Sunday, August 26, 2012

தந்தையாய்...


கட்டிலின் மேல் காங்ரீட் கூரைகளில் பட்டு
எதிரொளிக்கும் உயிர்முனை கேவல்..!
உயிரணுவின் விளையாட்டின்
தவம் திறந்து வெளிப்படும் உயிர்ப்பூ..!

அத்தனை துடிப்பிலும் உயிர் போகும்..
வலிகளை வார்த்தைக்கு கொடுக்காமல்
மூர்ச்சைக்குள் மூழ்கிடமாட்டாமல்
நாசிகள் தடுமாற சுவாசம் தடம் மாற

அஃகென்னும் அழுந்துதலில் கட்டுப்படுத்தும்
இரட்டை நாடகம் தொடர…அடி நாதத் துடிப்பின்
முணகலிலும்: வில்லென விறைத்து
வானுக்கும் பூமிக்குமிடையே

பயணிக்கும் உணர்வின் மூன்றாவது அத்யாயம்
முற்றுப்பெறுவதற்குள் உன் முன் ஜென்மங்கள்
கண்ணில் வந்து போகும் இளவேனில் நாளில்

தொட்டிலுக்கு வரப்போகும்
நம் ஈரைந்து திங்களின் தவத்தை வரமாக்கி
பெற்றெடுத்தாய் …!
நீ….!!!

வார்த்தைகளுக்கு அடங்கமாட்டாமல்
கண்ணீர்பூத்து கரங்களில் அந்த பிஞ்சுதேகம்
ஏந்தும் வரை

நீ உணர்ந்த உன் அத்தனை வலிகளும்
அந்த நிமிடம் வரை என் நெஞ்சில்
சுமந்தவனென்பதை

என் கண்ணீர் காட்டிக்கொடுப்பதை ...
மறைக்க மறந்தவனாக தந்தையின் செறுக்கும்
கணவனின் தகிப்பும் நிறைந்துபோய் நான்..!
உன்
புன்னகை சேமித்துக்கொண்டிருந்தென்...


-கவிதைக்காரன்

No comments: