Saturday, October 29, 2011

மீன் குழம்பு...!


நடந்து வரும் போது எதிரே..
விலகிசென்றவரை
இதற்குமுன் எங்கோ
கண்ட ஞாபகம் ...நினைவில்
ஒட்டிக்கொண்டு வர..

கண்டு பிடிக்கமுடியாத
வளைவுகளில் கடந்தே செல்கிறது..

யாரென்று ஒருகணம்
யோசித்திருந்தாலும்
நினைவில் வந்து விடும்
முகங்களில் அவள் இல்லை..

என்றோ எங்கோ யாரோடோ !
பழகிய மிச்சமாகி போன உறவுகள்
போன்றதொரு உணர்வு..

கடந்து போய் நாலைந்து நாட்கள்
கழித்து மீண்டும் ஒரு சந்திப்பு
சந்திப்பிழைபோல முந்திவிநாயகர்
சன்னதியில் அமைந்தது...

அட.. சிறுவயதில் என்னோடு
சிறுமேனிக்கரையோரம்
கிழுக்கு செய்துவிளையாடும்
மீன்காரக்கிளவியின் பேத்தி..!

சின்ன வயதில் அவள் வீட்டிலிருந்து
கொண்டுவரும் சிறுவள்ளிகிழங்கும்
வெங்காயமீனுக்கும் இறைஞ்சே !
சுற்றிவருவேன் அவளை...

அன்று ஒருநாளும் கொண்டுவர
சொல்லி காத்திருந்தேன்..
காத்திருந்த நேரத்தில் காதை திருகி
அடித்து இழுத்து போனால் அம்மா..

கீழத்தெருக்காரிகூட
உனக்கென்னடா விளையாட்டு என்று ..!

காதை திருகிய வழியை விட...
களத்த்துகாட்டில் கண்ணீருடன்
அவள் நின்றது மறையாத வலியாக..

இன்றும் வெங்காயமீனை...வீட்டில்
வைக்கிறபோதெல்லாம் ..வந்துவந்து போகும்
அவளின் சிறுவயது நிழல்...

நிழல் இன்றுவரை கீழதெருவிலே
சுழன்று வருகிறது மனசுக்குள்ள
மீன்குளம்போடே...!!!

கார்த்திக் ராஜா ...
 —

No comments: