Saturday, February 18, 2012

நடிகை





அவள் திரை ஊடகத்தில்
தவிர்க்க முடியாத நாயகி
ஆகி இருந்தாள்;

கவர்ச்சிக்கு பெயர்போன
அவளுக்கு அத்தகையதோர் வேடம்
ஒதுக்கப்பட்டுக்கிடந்தது
கிட்டத்தட்ட எல்லா படங்களிலும்

அறிமுகம் செய்த ஒரு
இயக்குனரோடு காதலென்றும்

நடிகர் ஒருவரோடு தொடர்பென்றும்
பத்திரிக்கைகள் அவளை
எழுதி தள்ளிக்கொண்டு இருந்தது

அதையெல்லாம் அவள்
கண்டு கொள்வதாகவே இல்லை..
அது இன்னும் அவளைப்பற்றி
விளம்பரமாக்கி இருந்தது...

புதியதாய் ஒரு இயக்குனர் ஒருவரின்
திகில் கதையொன்றில்
நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாள்.

மலைப்பிரதேசமொன்றில்
படப்பிடிப்புக்காக வந்திருந்தபொழுது
மாலை ஒப்பனை வேளையின் போது

அந்த காட்சியை முதலாவதாக
ஒரு புரொடக்‌ஷன் மேனேஜர்
கண்டிருந்தான்.

தான் தனிமையில் ரசித்து
சிலிர்த்த நாயகி கயிற்றின் பிடி
கழுத்தில் மாட்டப்பட்ட நிலையில்

கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து
கொண்டிருந்தாள் - என
அவன் அறிய வந்த போது

படமாக்க
தயாராகிக்கொண்டிருந்த
அத்தனை டெக்னீஷியன்களின்
காதுகளுக்கும் அச்செய்தி
அறியப்பெற்றிருந்தது.

ஊடகங்களெல்லாம் “உச்” கொட்டின..
மஞ்சள் பத்திரிக்கைகளெல்லாம்
வாயடைத்துப்போயின..

அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்த
தயாரிப்பாளர்களெல்லாம் நெஞ்சுவலி
சிகிச்சையென
அனுமதிக்கப்பட்டிருந்தனர்..

 “யாரென்றறியப்படாத
பிரபல” இயக்குனரின்
போன் ஒலிக்கிறது..!
மறுமுனைக்குரலில்
ஒரு மெல்லிய வனமம்
குடியிருக்கும் புன்னகையோடு

காரியம் முடிந்ததாய்
சொல்லிச்செல்கிறது..


அத்தோடு மூடி மறைக்கப்படுகிறது
கவர்சியான அவள் பிணம்

விற்பனைக்கு தயாராகின்றன
அவளது எச்சில் ஆப்பிள்களும்
அவள் எழுதிய காகித வஸ்துக்களும்!
சில வஸ்திரங்களும் கூடவே...!


-கவிதைக்காரன்...

No comments: