Saturday, October 29, 2011

இன்னுமோர் இரவு...


இன்னும் ஓர் இரவு...



சலனமற்று சடலமாய் மற்றுமொரு காலை...
யாருமற்ற கூடத்தில் தனியே
உணவருந்த வேண்டும் என்கிற நினைவே....
காலை உணவை மறுதலித்து செல்ல ..

நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை
தேடி திரிந்தே தொலைந்து போகிறது
இன்றைய பகலும் சில நினைவுகளும்...

யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
காற்று மட்டும் பேசும் கடற்கரை சாலை...

இரவு நேர மயானமாய்..
இரைச்சல் நிறைந்த மனதின்
தனிமையை போக்க முயல்கிறேன்...

சில நேரம் வண்ணங்கள் கொண்டும்..
வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில்
என் உதிரம் கொண்டும்...

உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
சிறு கண்ணீரும் சில கனவுகளும்...
கவிதை வார்புக்களாய்..

எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும்
குருதி பாய்ந்து வண்ணமயமான...
பக்கங்களாய்...

திடுக்கிட்டு எழுகையில் களைந்து போகிறது...
நினைவில் இல்லாத கனவு
உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவை..
உதறி தள்ளிவிட்டு மீண்டும் புரட்டுகிறேன்
என் கவிதை பக்கங்களை
-கார்த்திக் ராஜா..
 

No comments: