Monday, June 27, 2011

இரை – சிறுகதை



eraai
மாலை நேரம் தான் ‘மடையான் ‘ பறவை அதிகமாகச் சிக்கும். அதுவும் வானம் கொஞ்சம் மப்பும் மந்தாரமாக இருந்துவிட்டால் போதும். குறைந்தது மூன்று ஜோடியாவது விழும். காத்தமுத்து, மடையான் பிடிப்பதற்காகக் கண்ணி வைத்திருந்தான்.
குடிசைக்குள் படுத்திருந்த அவனுடைய யோசனை முழுவதும் ‘கண்ணியில் ஏதாவது மாட்டியிருக்குமா?’ என்ற கேள்வியிலேயே இருந்தது.
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அவனது குழந்தைகள் சத்தமாகக் கைத்தட்டிக் கொண்டே….‘‘ மடையான், மடையான் பூப்போடு. ஆளுக்கு ரெண்டு பூப் போடு ‘‘ என கும்பலாகப் பாடினார்கள்.
சத்தம் கேட்ட காத்தமுத்து, திடுதிடுவென்று எழுந்து வாசலுக்கு வந்தான். வானத்தில் நூற்றுக்கணக்கான மடையான்கள் கூட்டமாகத் தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தன.
iraai
அண்ணாந்து பார்த்த அவன், தோளில் கிடந்த துண்டை உதறி முண்டாசு கட்டியபடி குடிசைகுப் பக்கத்தில் ஓடும் வாய்க்காலில் இறங்கினான்.
காத்தமுத்துவைக் கண்டதும் குளித்துக் கொண்டிருந்த அவணது மனைவி பொன்னம்மாள் தலையைத் தேய்த்துக் கொண்டே சொன்னாள்:
‘‘ இன்னிக்காவது அம்புடுற மடையானை வூட்டுக்குக் கொண்டா. புடிக்கிறதையெல்லாம் வித்து வித்துத்தான் என்னத்த நெறஞ்சது. பிள்ளைகளும் ஆசையா ஒவ்வொரு நாளும் கேட்டுக்கிட்டு கிடக்குதில்ல ‘‘ என்றாள்.
அவள் சொல்வதைக் காதில் வாங்காதவன் போல், வரப்பில் ஏறி நடக்க ஆரம்பித்தான்.
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சையாக வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு மத்தியில்… ஒருவித எதிர்பார்ப்போடு நடந்தான்.
வருடந்தோறும் ஜப்பசி கடைசி, கார்த்திகை மாதங்களில் மடையான் பிடிக்க வயல்களில் கண்ணி வைப்பான்.
பயிர் வளர்ந்துவருகிற வயல்களில்,தண்ணீர் கிடக்குற இடமாகப் பார்த்து…மெல்லிய நைலான் நரம்புகளில் முடிச்சுகள் போட்டு, முளைக்குச்சியில் அடித்து வைப்பான்.
இரை தேடி இறங்கும் மடையான்கள், மெலிதான நரம்பு முடிச்சுக்குள் காலை நுழைத்துவிடும். பின்பு, பறக்க முடியாமல் காலில் சிக்கியிருக்கும் முடிச்சு இறுக்கிக் கொள்ளும். இந்த வித்தையில் அவன் ரொம்பவும் கைதேர்ந்தவன்.
பிடிக்கிற மடையான்களை அவனே சந்தையில் விற்றுவிடுவான். ஜோடி நாற்பது ரூபாய் வரைக்கும் போகும்.
indianpondheronMAAjan01சில நாட்களில் மூன்று நான்கு ஜோடிகள்கூட மாட்டிக் கொள்ளும். சில நேரங்களில் ஓன்றுகூட விழாது.
நிறையப் பிடித்தால் நேராகப் பக்கத்து டவுனுக்குப் போய்விடுவான். அங்கே தெருத்தெருவாகக் கூவிக் கொண்டே விற்பனை செய்வான்.
பிடிக்கிற மடையானை சமைத்துத் தின்ன வேண்டும் என்கிற ஆசை ஒரு நாளும் அவனுக்கு வந்ததில்லை.
அவனுடைய பொருளாதாரச் சூழ்நிலைக்கு, விற்றுக் காசாக்குவதுதான் புத்திசாலித்தனம் என நினைத்துக் கொள்வான்.
வீட்டில் குழந்தைகள்… ‘ அப்பா மடையான் பிடிச்சுகிட்டு வரலையா ‘ என்று கேட்கும் போது சங்கடமாக இருக்கும். பொன்னம்மாளும் சில நாள் கோபித்துக்கொள்வாள்.
காத்தமுத்து , ஓடைப்பங்கை நெருங்கும்போதே வழக்கம் போல் அவனுக்குத் தெரிந்துவிட்டது. உடனே, கண்ணி வைத்திருக்கும் வயலில் இறங்கி… கணுக்கால் சேற்றில் அகலக்கால் போட்டு நெருங்கினான்.
ஒற்றை மடையான் ஒன்று சுக்கில் சிக்கி… விடுபட முடியாமல் இறக்கையை அடித்துக்கொண்டு தவித்தது. லாவகமாக அதன் கழுத்தைக் கவ்விப் பிடித்துத் தூக்கினான்.
‘ என்னை விட்டுவிடு ‘ என்பதுபோல் பிடித்திருக்கும் அவனது கைகளின் மேல் இறக்கைகளால் படபடத்தது.
அதனுடைய உடலிலிருந்தே ஒரு இறகைப் பிடுங்கி, அதன் கண் ரப்பை மேல் குத்தி இழுத்துக் கட்டினான். இரண்டு பக்கத்து இறக்கைகளையும் முறுக்கி முதுகுப்பக்கம் வைத்தான்.
இனி அதனால் பறக்க முடியாது!
ஒற்றை மடையானாக விழுந்தால்… வியாபாரத்துக்குப் பெரும் சங்கடம். கொஞ்சம் கறிதான் இருக்கும். யாரும் வாங்க மாட்டார்கள்.
யோசித்தான். ‘பொன்னம்மாளும் நீண்ட நாளாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். பேசாமல் வீட்டுக்கே கொடுத்துவிட்டால் என்ன…?‘ என்று பட்டது.
காத்தமுத்து தூரத்தே குடிசையை நோக்கி மடையானோடு வருவதைப் பார்த்த அவனது குழந்தைகள் கும்மாளமிட்டன.
‘ நிஜமாகவே எடுத்து வருகிறாரா…?‘ என குடிசையை விட்டு வெளியே வந்து பார்த்த பொன்னம்மாளும் மகிழ்ந்தாள்.
அதே வேளையில்… ஊர்க் கடைசியில் இருக்கிற ஜயனார் கோயில் மூங்கில் தோப்பில் இறக்கை முளைக்காத மூன்று மடையான் குஞ்சுகள்.
‘இரை தேடப்போன அம்மாவை இன்னும் காணோமே‘ என்கிற பீதியில் கூட்டுக்குள் கிடந்த குஞ்சுகள் கலவரம் அடைந்தன.
வழக்கமாக இந்த நேரத்துக்கு எல்லாம் அம்மா வந்துவிடுவாளே… இன்று இன்னும் காணோமே. இரவு வந்துவிட்டால், கண்வேறு தெரியாதே என்ற கவலையில்…அவை ‘கீச்…கீச்…‘ என அழ ஆரம்பித்தன. அந்தச் சத்தம் மூங்கில் தோப்பு முழுவதும் எதிரொலித்தது.
குஞ்சுகள் தேடுகிற அம்மா இனி வர மாட்டாள்.
அவள் காத்தமுத்து வீட்டு மண் சட்டியில் கொதித்துக் கொண்டிருந்தாள்.
தனது மூன்று குஞ்சுகளுக்காக இரை தேடப்போன ஒரு அம்மாவைத் தனது மூன்று குழந்தைகளுக்கு உணவாக்கி விட்டாள் இன்னொரு அம்மா.
அம்மா, அம்மாவைச் சமைக்கிறாள்.
சிறுகதை வெளியான இதழ்- ஆனந்த விகடன் 26.1.1997

No comments: