Saturday, October 8, 2011

ஒரு காதல் இழுத்துச்சென்றதென்னை மெல்ல இருளுக்குள்.....


நெல்லை யோவான் கல்லூரி வாட்டர்டேங்க் திருப்பத்தில் தூத்துக்குடியிலிருந்து புதிய பேரூந்து நிலையம் சென்னுகொண்டிருக்கும் தமிழ்நாடு அரசுப்பேரூந்து பயணிகள் இறக்கத்திற்க்குப்பின் காவல் ஆணையாளர் அலுவலகத்தை தாண்டியது.

இரு பார்ல்ங் கடக்கும் முன் தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி ஏ.டி.எம் வாசலிலிருந்து திடீரென்று வெளிப்பட்ட நபரை கவனிக்காது ஓட்டுனர் ப்ரேக் பிடிக்கும் போது பேரூந்தின் பின்னால் பைக்கில்
வந்து கொண்டிருந்த ராஜா. சற்று கவனியாது போக அவன் பைக் அவனது கட்டுப்பாட்டில் இல்லை சரேலென்று திரும்பிய பைக்.. தன் கட்டுப்பாட்டை இழந்து, தன் சக்கரங்களுக்குக் கீழே இருந்த மணல் மீது சறுக்கி …. எதிரே இருந்த தன் கல்லூரி வளாகச்ச்சுவரில் மோதியது.


படுவேகமாக…. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் தூக்கி வீசப்பட்டார்கள் வண்டியை ஓட்டிவந்த ராஜாவும், பின்னால் அமர்ந்திருந்த சக்தியும். கல்லூரி வளாகச்சுவர் மறுசீரமைப்பு கட்டிட
வேலைக்காக மணலும், கருங்கற்களும் கொட்டப்பட்டிருந்தது. பின்னால் இருந்த சக்தி மணல் மீது விழுந்து சிறிய காயங்களோடு தப்பிக்க, ராஜா குவித்து வைக்கப்பட்டிருந்த
கருங்கற்கள் மீது தலைகுப்புற விழுந்தான்.
அங்காங்கே நின்றிருந்த கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சியின் விளிம்புக்குப் போக, கல்லூரி மாணவிகளின் அலறல் சத்தம் காதில் விழுமுன் இரத்தச்சிதறல்களுடன் மயக்க நிலைக்குப் போனான் ராஜா....!
இரண்டு நிமிடம் தான்… யாருக்கும் எதுவும் புரிவதற்குள் நடந்துவிட்டது அந்த விபரீதம்.
என்ன அலறல் என்று புரியாமல் மொத்த ஆசிரியர்களும் வங்கி ஊழியர்களும் சாலையில் போவோர் வருவோரும் ஓடி வந்தார்கள். மாணவர் கும்பல் அதற்குள் சுதாரித்து இருவரையும் தூக்கி கிடைத்த
வாகனத்தில் ஏறி ஹைகிரவுண்ட் மருத்துவமனை நோக்கிப் பறந்தது.
என்னப்பா என்ன ஆச்சு ? எப்படி நடந்தது ? ஆளாளுக்கு விசாரணைகள் செய்து கொண்டிருந்தார்கள். மாணவிகள் அழுகையும் படபடப்பும் விலகாத கண்களுடன் கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
ராஜா, தூய யோவான் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவன். எந்த குறிப்பேட்டிலும் தன்னைப்பற்றி கறுப்புப் புள்ளி வந்துவிடக்கூடாது என்று கவனத்துடன் இருப்பவன். கல்லூரியின் எல்லா மட்டங்களிலும் அவனுக்கு நண்பர்கள், காரணம் அவனுடைய மனம் மயக்கும் நகைச்சுவைப் பேச்சும், மனசை கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் அழகான கவிதைகளும் தான்.போதாதகுறைக்கு அவன் இருக்கும் இடம் கலகலப்பின் கூடாரம் அது போதாதா நண்பர்கள் கூட்டம் சேர்வதற்கு ? கல்லூரியின் விழாக்களில் அவன் கவிதைகள் எப்போதும் பரிசு வாங்கத் தவறியதில்லை. காண்டீன் மேஜைகளில் தாளமிட்டு கல்லூரி துவங்கும் வரை நண்பர்களோடு பாட்டுப்பாடி, டீ குடித்து கதை பேசி, இப்படியே கலகலப்பாகிப் போன நாட்களில் தான் இப்படி ஒரு விபரீதம் நடந்தது.

இதுவரை பைக்கில் சிறு விபத்துக்களைக்கூட சந்திக்காத ராஜா ஏன் இன்றைக்கு மட்டும் இப்படி விபத்தில் சிக்கினான் அடிபடணும்னு விதி... பாவம் டா அவன்…நடுத்தரகுடும்பத்திலிருந்து வந்தவன் ” இப்படி ஆகிவிட்டதே எனவும் . சக்திக்கு எதுவும் ஆகாமல் போனதே . என்றும் பரிதாபச்சொற்களால் மொத்த மாணவர்களுக்கும் விஷயம் காட்டுத் தீயாய்ப் பரவிக்கொண்டிருந்தது.
கல்லூரி துவங்குவதற்கு இன்னும் 15 நிமிடங்கள் தான் பாக்கி.
கல்லூரியின் கடைசிக் கட்டிடத்தின் ஓரத்தில் இருந்த நூலகத்தில்ராஜாவின் வருகைக்காகக் காத்திருந்தாள் வைஸு. கூடவே அவள் தோழிகள் பிரியாவும், வித்யாவும்.
வைஸ்ணவி, ராஜாவின் காதலி.
காதல் என்றால் கொஞ்ச நஞ்சக் காதலல்ல. கல்லூரியின் அத்தனை பேருக்கும் தெரிந்திருந்த காதல். கல்லூரியில் மூன்றாமாண்டு, அதே ராஜாவின் வகுப்பில் படித்துக்
கொண்டிருப்பவள். கொஞ்சம் ரசிக்குமளவுக்கு அழகு, பளீரென்று விழுந்துவிடுமளவுக்கு மிக மிக… என்று எத்தனை மிக போட்டாலும் மிகையாகாத அழகான சிரிப்பு. இன்னும் வைஸ்ண்விக்கு விஷயம் தெரியவில்லை. கல்லூரி நூலகத்தில் எப்போதுமே மூன்று அல்லது நான்கு பேர் தான் இருப்பார்கள், இன்றைக்கும் அப்படித்தான் வைஸ்ணவி, பிரியா, வித்யா தவிர வேறு யாருமே இல்லை.
வகுப்புக்கு நேரமாகி விட்டது. இந்த மடையன் எங்கே போனான் ? வகுப்பு துவங்குவதற்கு 15 நிமிடம் முன்னதாக காத்திருக்கச் சொன்னான். எங்கே போய் தொலைந்தானோ. சரி வா உன்னை கவனிச்சுக்கறேன். எங்கே போயிடப் போறே.
ஏதாவது கேட்டா ‘காத்திருப்பது தான் காதலுக்கு அழகேன்னு’ டயலாக் வேற. இதை கேட்டுக் கேட்டே காது வலிக்குது. மனசுக்குள் செல்லமாய் திட்டிக்கொண்டே எழுந்தாள் வைஸு.
நூலகம் விட்டு வெளியே வந்த போது தான் கல்லூரியின் பரபரப்பு கொஞ்சம் வித்யாசமாய் தோன்றியது அவளுக்கு. கூட்டம் கூட்டமாய் மாணவர்கள், மாணவிகள்… ம்…ஏதோ போராட்டம் போல இருக்கு.
இன்னிக்கு வகுப்பு இருக்காது… இந்த மடையனைக் கூட்டிக்கொண்டு பாம்பே தியேட்டரில் இயற்கை படத்துக்குப் போக வேண்டியது தான். காதல் வந்தால் சொல்லி யனுப்பு .... இந்த பாடலை அவன் இவளுக்காக ரிங்டோனாய் வைத்துகொண்டு திரிவது காலேஜ் முழுக்க பாப்புலர் அதை நினைத்துக் கொண்டே நடந்தவளை எதிர்ப்பட்டு நிறுத்தினாள் ரெஷ்மி.
“நீ போகலயா வைஸு.. ஆஸ்பத்திரிக்கு ?”
ஆஸ்பத்திரிக்கா ? எதுக்கு ? – புரியாமல் பார்த்தாள் வைஸ்ணவி.
ஐயய்யோ..உனக்கு விஷயமே தெரியாதா ? ராஜாக்கு ஆக்சிடண்ட் ஆயிடுச்சாம். ஹைகிரவுண்ட் – க்கு கூட்டிட்டு போய் இருக்காங்க.
இதை கேட்ட நிமிடத்தில் ராஜா ஆசையாக தன் சென்ற பிறந்தநாளுக்காக பரிசளித்த ஏடி ஸ்டோன் செயினை அது வரை பல்லால் கடித்தவல் சட்டென்று நழுவவிட்டால் . அலறினாள் வைஸ்ணவி .
“எப்போ…? என்ன ஆச்சு அவனுக்கு ?”
‘தெரியலடி… ஒண்ணும் பெருசா இருக்காது கவலைப் படாதே. நீ போய் பாரு.’
சொல்லிவிட்டு நகர்ந்தாள் ரெஷ்மி…
வைஸு-விற்கு இதயம் இருமடங்காய் துடித்தது  ஓடினாள்.செயினை தவறவிட்டதுபோல் கைகள் தவறவிட்ட கீழே தன் கிடந்த புத்தகங்களை அவசர அவசரமாய்ப் பொறுக்கி எடுத்துக் கொண்டே ...
அவளைத்தொடர்ந்து ஓடினாள் பிரியா.


மருத்துவமனை வாயில்..
******************
கூட்டம் கூட்டமாய் நின்றிருந்த மாணவ, மாணவியர் கொஞ்சம் பரிதாபம் கலந்து அவளைப் பார்த்தார்கள். வைஸ்ணவிக்கு கண்முன்னால் எதுவும் தெரியவில்லை. ராஜா-வின் முகம்மட்டும் தான் தெரிந்தது நினைவில்
ஐயோ ராஜா எப்படி கஷ்டப்படுகிறாயோ ? நான் நகம் வெட்டித் தரும்போதே வலிக்கிறது என்பாயே, அது அவனது நல்ல நடிப்பு என்று இவளுக்கும் தெரியும் இப்போது எப்படி இந்த வலி தாங்குகிறாயோ.கண்ணீர் பொல பொலவென்று கண்ணீர் வழிய. கல்லூரி வாசலுக்கு வந்த வைஸுவை தடுத்து நிறுத்தினான் சரவணன்.
‘வைஸ்ணவி… இப்போ நான் உள்ல இருந்து தான் வரேன். இப்போ நீ அங்கே போகவேண்டாம். பிளீஸ்.’ தடுமாறினான் சரவணன்.
“ஏன் என்ன ஆச்சு.. ராஜாக்கு ? பயப்படும் படியா ஒண்ணும் இல்லையே ? “  வார்த்தைகள் குழறி கண்ணீரோடு வந்தன.
அவசர சிகிச்சைப்பிரிவுல சேத்திருக்கோம்.
‘அவசர சிகிச்சைப்பிரிவா !!?’-வைஸுவின் குரல் மேலும் உச்சஸ்தாயிக்குப் போயிற்று.
நோ… நான் அவனை உடனே பாக்கணும்.
‘பிளீஸ் வைஸ்ணவி.. நான் சொல்றதைக் கேளு. நீ இப்போ அங்கே போனாலும் அவனைப்பார்க்க முடியாது… கொஞ்சம் பொறு… போகலாம்.’ சரவணன் பேசப் பேச அதைக் காதில் வாங்காமல் வளாகத்திற்குள் வேகவேகமாய் ஓட ஆரம்பித்தாள் வைஸ்ணவி…

கல்லூரியின் முதல் ஆண்டில் வேறு வேறு பிரிவில் படித்துடிட்டு, இரண்டாம் ஆண்டுதான் ஒரே வகுப்பில் சேர்ந்தார்கள் ராஜாவும் , வைஸ்ணவியும். முதல் பார்வையில் காதல் வரவே வராது கவிதை வேண்டுமானால் வரும் என்று வாதிடும் ரகம் ராஜா. ஆனால், அவளைப்பார்த்தபின், முதல் சிரிப்பில் காதல் வரலாம் என்று தெரிந்து கொண்டான்.
ஆசிரியர் ஏதேதோ விளக்கமளித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் எதிர் புற இருக்கையில் இருக்கும் வைஸ்ணவியை ரகசியமாய் படித்துக்கொண்டிருப்பான்.
‘என்ன நீ.. எப்பவும் பொண்ணுங்க பக்கமாவே பாத்திட்டு இருக்கே?’ – ஒரு காலைப்பொழுதில் கேட்டாள் வைஸ்ணவி.
இந்த கேள்வியை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை ராஜா. ஆனாலும் மனசுக்கு மிக இதமாய் இருந்தது அந்தக் குரல். பேசுகிறாள்.இவள்  என்னுடன் பேசுகிறாள். ஆஹா…. மனசு சந்தோசத்தில் மிதந்தது.
என்ன பண்றது. அந்த கூட்டத்தில்  ஒரு சிரிப்பு என்னை கொஞ்சம் கொஞ்சமா சிதைக்குது. அதான் அந்தபக்கம் பாத்திட்டு இருக்கேன்.
ம்…ம்.. சிதைக்கும் சிதைக்கும்… என்ன லவ்வா ? – மறுபடியும் அதே சிரிப்பு.
‘யாரு பொண்ணு’ ?
‘சொல்ல மாட்டேன். வீட்ல போய் உன்னோட கண்ணாடி கிட்டே போய் கேளு’. சொல்லிவிட்டு அவள் முகம் பார்க்க,  ‘எங்க வீட்டுக்கண்ணாடில எங்க பாட்டி போட்டோ  ஒண்ணு ஒட்டிவெச்சிருக்கேன்… சிரித்துவிட்டு நகர்ந்தாள்வைஸ்ணவி.


அவளுக்கும் கொஞ்சம் கவிதை, கதை என்று ரசனைகள் உண்டு.. அது அவர்களுடைய பழக்கத்தை கொஞ்சம் இலகுவாக்கி இறுக்கமாக்கியது. அவனுடைய காதலை ஆழப்படுத்தியது.
பொதுவாகவே, பாராட்டுக்கு மயங்காத மனிதர் மிகவும் குறைவு. அதிலும் பெண்கள், அதிலும் இளம் பெண்கள், . நீ அழகு ! .என்றால் மிகவும் அன்புடன் பழகுவார்கள் போல. இவனோ நீ ரோஜாக்கள் தோய்த்து எடுத்த ஒரு பனித்துளியின்  ஓவியம் என்றான்.

தென்றலை உறையவைத்து உருவாக்கிய வண்ணச் சிற்பம் என்றான்.
பூமி முதல் வியாழன் வரை அறிவுக்கு எட்டிய அனைத்திலும் அழகானது நீயே என்றான்.
கவிதை விதைத்த பூமியில் கொஞ்சம் கொஞ்சமாய் காதல் விளைய ஆரம்பித்தது.
வளாகத்தின் வளைவிற்குள் சென்றால். பாதை மறைத்தது கண்ணீர். ஐ.சி.யூ வாசல் வழியாக வந்திருக்கலாம் முன் வாயில் வந்ததல் இன்னும் திக்குத்தெரியாத காங்ரீட் சுவற்றுக்குள் மருந்து நெடிக்குள் ராஜாவை தொலைத்து தேடிக்கொண்டிருக்கிறாள்

மீண்டும் மீண்டும் ராஜாவின் முகம் அவளை மயக்கத்திற்குள்தள்ளியது.

ராஜா நன்றாக பல குரலில் பேசுவான்… சென்னை பாஷை மலையாளம் ஹிந்தி எல்லாம் அவனுக்கு பேசவரும். அவனோடு நடந்து, அவனோடு பேசி அவனோடு காதல் செய்து அவன் தோளில் முகம் புதைத்தழுது...

அவன் பைக் பில்லியனீல் உலகை மறந்து காதலிக்கிறேன் உன்னை என குற்றாலச்சாலையில் கத்தியது இப்படி அவளோடு அவனில்லாத மணித்துளிகளை எண்ணி விடலாம். எல்லா காதலர்களுக்குமே தன் காதல் தான் புனிதமானது என்னும் எண்ணம் இருக்கும்… ராஜாவுக்கும் அப்படியே இருந்தது.

சிலம்பரசனின் மன்மதன் படத்தில் சிந்து துலானியின் பெயர் வைஸ்ணவி என்ற ஒரே காரணத்திற்காக 5 முறை அந்த படத்திற்கு அழைத்து சென்று இம்சித்தவனின் காதலை என்னவென்று சொல்வது
காதலிக்கத் துவங்கும் வரை காதலர்களின் சம்மதம் மட்டுமே மிகப் பிரதானமாய் தெரியும்.. ஆனால் காதலில் மூழ்கியபின்புதான் காதலுக்கு காதலர்கள் தவிர எல்லாமே எதிர்ப்பாய்த் தெரியும்.
ஆனால்…. இவர்கள் காதலுக்கு மட்டும் எதிர்ப்பு வரவில்லை.
‘எதிர்ப்பே இல்லாத காதல் போரடிக்குது ராஜா ‘- கொஞ்சலாய் பேசுவாள் வைஸூ.


‘நீ..வேணும்னா வேற யாரையாவது லவ் பண்ணு’. அப்போ காதலுக்கு நீயே எதிரியாயிடுவே. என்ன சொல்றே ? சீரியஸ் குரலில் சீண்டுவான் ராஜா. 

அவன் பரிசளிக்கும் வைரமுத்து அறிவுமதி தபு கவிதைகளை அவள் ரசித்துவிட்டு... இவனின் வரிகளைப் பார்த்து முகம் சுழிப்பால் நல்லாவே இல்லை என்று சீண்டுவதற்காகவே அவனும் சிரித்துவிட்டு இவளின் கரங்களை பற்றி நடக்க ஆரம்பி.த்திருப்பான்.
...!


 வ.உ.சி மைதானம் இவர்களின் வேடந்தங்கள்..!
 அறிவியல் பூங்கா இவர்களின் கொடைக்கானல்...!

ஒருமுறை திருச்செந்தூர் கடற்கரை மணலில் அமர்ந்திருக்கும் போது இந்த காதல் தன்னை எப்படியெல்லாம் மாற்றிப்போட்டுவிட்டது என்பாள்.

உடனே அவன் ’’ம்ம்ம்’’ கொட்டுவான்
அடுத்தவாக்கியம் அவள் சொல்லும் முன்னமே அவன் மறுபடியும் ’ம்ம்ம்’ ’கொட்டி தன் ரசனையை கடல் அலையில் வைத்திருந்ததை தெரியாத்தனமாக உளறிக்கொட்ட செல்ல சண்டைகள் ஆரம்பிக்கும் கடல் ரசிக்கா கவிஞன் இல்லை ,,,
ஆனால் காதலியை உடன் வைத்து கடல் ரசிப்பது அழகோ! இவன் செய்வான் அவ சீண்டலுக்காகவே..!






பத்து மணி நேரம் தொடர்ந்து பேசுவதற்கு ஏதாவது இருக்குமா… காதலித்துப் பாருங்கள் விடை கிடைக்கும். பல மணி நேரம் மெளனமாய் இருக்க முடியுமா ? முடியும் என்கிறது
காதல்.
வளாகத்தின் முடிவு எட்டிப்பார்க்க சிவப்பு எழுத்துக்கள் இவள் உயிர் வாங்கியது இண்டண்சி கேர் யூனிட் என .
அதே நேரம் கல்லூரியின் வராண்டாவில் வேகமாய் நடந்து கொண்டிருந்தான் சரவணன். கண்கள் கலங்கிப் போயிருந்தது, கல்லூரி முதல்வரின் அறை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.அந்த நீளமான வராண்டாவின் கடைசி வரை போகவேண்டும் முதல்வரின் அறைக்கு. வராண்டா நீண்டு கொண்டே போவதாய் தோன்றியது அவனுக்கு.
‘எக்ஸ்கியூஸ் மி சார்’
‘வா.. சரவணன்.   ராஜாக்கு எப்படி இருக்கு…எனி க்ரிட்டிகல் சுட்சுவேஷன் .ஹைகிரவுண்ட் ஹாஸ்பிடல் தானே போயிருக்கீங்க ?’ முதல்வர் கேட்டார். அவருக்கு ராஜா-வை நன்றாகத் தெரியும்.

ஒரு முறை தேசிய நூலக வாரவிழாவில் நடைபெற்ற கவிதைப்போட்டியில் இருநூறுக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட போட்டியில் முதல் பரிசு வாங்கி அசத்தினான்.

அதுமட்டுமில்லாமல் கல்லூரியில் அதிக பரிசு வாங்கியதற்காகவே இன்னொரு சிறப்புப் பரிசு வாங்கியவன் தான் ராஜா.  சரவணன். மீண்டும் முதல்வர் குரல்.

‘சார்… ரா… ராஜா ராஜா நம்மை எல்லாம் விட்டுப் ...போ...ய்ட்டான் சா...ர்ர் ஆமா சார் அவன் … இறந்துட்டான் சார்’ . சரவணன் குரல் இதுவரை மறைத்துவைத்த அழுகையையும் வலியையும் வேதனையையும் முதல்வர் அறைக்குள் வெடிக்கச்செய்தான் ..
‘என்ன சொல்றே ?’  அமைதியாய் இருந்த கல்லூரி முதல்வர் பரபரப்புக்குள் விழ. பரபரப்புக்குள் இருந்த கல்லூரி ஒரு பெரிய நிசப்தத்துக்குள் விழுந்தது.

வைஸு எதிர்பட்ட நர்ஸிடம் விசாரித்தாள்.
ஆண்டவனே.. ராஜா-வுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது… இதயம் விடாமல் அழுது கொண்டிருந்தது.
‘எப்படிவைஸூ… வாழறதக்காக காதலிக்கறவங்க, காதலுக்காக செத்துப்போறாங்க ? லாஜிக்  உதைக்கல ?’ ஒரு நாள் கேட்டான் ராஜா.
‘நான் சாக மாட்டேன்பா.. நீ போனா எனக்கு இன்னொரு ராஜா.என பொய்யாகச் சொல்லி நிஜமாகக் கிள்ளுவாள். தற்கொலைங்கிறது கோழைங்க எடுக்கிற தைரியமான முடிவுன்னு
எங்கயோ படிச்சிருக்கிறேன். ஆனா அது தைரியமானவங்க எடுக்கிற கோழைத்தனமான முடிவுன்னு தான் தோணுது. ‘ சொல்லி விட்டுச் சிரிப்பாள். அவள் சிரிக்க ஆரம்பித்தால் பிறகு வாக்குவாதம் இருக்காது அவனிடம் இதழில் புண்னகையும் மனதில் ஆனந்த கூத்தும் தான் நிலைக்கும்.
அவளை சீண்டுவதற்கும் சிரிப்பதற்காகவுமே அவளது தோழிப் பெண்களை கலாய்ப்பான் ஜோக் அடிப்பான்.

 சரக்க்க்… என்று அஸ்டகோணலாய் ஒரு காலி ஸ்ட்ரெச்சர் அவள் முன் நின்றது.
ராஜா ராஜா … நீ எப்படிடா  இருக்கே. உனக்கு வலிக்குதாடா. ஏண்டா நீ இன்னைக்கு லைப்ரரிக்கு வரலே என்னைப் பார்க்க என என்னபேசுவதென்றே தெரியாமல் மனதுகுள் அரற்றினால்
அதற்குள் மாணவர்கள் கூட்டம் ஐசியூ வாசலுக்கு வந்தேவிட்டது .வைஸ்ணவி மெல்ல மயக்கத்துக்குள்ளாக தாங்கிப்பிடிக்கிறாள் தோழி ப்ரியா.
ராஜா என்ன நிலையில் இருக்கிறான் என இன்னும் அவள் அறிந்திருக்கவில்லை சில வாட்டர்பாக்கெட்டுகள் பல கைகள் மாறி வந்தடைந்ததும் மயக்கம் தெளிந்தாள் ‘’ராஜா-வுக்கு என்னாச்சி-என முதல் வார்த்தையை உதிர்த்தது அவள் இதழ்கள்
” எப்படி சொல்றதுன்னு தெரியல...ங்க..!? ராஜா… ஹி..ஈஸ் நோ மோர்”   யாரோ சொல்லிக்கொண்டிருக்கும் போதே
” ராஜா..… “ என்று மொத்த ஆஸ்பத்திரியும் திரும்பிப்பார்க்குமளவுக்கு வீறிட்டபடி மயக்கமானாள்
வைஸ்ணவி.

நாட்கள் மெது மெதுவாய் நகர்ந்தது. இன்னொரு பக்கம் கைகள் கோர்த்து தோள்கள் உரசியபடி வரும் இப்போது ராஜா இல்லை. வருகைப்பதிவேடில் அவள் பெயரும் அவன் பெயரும் ஒரே சீராய் சிவப்பெழுத்துக்களாகி இருந்தது கல்லூரிப்பிடிக்கவில்லை.

சண்டையிட்டபடியே புல்வெளியில் தள்ளிவிடும்ராஜா ,சிரித்துவிட்டால் சொக்கிப்போகும் ராஜா. மாலையில் யாரும் பார்க்காதபோது சட்டென்று முத்தமிடும் ராஜா. நினைவுகள் ஒவ்வொன்றாய் உருக உருக கண்கள் கசிந்து கொண்டிருந்தது வைஸுக்கு.

’வைஸ்ணவி… என்ன நடந்தாலும், நீ என்ன முடிவு எடுக்கணும்னாலும் உணர்ச்சிமயமா இருக்கும் போ எடுக்கக் கூடாது… கொஞ்சம் ஆறப்போடு.. அப்போதான் உன்னால சிந்திக்க முடியும். நீ அவசரப்பட்டு எடுக்க இருந்த முடிவு மிகவும் தப்பானதுண்ணு புரியும்’.
அவ்வப்போது தோழிகளுடன் மனஸ்தாபங்கள் வரும் போதுராஜாசொல்லும் வார்த்தைகள் மனசுக்குள் மெல்ல மெல்ல எழுந்து அடங்கியது..
நீ என்ன கஷ்டத்துல, இல்ல வருத்தத்துல இருந்தாலும் எல்லாம் ஒருநாள் காணாமல் போகும்ன்னு நினைச்சுக்கோ . எப்போதாவது சின்னச் சின்ன சோகங்கள் வரும்போதெல்லாம் சொட்டுச் சொட்டாய் நம்பிக்கை ஊற்றுவான் ராஜா.

வாரம் ஒன்று ஓடி விட்டது… கல்லூரியில் கலாட்டாக்கள் மீண்டும் துவங்கிவிட்டன. ராஜாவின் இழப்பு எல்லோருக்கும் ஒரு செய்தியாக மாறி மறைந்துவிட்டது.  வைஸுக்கு மட்டும் உள்ளுக்குள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்தது.
சிலநாட்க்களாகத்தான் கல்லூரிக்கு வருகிறாள் வகுப்புகளை பாதிநேரம் புறக்கணித்தாள். நூலகம், கல்லூரிப் பூங்கா என்று தனிமைகளில் காலம் கடத்தினாள். அதற்குக் காரணமும் இருந்தது, மாணவிகளின் பரிதாபப் பார்வையும், மாணவர்களின் ஆறுதல் பேச்சுக்களும் அவளை மீண்டும் மீண்டும் காயப்படுத்திக்கொண்டே இருந்தது.
ராஜாவோடு நடந்த இடம், ராஜாவோடு உட்கார்ந்த இடம் என்று கல்லூரி முழுதும் நடந்து கொண்டிருந்தவள் கல்லூரி வளாகச்சுவர் முன்புறம் வந்ததும் நின்றாள். சுவர் முன்புறம் கிடந்த கற்களின் மேல் கருஞ்சிவப்பாய் உறைந்து போன ராஜாவின் இரத்தத்தின் மிச்சத்தைப் பார்த்ததும் மீண்டும் உடைந்துபோனாள்.

இன்றுஇரவு எத்தனை மணி என்று தெரியவில்லைஎழுதிக் கொண்டிருந்தாள் வைஸ்ணவி.
என்னை மன்னித்து விடு ராஜா. நீ இல்லாத வாழ்க்கையை கொஞ்ச நாள் வாழ்ந்து பார்த்துவிட்டேன்.
உன்னை சந்திக்கும் முன் பல ஆண்டு காலம் வாழ்ந்தேன். ஆனால் உன்னைப் பிரிந்தபின் இரண்டு வாரங்கள் கூட என்னால் வாழமுடியவில்லை. நீ ரசிக்கும் சிரிப்பு மறந்து என் உதடுகள் மரத்துப்
போய்விட்டது. இந்த நாட்க்கள், எல்லாம் என்னை ஆறுதல் படுத்திப்பார்த்தேன். உன் அறிவுரை படியே, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல் நிதானமாகவே நான் வாழ்ந்து பார்த்தேன். முடியவில்லை.
நீ இல்லாமல் எனக்கு ஆறுதல் தோள்கள் கிடைக்கவில்லை. நீ இறந்தபோதே நானும் இறந்துவிட்டேன். இனிமேல் என்னால் வாழமுடியாது. இன்று எனக்கு இரண்டாவதுமரணம் தான்.
சொர்க்கமோ நரகமோ. நீ எங்கே இருக்கிறாயோ அங்கே வரவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
நாளை இன்னொரு துயரச் செய்தி வரப்போகிறது என்பதை அறியாத அந்தக் கல்லூரி இருளுக்குள் இளைப்பாறிக் கொண்டிருந்தது.....!

கற்பனை & எழுத்து: கார்த்திக் ராஜா 

3 comments:

ஷேர்கான் said...

மறக்க இயல காதலையும்..காதலனையும் கொண்ட ஒரு பெண் எடுக்கும் "சாதாரண " முடிவுதான் கதையின் கரு என்றாலும்..சொல்லிருக்கும் (எழுத்து நடை) விதம் மிக அருமை.
"கொஞ்சம் ரசிக்குமளவுக்கு அழகு, பளீரென்று விழுந்துவிடுமளவுக்கு மிக மிக… என்று எத்தனை மிக போட்டாலும் மிகையாகாத அழகான சிரிப்பு."
"தென்றலை உறையவைத்து உருவாக்கிய வண்ணச் சிற்பம் என்றான்.
பூமி முதல் வியாழன் வரை அறிவுக்கு எட்டிய அனைத்திலும் அழகானது நீயே என்றான்.
கவிதை விதைத்த பூமியில் கொஞ்சம் கொஞ்சமாய் காதல் விளைய ஆரம்பித்தது."
"பத்து மணி நேரம் தொடர்ந்து பேசுவதற்கு ஏதாவது இருக்குமா… காதலித்துப் பாருங்கள் விடை கிடைக்கும். பல மணி நேரம் மெளனமாய் இருக்க முடியுமா ? முடியும் என்கிறது
காதல்."
"அமைதியாய் இருந்த கல்லூரி முதல்வர் பரபரப்புக்குள் விழ. பரபரப்புக்குள் இருந்த கல்லூரி ஒரு பெரிய நிசப்தத்துக்குள் விழுந்தது."
"தற்கொலைங்கிறது கோழைங்க எடுக்கிற தைரியமான முடிவுன்னு
எங்கயோ படிச்சிருக்கிறேன். ஆனா அது தைரியமானவங்க எடுக்கிற கோழைத்தனமான முடிவுன்னு தான் தோணுது."....................இப்படி கதை நெடுக்க வளமான வரிகளின் சங்கமம் அதிகரிக்க...படிக்கும் எனக்கு.."கொஞ்ச..நஞ்ச..அறிவும் வளர பார்க்கிறது".
கார்த்திக்...மிக அருமையாக இருக்கு...(எழுத்து நடை)..

Maanu Paris said...

ராஜா ( கவிதைக்காரா ) இந்த கதையில் வேற பேரு வெச்சுருக்கலாம்
ஏனெனில் இந்த பேரு எனக்கு உங்க முகம் தான் வந்தது ரொம்பவே கலங்கி அழுதேன் விசும்பி விசும்பி அழுதேன் ராஜா தயவு செய்து என்னை மன்னிக்கவும் கதை என்னை இழுத்துகொண்டது :'(

Maanu Paris said...

ராஜா ( கவிதைக்காரா ) இந்த கதையில் வேற பேரு வெச்சுருக்கலாம்
ஏனெனில் இந்த பேரு எனக்கு உங்க முகம் தான் வந்தது ரொம்பவே கலங்கி அழுதேன் விசும்பி விசும்பி அழுதேன் ராஜா தயவு செய்து என்னை மன்னிக்கவும் கதை என்னை இழுத்துகொண்டது :'(