Friday, March 18, 2011

ஒருமுறையாவது வாழ்ந்திட வேண்டும்!!

ஒரு முறையாவது
வாழ்ந்திட வேண்டும்!

மலர்களோடு மட்டும்
பேசி மனங்கவர்ந்து
படபடவென்று சிறகசைக்கும்
வண்ணத்துப் பூச்சியாய்!

வெண்பஞ்சுக் கூட்டமாய்
ஊர்வலம் சென்று
சடசடவென்று பொழிந்திடும்
மேகக் கூட்டமாய்!

எல்லோரையும் தழுவி
எவ்விடத்தும் தவழ்ந்து
சிலுசிலுவென்று வீசும்
தென்றல் காற்றாய்!

சுனையாய்த் தோன்றி
சுவையாய் மாறி
சலசலவென்று ஓடிடும்
ஓடை நீராய்!

காரிருள் நீக்கி
விடியலாய்ப் புலர்ந்து
தகதகவென்று மின்னும்
காலைக் கதிராய்!

செயற்கை கலைந்து,
இயற்கை எழில் பருகி,
கற்பனையிலாகினும்
ஒருமுறையாவது
வாழ்ந்திட வேண்டும்!!

No comments: