Sunday, October 23, 2011

குதிரையும்.... அப்பாவும்...!!!




ஞாயிற்றுக்கிழமை காலையில் அப்பா வாக்கிங் போய்விட்டு வீடு திரும்பும்போது கையில் ஒரு குதிரையை பிடித்தபடியே நடந்து வந்திருந்தார்.  என் வீட்டின் வாசல் கதவைத்  திறந்து அவர் நிதானமாக  குதிரையை என் ப்ளாட்டில் நிற்கும் தென்னை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு எதுவும் நடக்காதவரைப் போல சுவரோரம் உள்ள தண்ணீர்க் குழாயில் காலை கழுவிவிட்டு வரவேற்பறையில் உட்கார்ந்துகொண்டு அன்றைய தினசரியைப் புரட்டி படிக்கத் துவங்கினார்.
சவரம் செய்தபடியே அதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அது குதிரையே தான். எப்படி அது. நாயை  கூட்டிக் கொண்டு தானே வாக்கிங் சென்றார். நாய்க்கு பதில் குதிரையோடு வருகிறாரே.. யாருடைய குதிரை. அதை எதற்காக நமது வீட்டிற்குக் கொண்டுவந்திருக்கிறார். விலைக்கு வாங்கிவிட்டாரா? ஒரே பகலில் அதுவும் மூன்று மணிநேரம் முன்பு வாக்கிங் போனவருக்கு எப்படி கிடைத்தது. இல்லை யாராவது  சில நாட்கள் வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டார்களா என்று ஆயிரம் கேள்விகள் ஒரே சமயத்தில் மண்டையில் மோதின.
சவரம் செய்வதை பாதியில் நிறுத்திவிட்டு மீனாவை சப்தமாகக் கூப்பிட்டேன்.மீனாட்சி என் மனைவி. அவள் சமையல் அறையில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு எதையோ பொரித்தபடியே ‘இருங்க வர்றேன்’ என்று பதில் தந்தாள். என் அறையை விட்டு வெளியே வந்து குதிரையை நன்றாகப் பார்த்தேன்.
அது தலைகவிழ்ந்தபடியே நின்றிருந்தது. நல்ல கறுப்புநிறம். கால்களில் சாக்ஸ் போட்டது போலவும் நெற்றியில் முத்திரை போலவும் வெள்ளை நிறம், அராபியக்குதிரை போலிருந்தது. சென்னை பீச்சில் இப்படியான ஒரு குதிரையைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் அவைகள் வயசானகுதிரைகள் என்பதால் அதில் ஏறி சவாரி செய்யவும் துணிந்ததில்லை.. ஆனால் என் வீட்டுக்கே ஒரு குதிரையை அப்பா அழைத்து வந்தது ஆச்சர்யம், . என் வீட்டின் வாசலில் நின்றது வயதான குதிரையில்லை. அது நல்ல தேஜஸான குதிரையாக இருந்தது அதன் அடர்ந்த வால் அசைந்தபடியே இருக்க தலையை வலப்பக்கமாக சாய்த்தபடியே நின்றிருந்தது.
அப்பா நான் பார்ப்பதை கண்டு கொள்ளாதவர் போல பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.நான் அந்த அலட்சியத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் ‘என்னப்பா இது’என்று கேட்டேன்.அவர் திரும்பிப் பார்த்துவிட்டு ‘குதிரை’ என்று சொல்லி பேச்சை முடித்துக் கொண்டார்.எனக்கு காலையிலே கோவத்தை கிளறுகிறாரேன்னு கடுப்புவேறு அதிகமாகியது.. ‘எதற்காக இங்கே கொண்டுவந்திருக்கிறீர்கள்’ என்று கேட்டேன். அவர்  பதில் சொல்லவேயில்லை. ‘யாருடைய குதிரை’ என்று சற்று குரலை உயர்த்திக் கேட்டேன்?’‘நம் குதிரை தான்’என்று சொல்லிவிட்டு குளிப்பதற்காக தன் அறைக்குள்  சென்றுவிட்டார்
நமக்கு குதிரை எதற்கு?ஒரு குதிரை என்ன விலையிருக்கும்? யாராவது குதிரை வாங்குவார்களா என்ன? இதை வைத்து ஏதாவது புது திட்டம் வைத்திருக்கிறாரா? வீட்டில் குதிரை வளர்ப்பதை அக்கம் பக்கத்தினர் அனுமதிப்பாரா? அதை என்ன செய்வது? அதற்கு என்ன உணவு அளிப்பது? நாளை அப்பா ஊருக்குப் போய்விட்டால் அதை  என்ன செய்வது என்று குழப்பம் ஊற்றெடுக்கத் துவங்கியது. இதற்குள் மீனா வெளியே வந்து குதிரையின் அருகில் சென்று அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறகு என்னிடம் ‘உங்களுக்கு குதிரை ஓட்டத் தெரியுமா?’ என்று கேட்டாள். நான் முறைத்தபடியே ‘எதற்கு’ என்றேன். ‘உங்களுக்காகத் தானே உங்கப்பா குதிரை வாங்கி ட்டு வந்திருக்கார்’ என்று கேலி செய்தாள். அவளிடம் ‘இந்த குதிரையை என்ன செய்வது என்று நீயே கேள்’ என்று கத்தினேன்.  அவள் மறுபடியும் கேலியாக  ‘இதிலேயே உங்கப்பா சொந்த ஊருக்குக் கிளம்பிப் போனாலும் போவாரா இருக்கும்’ என்றாள்.
அப்பாவை அவள் அடிக்கடி கேலி செய்கிறாள் பேர்வழி என்றும் என்னையும் வாருகிறாள் என நினைக்கும் போது கோபம் உச்சந்தலையில் சுர்ர்ர்ரென்கிறது...குத்திக்காட்டுகிறாள் என்று எனக்கு கோபமாக வருகிறது.ஆனால் அதைப் பற்றி பேசினால் உடனே சண்டை துவங்கிவிடும் என்பதால் நான் பல்லைக்கடித்தபடியே குதிரையை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா குளித்துவிட்டு ஈரத்தலையை துவட்டியபடியே வெளியே வந்து நின்றார். நரைத்துப் போன தலைமயிர்கள். களைத்துப் போன கண்கள். அப்பா  குதிரையை மிகப் பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
நான் அவர் முன்னால் போய் நின்றபடியே ‘நமக்கு எதுக்குப்பா குதிரை?’ என்று கேட்டேன். அவர் ‘நீ எதுக்காக நாய் வளர்த்தியோ அதுபோல தான் இதுவும்’ என்றார்.  ‘நாய் வீட்டைப் பாதுகாக்கும். குதிரை பாதுகாக்குமா?’என்று கோபமாகக் கத்தினேன். ‘பாதுகாக்காது என்று உனக்கு எப்படி தெரியும். நீ எத்தனை குதிரைகள் வளர்த்தி ருக்கிறாய்?’ என்று அமைதியாகக் கேட்டார். ‘யாராவது வீட்ல குதிரை வளர்க்கிறார்களா?’ என்று சப்தமிட்டேன்.  ‘நூறு வருசத்திற்கு முன்புவரை குதிரை வசதியான எல்லோர் வீட்டிலும் இருந்தது தானே’ என்றார்
என்ன பைத்தியக்காரத்தனமான பேச்சிது.வாகனங்கள் இல்லாத காலத்தில் குதிரைகள் வைத்திருந்தார்கள்.அதில் ஏறி பயணம் சென்றார்கள். இப்போது தான் விதவிதமான  கார்களும் பைக்கும் வந்துவிட்டதே, பிறகு எதற்கு என்று ஆத்திரமாக வந்தது. ‘இந்தக் குதிரை உங்களுக்கு எப்படி கிடைச்சது? இது யாருடையது என்று உண்மையைச்  சொல்லுங்கள். இல்லாவிட்டால் நான் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும்’என்று கத்தினேன் . அவர் மிக நிதானமாக ‘இது நம்ம டிங்கி தான்.அது தான் குதிரையாக மாறிவிட்டது’ என்றார்
சின்னப்பிள்ளையைப் போலபேசுகிறாரே என்று எரிச்சலும் கோபமும் பீரிட்டது. ‘நாய் எப்பிடிப்பா குதிரையா மாறும்’ என்று முறைத்தேன். அவர் குதிரையின்  அசைந்து கொண்டிருக்கும் இடதுகாதைக் காட்டி அதில் எல் “L” என்ற எழுத்தைப் போல உள்ள முத்திரையை சுட்டிக்காட்டி ‘இது டிங்கி காதுலயும் இருந்தது இல்லையா’  என்றார். அது உண்மையே. என்னுடைய நாயின் காதில் எல் என்ற எழுத்து போல அடையாளம் இருந்தது. அது எப்படி குதிரைக் காதிற்கு வந்திருக்கிறது.
நான் அருகில் சென்று காதை உன்னிப்பாக பார்த்தேன். அப்படி அச்சு அசலாக அது நாயின் காதில் இருந்ததுபோலவே காணப்பட்டது. அத்துடன் குதிரை என்னைப்  பார்த்தவுடன் நட்போடு வாலையும் அசைத்தது. என்ன கர்மமிது. ஒரு நாய் எப்படி குதிரையாக மாற முடியும். அது ஒரு போதும் சாத்தியமில்லை. யாராவது அப்பாவை  ஏமாற்றியிருக்கிறார்களா அல்லது அப்பாவிற்கு ஏதாவது மனப்பிரச்சனையா என்று குழப்பமாக இருந்தது.
அப்பா வழக்கம்போல பூங்கா-வில் தனிமையா அமரத் தயாராக இருந்தார். நான் அவரை வழிமறித்து ‘முதல்ல நாயை என்ன செஞ்சீங்கன்னு  சொல்லுங்க’ என்றேன். அவர் ‘எப்பவும் போல வாக்கிங் கூட்டிக் கொண்டு போனேன்’ என்றார். ‘எங்கே போனீங்க. என்ன செஞ்சீங்கனு என் கூட கார்ல வந்து காட்டுங்க’  என்று கத்தியபடியே  காரை வெளியே எடுத்து அப்பாவை ஏற்றிக் கொண்டேன்.
அப்பாவின் முகம் இறுக்கம் அடைந்து போனது. அவர் மெதுவான குரலில் வழி சொல்லிக் கொண்டே வந்தார்.முக்கால்வாசி சென்னையை சுற்றிவந்து கிழக்குகடற்கரைச் சாலையில் கார் செல்லத் துவங்கியது. இவ்வளவு தூரம் அப்பா சென்னைவரும் நாட்களில்  நடந்துவருகிறாரா. அது எப்படி சாத்தியம் என்ற சந்தேகத்துடன் அவர் சொன்ன வழியில் சென்று  கொண்டேயிருந்தேன். சாலை ஒரு இடத்தில் பிரிந்தது. அப்பா அந்த கிளைவழியாகச் செல்லும்படி சொன்னார்.கார் மெதுவாக சென்றது. மரங்கள் அடர்ந்த சாலை வரத் துவங்கியது. அதன் உள்ளே சென்றதும் காரை நிறுத்திவிட்டு இறங்கி நடந்து வரச்சொன்னார்.
பத்து நிமிசம் நடந்திருப்பேன். ஒரு ஒரு சவுக்குமரம் அடர்ந்த பகுதிக்கு உள்ளே மணல் திட்டுகளை கடந்து  சென்றோம் அதைத் தாண்டி உள்ளே சென்றால் பூந்தோட்டம் போல மகுதி அதைச் சுற்றிலும் அடர்ந்த  மரங்கள். ஜில்லென அந்த இடம் குளிர்ச்சியேறியிருந்தது. இருநாளுக்கு முன்னால் பெய்த மழையில் தேங்கி இருந்த சற்றுபெரியதண்ணீர் குழியில் ஆகாயம் மின்னிக் கொண்டிருந்தது. இவ்வளவு அமைதியும்  அழகுமான இடத்தை அப்பா எப்படி கண்டுபிடித்தார். ஆறுவருசமாக சென்னையில் எத்தனையோ கிளப்புகள், கொண்டாட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். இதுபோல ஒரு இடத்தை இதுவரை கண்டதேயில்லை. அப்பா எப்போதும் தாங்கள் அமரும் கல் என்று ஒன்றைக் காட்டினார்.
அதில் பாதி தண்ணீருக்குள் மூழ்கியிருந்தது.அப்பா அதில் உட்கார்ந்துகொண்டு தன் காலை தண்ணீரில் விட்டுக் கொண்டார். சட்டென அவருக்கு வயது குறைந்து பத்து வயதுச் சிறுவனை போலதோன்றினார்.அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நான் அமைதியாக அந்த இடத்தைப் பார்த்தபடியே இருந்தேன். கேமராவைக்  கொண்டுவராமல் போய்விட்டோமே என்று மனதில் தோன்றியபடியே இருந்தது.
வந்த வழியை கவனமாகப் பார்த்து வைத்துக் கொண்டுவிட்டால் நாளை மீனாவை அழைத்துக்கொண்டு வரலாம் என்றும் தோன்றியது. அப்பா என்னிடம் பேசவேயில்லை. அவர் மௌனமாக பூக்கள் செறிந்த இடத்தைப் பார்த்தபடியே இருந்தார். அப்படி என்ன இருக்கிறது அந்த இடத்தில் என்று தெரியவில்லை. ஆனாலொரு ஈர்ப்பு அந்த இடத்தில் இருந்தது நான் அங்கிருந்த மரங்களின் ஊடே நடந்து சென்றேன்.  சப்தமேயில்லை அது ஏதோவொரு தனித்தீவு  போல இருந்தது. அப்பாவைப் போல பலரும் அங்கே வரக்கூடும் போலும். ஒரு இடத்தில் மரச்சாய்வுப்பலகை வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்
அரைமணி நேரமாகியிருக்கக்கூடும். அப்பா தண்ணீரைப் பார்த்தபடியே இருந்தார். அருகில் போய் நின்று ‘இங்கே நாய் எப்படி குதிரையாக மாறியது?’ என்று கேட்டேன்.  ‘நாயை தனியே அலைய விட்டுவிடுவேன். வீடுதிரும்பும் போது அது தானாக என்னைத் தேடிவந்துவிடும். இன்றும் அப்படி தான் நடந்தது. ஆனால் அது திரும்பிவ ரும்போது குதிரையாக மாறி இருந்தது’ என்றார்.
‘அதுதான் எப்பிடி நடந்தது?’ என்று கேட்டேன்.  ‘எனக்கு அதைப்பற்றி யோசிக்க விருப்பமில்லை. அது நமது டிங்கி என்று பார்த்தவுடனே தோன்றியது. வீட்டிற்கு அழை த்து வந்துவிட்டேன்’ என்றார். ஏன் இப்படி முட்டாள்தனமாகப் பேசுகிறார் என்று ஆத்திரமாக வந்தது. அந்த இடத்தில் இருந்து ரசித்த ரம்யத்தின் மொத்தமும் அப்பாவின் பேச்சில் வெறுத்துப்போனது,,,
‘அது ஒருவேளை வேறு யாருடைய குதிரையாகவோ இருந்திருந்தால், அவர் நாளை நம்மைத் தேடி வந்து கேட்கமாட்டாரா?’என்று கேட்டேன். அப்பாவிடம் பதில் இல்லை. நாய் அப்பாவிடமிருந்து தப்பி எங்கோ ஓடிப் போயிருக்கக் கூடும். அதை சமாளிக்க அப்பா ஒரு குதிரையை அழைத்து வந்து நாடகம் ஆடுகிறாரோ என்று கூடத்  தோன்றியது. அப்பா ஆனால் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
எனக்கு அவரது பேச்சு அலுத்துப் போகத் துவங்கியது. நாங்கள் வீடு திரும்பிய போது அண்டை அடுக்குமாடி வீட்டில் இருந்தவர்கள் தங்கள் ஜன்னல்களை திறந்து எங்கள் குதிரையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ஒரு சிறுமி மட்டும் ‘குதிரை அழகாக இருக்கிறது அங்கிள்’ என்று பாராட்டினாள். நான் தலையசைத்துவிட்டு  உள்ளே சென்றேன். இதை என்ன செய்வது. எப்படி சமாளிப்பது என்று தலைவலிக்கத் துவங்கியது.மீனாவிற்கு டிங்கிக்கு என்ன ஆனது என்ற கவலை பிடித்துக்  கொண்டது. ஆசையாய் அந்த நாயை வாங்கியவள் அவள். டிங்கி ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய். எங்களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லை...நாய்தான் அவளுக்குச்செல்லபிள்ளை.
பகலில் தனியாக இருக்கும் வீட்டினைப் பாதுகாக்க நாய் தேவைப்பட்டது. நானும் மீனாவும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறோம். வேறு வேறு அலுவலகங்கள்.  ஆகவே இருவரும் காலை எட்டு இருபதிற்குள் வீட்டில் இருந்து கிளம்பிவிட வேண்டும்.
பகல் முழுவதும் வீட்டை பார்த்துக் கொள்வது நாய் மட்டுமே.  அதற்கான  உணவும் தண்ணீரும் வெளியே ஒரு தட்டில் போட்டு வைக்கப்பட்டுவிடும். அது நாள் முழுவதும் வாசல்படியை ஒட்டியே தான் படுத்துக் கொண்டிருக்கும். பகலில் அது  என்ன செய்து கொண்டிருக்கும் என்று நாங்கள் யோசித்ததே கிடையாது. நாங்கள் நாயை வெளியே அழைத்துப் போக நேரமும் இருப்பதில்லை.
டிங்கியை வாக்கிங் கூட்டிச் செல்வதற்காக மட்டுமே அப்பா ஊரில் இருந்து கிளம்பி வருகிறாரோ என்று சந்தேகப்படும் அளவில் அப்பா இரண்டுவாரம் ஒருமுறை எங்கள் ஊர் திருச்சியிலிருந்து வீட்டிற்கு வந்துவிடுகிறார். தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் அதை நடத்தி கூட்டிக் கொண்டு செல்வார்.முழுச் சென்னையையும் சுற்றிவிட்டு தான் திரும்புவார்கள் போலும்.எப்படியும் நடைப்பயிற்சி முடித்து திரும்பி வர மூன்று மணிநேரமாகும். அதன்பிறகு நாயின் சுபாவம் ஒருவாரத்திற்கு உற்சாகத்துடன் இருக்கும்.
அப்பா எங்களுடன் இல்லை.அவருக்கு இந்த ஏப்ரலோடு அறுபத்துமூன்று வயதாகிறது. அவர் தனியாக நெல்லையில் வசிக்கிறார் எங்களுக்கு சொந்த ஊரான திருநெல்வேலிக்கு அருகே பாளையங்கோட்டை புர்வீகம்.  இருபத்தியாறு  வயதுவரை தனியாக வசித்து வந்த அவர் சிறுவயதிலே வீட்டைவிட்டு வெளியேறி மும்பையில் 14 உழைத்து சென்னைவாசியான நண்பரின் தங்கையையே காதலித்து எனக்கு அம்மாவாக்கியவர் திருமணம் செய்துகொண்ட பிறகு ஒரு போதும் தனியாக இருந்ததேயில்லை.
வீட்டில் அம்மாவும்அப்பாவும் நான் என்று நாங்கள் பெரியவர்கள்  யாரும் இல்லாத  குடும்பமாக இருந்தோம். ஐம்பது வருசங்களுக்கு முன் பாக தனி ஆளாக அப்பா மும்பைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். ராணுவத்தில் பணியில் இருந்த திரவியம் மாமாவின் *அம்மாவின் அண்ணன் ஆலோசனையாக சென்னை வந்து செட்டில் ஆனது. இதெல்லாம் கூட எங்கள் யூகம் தான் அப்பாவின் சிறுவயது நிகழ்வுகள் எங்களுக்கு 
பாட்டி சொல்லும் கதைகள் போல ஆங்காங்கே கிடைத்த தகவல்கள் தான். 
ஆனால் மொழியறியாமல் தன் இருபது வயதில் அப்பா மும்பை ஆரஞ்சு மண்டியில் வேலை செய்திருக்கிறார். தள்ளுவண்டியில் பழங்களை விற்றுப்  பிழைத்திருக்கிறார். ரகுஜிராவ் என்ற நண்பரின் உதவியால் அப்பா ஆரஞ்சு ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக வேலைக்குச் சேர்ந்தபோது அவர் உழைப்பு மட்டுமே மூலதனம் கல்வி என்பது அவர் தொடாத உயரத்தில்... அதன்பிறகு அவர் வேலை மாறவேயில்லை. ஆனால், செனை வந்த ஆறு ஆண்டுகளில் அப்பா எங்கே தங்கியிருந்தார் எப்படி வாழ்ந்தார் என்பதைப் பற்றி யாரிடமும்  பகிர்ந்து கொண்டதில்லை.
என் அம்மாவின் பெயர் சாந்தா,வீட்டில் அவரது ஒரு புகைப்படம் இருக்கிறது.நாங்கள் பிறந்த கொஞ்ச நாளில் அம்மா இறந்து போயிருந்தார்.அம்மா என்றதும் அந்த பழைய புகைப்படம் மட்டும் தான் மனதில் ஒட்டிக்கொள்ளும் அப்பாதான் எல்லாமுமாய் இருந்ததாலோ கண்டிப்புக்கும் பாசத்துக்கும் அப்பா என்றானது ஒரு மென்மை இல்லாத சூழ்நிலையையே அதிகம்.. என்பதால் என் வாழ்க்கையும் அப்படி ஆகிவிடக்கூஆது என்பதில் என் மனைவியிடம் அத்தனை அக்கரை கொண்டிருப்பேன். வீட்டுக்கு போனது டிங்கியைப் பற்றி கேட்பாலோ என்ன செய்வது என்ற எண்னம் உணர அப்பா கார் கதவை திறந்து இறங்கினார் வீடு வந்திருந்தது..   
 அப்பாவிற்கு யாரையும் கடிந்து கொள்ளவோ கோபப்படவோ பிடிக்காது. அவர் ஒரு நிழலைப் போலவே நடந்து கொள்வார்.
அவர் வீட்டிற்குள் வருவதும் போவதும் கூட சப்தமில்லாமல் தான் நடக்கும். எதற்காக இந்த வயதில் சென்னைக்கும் நெல்லைக்குமாய் அலைந்து கொண்டெ இருக்கிறீர்கள் என்றால்  விலகி இருக்கும் போது தான் ஒரு பாசம் கூடவே இருக்கிறது . உன்னோடே ஒட்டிகிட்டு திரிஞ்சா ..ச்சே என்ன மனுஷன்டான்னு சலிச்சுக்க மாட்டே என்பார். அவர் வார்த்தை முகத்தில் அறைந்தது போல் இருந்தாலும் மனதில் பட்டதை முகத்தில் நேரே சொல்வார் அது பிடிக்கும். மீனா கூட சில நாள் முன்பு இப்படி தான் நானும் பேசுவதாய் சொன்னால்..!  தீராத யோசனை அவர் முகத்தில் எப்போதுமிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவருக்கு பயணங்கள் எப்போதும் பிடிக்கும் அனுபவக்களை அவர் பயணத்தில் கற்றுக்கொள்வாரென்று நான் கற்றுக்கொண்டேன் ஒருமுறை எக்மோரிலிருந்து இறங்கி வருவார்..மறுமுறை கோயம்பேட்டிலிருந்து வருவார்..
நான் படித்ததெலாம் சென்னை. பிறகு நான் டெல்லிக்கு படிக்கச் சென்றேன். அப்பா ஒரேயொரு முறை என்னைப் பார்க்க டெல்லிகல்லூரிக்கு  வந்திருந்தார். அன்று நான் காலை ஏழு மணிக்கே பயிற்சிவகுப்பிற்குச் சென்றுவிட்டதால் விடுதியின் வெளியில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் காலை முதல் மாலை ஆறு  வரை உட்கார்ந்திருந்திருக்கிறார். அதைப்பற்றி என்னிடம் ஒரு வார்த்தை சலித்துக் கொள்ளவில்லை. எனக்குத் தேவையான பணத்தைத் தந்துவிட்டு இரவே அவர் ஊருக்குப் புறப்பட்டும் போனார்.அவ்வளவு தான் அவரைப் பற்றிய எனது நினைவுகள். மற்றபடி அவரை நான் நெருக்கமாக உணரவேயில்லை. எனக்கு வேலை கிடைத்து சென்னை வந்து அப்பாவின் விருப்பப்படியே மதுரையில் படித்த தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஆறுவருசமாக சென்னையில் வசித்துக் கொண்டி ருக்கிறேன். மீனாட்சி பெயர்காரணம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்
அப்பாவிடம் பகிர்ந்துகொள்ளப்படாத ரகசியங்களும் அவமானங்களும் வலிகளும் நிறைய இருக்கின்றன என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.

சொற்ப வருமானத்தில் என்னையும் வளர்த்து படிக்கவைத்தது அத்தனை எளிதானதில்லை.யாரையும் திருப்தி செய்ய முடிந்திருக்காது. சில வேளைகளில் அப்பாவை என் கூடவே வைத்து ஏசி செய்யப்பட்ட அறையைத் தந்து அவரை காரில் அழைத்துக்கொண்டு போய் தேவைப்படும் உடைகள் உணவுகள்’ வாங்கித் தந்து அன்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவரை நேரில் பார்த்தவுடன் அந்த கனவுக்குமிழ் தானே உடைந்து போய்விடும். அல்லது அவரே உடைத்துவிடுகிறார்.
சொந்த ஊரில் என்ன இருக்கிறது.அப்பா சிறுவயதில் ஊரைவிட்டு ஓடிப்போனவர் என்பதால் அங்கிருந்த யாருக்கும் அவரோடு உறவில்லை. அப்பாவைத் தவிர  மற்ற உறவினர்கள் ஊரைக் காலி செய்து அருகாமை நகரங்களுக்குப் போய்விட்டார்கள்.ஆகவே உறவினர்களும் அங்கில்லை.எதற்காக அங்கே குடியிருக்க வேண்டும்.ஏன் இந்த தடுமாற்றம். அப்பா அதைச் சொல்வதேயில்லை. அவராக எதையோ கற்பனை செய்து கொள்கிறார்.பேசமறுக்கிறார் என்று ஆத்திரமாகவே இருக்கிறது.
அவர் நாய் தான் குதிரையாக மாறிவிட்டது என்று சொல்வதை நினைத்தேன்.அன்று பகல் முழுவதும் என்னால் வேறு எந்த  வேலையும் செய்ய முடியவில்லை. அப்பா நாள் எல்லாம் குதிரையின் அருகிலே உட்கார்ந்திருந்தார். அதன் உடலை சுத்தம் செய்தார்.அதற்குத் தேவையான குடிநீரை  வாளியில் பிடித்து வைத்தார்.மீனா அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று உறுதியாகச் சொன்னாள்.


வீட்டுக்குள் நுழைந்து கணிணியை லாக்கின் செய்து ஃபேஸ்புக்கை தொட்டதும் குதிரைப்படத்தை போட்ட ஒருவர் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பி இருந்தார் வெறுத்துப்போய் அனைத்து விட்டேன்.
யாரிடம் இதைப்பற்றி பேசலாம் என்று தெரியாமல் என்னோடு வேலைபார்க்கும் வித்யாகருக்கு போன் செய்து விவரம் சொன்னேன். அவன் குதிரையை தனது பையன்  நெடுநாட்களாக பார்க்க வேண்டும் என்று சொல்லி மாலை வீட்டிற்கு வருகிறேன்.நேரில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி பேச்சைத் துண்டித்துவிட்டான்.
மாலை வித்யாகர் குடும்பம் வந்திருந்தது. குதிரையை அவன் வான் உயர புகழ்ந்து தள்ளினான். அதுபோன்ற குதிரையின் விலை பத்து லட்சமிருக்கக் கூடும் என்று சொல்லி ‘உன் அப்பா பெரிய அதிர்ஷடத்தைக் கொண்டுவந்திருக்கிறார்’ என்று பாராட்டினான். குடும்பமே குதிரையின் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.  அவன் அப்பாவிடம் தனக்கு குதிரைகள் பற்றியுள்ள ஞானம் முழுவதையும் கொட்டித் தீர்த்தான்.அப்பா அதில் சலனமடையவேயில்லை.
இரவில் மீனா நாளை நாம் என்ன செய்வது என்று கேட்டாள். எதற்கு என்று புரியாமல் கேட்டேன். காலை ஆறுமணி ரயிலில் உங்கள் அப்பா ஊருக்குக் கிளம்பிப்  போய்விடுவார். நீங்கள் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு இந்த குதிரையை காலி செய்யப்பாருங்கள் என்றபடியே புரண்டு படுத்துக் கொண்டாள். குதிரையை என்ன செய்வது என்ற எண்ணம் மனதில் ஓடிக்-கொண்டேயிருந்தது. தூக்கம் பிடிக்கவேயில்லை. காலையில் நான் எழுந்து கொள்வதற்குள் அப்பா ஊருக்குக் கிளம்பி போயிருந்தார்.
குதிரை அதே இடத்தில் நின்றிருந்தது.நான் அன்று ஒருநாள் விடுமுறை போட்டேன். என்னிடம் உள்ள ஒவ்வொரு தொலைபேசி எண்ணாகப் பேசிப்பேசி குதிரையை என்ன செய்வது என்று திட்டமிடத் துவங்கினேன்.அதைப் பற்றி காவல்துறையில் புகார்செய்ய வேண்டும் என்று ஒரு நண்பன் மிரட்டினான். அதை விற்க முடியாது  சிக்கல் என்று ஒருவர் தெரிவித்தார்.அதை ஏதாவது ஒரு சேவைநிலையத்திற்குத் தள்ளிவிடு என்றொரு ஆலோசனை வந்தது. என்ன செய்வது என்று முடிவாக எதுவும்  தெரியவில்லை.
திடீரென குதிரை நேற்றில் இருந்து எதையும் சாப்பிடவில்லை என்ற யோசனை தோன்றியது. குதிரை சாப்பிட என்ன தருவது? எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை.  வீட்டில் உள்ள காய்கறிகளை ஒரு காகிதத்தில் அள்ளிப் போட்டு அதன்முன்னே வைத்தேன்.அது எதையும் சாப்பிடவில்லை. ஒரு குதிரை என்ன சாப்பிடும் எவ்வளவு  சாப்பிடும், எப்போது உறங்கும், என எந்த விவரமும் தெரியவில்லை. அது குதிரை என்ற பெயர் மட்டுமே தெரிந்திருக்கிறது
உடனே கம்ப்யூட்டரில் குதிரையைப் பற்றிய அடிப்படை விவரங்களை தேடத் துவங்கினேன். ஆயிரமாயிரம் பக்கமாக நீண்டு போய்க் கொண்டேயிருந்தது. குதிரைகளின்  வியப்பான சரித்திரத்தை அது என்றாவது நினைவில் கொண்டிருக்குமா. நினைத்து வேதனை அடையுமா என்ற நினைப்போடு குதிரை புகைப்படங்களை பார்த்தபடியே இருந்தேன். நெப்போலியனின் குதிரையின் பெயர் தவிர எனக்கு குதிரைபற்றி எதுவுமே தெரியாது என்பது அன்ற் தான் தெரிந்தது. அதில் ஒரேயொரு தகவல் குதிரை சாப்பிடுவதற்கென தனியான புல் மார்க்கெட்டில் கிடைக்கிறது என்றிருந்தது. அதன் தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு  எனது குதிரைக்கான புல்வேண்டும் என்று ஆர்டர்  செய்தேன்.
உண்மையில் என்னுடைய குதிரை என்று சொல்வதற்கு கூச்சமாகவே இருந்தது. இரண்டு மணிநேரம் சென்று ஒரு வேனில் புற்கட்டுகள் வந்து இறங்கியது. ஒரு  வயதானவர் அதை எடுத்து வந்து என்  குதிரையின் முன்னால் போட்டுவிட்டு ‘குதிரை நன்றாக இருக்கிறது. என்ன வம்சமது?’ என்று கேட்டார். நான் ‘அது என்  அப்பாவின் குதிரை’ என்று மட்டும் சொன்னேன். அவர் என் அப்பாவை ஒரு ராஜா போல கற்பனை செய்து கொள்ளக் கூடும்.அது ஏனோ எனக்குப் பிடித்திருந்தது.  இனிமேல் யாராவது கேட்டால் அது என் அப்பாவின் குதிரை என்று சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.
குதிரை அமைதியாக புல்லைத் தின்றபடியே நின்றிருந்தது. அதன் அருகாமையில் போய் தொட்டுப் பார்த்தேன்.இதன்மீதேறிதான் மனிதர்கள் நூற்றாண்டுகாலமாக பயணம்  செய்திருக்கிறார்கள். சண்டையிட்டிருக்கிறார்கள். பந்தயம் கட்டி ஓட விட்டிருக்கிறார்கள். இன்று இயந்திரங்கள் இந்த குதிரைகளை நம் கவனத்தில் இருந்து முழுவதாக  அப்புறப்படுத்திவிட்டதே என்று தோன்றியது.
குதிரையின் கண்களை கவனித்தேன். எவ்வளவு சாந்தம். நாயின் கண்களில் இல்லாத அமைதியது. அது சாப்பிடுவதில் கூட அதிக விருப்பம் கொள்ளவேயில்லை. அதன்  நெற்றியில் கைவைத்து தடவிவிட்டேன். குதிரையை நெருங்கிப் பார்க்கும்போது நானே சிறுவனாகிவிட்டது போலத் தோன்றியது. சிறுவயதில் ஒரு மரக்குதிரை ஓட்டியி ருக்கிறேன். இப்போதுதான் நிஜக்குதிரையை தொட்டு தடவிப் பார்க்கிறேன். அதன் முதுகு எலும்புகள் இரும்பைப் போல உறுதியாக இருந்தன.பகல் முழுவதும் குதிரையைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
மீனா அலுவலகம் விட்டு திரும்பியதும் குதிரை அதே இடத்தில் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தாள்.தான் உடனே கிளம்பி ஊருக்குப் போகப் போவதாக மிரட் டினாள்.‘உனக்கு எதற்காக குதிரையைப் பிடிக்கவில்லை’ என்று கேட்டேன். அவள் ‘அது நாய்போல இல்லையே’ என்று சொன்னாள். ‘இல்லை இதோடு நாம் இன்னமும்  பழகவில்லை’ என்று சொன்னேன். ‘உங்கள் அப்பாவைப் போலவே பேசாதீர்கள். எனக்கு குதிரைகள் வேண்டாம். நாம் என்ன நெப்போலியனா, இல்லை ராஜாதேசிங்கா  குதிரையில் போக’ என்று கேட்டாள்.
அவள் சொன்னபிறகு தான் பெருமைக்குரிய குதிரை வைத்திருந்தவர்கள் பற்றிய தகவல்கள் மண்டைக்குள் பீரிடத் துவங்கின. இரண்டு நாளில் அந்த குதிரையை  எப்படியாவது அனுப்பிவிடலாம் என்று சமாதானம் சொன்னேன். இரவில் அவள் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் போனில் குதிரை பற்றியே பேசிக் கொண்டேயிருந் தாள். நான் மறுபடி அப்பாவை போனில் கூப்பிட்டு ‘இது யாருடைய குதிரை உண்மையைச் சொல்லிவிடுங்கள்’ என்று கேட்டேன். அப்பா ‘அது நமது டிங்கியே தான்’ என்றார். ‘ஒரே பொய்யை ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள்?’ என்று கத்தினேன். மறுமுனையில் பேச்சேயில்லை.
மறுநாள் நாங்கள் குதிரையைப் பற்றி யோசிக்கக் கூடாது என்று முடிவுசெய்து காலை அவசரமாக வீட்டை பூட்டிக் கொண்டு அலுவலகம் சென்றோம். பகலில்  வேலையின் நடுவில் குதிரை என்னவாக இருக்கும் என்ற யோசனை தோன்றி மறையும். ஆனால் அதைப் பற்றி நினைக்கக் கூடாது என்று கறாராக இருந்தேன். மாலை  வீடு திரும்பும் போது என் வீட்டின் வாசலில் பெரிய கூட்டம் நின்றிருந்தது. அத்தனையும் குதிரையை வேடிக்கை பார்க்கும் கூட்டம். அருகாமை வீட்டின் கூர்க்கா தான்  கேட்டைத் தாண்டிப் போய் குதிரைக்கு குடிதண்ணீர் வைத்ததாக விளக்கம் தந்து கொண்டிருந்தான்.  குதிரையை நானே கொண்டுபோய் எங்காவது விட்டுவிட வேண்டிய துதான் என்று முடிவு செய்து அதை கையில் பிடித்துக் கொண்டு நடக்க துவங்கினேன்.
வீதியில் குதிரையோடு நான் செல்வதை மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று தோன்றியது. குதிரை ஏறத் தெரியாமல் அதைப் பிடித்துக்கொண்டு நடப்பது அவமானமாக  இருந்தது. அதை சகித்தபடியே நடத்திக் கொண்டு சென்றேன்.எங்கே கொண்டுபோய் விடுவது என்று தெரியவில்லை.வழியில் ஒரு பயம் வந்தது. ஒருவேளை அப்பா அடுத்தவாரம் திரும்பிவந்து அந்த குதிரை யாருடையது என்ற உண்மையைச் சொல்லிவிட்டால் திருப்பிக் கொடுக்க என்ன செய்வது.குதிரையை கொடுக்க முடியா விட்டால் பத்து லட்சம் பணம் அல்லவா தர வேண்டியது இருக்கும். நான் குதிரையோடு வீடு திரும்பிய போது இரவாகியிருந்தது.
குதிரையை நான் ஏன் வெறுக்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. அன்றிரவு குதிரைகளைப் பற்றி நிறைய படித்தேன்.உயிருடன் கம்பீரமாக என் வீட்டின் வாசலில் நிற்கும் அதை ஏன் நான் அலட்சியப்படுத்துகிறேன் என்று குழப்பமாக இருந்தது.
இரண்டுநாட்களில் அந்த குதிரை எங்கள் வீட்டின் அடையாளமாகிப் போனது. கூரியர் ஆள், காய்கறி விற்பவன், கேஸ் சிலிண்டர் கொண்டுவருபவன் என எல்லோரும்  அதை நேசித்தார்கள். அதற்கு என்ன பெயர் என்று ஆசையாகக் கேட்டார்கள். அடுத்த மாதம் தனது தம்பி திருமணத்திற்கு அந்த குதிரையை இரவல் தர முடியுமா என்று தபால்காரன் அன்போடு கேட்டான். தலையாட்டிக் கொண்டேன். என் மனைவிக்கு குதிரையைப் பிடிக்கவேயில்லை. பூனை, நாயைக் கூட பிடிக்கும் அவளுக்கு குதிரை மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? தெரியவில்லை.. ஆனால் என் அப்பாவின் மேல் அன்பாகத்தான் இருந்தார் அவர் அவளிடம் அதிகம் பேசுவதே இல்லை என்று கூட குறைபட்டுக்கொண்டாள்.
குதிரைக்கு தினமும் ஒரு கட்டு புல்லும், குடிதண்ணீரும் வைக்கும் வேலையை நானே ஏற்றுக் கொண்டேன்.சிலவேளைகளில் அதன் வயிற்றைத் தடவிவிடுவேன். நெற்றியில் விரலால் அழுத்திக் கொடுப்பேன். குதிரை சாணத்தின் நாற்றத்தை என் மனைவியால் சகித்துக் கொள்ள முடியவேயில்லை. அதையும் நானே சுத்தம் செய்யத்  துவங்கினேன். குதிரையை நம்பி வீட்டை விட்டு சென்றேன். குதிரையோ வந்த நாளில் எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது.
சில நாட்களில் எனக்கு குதிரையை பிடித்துப்போகத் துவங்கியது. அதை நேசிக்க ஆரம்பித்தேன்.அப்பாவைப் போல அதை நானும் வாக்கிங் கூட்டிச் செல்ல முடியுமா  என்று நினைத்தேன். சிறுவர்களை குதிரையோடு விளையாட அனுமதித்தேன்.அண்டை வீட்டோர் என்னை புரியாமல் பார்த்தார்கள்.
ஒரு வெள்ளிக்கிழமை இரவு எப்போதும் போல அப்பா பிறகு வந்திருந்தார்.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர் குதிரை எப்படியிருக்கிறது என்றுதான் கவனித்தார். பிறகு  அவர் அதை காலையில் தான் வாக்கிங் அழைத்துச் செல்வதாக சொல்லியபடியே நெருங்கி உட்கார்ந்து கொண்டார். இரவில் அப்பா குதிரையோடு ஏதோ பேசிக் கொண் டிருப்பது கேட்டது.
காலையில் நான் எழுந்து கொள்வதற்குள் அப்பா குதிரையை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்றிருந்தார். என் மனைவி தனது தோழியின் வீட்டிற்குப் போக கிளம்பிக்  கொண்டிருந்தாள். காலை ஒன்பது மணியிருக்கக்கூடும்.அப்பா திரும்பிவருவது தெரிந்தது. அப்பாவின் கையில் டிங்கியிருந்தது. குதிரை எங்கே போனது. எப்படி நாய் திரும்ப வந்தது என்று திகைப்பாக இருந்தது.
அப்பா மிக இயல்பாக அந்த நாயை அதன் இடத்தில் கட்டிவிட்டு  வரவேற்பறையில் அமர்ந்து பேப்பர் படிக்கத் துவங்கினார். தனது நாயைப் பார்த்த சந்தோஷத்தில் மீனா  டிங்கியை கட்டிக்கொண்டு முத்தமிட்டாள். நான் அப்பாவிடம் குதிரை எங்கே போனது என்று கேட்டேன்.
குதிரை மறுபடியும் நாயாக மாறிவிட்டது என்றார்.எனக்கு வருத்தமாக இருந்தது.நான் அவரிடம் வேறு கேள்விகள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.நாயை கண்டு கொள்ளாமல் குளிக்கச் சென்றேன்.
இரும்பு கேட்டின் வெளியே சிறுவர்கள் குதிரையைத் தேடி வந்து விசாரித்துக் கொண்டிருப்பது கேட்டது. அப்பா சொல்வது எல்லாம் உண்மை என்று எனக்கு ஏனோ அப்போது  தோன்றியது. நாய்களைப் போல ஏன் குதிரை தன் இருப்பை காட்டிக் கொள்ள சப்தமிடுவதோ, கத்துவதோ அதிகம் இல்லை என நான் குதிரையைப் பற்றியே நினைத்துக்-கொண்டிருந்தேன்.என்னை அறியாமல் மனதில் வலி கவ்வியது. அப்பா எப்போதும் போல பூங்காவில் அமர கிளம்பி போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.

குதிரை என்னை என்னவோ செய்தது...

எண்ணம் & எழுத்து
கார்த்திக் ராஜா...

No comments: