Thursday, February 16, 2012

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் : ஈரான் ??

ஈரான், தனது அணுசக்தி வல்லமையை பகிரங்கமாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் நெருக்கடியையும் மீறி, ஈரான் தன்னை அணுசக்தி நாடாக பிரகடனப்படுத்தி இருப்பது உலக அரசியல் அரங்கில் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய அதிபர் அகமதிநிஜாத், மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது என்றார். ஆக்கப்பூர்வமான அணுசக்திப் பாதையில் ஈரான் தொடர்ந்து நடைபோடும் என்றும் அவர் கூறினார். ஈரான் அணுசக்தி நாடாவதை என்ன விலைகொடுத்தேனும் தடுத்தே தீருவது என்ற நிலைப்பாட்டில் உள்ள இஸ்ரேல், ஈரானை தடுத்து நிறுத்தாவிட்டால் மற்ற நாடுகளும் இதனைப் பின்பற்றக் கூடும் என்று எச்சரித்துள்ளது. பயங்கரவாதத்தின் தாயகமாக ஈரான் திகழ்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.

“உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஈரான் ஏற்றுமதி செய்கிறது. அதன் பயங்கரவாத நடவடிக்கைகள் அனைவருக்கும் தற்போது கண்கூடாகத் தெரிகிறது. உலகின் ஸ்திரத்தன்மையை ஈரான் குலைத்துவிட்டது”, என்று இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.

அதேநேரத்தில், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 6 ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தப் போவதாக வெளியான செய்தியை ஈரான் மறுத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தடைபட்டுள்ள பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும் ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் கடிதம் அனுப்பி இருப்பதை ஐரோப்பிய யூனியன் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை வரவேற்றுள்ள ரஷ்யா, சர்வதேச அணுசக்தி முகமையின் சந்தேகங்களுக்கு ஈரான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

“அணுசக்தி விவகாரத்தை எல்லாமே சர்வதேச அணுசக்தி முகமையின் கட்டுப்பாட்டில் வர வேண்டும். சர்வதேச அணுசக்தி முகமைக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒத்துழைப்பைச் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்”, என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர், செர்ஜிய் லெவ்ரோவ் தெரிவித்தார்.

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா உள்பட பல நாடுகள் நிராகரித்துள்ளன. ஐ.நா. தடை விதித்தால் ஒழிய, தனிப்பட்ட நாடுகளின் தடையை கண்டுகொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ள இந்தியா, ஈரானுக்கு வணிகக் குழுவை அனுப்பும் முடிவில் மாற்றம் இல்லை என்றும் அறிவித்துள்ளது. இதனிடையே, அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானந்தாங்கி போர்க் கப்பலான யு.எஸ்.எஸ்.ஆப்ரஹாம் லிங்கன், ஹோர்முஸ் நீரிணை பகுதிக்கு விரைந்துள்ளது. ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரேல் உறுதியாக இருப்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

No comments: