Friday, February 17, 2012




பின் தொழுவத்தில் கறவை மாடு பால்
கறக்கப்படுவதாய் உணர்த்தும்
தூக்குவாளி கைப்பிடி சத்தம்
பொழுது புலர்ந்ததையும்  கொம்பையன்
வந்துவிட்டான் என்பதையும் உணர்த்தியது..

பாம்பு தீண்டி இறந்து போன கன்றுக்குட்டியின்
நினைவாலேயே மாண்டு போன
செவளப்பசு போனதும் ஏர்வாடி சந்தையில்
வாங்கி வந்த பசு இது ..  அதன் தேஜஸான
உடற்கட்டும் குரலும் அதன் செழுமையான நிறமும்
விரைவிலேயே வீட்டில் உள்ள எல்லோருக்கும் பிடித்துப்போனது..

மணி நான்கை தொட்டிருக்கும் போது
ரேடியோவுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கும் ஜீவன் ஒன்று
நினைவேற்றம் செய்தது..  அன்று ஞாயிற்றுக்கிழமைதானென்று
வழக்கமாக ஞாயிறென்றால் வீடே கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளும்

நான் வெள்ளனே எழுந்து முன்வாசல் கடந்து மொபட்டை உதைத்து
மூலமடை வழியாக வயலுக்கு போகும் வழியிலே
கூலியாள் வீட்டைச்சத்தம் கொடுத்தேன். பதில் இல்லாததால்
இரண்டு முரை ஹாரனை அழுத்த அவன் பெஞ்சாதி அய்யா போங்க பொறத்தாலே அனுப்பி வைக்குறேன் வயலுக்கு என்று மென்று முழுங்கினாள்.

நேரே வயலுக்கு போய் கொத்திப்போட்டிருந்த நஞ்சைக்கு இன்று நீர் பாத்தி அடிக்கலாம் ஞாயிற்றுகிழமை என்பதால் வேறு எவனும் முன்னேறப்போவதில்லை என்பதால் தாழ்மட்ட வயலை முன்னே நிரப்பலாமென்ற சிந்தையில் இருந்தேன்.  

நேரங்கடக்க கூலியாள் கருப்பன் வருவது போல தெரியாததால் பஞ்சாயத்து கூடத்தில் வைத்திருந்த மண்வெட்டி எடுத்து நானே பாத்தி திருப்பி விட்டுக்கொண்டிருக்கையில் தன் லொட லொட சைக்கிளில் வந்து குதித்தான் கருப்பன்.  ஏலேய்... மண்ணாங்கட்டி உண்ட என்னாலே சொன்னே காலையில திருப்பி விட்டா இளவெயில் சுடுறதுக்குள்ளே நீரெரங்கும்ன்னு தானலே வெரசலா வரச்சொன்னேன் என கொஞ்சம் காட்டம் காண்பித்தேன்.  அந்த காட்டமான குடல் அந்நாள் முழுவதும் அவன் மூச்சுவிடாமல் வேலையை முடித்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

வயலை கவனிக்கச்சொல்லிவிட்டு வரப்பிலேறி மடையில் ஆழமில்லாத இடத்தி கால் கழுவி விட்டு அண்ணாரும் போது சூரியன் கொஞ்சம் இளஞ்சூடாக எட்டிப்பார்க்க தயாராக இருந்தது அந்த குளிர்காலைக்கு கொஞ்சம் இதமாகவே இருக்க வீட்டிற்கு விரைந்தேன் அந்நாளைய தினத்தந்தி கையில் புரளும் போது அஞ்சுகம் காபி கம்பேனி - வாசனை மணக்கும் காபி நாவுக்கு ருசியாக கொஞ்சம் சாய்வு நாற்காலிக்கு முதுகு கொடுக்கும் போது அவன் கண்ணுக்கு தென்பட்டான்.

தன்னை ஒரு கூத்துக்கலைஞன் என அறிமுகம் செய்து கொண்டான்.

எனக்கு அதன் உள்ளார்ந்த அர்த்தம்
புரியாமலே தலையாட்டி விட்டு
என்ன சேதி என்றேன்.

ஊரூரா போய் கூத்து கட்டுவோம் இப்போ வழி முடிஞ்சிபோச்சி வயிறும் காய்ஞ்சி போச்சி அய்யா பார்த்து ஏதாவது என்று இளுக்க ....

காசு ஏதும் வேணுமாடே இல்ல நெல்லு துணிமணி ஏதும் தரச்சொல்லவா என்க...

அதெல்லாம் அய்யா தாராளமுங்க ஏதாவது வேலை இருந்தால்
கொடுங்க சனத்த்க்கு அண்டிப்பொழைச்சுப்போமுங்க  என்றான்,

கலைஞன்னு சொன்னவன் கல்வயித்துக்கு வழி இல்லாம வந்து நிக்குறானேன்னு கொஞ்சம் மனக்குடைச்சல் இருந்தாலும் உழைக்கிறேன்னு நிக்குறான் பிச்சைகேட்காமல் அந்த கர்வம் புடிச்சதால


ஏதாவது செய்யச்சொல்லலாமுன்னு நினைக்கும் போது யோசனைக்கு வந்தது
வெள்ளக்கோவில் பக்கமா ஏலத்தில் வாங்கிப்போட்ட கருவேலமரக்காட்டின்
அபரிமித வளர்ச்சி விறகுக்கடைக்கு வெட்டி அனுப்பப்பட வேண்டிய சூழலில்
இருப்பது நினைச்சாலும் அசலூர் காரனுக்கு கொடுத்தா தப்பாயிடுமோன்னு மனசுக்கு பட கொஞ்சம் தயங்கி  நாகரத்தினத்துக்குட்ட ஒரு வார்த்த கேட்டேன்.

நாகரத்தினம், எனக்கு மணப்படையிலிருந்து வாக்கப்பட்ட பெஞ்சாதி என் முன்ன பேச பயந்தாலும் வேலைக்காரவங்களை கணக்கா நடத்துறதும் காரியமுன்னா கொடுக்குறதுமா படித்தறியாத அனுபவஸ்தி... அதனாலதான் அவகிட்ட கேட்டேன்.

அனுசரனையா நாலுவார்த்தை கேட்டுட்டு அட்சரம் பிசகாமல் அவனுக்கான வேலையைச்சொன்னாள் அவனும் சரிங்கம்மா என கேட்டுக்கொண்டான்.
நானும் கூடவே கிளம்பி அவனை மொபட்டின் பின்னால் அமர வைத்து புறப்படத்தயாடானேன். வீட்டுக்குள்ளிருந்து ஒரு சொம்பு நீச்ச தண்ணீர் வந்தது வெளிய போறீக குடிச்சுட்டு போங்கவென..! பின்னாடியே அவனுக்குமொன்றாய்... கொஞ்சம் இதமாக இருக்க மணி 6:30 என தெரியவந்தது....

-contiue...

No comments: