Wednesday, February 29, 2012

பிரைவேட் நம்பர் காலிங் யூ....! நேரம் நள்ளிரவு 12:00 மணி



ஆழ்நிலை தூக்கத்தில் மிதந்துக் கொண்டிருந்தேன். ‘செல்லம்...ஐ..லவ்.... யூ’ என்று கைபேசியில் பிரகாஷ்ராஜின் குரல் என்னை எழுப்பியது. தூக்கம் கலைந்து, கண்களை மூடியவாறுப் பேசத் தொடங்கினேன்.

“வணக்கம் யார் பேசறிங்க..?”

“வணக்கம் மணி, நான்தான் தேவி பேசறேன்.”

பெயரும் குரலும் பரிட்சயமில்லாததால், தொலைபேசி எண்ணைக் கவனித்தேன், ‘ப்ரைவட் நம்பர்’ என இருந்தது.

“ம்.. நீங்க...”

“பார்த்திங்களா மறந்துட்டிங்க...என்னங்க நீங்க..”
“...................” (நான்)
அந்த குரல் மீண்டும்,

“நீங்களும் மறந்துட்டிங்களா..?” அவள் அழுதாள். அது அழுகையா சிணுங்கலா என்று தெரியவில்லை. நான், “அப்படியில்லைங்க.. எனக்கு ஞாபக சக்தி குறைவு. நீங்களே சொல்லுங்களேன்.” என்றேன்.

அவள் செல்லமாகச் சலித்துக் கொண்டாள். “ம்.. நானே சொல்றேன். நான் தேவி. ஒரு தடவை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சந்திதிருக்கோம். நீங்கதான் அறிவிப்பு செய்தீங்க...கவிதைகூட சொன்னீங்க. நான், கடைசியா உங்ககிட்ட வந்து பேசி உங்கள் கையொப்பம் கேட்டேன். நீங்களும், ‘நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் நண்பன்’ ன்னு எழுதிக் கொடுந்தீங்க..”

ஏதோ ஒரு பெண்ணின் முகம் லேசாக நினைவுக்கு வந்தது. கண் திறக்காமல் சிரித்தேன்.

“ஓ, நீங்களா..? உங்களுக்கு மட்டுமில்லை நான் எல்லார்க்கும் அப்படித்தான் கையெழுத்து போடுவேன். சரி என்னங்க இந்த நேரத்தில்..?” என்றேன். “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். பேசலாமா..?” தூக்கம் ஒரு புறம் இழுத்தாலும், மறுபக்கம், அந்த தேவியின் குரல் என்னை இழுத்தது.

“ம்.. என்ன பேசப் போறிங்க..?” என்று கேட்டேன்.

“தற்கொலை செய்துக்கிறது கோழைத்தனமா..?” என்று பதில் கேள்வி கேட்டாள் தேவி.

 “ஏங்க திடிர்னு இந்த கேள்வி..?”

“பதில் சொல்லுங்களேன்..”

“தற்கொலை செய்றது தைரியமான செயல்..”

“அப்படியா..?!”

“ஆமாங்க, வாழ்க்கையை முழுமையா வாழ பயந்து சிலர் எடுக்கிற சில நிமிட தைரியமான முடிவுதான் தற்கொலை.சரிங்கா ஏன் இப்படி ஒரு கேள்வி..?”
தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போய் முழு விழிப்பு நிலைக்கு வந்திருந்தேன்.

“நான் தற்கொலை செய்யலாம்னு இருந்தேன்” என்றாள் தேவி. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

“என்னங்க சொல்றிங்க..?”

“அவசரப்படாதீங்க..இன்னும் சொல்லி முடிக்கல..தற்கொலை செய்யலாம்னுதான் போனேன். அப்போ ஒரு ஆசிரமத்தின் தொலைபேசி எண் கிடைச்சது..சரி கடைசியா என் பிரச்சனைக்கு இங்க தீர்வு கிடைக்கலாம்னு நினைச்சி போன் செய்தேன். அவங்க பேசினது எனக்கு ஆறுதலா இருந்தது. தற்கொலை முடிவை கைவிட்டுட்டு, இப்போ அந்த ஆசிரமத்துலதான் இருக்கேன்.”

எங்கள் பேச்சை மேலும் தொடர விடாமல், இடையில் புகுந்தது அவன் குரல்,

“மாமா இன்னும் தூங்கலையா? மணி என்ன மாமா...?”

“போன் பேசறன்.. மணி ஒன்னாவப்போகுது. நீ தூங்குடா. நான் அப்பறம் தூங்கறேன்..”

“ச..ரி மாமா..”

வார்த்தைகளை உளறி, அந்தக் குரலின் தூக்கம் தொடர்ந்தது. அது என் அத்தை மகன். அத்தை வீட்டில் வேலை நிமித்தமாக தங்கியிருப்பதால் அவனோடு ஒரே அறையைப் பகிர்ந்துக் கொண்டிருந்தேன்.

‘அப்படியென்னங்க பிரச்சனை.?”

“அதை தெரிஞ்சி நீங்க ஒன்னும் செய்ய முடியாதே.. ஏன் கேட்கறிங்க..?..ம்..”

“என்னைப் பொறுத்தவரைக்கும், நம்மை சுற்றி நடக்கும் எல்லாவற்றுக்குமே.. ஒரு காரணம் இருக்கும்.. இப்போ நீங்க இந்த நேரத்தில் என்கிட்ட பேசறது கூட ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்னாதான் இருக்கும்னு நம்பறேன்..” என்றேன் சிரித்தவாறே.

“பரவாயில்லையே, கவிஞருக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கே.. சரி..சரி என் கதையைக் கண்டிப்பாகச் சொல்லணுமா..?”

“தேவி. அது உங்கள் விருப்பம்.. நாளைக்கு காலையில நான் அலுவலகத்தில் இருக்கணும். அதுக்குச் சீக்கிரம் படுக்கணும். நாம நாளைக்குப் பேசலாமா..?”

“ம்.. சரிங்க மணி. நாளைக்கு நானே ‘கால்’ செய்றேன். குட் நைட்..”

பேசி முடித்த பிறகு, யோசித்தபோது அன்று சந்தித்தவளின் முகம் ஞாபகத்தில் வரவில்லை. தற்கொலை செய்யும் அளவுக்குத் தேவிக்கு அப்படி என்ன பிரச்சனை..?

ஒருநாள் தானே பார்த்தோம். அதை ஏன் என்கிட்ட சொல்லனும்..? இப்படிப் பல கேள்விகளுக்கு நாளை பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தலையணையில் முகம் புதைத்தேன்..
--------------------------------------------------------------------------------
மறுநாள் காலை நாளிதழ் படித்ததும் அதிர்ச்சி. இளம் பெண் தற்கொலை என்றிருந்தது. உடனே கைபேசியை எடுத்து நேற்று இரவு பேசிய எண்ணை தேடினேன். இரவு பேசியதாக எந்த எண்ணும் இல்லை. குழப்பம் என்னைச் சூழ,

நேற்றுத் தேவியிடம் அவளது பிரச்சனையை கேட்டிருக்கலாமே என தோன்றியது. ஒரு வேளை அவளது தற்கொலைக்கு நானும் மறைமுகக் காரணமாக இருந்திருப்பேனோ..? அவள் தற்கொலைக்கு முன்தான் என்னிடம் பேசினாளோ..? ஒருவேளை போலீஸார் அந்தக் கைபேசியை பரிசோதித்தால், என் மீது சந்தேகம் திரும்புமோ..?

தற்போதுதான் எழுத்தாளனாகவேண்டும்ன்னு போராடி அச்சமயத்தில் கிடைத்த அரசு வேலையில் சேர்ந்து குடும்ப பாரத்தை குறைக்கத் தொடங்கியுள்ளேன். இந்த நேரத்தில் இப்படியோர் இடியை என் குடும்பம் தாங்காது. இன்றைய தினம் சீக்கிரமே வீடு திரும்பிவிட்டேன். சீக்கிரம் என்பது எங்களைப் பொருத்தவரை இரவு மணி 10.00.

இரவும் எனக்குப் பகல் போலத்தான் தோன்றியது. ஏனெனில் காலையில் ஏற்பட்ட குழப்பம் என்னை யோசிக்கவிடாமல் தடுத்தது. நள்ளிரவு மணி 12.00.

“செல்லம்..ஐ..லவ்.............................”

கைபேசியைத் தொடர்ந்து கத்தவிடாமல் உடனே எடுத்தேன். மறுமுனையில் அவள்தான்..

“என்ன மணி பயத்தில் இருக்கிங்களா...?”

“என்ன...எ...ன்...ன... சொல்றிங்க..?”
 
“இல்ல..அமைதியா இருக்கிங்க அதான் கேட்டேன்”

 பெருமூச்சுடன் ஆரம்பித்தேன்,“இப்போதாவது உங்கள் பிரச்சனை என்னன்னு சொல்லுங்களேன் ப்லீஸ்” அவள் சிரித்தாள்.

