Thursday, November 10, 2011

தாயின் தாலாட்டு......

*

கண்ணுக்குள் தூளி கட்டி
கருப்பாலே மை வைச்சு
தங்கமவன் இவனென நான் படிச்சேன் தாலேலோ..

பச்சரிசி தேகமென்ன
பால் மணக்கும் வாசமென்ன
நித்தமிவன் நலம் வாழ நான் படிச்சேன் தாலேலோ..

கன்னுக்குட்டிபோல
என் கருவறைக்குள் நீ துள்ள
சிறுக்கிமக நான் வைச்சு துடிக்க பார்ப்பவர் கண்ணுக்கு சிரிச்சு மழுப்பி ரசிச்சபிள்லை பத்திரமாதூங்க
நான் படிச்சேன் தாலேலோ..

பேறுகாலம் கொண்ட என்னை
பார்க்கவந்த உறவெல்லாம்; கொள்ளை அழகுன்னு
உன் கன்னம் கிள்ள போறாவன்னு
விளையாடும் உன்னை நானும்
தூங்குறான்னு பொய் சொல்லி
தூளியிலே மறைச்சு வைச்சு பாடி நின்னேன் தாலேலோ...

தவழ்ந்து நீ வரும் போது தரணி நட்ச்சத்திரப்புள்ள
தரையில கால் படுமோன்னு முந்தானை விரிச்சி
உன்னை முத்தமிட்டு நான் படிச்சேன் தாலேலோ..

எழுந்து நின்னு நீ நடக்க எட்டி நானும்
கைப்புடிக்க எழுதத வார்த்தையெல்லாம் உன்வாய் எச்சிலில் வடிக்க கட்டித்தங்கமேன்னு கட்டியணைச்சு
நான் படிச்சேன் தாலேலோ..

அட்டினக்கால் போட்டுகிட்டு அசதிபோல
தூங்கும் போதும் ;அம்பாரி யானையின்னு அப்பன்மேல் விளையாடும் போதும் அம்மாக்காரி நான் சிலிர்த்து மனசுக்குள் படிச்சேன் தாலேலோ...

தொட்டிலைத்தேடும் பிள்லை கட்டிலுக்கடியில் ஒளிஞ்சு
கன்னக்குளி விழுக கண்ணாட்டிச்சிரிக்கயில
பொசுக்குன்னு உடைஞ்சி போயி.. பொழுதுக்கும் நன் படிச்சேன் தாலேலோ...


உறங்காயோ கண்மணியே
என் உதிரத்தின் கருத்தரிப்பே...
உனக்கேதான் என் உயிர்துடிப்பே...!
உறங்காயோ கண்மணியே...! தாலேலோ...!

No comments: