனக்கு மட்டும் வெளிச்சம்...    

அந்த கடிதம்
    
"கடந்த சில நாட்களாகவே கவனித்து வருகிறேன். உடல் நலக்குறைவின் தீவிரத்தில் ரொம்பவும் வருந்திப் போய் காணப்பட்டிருக்கும் உங்களை... அதே நேரத்தில் உங்களைச் சுற்றிஇருப்பவர்கள் எத்தனை பிரயர்த்தனமாய், அன்பினோடு உங்களை கவனித்துக் கொள்கிறார்கள் என்பதையும் கூட உடல் நலம் என்பது பெரிதாய் ஒன்றுமில்லை அக்கா... மனதை இலகுவாக வைத்துக்கொள்ளுங்கள்.
மருந்துகள் செய்யாததை மனிதர்களின் அன்பு சாதித்துவிடும்தானே...
ஒரு மனிதன் மீது எல்லோரும் அன்பு பாராட்டுவதென்பது அத்தனை எளிதாய் சாத்தியமில்லாதது.. நீங்கள் அத்தகைய மனிதர். உள்ளத்தின் பேரில் பொங்கும் அன்பின் ஆர்ப்பரிப்பால் எத்தனை மனிதர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறீர்கள்... 
எளிதில் அன்பை பகிரும் உங்கள் குணம் இங்கு யாருக்கு தாராளம். விரல்விட்டு எண்ணத்தொடங்கினாலும். சுபாவினைப் போல் சுபா ஒருவர்தான்.
உங்களுக்கு கொஞ்சமும் மாற்றில்லாதவர் மோகன் மாமா... அவரைப் பிரித்துப்பார்த்தலரிது.. 
மங்கோலியா சென்று வந்தது முதல் மிகுந்த களைப்பினோடும், வீசிங் தாக்கத்தினோடும்இருக்கும் உங்களை குழந்தைபோலத் தாங்கும்... பலரையும் அப்படித்தான் பார்க்கிறேன். இவர்களை நீங்கள் அடையப் பெற்றதும் அவர்கள் உங்களை அடையாளங்கண்டதும் வரம்... 
இந்த ஓய்வு உங்களுக்கு தேவையானதாக இருக்கட்டும் . அவ்வாறே நானும் நினைக்கிறேன். நதி கிளைகளோடு சங்கமித்து பெரும் ஓட்டமெடுக்கும் போதும் அணைபோட்டுக் கொஞ்சம் தடுப்போமில்லையா..அத்தகையது இந்த ஓய்வு.. 
இந்நேரத்தில் எத்தனை அன்பானவர்களை நீக்கள் பெற்றிருக்கிறீர் எனப் பெருமை பட்டுக்கொள்ளுங்கள் உங்களோடு சேர்ந்து நானும் அதையே சிந்திக்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன் ஒரு மனிதன் மீது எல்லோரும் அன்பு பாராட்டுவதென்பது அத்தனை எளிதாய் சாத்தியமில்லாதது. நீங்கள் அற்புதமான அன்பின் குழந்தை ...
இச்சிறு உடல் களைப்பு உங்களை ஒன்றும் செய்திடாது...
மதகுகள் திறக்கும் போதுசீறிப்பாயும் வெள்ளமாய் பிரவாகமெடுத்து வாருங்கள்...
அணைக்கு மறுபுறம் கிடக்கும் களைகள் எல்லாம் வெள்ளத்தின் வேகத்தில் காணாது போகும் .
எப்போதும் உங்கள்  தம்பி..."

      எங்கள் எல்லோரின் மேடைகளையும் எங்களுக்கு முன்னே கட்டமைக்க வலியுறுத்தும் அன்பும், பரிவும்தான் உங்களோடு எங்களை சேர்த்து கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது..  காலத்தின் சுழற்சியில் ஆண்டுகள் நீங்கிபோனாலும் உங்கள் அன்பின் சரணாலயத்தைத் தேடி வரும் வேடந்தாங்கல் பறவைகள் நாங்கள்....

Subasree Mohan

#ஆட்டோகிராஃப்_ 2013





அன்பிற்குண்டோ அடைக்குந் தாழ் 





ஆனந்த தாண்டவம்











பி.சி.ஸ்ரீராம் -கேமிராவை எடை பார்த்த பொழுது க்ளிக்கியது 




சியர்ஸ்.... அக்க்ஸ் 


சீனாவில் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் போது... க்ளிக்
(விசிறி சின்னம் )

ஆட்டோகிராஃப் 2013 @Prakash Sona (3)_

அது ஒரு முகநூல்குழு... சிற்சில விவாதங்களில் அறிமுகமானோம்.

பொருள் பொதிந்த பேச்சு... யாரிவன் என்று கவனிக்கத்தக்க கண்ணியம்.

பெரும் இடைவெளிக்குப்பின் அரட்டையில் பேசிக்கொடோம். அழைப்பு எண்களை பரிமாறிக்கொண்டோம்.

ஒருநாள் திரு.ஷேர்கான் ஹமீது அவர்களோடு சென்னையில் எங்கள் நண்பர்கள் எல்லாருமாய்ச் சந்திப்பதாக திட்டமிட்டுக் கொண்டோம்.

சென்னையில் வசிக்கும் நண்பர்களையும் அழைக்கலாம் என்றதும் முதலில் சுழற்றியது பிரகாஷின் எண்ணைத்தான்.
நட்புவட்டத்தில் என்னோடு மட்டும் அறிமுகமாகி இருந்தவன். (பேச்சளவில்) சந்திப்புக்கு நான் வரும்முன்னே... வந்து கலந்து எல்லோரோடும் ஐக்கியமாகிவிட... வழக்கம் போல நான் லேட்.

அதன் பின் அதிரிபுதிரியான அந்த கலாய்ப்பும்,சந்திப்பும்
எங்களை பிணைத்துவிட... இதோ இன்னும் தொடர்கிறது...

எங்க ஊர்க்காரன் .  (திலி)
பெரும் தமிழ்ச்செருக்கு பிடித்தவன். இலக்கியம் இலக்கணம் எல்லாம் பேசுவோம். முன்பெல்லாம் எந்த புத்தகத்தைப் படித்து முடித்ததும் அதைப்பற்றிய நீண்டதொரு உரையாடல் இருவருக்குமிருக்கும்...

ஒரே தடத்தில் சிந்திப்பவர்களாதலால் இவன் வாதங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும்.

இன்றைக்குவரைக்கும் பெரும் மதிப்புடைய நட்பினுக்கு உரியவன்...

வேறென்ன சொல்ல பிரகதீஷ்வரன்... பெரியகோவில் போல என் நண்பன் பிரகாஷின் உள்ளமும் பெரிது...

இவன் சோகப்பட்டு ஒரே ஒருநாள் மட்டும் உடனிருந்து பார்த்திருந்திருக்கிறேன்.
இனியெப்போதும் அதுபோலொருதருணம் வாய்க்காது நண்பா...

என்றென்றும் நட்புடன்..

பிரகாஷ் சோனா

#ஆட்டோகிராஃப்_2013








ஆதி மற்றும் பிரகதிஷ்வரன் @பிரகாஷ் 


அத்திப்பழம் சிவப்பா? தன்  அத்தமக சிவப்பா? -ஆராய்ச்சியின் போது எடுக்கப்பட்ட படம்.




சின்னதா ஒரு ஹைக்கூ...


Friday, December 13, 2013

ஆட்டோகிராஃப்_2013@ Giridaran Giri (2)

அலுவல் வேலைகள் தவிர்த்து விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தேன். சதீஷ் "வா உனக்கு ஒரு நண்பனை அறிமுகப்படுத்துகிறேன் " என்று சொல்லி அமைந்தகரை Amba Skywalk அழைத்துப்போய் இருந்தான் அங்கேதான் கிரிதரனோடு முதல் சந்திப்பு... 

அதற்கும் முன் தொலைப்பேசி உரையாடல்களில் பேசியிருக்கிறோம். நாங்கள் ஒரு பதினெட்டு பேர் இருப்போம். மிக நெருங்கியவட்டத்தில் ஒரு பதினோரு பேர். கான்ஃப்ரன்ஸ் கால் போட்டு அரட்டை அடிக்கத்தொடங்கினால் ஊரே தூங்கும் ஜாமத்தில் தான் போனைக் கட்செய்வோம். 

இதோ இவனோடும் மூன்று வருடம் கடந்து போய்விட்டது. கிரி. அந்த புன்னகை ஒன்று போது முழுசுயவிவரத்திற்கும் ஒற்றை விளக்கம் கொடுக்க. எதிரி என்றாலும் இவன் காட்டும் பொறுமையும், அன்பும் யாரிடமும் பார்த்ததேயில்லை.. 

அப்போ டீம்ல எல்லோரும் மச்சான்ன்னு கூப்பிட்டுகொண்ட போது கிரியை மட்டும் ஒட்டுமொத்தமாய் மாமா என்றழைத்தோம். அதுவே  நிரந்தர உறவுஆகிவிட்டது.அண்ணன் திருமணத்திற்கு ஊருக்கு வந்தவனை ஏரியா சிறுவர் முதற்கொண்டு. உரிமையாக மாமா என்றழைக்க நெகிழ்து போனான். 

கிரி வீட்டிற்குப் போய் அங்கேயும் மாமன் தான். அவங்க அம்மா வித்யாசமா பார்த்து ரசிச்சாங்க..ஹஹ(கிரி அம்மா தோசை வார்த்தாங்கன்னா கணக்கு வழக்கில்லாமல் உள்ளே இறங்கும் அப்படி ஒரு கைப் பக்குவம்) 

நட்பில் இணைந்தபிறகு மதுரை,கொடைக்கானல், பாண்டிச்சேரி,திருச்செந்தூர்,சங்கரன்கோவில்,திருநெல்வேலி, மாமல்லபுரம் சென்னைன்னு ஒன்றாக சுத்தியிருக்கோம். 

நெருக்கடியான தருணங்களில் இரண்டு பேரும் மெரினா கடற்கரை படகில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருப்போம். ஒரு பரிசுத்தமான நட்பு அந்த கடற்கரையின் எல்லா இரைச்சல்களையும் விழுங்கிவிட்டு அமைதியைக் கொடுக்கும். 

கொண்டாட்டங்கள் மிகுந்த இவனின் முகத்தைத் தான் உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்குப் பின்னால் காயங்களை மறைத்துக்கொண்டுகாற்றுக் குதிரையாய் திரியும் இன்னொரு கிரியை எனக்குத் தெரியும். 

உயிர் கொடுக்கும் நண்பன் கிடைப்பது கொஞ்சம் கஷ்ட்டம்தான். உயிர் கொடுக்கத்தகுதியான நண்பன் கிடைப்பது மிக மிக அரிது . கிரி அப்படியானவன் எனக்கு... 
இதோ. அவன் நட்பினையும் சுமந்து நான்காம் ஆண்டுக்கு பயணமாகிறேன்.

Giridaran Giri
ஈடு இணையற்ற மார்பிங் வேடத்தில் கிரிதரன் 


கிரிதரன் 


யானை கிரிதரன் அவர்களுடன் ஆசீர்வாதம்
பெற்றுக்கொண்ட போது எடுத்த படம் 
உலக நாயகனுடன் உள்ளூர் நா யகன்
(மேர்ஜ் செய்யப்படவில்லை என உறுதி அளிக்கிறோம்)
 கடுமையான போட்டோஷாப்
வேலைகளுக்குப்  பின் கிரி .

ஆட்டோகிராஃப் 2013 @Pravin raja (1)


பார்க்கவும் பழகவும் பரம சாது. ரொம்ப அன்பானவன் . ஊரு கன்னியாகுமரி . இதோடு மூன்று வருடம் கடந்து நான்காவது வருடமும் வரப்போகிறது.. 

நல்ல நண்பன். ஏதாச்சும் தப்புப்பண்ணிட்டு சின்னப்புள்ளை மாதிரி முன்னாடி வந்து நிப்பான். தாறுமாறா திட்டுவேன.
நீ திட்டு சகல உன்னைவிட்டா யாருக்கந்த உரிமை இருக்குன்னு சிரிச்சுகிட்டே சொல்வான். 

குணத்திலே தங்கம். நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில் பொண்ணு எடுப்போம்ன்னு பேசிக்கொண்டது இன்று வரைக்கும் சகல-ன்னுதான் கூப்பிட்டுப்போம். 

சமீபகாலனா ஆள் அடிக்கடி காணாமல் போய்டுறான். லவ்வுல சிக்கிட்டான் போல...
இவன்கிட்ட உள்ள கெட்டப்பழக்கம் சுமார் நூறு , நூத்திபுப்பத்தஞ்சு லவ்வு பண்ணிட்டு ஃபெயிலியராகிட்டேன்னு பாட்டுப் பாடியே கொல்வான். 

எதையும் தாங்கும் இதயமா மாறி இவன் நட்பை கையிலெடுத்து கடந்து கொண்டிருக்கிறோம்.

வீட்டில் பொண்ணு பார்க்குறாங்க (2013 டிசம்பர்-ல் எழுதுகிறேன்) சீக்கிரமே டும்... டும்.. டும்... இருக்கும்.! வாழ்த்துக்கள் சகல...

Pravin Raja

#ஆட்டோகிராஃப்_2013

வயதுக்கு வந்த
போது  எடுத்த படம் 
Zambia  ( kariba ) -வில் பயணத்தின் போது 


பரத நாட்டிய வகுப்பில்



பிரவின் 
ரொம்ப தேடாதீங்க  இதில் பிரவின் இல்லை... இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாதுதான்.



Sunday, December 8, 2013

ரௌத்திரம்

சப்தமிடாத ஓர் ஊமை மௌனம்... உள்ளிருந்து எண்ணங்களை உருட்டும்..

போதிமரம் தேடிச்செல்லும் ஞானவாக்குகள் குப்பைத்தொட்டியெங்கும் இரைந்து கிடக்கும்

வேற்றுகிரகம் போலே சுற்றியிருக்கும் தொடர்பில்லாத மனிதனை தற்செயலாயேனும் கவனிக்கத் தோன்றும்

அடுத்தது என்னவென்ற கேள்விகள் தாகத்தைக் கொடுக்ககாலிக்
குடுவைகள் எக்காளமாய்ச் சிரிக்கும்.

கவனமாயிறுவென்னும் கருணைப்பட்டோர் வாக்குகள் போலானதோர் பசி தீர்க்கும் மந்திரம் வேறில்லை...

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

இச்செகத்தில் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

பாரதி மெல்ல மெல்ல உள்ளிருந்து ரௌத்திரம் விதைக்கிறான்.. கூச்சலிட்டமனம் அமைதிப்பட்ட குளமாகுது!

அதன் கள்ள மவுனத்துக்கடியில் ஏதுகுடியிருக்குதென்று யாரறிவார்.

-கவிதைக்காரன்.

Thursday, November 21, 2013

குலம்வளர்க்கச் சேராயோ...


பூத உடல் நோகும் கண்ணா...
நாதன் காண ஏங்குவதில்...

காதல் வந்து தேங்கும் நெஞ்சம்
காத்திருந்தும் காலமென்ன... 
ஆதலினால் வந்துவிடு ஆவிபற்றிக் கொண்டுவிடு

ஊதல் வந்து வீசுதுகாண்
உயிரின் சப்தம் மாயுதல் கேள்..

ஏனுனக்குப் புரியவில்லை
இதுவரைக்கும் பதிலுமில்லை...

கோமறுத்த கன்றினைப் போல் கோதை உள்ளம் கனன்றதே பார்....

பார்த்திபன் தோள் கொண்டவனே பாவைதேடி வாராயோ...

ஊழிநிறங் கொண்டவனே
உனது மாரில்ச் சாயேனோ

ஆதிஷேசன் மீது ஆடும்
ஆநிறைக் கோனே...

என் நாதமென்னும் துகில் விரித்தேன் தாவி ஓடிவா...

உன் கூர்விழியால் குமைந்த பெண்ணை கூதல் வந்து வீசும் முன்னே
குலம்வளர்க்கச் சேராயோ...

- கவிதைக்காரன்

Sunday, November 17, 2013

விடிதலுக்கேங்கினேன்... நீ வரத் தாங்கினேன்...



ஏன் மணிவண்ணா..
என்மீதிரக்கமில்லையா..
பால் மருவும் வெண்கண்ணா
விட்டு தொலைவு போகிறாயெதற்கு...

தீப்பற்றிய மெழுகாய் என் உளம்
உருகி உனைத்தேடித் தேயுது பாராயோ!

அரையணி தானவிழ
உடல் ஒளி தான் சிறிய
வளைகள் வழுக்கி விழுந்தனவே..
வந்தெனை நீயும் அணைத்திடுக...

மார் உயர்ந்தெழுந்து வாய் விம்மிடும் மங்கை
மனத் துயர் பார்க்கும் விழிகளை ஏங்கி ஏங்கி உயிர்த்தேயுதே...

தோங்கு மரமதில் வாங்கும் பூங்குயில் ராகம்
உன்பெயரெழுதி எனை மேயுதே...

பொழுது சாய்ந்து இருள் கம்மி கரைகிறது...
உளமோ உனை எண்ணி மருளுதே...

தூரமாய் உன் நிஜம்
வருவதாய் நோக்கினேன்...
ஆநிரைக் காண்கிறேன்
மாமணி கேட்கிறேன்
கோகலே நாகுகள் உகளுமன்றோ...
என் சொல்லி உய்குவேன் அவனையின்றி...

தோழி மேனியின் வெம்மையும் எனை இகழுமடி...
தோது ஏது இனி மாயன் வரவில்லை.
மாது நான் என்ன செய்கவோ
இருள் மிகச் சூழ்ந்தது
பனிப்புகை ஓங்குது..

அன்னைத் தோழியர்
அவரவர் துயிலில் தான் விழுந்து அயர்ந்து தூங்கவே...

அந்தகாரத்தின் ஆட்சி எனைக்கொய்ய
உன்னைக்காணாது
அயர்ந்த விழியது இன்னும் உயிர்பெற்று ஏங்குதே...

விடிதலுக்கேங்கினேன்
நீ வரத் தாங்கினேன்...
உன் செவி என் குரல் மடுக்கவில்லை...
ஏனென்று எனக்கொன்றும் புரியவில்லை...

ஒண்சுடரோனவன்
அவனைக் காணவில்லை
பெண்ணிவள் படுந்துயர் அவனுஞ் சகிக்கவில்லை...

யோ.... என்ன ஓர் இரவு ஏழு ஊழியாய்
எரிதழல் போலென்னை கொல்குதே..

மன்னவ நீவரின் யாதும் தீராது பாவி
என் நெஞ்சு இனி என்ன சொல்லித்தான் தீரும் போ...




- கவிதைக்காரன்

Friday, October 25, 2013

எண்ணங்களை எழுதுகிறேன்


பொழுதுகள் மிகச்சீக்கிரமாய் விடிதலை.. எதிர்கொள்கின்றன..
அல்லது நகரத்தின். வேகத்தில் நம்மை திணித்துச் சமன்படுத்திக் கொள்ள நாம் வேகமாகச் சுழல்கின்றோம் எனவும் கொள்ளலாமோ...


ஊரிலிருக்கும் போது... அரிதாக சில நேரம் பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பேன்... சீக்கிரம் எழுந்துவிட்டால்... இன்னுமா தூக்கமென்று போர்வையோடு தண்ணீரை ஊற்றிப் போகும் அக்காளைச் சபித்தது போல் அவை என்னைச் சபிப்பதில்லை... செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது ஒரு கலை...
அது ஒரு தியானம் போன்றது அந்த நிமிடங்களில் அவைகளோடு அளவளாவிக் கிடைக்கும் மகிழ்வை எழுத்தில் கொண்டுவருவது சவால் தான்.
இதுவெல்லாம் சிலகாலம் முன்புதான்... அதற்கும் முன்பற்றி சிந்தித்தால்...
நினைவு நதி ஈரமாய்ச் சிலிர்க்கத்தொடங்குகிறது...
அதிகாலைக்கும். நமக்குமான உறவுநம் வயதையொத்ததல்லவா... அதுவும் பால்யங்களை விட பதின்மங்கள் கற்றுத்தரும் பாடங்கள் அதிகாலையில் தான் அர்ச்சனைகளோடு தொடங்கும்..


பள்ளிக்கூட வயதில்.. நான்கரை மணிக்கு விடியும் எனக்கு உறக்கத்தை கொன்றுவிட்டு, எழுந்து முகவாய் கழுவிவிட்டு சைக்கிளை மிதித்துபரபரப்பாய் பாளையங்கோட்டையிலிருந்து பெருமாள் புரம் வரைக்கும் போய்

வண்ணதாசனோ,வண்ணநிலவனோ சரியாய் நினைவில்லை... அந்த எழுத்தாளர் வீட்டருகே. உள்ள ஜேசு. அண்ணன் வீட்டில் தயாராகின சமோசாக்களை பெட்டியில் அடுக்கிக்கொண்டு... வேய்ந்தான் குளாத்திலிருந்து வேலைக்கு ஆயத்தமாகும்..

சில நாள் பாதித்தூக்கத்தில் சைக்கிள் மிதித்து பாளையங்கோட்டை மத்தியச்சிறை முன்னே இருக்கும் பேரூந்துநிறுத்தத்தில் பத்துநிமிடம் படுத்து எழுந்தோடுவேன்...

அப்போதெல்லாம் புதிய பேரூந்துநிலையம் கட்டி முடித்திருக்கவில்லை...
அங்கிருந்து அதே பரபரப்போடு பாளையங்கோட்டை வீதிகளின் தேநீர்விடுதிகள் ஒவ்வொன்றிலும் சரக்குக் கொடுத்துவிட்டுமார்கெட், கே.டி.சி. நகர், வி.மு சத்திரம் , பாளை டவர், வண்ணாரப்பேட்டை வந்து பெட்டிகாலியாகவும் வன்ணாரப்பேட்டை வாங்கு ஊதவும் சரியாய் எட்டு மணியாகிவிடும்...

திரும்ப வீட்டுக்கு வந்து அடித்துபிடித்து பள்ளிக்கூடத்திற்கு ஓடிப்போய். .. லேட்டானதிற்கு பி.டி-யிடம் பிரம்படிவாங்கி ... பாடம் படித்து கொஞ்சம் பால்ராஜின் உதவியால் வாத்தியாருக்குத் தெரியாமல் பெஞ்சுக்கிடையில் குட்டித்தூக்கம் போட்டு மதியம் பலவீட்டுவிருந்துண்டு பள்ளிக்கூடம் விட்டதும் காலையில் கொடுத்த சரக்கிற்கு மாலை பணம் வசூலித்த பெருமாள் புரத்து ஜேசுதாஸ் அண்ணன் வீட்டுக்குப் போய். கணக்குக் கொடுத்தால் இருபத்து ஐந்துரூபாய் கொடுப்பார்... அது அந்த ஒருநாளின் உழைப்பின் சம்பாத்தியம்...

அத்தனை பர பரப்புக்கிடையில் உழன்று கிடைத்த ஊதியத்தை சட்டைப் பையில் சுமந்து அம்மாவிடம் கொடுக்கும் போது கிடைக்கும் ஒரு பெருங்கத்தையான சந்தோசத்தை..

இதோ இன்னும் இரண்டொரு நாளில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு ஏ.டி.எம் இயந்திரத்தின் வாசலில் வரிசையில் நின்று தேய்த்து எடுக்கும் ஊதியப்பணத்தில் நிச்சயமாய் பெறமுடிவதில்லை... பெரும் இடைவெளி ஏதேனும் விழுந்திருக்கலாம்... காலம் புரட்டிவிளையாடும் போது பந்துகள் தான் என்ன செய்யும்... நினைவு நதி குளிர் உதிர்க்கின்றது...

*******


நேரம் போனதே தெரியவில்லை...

சமீபமாய் பால்ராஜைச் சந்தித்தேன் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் மனைவியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான். ஆண்டிநாடார் பாத்திரக்கடை முன்னே முண்டிக்கொண்டிருந்த கூட்டத்தில் அடையாளம்கண்டு கொண்டோம்.

புதுமாப்பிள்ளைக் களை கழுத்தில் மின்னியது... நலம் விசாரித்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாய் கலந்துவிட்டான்.

ஜேசுதாஸ் அண்ணனைப் பார்க்கத் தோன்றியது. போயிருந்தேன், எம்.எச் ஜுவல்லரிஸில் கொடுத்த கைப்பையைச் சுமந்தபடி நிலம் விற்றுக் கொண்டிருக்கிறார். ரெட்டியார்பட்டிக்கு கிழக்கே ரெண்டரை செண்ட் வாங்கிப்போடு இப்போ குறைஞ்சவிலைதான். கிரையம் நானே முன்னயிருந்து முடிச்சுத்தாரேன்னு அவர்பாட்டுக்கு பேசினார்.... எனக்கு இருபத்தைந்து ரூபாயை இடதுகையால் அவர் கொடுக்கும் லாவகம் கற்பனையில் ஓடிக்கொண்டிருந்தது...

******

பக்கத்துவீட்டு மொட்டைமாடியில் யாரோ தொட்டியில் ரோஜா வளர்த்திரிக்கிறார்கள்... அது மென்மையாய் என்னை நோக்கிப் புன்னகைக்கின்றது...

தண்ணீர் ஊற்றுவானேனென்று மனம் பரபரக்கின்றது...

பெரிய சைக்கிள் மிதித்தது தினத்தந்தியை வீசிப் போகும் சிறுவனை எங்கோ பார்த்தது போல் இருக்கின்றது.. அது நானாக இருப்பது வாய்ப்பில்லை...


கருப்புவண்ணத்தில் நிக்கல் நிறமிட்ட கடிகாரம் தனக்கான பணியை ஒலியெழுப்பி கூவுகிறது.வண்ணாரப்பேட்டை வீதிகளின் பரபரப்புஎன்னைத் தொற்றிக்கொள்கிறது....

வாருங்களேன் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு அதிகாலை சென்னையின் மிச்சங்களை நுகர்வோம்...

- கவிதைக்காரன்.

Sunday, February 10, 2013

நீயும் நானும்....!?


காலை வணக்கங்கள் சகோக்களே சகாக்களே...!

நேற்றைய இரவில் நீயா நானா ? நிகழ்ச்சியை நீங்கள் பார்த்தீர்களா... உங்களில் சிலர் பார்த்திருக்களாம்,.

நிகழ்ச்சியை பார்க்கும் போது நிச்சயமாக என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறேன் [!] என்ற பயம் வந்து என்னைத் தொற்றிக்கொண்டது...

இளைய சமுதாயம் என்ன தெரிந்துகொள்கிறது என்பதை விட எல்லாம் தெரிந்துகொண்டது மாதிரியான ஒரு மாய தோற்றத்தை உருவாக்கிக்கொண்டு திரிவதை காணும்போது

அட! நாம் படிக்காமல் போனோமோ அதிகம் என்று பலவிஷயங்களிலிருந்து எனக்குள் மேலெழும் சமூகக் கோபங்களை உள்ளுக்குள் புதைத்துக்கொண்டதை நினைக்கிறேன். வருத்தமே மேலோங்குகின்றது. இதைத்தானா இந்த கல்வி போதிக்கிறது...

எவ்வளவு நாட்கள் வேதனைப்பட்டிருக்கின்றேன், உயர்கல்வியைத்தாண்டிடமுடியாமல் குழந்தைத்தொழிலாளியாக ஆரம்பித்து இன்றைய நிலையை அடையப் பெற்றவரைக்குமான என் ஆற்றாமைகள் பெரிது.

ஆனால்
படித்தவர்களின் இந்த சமுதாயம் தனக்கு தெரிந்துகொண்டதை வைத்துக் கொண்டு, மீடியா வெளிச்சத்தில் விழும் நிகழ்வுகளை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டு, ஏதேனும் இரண்டு சம்பவங்களை இணைத்து முடிச்சுப்போட்டு இரண்டுக்குமான கொந்தளிப்புகளை வித்யாசப்படுத்தி எல்லோரையும் எளிதாக கேலிக்குரியவராகச் சித்தரிப்பதோடு நிறுத்திக்கொள்கின்றது.

கைக்குட்டை அளவுக்கும் அரசியலைப் புரிந்துகொள்ளாமல் வெறும் மேம்போக்கான வாதங்களை மட்டுமே பேசுகின்றது. பொதுப்புத்தி சிந்தனையை வலுவாக தனக்குள் பதியமிட்டுக்கொள்கின்றது... சகக்கூட்டத்தில் நான்குபேஎர் ஒருவரைக் கெட்டவராக அடையாளப்படுத்தினால் என்ன ஏதென்றே தெரியாமல் தானும் ஏற்றுக்கொள்கின்றது.

இவர்களுக்கு தமிழ் பேசப்பிடிக்கவில்லை, வாசிக்கப்பிடிக்கவில்லை, எழுத்தாளர்களைத் தெரியாது, மீனவர்களின் வாழ்நிலை புரியவில்லை.
தேயிலைத் தொழிலாளர் அல்லல்கள் என்ன ஏதென்றே தெரியாமல் காபிசீனோவை சிப் செய்கிறார்கள். எத்தனைப் புத்தகங்கள்.. எவ்வளவு விஷயங்கள் எத்தனைச் சம்பவங்கள்... எழுதப்படுகின்றன...

பாலகுமாரனின் எழுத்தைப்படித்துவிட்டு ஒரு இயக்குனர் இப்படி கவலைப்பட்டிருக்கின்றார். “உங்கள் எழுத்தைப்படித்த பின் எனக்கு ஒஉ பெரும் கவலை வந்துவிட்டது பாலா. இந்த இளைய தலைமுறையினரிடம் இந்த எழுத்துக்கள் போய் சேர வேண்டுமே என்கின்ற கவலை. வந்து என்னை தூங்கவிடாமல் செய்கிறதென்று”.

நிறைய வாசிக்க வேண்டி இருக்கின்றது. நீங்கள் நிறைய படிக்க வேண்டி இருக்கின்றது.. சில வருடங்களுக்கு முன்னால் “வந்தார்கள் வென்றார்கள் ” புத்தகத்தினை வாங்கிப்படிப்பதற்காக... காசு சேர்க்க இரவுப்பணி செய்து சேமித்திருக்கிறேன். கி.மு கி.பி புத்தகத்தை வாங்கித்தர என் அண்ணனிடம் எத்தனை நாட்கள் ஏங்கி இருக்கின்றேன். எரியும் பனிக்காடு படிக்கும் போது உதிரம் சூடாகி இருக்கின்றது..


தமிழைப் பேச கில்டியாக இருப்பதாகச் சொல்லும் போது எனக்கு எழுந்த கோபம் இழுத்துப்போட்டு நாலு சாத்து சாத்தவேண்டும் என்பதாகவே இருந்தது. நாகரீகம் பொருட்டு அப்பா டேட் என்று மாறியிருக்கின்றதே பரவாயில்லை. யாரை வேண்டுமானாலும் அப்படி அழைத்து விடுவோமா?

இடஒதுக்கீடு என்ற ஒன்றுமட்டும் இல்லை என்றால் நாம் இந்த இடத்தில் உட்கார்ந்திருக்கமுடியாதே என்பதை சிந்திக்கத் துணியவில்லை..
என்பாட்டன் முப்பாட்டனின் சொத்து வேண்டும், அவர்கள் செய்த ஏய்ப்புக்களின் பாவச்சம்பளமான இன்றைய இடஒதுக்கீட்டில் தான் கீழ்வகுப்பினராய்ப்பார்ப்பவன் முன்னேறி வருவதையும்,அது தன்னை பாதிப்பதையும் பொறுக்க முடியவில்லை. எப்படியப்பா உங்களால் முடிகிறது... இந்த சிந்தனையை நெஞ்சுக்குள் ஊறவைத்து திரிய... இதற்கு ஏன் உங்களுக்கு கல்லூரிப்படிப்பு... நாளை உனக்கு மேல் அதிகாரி கீழ்வகுப்பினர் என்ற அடையாளத்தோடு இருந்தால்.. என்ன செய்வாயோ?

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை... என்று சொல்லிவைத்தாற்போல் கூவுகிறார்கள். அதைச் சொல்லும் அத்தனை பேரும் பெண்கள். பொதுப்புத்தி சிந்தனை இப்படி அமைந்தது வேடிக்கை.

இவர்கள் யாருக்கும் சம்பவங்கள் பாதிக்கப்படவில்லை... அதன் தாக்கம் வீரியமானதாக இல்லை.. அடிப்படைகள் தெரியவில்லை...ஆண்கள் என்பதை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டு வக்கிர துதிபாடவும் தயார். ஏன் எந்த பெண்ணாவது விபச்சாரம் தவறானது என்று பேச முன்வரவில்லை... அது அவர்களுடைய பிரச்சனை எனக்கு நான் பாதுகாப்பாக இருக்கவேண்டும்... ஏன்?

விஷயங்களின் அடிப்படை அவர்களைப்போய் சேருவதில்லை ஆனால் அவர்களைச் சொல்லிக்குற்றமில்லை என்றும் விடமுடியாது. இன்றைய தேதியில் வெளியான பாடல்களைத் தேடி தரவிறக்கம் செய்யும் இணையப் பயன்பாடு இப்வர்கள் உலகில் சாத்தியம் ஆகும் போது சமூகத்திற்கான இவர்கள் குரலை முன்வைப்பதில் என்ன சிக்கல்...

எதிர் வரிசையில் அமர்ந்திருந்தகளப் பணியாளர்களில் ஒருவர் தெளிவாகச் சொன்னார். “நாங்கள் எழுதிக்கொண்டிருப்பதெல்லாம் யாருக்குப் போய் சேறுகிறதென்றே தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறோ”ம் என்று.

நான் பள்ளி மாணவனாக இருந்தபோதுகூட இன்றைய கல்லூரி மாணாக்கர்களைவிடவும் இன்னும் மெருகாக இருந்தோம் என்றே நினைக்கிறேன். எல்லாரையும் குற்றமிடவில்லை... இதோ இதே முகநூலில் சமூக வக்கிரம், அநீதி கண்டு பொங்கி குரல்கொடுக்கும் பெண்களையும், ஆண்களையும் [இளம்வயதினர்] எனக்குத் தெரியும்.. ஆனால் அவர்கள் எண்ணிக்கை அளவில் மிகச்சிலர்.

முன்னேறிய பெரு நகரங்களில் இருந்து வந்த பெரும்பாலானவர்களின் பார்வை எத்தனை மட்டரகமானதாக இருக்கின்றது..
ஆக கல்லூரிகள் ஒரு பொருளாதார அடியாட்களையும் கூலிகளையும் தான் உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றது..


என் அலுவலக நண்பன் ஒருவன் இருந்தான் சாமுவேல் என்று. அவனுக்கு எப்போதும் வேலை என்னை தூண்டிவிட்டு ஏதாவது புரட்சி சிந்தனைகளைப்பற்றி பேசவைத்து கேட்டுக்கொண்டிருப்பது.. நன்கு படித்திருக்கிறான். ஐஐடியை தூக்கிப்போட்டுவிட்டு மனதிற்கு பிடித்ததைச் செய்ய வேண்டுமென்று நினைத்து எதையாவது படித்துக்கொண்டிருப்பவன்.பேசும் போதே சிலகருத்துக்களில் அவன் உணர்ச்சிவசப்படுவான்.

அதில் அதீதமாக அரசியலைப்பற்றியதாக இருக்கும்.. ஆந்திராவில் 200க்கும் அதிகமான கிராமங்களை நக்சலைட்டுகள் ஆட்சிசெய்கிறார்கள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை... பா.ராகவனின் மாவோயிஸ்ட் புத்தகத்தை அவனிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன்,. படித்து முடித்தவன் நக்சலைட்டில் சேரப்போகிறேன் என்றான். நான் அவனை வேடிக்கை செய்யவில்லை ஏனென்றால் நானே அப்படி நினைத்தேன் அந்த புத்தகத்தைப் படித்து முடித்ததும்.

பக்கத்து மாநிலத்தில் நடப்பவைகளை பற்றியே மேலோட்டமாகக் கூட தெரியாத நாம் டெல்லி சம்பவத்திற்கு கொந்தளிக்கிறோம். அஸ்ஸாம் பிரச்சனையை சீந்துவதில்லை... விஸ்வரூபத்திற்கு எதிராயும் உடன்பட்டும் குரல் எழுப்புகின்றோம்... ஏன் சினிமா பற்றி பேச வேண்டும் என்றால்... அக்குவேறாக ஆணி வேறாக இந்த இசையமைப்பாளர் இந்த பாடல்பாடியவர் இவர் என்றெல்லாம் நா கூசாமல் பேச முடிகின்றவர்களுக்கு... கூடங்குளம் தெரியவில்லை...

வெட்கமாக இருக்கின்றது.. என் சகோதரனின் முகச்சாயம் கிழிபடுகின்றதை நினைத்து ஆற்றாமை பெருக்கெடுக்கின்றது.. இது நாள் வரையில் அவனுக்கு நான் கொடுத்த பெருமதிபுகள் உடைந்து சாம்பலாகின்றது. கோபம் மேலேறி நிற்கின்றது.

சங்காத்யமே வேண்டாம் போ என்று வெகுண்டு நகர்கிறவர்கள் அதிகரிக்கின்றார்கள். மக்கள் போராளிகள் கேலிக்குரியவர்களாகிவிடுகிறார்கள். இதிலும் போலிகள் வேறு .. நெல்லை விட உயரமான களைகள் போல ஆக்கிரமிப்புடன்.,
அதற்கு நகர்தலே கூட உத்தமம் தான் போல...

மக்கள் போராட்டம் எல்லாம் அரசியல் கூட்டம் நடக்கும் மேடையில் நிரம்பி இருப்பவர்களை விடக்குறைவானவையாக இருக்கின்றது..

அன்றைய நாட்கள் போல இங்கே தலைவர் ஒருவர் [!] இல்லை என்பது புரிகிறது... மாவோ, லெனின் ஸ்டாலின்...கர்மவீரராகட்டும்., ஆனால் ஏன் தலைவரை எல்லோரும் தேடுகின்றார்கள். உருவாகாமல்.. என்ற கேள்வி மூச்சடைக்கின்றது...! அது அரசியலாகட்டும். ஏன் நமக்கு வேண்டாம் என விலகிப்போகிறார்கள். படித்தவன் தன்னைப்பற்றித்தான் யோசிக்கப்போகின்றானா? கடைசி வரை.. [பெரும்பாலான]

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போய்விடுவார்களா?

ஊருக்கு உழைக்க இனி எவரும் இல்லாமல் போகும் நிலையும் தான் வந்தே தீருமா?

கூலிகளைத்தான் இந்த கல்விநிலையங்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றதா?

திறமைக்கு இங்கே வழியில்லை என்று உழைப்புக்கு வழிதேடி வளைகுடா நோக்கி நாங்களும் பறக்கத்தான் வேண்டுமா?

வெறும் பேச்சில் இன்னும் நாட்களை நகர்த்தத்தான் போகின்றோமா?

பணம் தான் நாளைய விடியலைக்கூட நிர்ணயிக்குமா?

கிராமங்கள் என்றால் என்னவென்றே தெரியாத சமூகம் அரிசியைதின்னும் போது எப்படிச் செரிக்கின்றது?

பணம்கொடுத்து
எல்லாவற்றையும் அனுபவிக்க இது என்ன நாடா?
இல்லை விலைமாது வீடா?

லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்று சூழுரைத்துவிட்டு ட்ராபிக்கில் விதிமீறுவதும் குற்றம்தானே?

தனிமனித ஒழுக்கத்தை எப்போது பேணப்போகிறோம்... ?

மதுவை நம் அத்யாவசிய உடமைக்குள் அங்கீகரித்தே விட்டோமா?

பகுத்தறிவைப் பழித்துவிட்டு சாமியாரிடம் பல்லிளித்தல் சாபம் தானே?

சமூக விழிப்புணர்வுதான் வேண்டாமா! உங்களின் தொடர்புகளைப்பயன்படுத்தி

நியாயங்களை, அநீதிகளை நாலுபேருக்காவது எடுத்துச் சொல்லுங்களேன்... உங்களின் பொழுது போக்குக்கிடையில்...
தயவு செய்து...


கொலைவாளுக்குக்கூட வந்திடாது போல இம்மக்களோடே வாழ எனக்கு பயமாக இருக்கின்றது...!

-கவிதைக்காரன்.

[நீயா? நானா ?

உரலி : http://www.dailymotion.com/video/xxexn8_neeya-naana-part1-10-02-13_shortfilms#.URgiLx04tQM

Monday, February 4, 2013

அப்பாவும் தென்னைமரங்களும்.....







வருசாவருசம் கண்ணோரத்தில லேசா ஈரத்தையும்,தலைகோதி தடவிக்கொடுக்குற அப்பாவோட கைதடமும் நெனப்புல வந்து கலங்க வைக்குற நாள் அது...


அப்பஞ்செத்ததும் புள்ளைக மடையில்லாத குளம் மாதிரிதான்...அணைக்கவும் ஆளில்ல அள்ளிக்கவும் ஊரில்ல..


பிள்ளையைப்பெத்தா கண்ணீரும் தென்னையை வைச்சால் இளநீரும்ன்னு சொல்லுவாங்களே.. எங்கப்பனுக்கு நான் முதல் ரகம்.. அவரோட வண்டிமாட்டு சாட்ட எம்முதுகில் கோடுபோடாத நாளே இல்லை..


என்னதான் அடிச்சாலும் இராத்திரியில சின்னவன் சாப்பிட்டுபடுத்தானான்னு கேட்டுட்டு இல்லைன்னு பதில் வந்தா எழுப்பிச் சாப்பிட வைச்சுட்டு பிள்ளைய இப்படி போட்டு அடிச்சுட்டேனேன்னு தேங்கா எண்ணைய தடவி விட்டுப் பொலம்பும் பாசக்காரபாமரன்.


விவசாயந்தான் எங்க அப்பாருக்கு தொழில், அடையாளம் வேலை சொத்து எல்லாமே... தென்னை ஏறுறதுல இருந்து வாழைக்கி வொரம் வைக்குற வரைக்கும் மனுஷரு மம்பட்டியோட திரியாத நாளே இல்ல...


எங்கூட்டு தோப்பில் இருக்கும் அத்தனை மரத்தோடயும் அவுகளுக்கு ரொம்ப பரிச்சயமுண்டு... சின்ன வயசுல நான்லாம் தென்னைக்கு தண்ணீ பாய்க்கிற தொட்டிக்குள்ள தான் பொழுதுக்கும் கெடப்பேன்.

குதிச்சு கிடந்து தண்ணில கைய போட்டு தப்பி, கையில கோரி அண்ணம்மாருவ மேல வீசி... அந்த ஆட்டம் போடுவோம்... லேய்...ன்னு ஒரு அதட்டல்ல மொத்தமேரையும் அடக்கிட்டு போய்டுவாரு...


அருணாக்கொடியில போத்தீஸ் மஞ்சப்பைய கிழிச்சு கோவணமா கட்டி விட்டு அவரோட மாட்டுவண்டிலதான் ரெம்பநாளு காலையில தோப்புக்கு போவேன்.


புதுசாதோப்பிலே.. தென்னைமரம் கன்னு நடும் போது.. என்னைய இல்லன்னா எப்பவாச்சும் அண்ணன கூப்பிட்டு கை தொட்டு வைக்கச் சொல்லுவாரு.


தென்னை மரங்களைப்பத்தி அவுகளுக்கு அத்தனை விசயமும் அத்துபடி.. இடிவிழுந்து எரிஞ்சு போன ஒரு தென்ன தண்டை எடுத்து ஆந்தைக்க்கு பொந்து செய்ஞ்சு மாமரத்தில கட்டி வைச்சு அழிஞ்சு போற விளிம்பில் இருந்த பறவைக்கும் வீடு கட்டிக் கொடுத்தவரு..

இன்னைக்கும் அந்த தோப்பொல வெள்ளை முகமூடி மாதிரி ஆந்தை நாலைஞ்சு திரியுது..


தெரட்டுமாதிரி வரப்புக்கட்டி மழை தண்ணிய அடக்கி வைப்பாரு.. புழு மீன் செதிலல்லாம் புடிச்சி ஊரக்கடம் போட்டு வைப்பாரு..


தென்னை மரம் மட்டும் இல்ல நெல்லுல இருந்து புல்லு வரைக்கும் கீரையில இருந்து கீத்து கொட்டகை போடுறவரைக்கும் அவருக்கு தெரியாத சமாச்சாரம் கொறவு... நாந்தூங்கலைன்னா ஆந்தையப்பத்தி சொல்லிக்கிட்டு இருப்பாரு சில நாளு...


மண்ணென்ன வெளக்கு வெளிச்சத்துல ஒரு மண்ணும் புரியாட்டியும் வரக்காப்பிய குடிச்சுப்புட்டு அவரு நெஞ்சுமேல படுத்து கேட்டுட்டு கெடந்திருக்கேன்...


எங்க அப்பாதான் தபால்கார மீசைக்கு அடுத்து கடுதாசி படிக்கத் தெரிஞ்ச ஆளு... அப்பவே அய்யர்மாருவ வீட்டுக்கு போயி கணக்கு பாடமெல்லாம் படிச்சுருக்காரு.. இப்போதான் பள்ளியூடமெல்லாம் வந்திருக்கு.. அப்ப அப்படிதான்...


ஆலமர சமுதாயக்கூடத்தில அறிவொளி இயக்கம் நடக்கும் போது... இவருதான் ஆள் இல்லாத நேரத்தில வாத்தியாரு..


நெரம்ப படிப்பாரு.. தாம்படிச்ச பொஸ்தகத்தில இருந்து கத்துக்கிட்ட விசயங்களை வெத்தலைக்கு காம்பு கீறுனமாதிரி நெல்லீசா சொல்லிக் கொடுக்குறத கேக்க எங்க மாட்டுகொட்டகைக்கு பக்கத்துல இருக்கும் முள்ளுமரங்கீழ பெருங்கூட்டம் கூடும்..


புள்ள வளர்க்க செல்லப்பாவுக்குச் சொல்லியாக்கொடுக்கனும்ன்னு ஊரே மெச்சும். நாங்களும் நல்லவிதமாத்தான் வளந்தோம்.. ஆனாலும் எங்க கிளவி நாம்பொறந்ததும் மண்டையபார்த்து எலே! செல்லப்பா இளயது ரெட்டச்சுழில வூட்டுல அடங்காதுன்னு சொல்லி இருக்கா... அவ வெத்தலக்கற வாய் முகூர்த்தம் அப்படித்தான் அமைஞ்சுடுச்சி.,..


பண்ணாத சேட்ட கெடயாது... சின்னவயசுல பையமாருங்ககூட கட்டி உருண்டது.. ஏழாப்புல ரத்தக்கறை மண்டையில தெரிக்குறதுல கொண்டுபோய் விட்டுச்சு... வீட்டுல தெரிஞ்சுறக்கூடாதுன்னுட்டு எங்கண்ணன் களிமண்ண எடுத்து தடவி விட்டுப்புட்டான். வலி விண்ணுவிண்ணுன்னு தெறிக்க... வீட்டுல சொல்லிப்புட்டேன்... வெளக்கமாறு ஒன்னு புதுசா வாங்க வேண்டியதாப் போச்சி...


நாங்களும் அப்படி இப்படின்னு ட்ரவுசர் பள்ளிக்கூடத்தை தாண்டி சைக்கிள்ல மேட்டூர் பள்ளிக்கூடம் போற அளவு வளர்ந்துட்டோம்.


ஒருநா...தென்னையில ஏறும் போது கொளவி கொட்டி தவறி கீழ விழுந்து அப்பாருக்கு மூட்டு விலகிடுச்சு... நம்ம புத்தூர் வைத்தியர்தான் ஆறே நாள்ல ஜல்லுன்னு எந்திரிச்சு நிக்க வைச்சாருவாரேன்னு அவருக்கு அவரே சொல்லிக்கிட்டாரு..!


அப்போத்தான் ஊருல நிலமை மாற ஆரம்பிச்சது... காளைமாடு வைச்சிருந்தவனெல்லாம் மாட்ட மேக்கே கேரளாக்காரனுக்கு வித்துட்டு ட்ராக்டரு வாங்க ஆரம்பிச்சாங்க.. எருக்குழி எல்லாம் எங்கபோச்சுன்னே தெரியாம போயிருச்சி., ஊருக்குள்ள பால் வத்திப்போச்சு... மகசூல் அதிகம் தருதுன்னு வாரி வாரி பொட்டாசியத்த கொட்டுனாங்க,,, தென்னை விவசாயிக்கு நெல்லைப்பத்தி தெரியாதுன்னு நினைக்க முடியாதுல்லா.. அப்பாரு படுத்துக்கிடந்தே பொறுமுனாரு.,.. கேக்க ஆள் இல்ல.. களை எடுக்க மெஷினு வந்திருச்சுன்னு வேடிக்க பார்க்க கூடினாக... வயித்தில நாளைக்கு அடிக்கப்போவுதுன்னு ஒரு சிறுக்கிக்கும் தெரியாமதான் போயிறுச்சி... உழுறதுக்கு மெஷினு,.. உரம் போட மிஷினு, மருந்தடிக்க மிஷினு,களையெடுக்க,களத்துல நெல்லடிக்க... விட்டா காதுகுத்த... கோயில் கொடைக்கும் மெஷினக் கொண்டாந்துருவானுங்க.. இங்க மாடு கண்ணெல்லாம் எங்கபோயி முட்டிக்கும் எத்தனபேரு பொழப்பு போகுது.. அவரோட ஒவ்வொரு சொல்லும் நெஞ்ச தைச்சிச்சி...


நான் படிச்சு பட்டம் வாங்கி அதே ஊருல அக்ரிகல்ச்சுரல் ஆபீஸரா வந்து நாசமா போன வேதிமருந்துகள மண்ணுல கொட்டி மண்ண மலடாக்குறத பத்தி இந்த மக்கள்க கிட்ட சொல்லனும்ன்னு அவர் கனவு கண்டுக்கிட்டு இருந்திருக்கார். நான் டூரிங் கொட்டயில ரஜினி படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு.. “பொதுவாக எம்மனசு தங்கம்”-த்துக்கு ஆடிக்கிட்டு இருந்தேன்.


தென்னைக்கு வண்டுகடி நோய் ஊரல்லாம் வந்துச்சி

எங்க தோப்பில வரல... யாவாரிக கூட ஆச்சரியப்பாட்டாவ... ஆந்தை இருக்கும் போதும் வண்டெல்லாம் மசுறுடான்னாரு...


ஒரே மாமரத்துல அஞ்சு கிளை பதியம் போட்டு கிளிமூக்கு, மல்கோவான்னு விளைய வைப்பாரு.. எதோ மோடிமஸ்தான் வேலையின்னு கிராதகப்பயலுவ சொல்லிட்டு போனானுவ,..


நடக்குறதுக்கு சங்கடமா இருக்கும் போதே துண்டுல புன்னைமரத்தோட கொட்டைய வைச்சுக்கிட்டே தெரட்டு ரோட்டுல வீசிக்கிட்டே போவரு,,


நானும் அண்ணனும் யாரு தூரமா வீசுறோம்ன்னு பந்தயம் விட்டுக்கிருவோம். இன்னைக்கு எங்க ஊருக்குள்ளே நாலுவழிரோடு போடுறப்போ வெட்டிப் போட்ட மரத்துக்கெல்லாம் எங்க அப்பாரு தான் சாமின்னு யாருக்குந்தெரியாது...


ஏதோ கொடுக்கல் வாங்கல் வெவகாரத்துல தோப்பு கேஸாகிடுச்சி... ண்ணுரெண்டுமாசத்துக்கெல்லாம் வீட்டுல என்னஎன்னவோ நடந்துச்சி,.. எனக்கு அரிசிப்பெட்டியில கெடைக்கும் அஞ்சுப்பத்து படியளந்ததால... வீட்டுநடப்பு மேல பெருஷா அக்கற இல்ல... அண்ணந்தான் ரொம்ப மாறிட்டான்.


பள்ளிக்கூடம் போவாம செங்க சூளைக்கு ட்ராக்ரட் ஓட்டப் போனான். கோனார் கடையில எனக்கு பொரோட்டாவுக்கு நான் காசு கொடுத்துக்குறேன் சாப்புட்டு பள்ளியூடம் போய் நல்லா படிலேன்னு சொல்றதனால... அவன கொஞ்சம் புடிக்க ஆரம்பிச்சிருச்சி..


பத்தாவது ராங்க் வாங்குறதுக்கே பம்ம வேண்டி இருந்துச்சி... விட்டாப்போதும்ன்னு ஓடிவந்துட்டேன், பட்டணத்துல வேலைக்கு நாராயணபெருமாளண்ணே கூப்பிட்டாகன்னு போகப்போறேன்னு ஒத்தக்காலுல நின்னேன்.


அவரோட :எம்மவன் வெவசாய ஆபீஸர்:” கனவு தறி அறுந்து தயிர்பானை கீழ விழுந்தது போல தெறிச்சிறுச்சுன்னு அப்போ எனக்கு தெரியாது..


பொழைக்க வந்த இடம் என்னைய பொரட்டி போட்டுச்சு... சூதனமான ஊருலயே சுருட்டி விட்ருவாங்க. பட்டணம்ன்னா சும்மாவா... எக்கி நின்னா ஏறி அடிச்சாங்க... எகிறி விழாம தாங்கிக்கிட்டு தம்புடிச்சி,.. மெல்ல மெல்ல சம்பாரிச்சேன். அப்பா போட்ட வெத தானே இந்த ஒடம்பு.,.. ரத்ததுல எங்கனையாவது அவரோட கொணம் ஒட்டிக்கிடக்காமலா போயிறும்...


எந்தசாமி வினையோ கெடைச்ச பொஸ்தகத்தை எல்லாம் தேடித் தேடிப்படிச்சேன்.. காரல் மார்க்ஸ் மூலதனத்தை தொடும் போது எனக்கு பதினேழு வயசு...


இப்போ எத்தனைன்னு கேட்டீங்கன்னாக்க,... ஒரு நாப்பது வருஷத்த கூட்டிக்கோங்கன்னு சொல்லுவேன்..


மாவோ,லெனினெல்லாம் என் பிடறிமுடிய புடிச்சு எங்க அப்பாவப் போல மெரட்டுனாங்க., இருக்குற வேலையில இருந்துகிட்டே இன்னும் படிக்கனும்ன்னு ஒரு ஏக்கம். கடைக்கு வர்ர கஸ்டமருங்கல்ல ஒருத்தர் ஏதோ பத்திரிக்கையில எழுதுறவராம்.. யாருன்னு சொல்லிக்காம என்னப்பத்தி சும்மா விசாரிச்சுட்டு மறுநாளே படிக்க புக்குக்கும் படிப்புக்கும் காசுகொடுத்து வேலை செய்ஞ்சுட்டே படின்னாரு...


அவரோட எழுத்தை கணையாழின்னு ஒரு புக்குல கடைசி பக்கத்துல வருமாம். இப்போ அவரு யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா எனக்கு ரொம்ப வருஷமா தெரியாம போச்சி.


காலைல சாப்பிடாட்டியும் காச மிச்சம் வைச்சு படிச்சேன், ஆனா இந்த இங்க்லீஷுதான் தூக்கிப்போட்டு மிறிச்சிச்சி... அப்படியே மெல்ல மெல்ல தக்கி தடுமாறி பி.ஏ முடிச்சுட்டு திரும்பிப்பார்க்கும் போது எங்கண்ணன் மவன் என்னைச் சித்தப்பான்னு கூப்பிட்டுட்டு இருந்தான்.


அப்பா மரம் ஏறுறத விட்டிட்டு இருந்தாரு... ஏறனும்ன்னாலும் சொந்த மரத்தில மிதிச்ச மனுஷன் இனி எங்குட்டு போய் அடுத்தவன் மரத்துல கை வைப்பாரு... ஆடு கோழி எல்லாம் நின்ன இடம் புழுதி மண்டிக்கெடந்துச்சி.. இனி நான் இருக்கேம்புன்னு இன்னும் நல்ல வேலைய தேடிக்கிளம்புனேன்.


அமைஞ்சது வேலை பால்காட்ல... மாசம் ரெண்டாயிரம் ரூபா சம்பளம்,.. சிங்க அடையாளம் போட்ட பெரிய நோட்டெல்லாம் சம்பளமா வாங்குறது மொத தடவை.. வேலைபாக்குற யெடத்துகே தங்க வீடு கொடுத்தாவ.. அப்பா வரமாட்டேன் என்னைய பெத்த இந்த மண்ணுகாத்தை விட்டுட்டு எங்கிட்டுலே நான் இந்த ஜீவனை தூக்கிட்டு திரிவேன் நீ போய்ட்டு வா ராசான்னாவ...


கொஞ்ச வருஷம் போனதும் கல்யாணம் பண்ணிவைச்சாவ சொந்ததுலையே ஏழாங்கிளாஸ் வரைக்கும் படிச்ச பொண்ணாம்ன்னு.,. அப்பாவுக்கு கால் இப்போ சொகம் ஆகிட்டு.. மனசு தான் அந்த தென்னமரக் காத்துக்கு நடுவுல சிக்கிக் கிழிபட்டுட்டே கெடந்தது,,, ஒரு நாள் கீத்து வேரோட மரத்தையும் புடிங்கிட்டு விழுந்திருச்சி...


நல்லாத்தான் இருந்தாவ... என்ன பண்ணுச்சுன்னே தெரியல காலையில நீச்சதண்ணி தான்னு கேட்டுட்டு நெஞ்சைப்புடிச்சவுக தான்.. எந்திரிக்கவே இல்ல... இப்படித்தான் எங்கவூரு கெளவி ஒப்பாரிக்கு நடுவே சொல்லிட்டே கிடந்தா...


அடிச்சு புடிச்சு ஓடிவந்து பார்க்குறதுக்குள்ள.. மூச்சி போய் மணிக்கணக்காயிருச்சி... இடுகாட்டுக்குள்ள எங்க இடிதாங்கி நீட்டி படுத்துக்கிட்டாரு,.


சொக்காரன் சொகக்காரன்லாம் கூடிட்டாவ வீட்டு முன்னால... தாரை தப்பட்டை கொட்டி அடிக்கானுவ... மனசுக்குள்ள ஆடனுன்னு ஏந்தான் தோணுச்சோ...


வெட்டியான் கொத்திவிட்ட பானை ஓட்டையில வழிஞ்ச தண்ணிய அப்பா தென்னைக்கு பாய்ச்சுற மாதியே அவர் மேல திருப்பிவிட்டேன். அண்ணன் தான் கொள்ளிவைச்சான்.


எனக்கு ஊரே மயானப்பட்டமாதிரி தோணுச்சி... எரிச்ச அஸ்திய அள்ளிட்டு வந்து தனியா மொட்டமாடில உக்காந்து மலங்க மலங்க அழுதேன். அண்ணம்மவன் தான் சித்தப்பா நீங்களே இப்படி கலங்குனா எங்களை யாரு ஆறுதப்படுத்துவாவன்னான்.


காரியம் முடிஞ்சு பதினாறாம் நாள்ல சொந்த ஊருல இருக்கும் குடிசைக்கு பின்னாடி குழிதோண்டி தென்னம்பிள்ளை ஒன்னை நட்டு வைச்சேன்...


இப்போ அது பெருசாகிருச்சி தெரியுமா? அந்த மரத்தைப்போய் கட்டிப்புடிச்சு நின்னுகிட்டிருக்கும் போது அப்பா நெஞ்சுமேல படுத்துக்கெடந்த மாதிரி தோணுது.


இந்த இங்க்லீசு மாசம் பதினைஞ்சாம் தேதி அந்த தென்னம்பிள்ளைக்கு இருபது வயசு... பதினாறுநாள் ! எவண்டே சொன்னது எங்கப்பாரு செத்துட்டாவன்னு...!


இயற்கையா வெவசாயம் செய்ய கொஞ்சம் நிலம் வாங்க இந்தவாட்டி ஊருக்கு போணும்டே மக்கா!



எண்ணமும் எழுத்தும்

~கவிதைக்காரன்~