அவள் இன்னும் உயிரோடு இருப்பது எனக்கே என் உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது. எப்படியும் இன்று அவளது பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுத்தேயாக வேண்டும் என முடிவெடுத்தேன்.

“எல்லாத்தையும் ‘போன்ல’ சொல்ல முடியாது மணி. வேணும்னா நான் தங்கியிருக்கும் ஆசிரமத்துக்கு வாங்களேன்....”

 “அதுக்குள்ள நீங்க ஏதும் செய்துக்க மாட்டிங்களே.?”

“ச்சே..ச்சே.. முகவரி கொடுக்கறேன் எடுத்துக்கோங்க...”

தேவி சொன்ன முகவரியைக் குறித்துக் கொண்டேன்.

 “மணி நீங்க வந்து நான் நெறைய பேசனும். ஏன்னு தெரியலை உங்ககிட்ட சொன்னால் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்னு தோணுது அதான்.. தப்பா எடுத்துக்காதிங்க.. நான் தப்பான பொண்ணு கிடையாது..!”

என்றவாறே அவள் மெல்ல கலங்கினாள்.

“தேவி. நான் அப்படி நினைக்கலை, கவலைப்படாதிங்க. உங்கள் பிரச்சனைக்கு என்னால தீர்வு கிடைக்கும்னு நீங்க நம்பறீங்க. நிம்மதியா இருங்க நாளைக்குச் சந்திப்போம்.”

 இவ்வாறு பேசி முடிக்கவும், என் அத்தை மகன் படம் பார்த்துவிட்டு படுக்க என் அறைக்கு வரவும் சரியாக இருந்தது.

“என்ன மாமா.. இப்போல்லாம் ராத்திரி அடிக்கடி ஏதோ பொண்ணுகிட்ட பேசறிங்க.. இதெல்லாம் நல்லாயில்லை..”

“ஏன் ரவி..?”

 “இல்ல..! எனக்கும் ஒரு நம்பரைக் கொடுத்தா நாங்களும் பேசுவோல..”

 “அடப்பாவி .. அதான் மாமான்னு கூப்ட்றியா என நக்கலடித்தேன் ..?”

படுத்துத் தூங்குடா..என பேச்சை அத்தோடு முடித்துக்கொண்டேன் .” - மாமா என்ற ,மரியாதையை இழந்துகொள்ள துணியவில்லை.

மறுநாள் அதிக சிரம்மில்லாமல் தேவியின் வீட்டை அடைந்தேன், இல்லை... அது, ஆசிரமம்தான் ஆனால் பார்ப்பதற்கு வீடு போல் இருந்தது.

இப்போது பல இடங்களில் வீட்டை வாங்கிச் சில பிள்ளைகளை வைத்து இது ஆசிரமம் என்று சொல்லி பணம் வசூலிக்கும் கூட்டம் பெருகி வருவது என நினைவுக்கு வந்தது.

ஆசிரமத்தின் வெளியே நின்றேன். “தேவி” என அழைத்தேன்.

 “பரவாயில்லையே , சொன்ன மாதிரி வந்துட்டிங்களே..?” தேவியின் குரல்தான் அது. என் பின்னால் இருந்து கேட்டது.

திரும்பி, “என்னங்க உள்ளே இருந்து வருவிங்கன்னு பார்த்தா என் பின்னால இருந்து வரிங்க...! ” என்றேன். அவள் சிரித்தாள்.

 ஓ! இவளா? அன்று பார்த்தவள் தான் என சமாதானப்படுத்திக்கொண்டேன் மனதை . அவள், “கொஞ்சம் வெளியே போயிருந்தேன். நல்லவேளை சீக்கிரமா வந்துட்டேன்... வாங்களேன்... நடந்துகிட்டே பேசலாம்... ”என்றாள்.

நடக்கத் தொடங்கினோம், பல நாட்கள் பழகியவள் போல் அவளது அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ளத் தொடங்கினாள்

“ஏன்னு தெரியலை மணி..! உங்ககிட்ட என் சோகத்தை சொன்னாக்கா... எனக்கு ஆறுதல் கிடைக்கும்னு தோணுது, அதான் சொல்றேன்.. நான் உயிருக்கு உயிரா காதலிச்சவன் என்னை ஆபாசமா படமெடுத்து என்னையே பயமுறுத்தினான்.

எனக்கு வேற வழி தெரியலை..அதான் தற்கொலைக்குத் தயாரானேன்..ம்... ஆனால் அது முடியலை.... இப்போ இந்த ஆசிரமத்தில் இருக்கேன் .அதும் எவ்வளவு நாள்னு தெரியலை..” பேசிக்கொண்டே வந்தவள் திடீரென அமைதியானாள்.

நடந்துக் கொண்டே அவளுக்கு ஆறுதலாகப் பேச ஆரம்பித்தேன்.


“தேவி, இப்போ இந்த மாதிரி ரொம்ப நடக்குது. காதலிக்கறதா சொல்லி பொண்ணுங்களை இப்படி படமெடுத்து அந்த பொண்ணுங்க வாழ்கையையே நாசமாக்கிடறாங்க.. அவங்களை..”

என நான் முடிப்பதற்குள், ஆவேசமாக, அவள் சொல்கிறாள் “கொல்லணும்... கொல்லணும்... நிச்சயம் கொல்லணும்..”

தேவியின் குரல் மட்டும் கேட்கின்றது. சட்டென்று திரும்பிப் பார்க்கிறேன். இதுவரை என்னுடன் நடந்து வந்தவளைக் காணவில்லை. சுற்றிலும் தேடுகிறேன். அவளைக் காணவேயில்லை. எனக்கு உடம்பெல்லாம் வியர்க்கத் துவங்குகிறது. இது எப்படிச் சாத்தியம்...! என் கழுத்தில் இருக்கும் முருகனின் படத்தைப் பிடித்தவாறே மீண்டும் ஆசிரமத்தின் வாசலில் நிற்கின்றேன்.

ஒருவர் உள்ளிருந்து வந்து என்னை விசாரித்துவிட்டு , “அப்படி யாரும் இங்க இல்லைங்க தம்பி. இங்க சின்ன பிள்ளைங்கதான் இருக்காங்க..” என்று சொல்லி, என் பயத்திற்கு அணைவெட்டுகிறார். பயம் என் உடலில் பரவி இன்னும் கூடுதலாக வியர்க்க ஆரம்பித்தது.

தேவியின் முகத்தை வேறேங்கோ பார்த்ததுபோல் தோன்றுகிறது. மூளையைக் கசக்கி யோசிக்கிறேன்.

ஆமாம்...ஆமாம்... ஒரு முறை அத்தை மகன் ரவியின் கைபேசி விடியோ ரெக்கார்டரில் ஏதோ ஒரு பெண்ணின் நிர்வாணப்படம் இருந்தது. அன்று அவனை திட்டியதும் புத்திமதி சொன்னதும் நினைவு வந்தது.... அது..அது.. தேவியின் முகம்தான். அன்று இளம் பெண்ணின் தற்கொலை என பத்திரிக்கையில் வந்த படமும் இவளுடையதுதான்.

அப்படியென்றால் ரவிதான் அவனா.....! குழப்பத்துடன் வீடு திரும்பினேன்.

இரவு மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க, அத்தை புலம்பினார், “என்ன புள்ளயோ எப்பப் பார்த்தாலும்... விடிஞ்ச பிறகுதான் வீட்டுக்கே வரான்..என்னதான் செய்யறதோ தெரியலை..”

ரவி இன்னும் வீடு திரும்பவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டும் கிடைக்கவில்லை. முதல்நாள் நள்ளிரவு இருந்து நடந்தவை எல்லாம் என் மனதில் இன்னொருமுறை திரைப்படம்போல் ஓடியது.

தேவியின் அழைப்பு
பத்திரிக்கைச் செய்தி,
தேவியின் மறு அழைப்பு,
ஆசிரமப் பயணம்
கொல்லணும் நிச்சயம் கொல்லணும்
மாயமாகும் அவள்
அந்தப் பேருல யாருமில்லைங்க தம்பி.

அப்படியென்றால், அவள் கொன்றது...

 நள்ளிரவு மணி 12.00.

தூக்கிவாரிப்போட்டது எனக்கு... என் கட்டிலுக்குப் பக்கத்தில் ரவியின் கைபேசி அலறியது. முன்பு நான் பல முறை முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியாத அதே கைபேசி.


அலறிக் கொண்டிருக்கும் கைபேசியில், அழைப்பவரின் பெயரை அதிர்ந்து போய் பார்க்கிறேன்.


அது ‘பிரைவட் நம்பர்' என்று பளிச்சிடுகிறது!

No comments: