Tuesday, August 14, 2012

நாளை எனக்கில்லை...!!!




மழையில்
குடையிருந்தும்
நனைந்து சிரிக்கும்
குழந்தையாய்..நான்!!

அறிந்தோ அறியாமலோ
எனக்கு மிச்சமிருப்பது
ஒரிருநாள் வாழ்க்கை
மட்டும்..

இன்றோ நாளையோ
எனது
கடைசி நொடி
குறிக்கப்பட்டு விடும்..!!

ஈரம் சொட்டும்
மெல்லடுக்கு
தேகத்தில்
விழுந்து சிதறும்
மழைத்துளிகளின்
உடைதலில்...!!

மகிழ்ச்சியை
தேடும் எனக்கு...
அண்டிய சுவற்றின்
அரையங்குலத்தில்
குறைவாய்
ஒட்டிக்கொள்ளும்
வசதி மட்டும்...

கடைசித்துளி
மேகத்தை ரசித்தவரையில்
எனக்கு நாளை
என்பதில் நம்பிக்கை குறைவு..

மிச்சமாகிப் போவது
நேற்றைக்கு
முளைத்த காளான் என்ற
பெயர் மட்டுமாய்...!

ஆனால் வாழ்ந்தவரைக்கும்
தலை நிமிர்ந்து வாழ்ந்தேன்
என்று நெஞ்சம் நிமிர்த்திய
குரலை
பதித்துவிடுகிறேன்
இன்றே...!





No comments: