Monday, March 14, 2011

உன்னைத் தவிர வேறு எதையெதையோ...!


வீட்டின் முன்பகுதில் நட்டிருந்த மூங்கில்கள்
பூவிட்டிருந்த ஒரு அதிகாலைப் பொழுதில்
கிரணங்கள் தீட்டிய சித்திரம் போல நீ வந்திருந்தாய்
என்னைத் தவிர மற்ற அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்த
உன்னைப் பிரதியெடுக்க பிரயத்தனப்பட்டன…
என் வீட்டின் நிலைக் கண்ணாடிகள் அனைத்தும்
ஆனால் கையலம்பும் குழாய்க்கு மேலே தொங்கும்
பழைய கண்ணாடிக்கு மட்டுமே அன்று யோகம் போல
உனக்கு அந்தக் கண்ணாடியை
நினைவிருக்குமா எனத் தெரியவில்லை
பச்சை நிறத்தில் சட்டம் கட்டியிருக்கும்
ஓரங்களில் லேசாக உப்புப் படிந்திருக்கும்
நேற்று முன்தினம் அந்தக் கண்ணாடி
அதை மாட்டி வைத்திருந்த
ஆணியில் இருந்து கழன்று
கீழே விழுந்து தெறித்தது !
இத்தனை நாட்களாக
உன் முகத்தை
நினைவுகொள்ள முயன்று
தோற்றதால் இருக்கலாம்…
சிதறிக் கிடந்த சில்லுகள் ஒவ்வொன்றையும்
உற்றுப் பார்க்கிறேன் – அவை
உன்னைத் தவிர வேறு எதையெதையோ
பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன…!
-கார்த்திக் ராஜா

No comments: